நனியிதழை அறைக்கு மாற்றி இருந்தனர். குடும்பத்தினர் ஒவ்வொருவரும் சென்று பார்த்துவிட்டு வர அவளின் கண்கள் அவனை தான் நாடியது.
எதுவும் பேசாமல் மௌனமாய் மற்றவர்களிடம் அவள் காண்பிக்கும் அந்த பாவனையையும், தன்னை தேடும் அவளின் ஆவலையும் உள்வாங்கியபடி தன்னை நிதானித்துக்கொண்டிருந்தான்.
இன்னும் அவனுள் பொங்கிய அலைகடலின் ஆக்ரோஷ ஆர்ப்பரிப்பு அடங்கவில்லை.
என்றைக்கும் இந்த நடுக்கடலில் தவிப்பெடுத்த தாகம் தீராது என்று தான் தோன்றியது.
மனைவி மீதான கொள்ளை அன்பு அவஸ்தையாய் முரண்டுபிடித்தது அவளிடம் பேசமுடியாதென்று.
‘எத்தனை தைரியம்? தன்னை ஆட்டி பார்க்கிறாளே இவள் ஒவ்வொரு விஷயத்திலும்’ என்று கண்களில் மெல்லிய முறைப்பும் படர, அதை கண்டு சட்டென்று அவனிடம் கண் சிமிட்டினாள் நனியிதழ்.
மீண்டிருந்தான் முழுவதுமாக. அவனை அவனுள்ளிருந்து அவளிடம் மீட்டிருந்தாள் நனியிதழ்.
“அதானே இவன் தேறமாட்டான். மாறமாட்டான். கொஞ்சம் சென்டியா நாலு சொட்டு கண்ணீர் கண்ணுல வச்சுக்கவும் எல்லாரும் என்ன நினைச்சீங்க? அவன் ஆரியாச்சே?…” என்றான் பரத் சிரிப்புடன்.
அனைவருக்குமே சிரிப்பு தான். இத்தனை நேரம் மருகியதும், உடைந்து அமர்ந்திருந்த தோற்றமும் என்ன? இப்போது அவன் பேசும் பேச்சு என்ன என்று பார்த்தனர்.
பெரியவர்கள் புன்னகையுடன் வெளியேற பரத், விஷ்ணு அங்கேயே நிற்க, மது அவர்களை அழைத்தாள்.
“அசிங்கம், அவமானம். இதெல்லாம் தேவையா?…” என்று அனுஷா சொல்ல,
“இதை நீ சொல்றியா? முதல்ல படிச்ச படிப்புக்கு வேலையை பாரு. குழந்தை பிறக்கவும் சுத்தமா ஒரு வொர்க்கும் பன்றதில்லை நீ. எப்போருந்து டெலிவிஷன் ஆபீஸ் போறதா இருக்க? போய் டிஸ்கஸ் பண்ணு ப்ரவனோட…” என தங்கையை குருஆர்யன் அதட்ட ப்ரவன் சிரித்தான்.
“ஹ்ம்ம், அவன் எப்படி சொல்றான், என் விஷயத்தை நான் பார்த்துக்கறேன்னு. உங்க யாருக்காச்சும் அவன்கிட்ட சொல்ல தோணுதா?…” மது கேட்க,
“உங்க பஞ்சாயத்தை வெளில வச்சுக்கோங்க. கோ, கோ…” என்று கதவை நோக்கி குருஆர்யன் கை காண்பிக்க,
“விட்டா தூக்கி ஜன்னல் வழியா வெளில வீசிருவான். குடும்பஸ்தன்ற பேர்ல அராஜகம் பன்றான்….” என்று பரத் வெளியே செல்ல அடுத்து ஒவ்வொருவராய் கிளம்பினார்கள்.
“டேக் கேர். ரொம்ப நேரம் பேசாத நதி. தூக்கம் வந்தா கண்ட்ரோல் பண்ணாத…” என்று சொல்லிய கீதா,
“மெடிசின்க்கு தூக்கம் வரத்தான் செய்யும் ஆரி. பயந்துடவேண்டாம்…” என அவனிடமும் சொல்ல,
இப்போதெல்லாம் அவளின் மெல்லிய குரல் கூட குருஆர்யனுக்கு அத்துபடியாகியிருந்தது.
“எனக்கடுத்து தான ஆரி நின்னுட்டிருந்த? இப்போ அவ மூச்சு விட்டா கூட என்ன சொல்றான்னு சொல்லிடுவ போல?…” என்று சிரித்த மது,
“எப்படி எப்படி? என்னால அவ வாய்லையே காத வச்சிட்டு என்ன பேசறான்னு உத்து கவனிக்க முடியாதா? எங்க போன மேன்?…” என்று சிரித்தாள் நிறைவுடன்.
“என்னையே கலாயா? அந்த ஆரி எங்க போனா உனக்கென்ன? அவ கேட்டதுக்கு பதில் சொல்லு…” என்று தன் புறம் நின்ற தன் அக்காவை நனியிதழ் பக்கம் திருப்பி நிறுத்தியவன் முகமெல்லாம் வர்ணகோலங்கள்.
“ஆரி முகம் சிவந்திருச்சு….” கீதா ஆச்சர்யமாய் சொல்ல,
“வேற வேலை இல்லையா?…” என்றான் முறைப்பதை போல வேறு திசை பார்த்து.
“அச்சோ…” என்று அவனை அவர்கள் இருவரும் படுத்துவதை கண்டு நனியிதழ் சொல்ல,
“சரிம்மா, நாங்க கேலி பண்ணலை. குழந்தையை கொஞ்சம் முன்னாடி தானே பார்த்த. திரும்ப நாங்களே பீட் பன்றதுக்கு தூக்கிட்டு வரோம். நீ முதல்ல ரிலாக்ஸா இரு…” என்று சொல்லி சென்றனர் இருவரும்.
அதுவரை அங்கிருந்த நனியிதழின் பைலை பார்த்துக்கொண்டிருந்தவன் அவர்கள் கிளம்பவும் வந்து அவளருகே இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்துகொண்டான்.
ஊசி ஏற்றப்படாத அவளின் கையை எடுத்தவன் தன் முகத்துடன் வைத்துக்கொண்டு கண் மூட இன்னுமே அவன் விரல்கள் நடுக்கத்தை பிரதிபலித்தது.
“இதழ்…” என அழைத்தவனிடம் பதில் சொல்ல முடியாமல் அவள் அதுவரை அடக்கியிருந்த நீர் கண்ணை நிறைக்க தொண்டைக்குழி ஏறி இறங்கியது.
“பத்திரமா வந்துட்டேன். எங்கயும் போகலை…” என்றாள் அவன் கன்னத்தில் பதிந்திருந்த தன் கரத்தை லேசாய் அசைத்து அவனை வருட முயன்று.
“ஹ்ம்ம், வந்துட்ட. என் மொத்த உயிரையும் பிடுங்கி உடைச்சு போட்டுட்டு என்னை கொன்னுட்டு வந்துட்ட நீ….” என்றான் குருஆர்யன்.
அவனுக்கு மூச்சுக்கள் தாறுமாறாக ஏறி இறங்கியது. அதுவரை மற்றவர்கள் முன் தைரியத்தை காண்பித்திருந்தவன் இப்போது அவளிடம் ஒன்றுமில்லாதவனாய் மாறியிருந்தான்.
“பாவா…” என மெலிதாய், பிறந்த குழந்தையின் மென்மையுடனான அழைப்பு அவனை தீண்ட, உயிர் சிலிர்த்தாலும் அவன் தேடல் நிறைந்திருந்தாலும் ஒரு ஆற்றாமை.
இப்படி இந்த நிலையில் அவள் சொல்லி தான் கேட்கவேண்டுமா என்று தோன்ற,
“இப்ப சொல்லாத. இங்க சொல்லாத இதழ். நம்ம வீட்டுக்கு போகலாம்…” என்று கூற,
“ம்ஹூம், இங்க தான் சொல்லுவேன். அப்படித்தான் சொல்லுவேன் பாவா…” என்று பிடிவாதம் பிடித்தாள்.
“ப்ச், போடி…” என சொல்லியவன் இன்னும் அவளை நெருங்கி அமர்ந்து அவள் மடியில் தலைவைத்து அவளின் கையை தன் சிகைக்குள் நுழைத்தான்.
“ப்யூ மினிட்ஸ் இதழ். என்னவோ பண்ணுது. ஹெல்ப் மீ…” என்று முனங்க இன்னும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது நனியிதழுக்கு.
அவளுமே எத்தனை பயந்திருந்தாள். தன்னிலை அவ்வளவு தான் என்று உயிர் பயம் நெஞ்சை கவ்வியிருந்தது.
தானில்லை என்றால் இவன் நிலை? கண்ணீரை துடைக்க கூட கணவனின் கேசத்தை கோர்த்திருந்த அவள் கை அகலவில்லை.
தான் முதன்முதலில் பார்த்த குருஆர்யனா இவன்? இதழ்கள் மெல்ல சிரிக்க அது அவளின் உடல்மொழியில் தெரிந்தது.
“என் பொழப்பு உனக்கு சிரிப்பா?…” என்று தலையை மட்டும் அவள் முகம் பார்த்து திருப்பினான்.
அவனை பார்த்து சிரிக்கும் அவள் இதழ்கள் காய்ந்து வறண்டு போய் வெடிப்பை காண்பித்திருக்க நிமிர்ந்தமர்ந்தான்.
“என்ன வேணும் இதழ்?…” என்று அவளின் குரல்வளையை தொட்டு பார்த்து கேட்க மறுப்பாய் தலையசைத்தாள்.
“உதடெல்லாம் காய்ஞ்சு போய். இரு வரேன்…” என்றவன் வேகமாய் கதவை திறந்து,
“மது க்கா…” என்றான் சத்தம் கொடுத்து.
“ஏன்டா கத்தற?…” என்று ஓடி வந்துவிட்டாள்.
“இதழுக்கு தண்ணி குடுக்கலாமா?…” என்று கேட்க,
“ம்ஹூம். வேண்டாம். செலேன் போட்டிருக்கு. எதுவும் குடுக்காத. தொண்டை ரொம்ப வறண்டு போனா ஸ்பூன்ல நான் சொல்ற மாதிரி குடுத்தா போதும்…”
“அப்போ தண்ணியே குடிக்கக்கூடாதா?…” இவன் மல்லுக்கு நிற்பதை போல நிற்க,
“ஆமா ஆரி. இப்ப வேண்டாம்…” என்றதும் ஒன்றும் பேசாமல் கதவை அடைத்தவன்,
“குழந்தை என்ன பன்றா?…” என்றான் மீண்டும் திறந்து பார்த்து.
“ஹப்பா, தூங்கறாப்பா. அங்க பக்கத்துலையே அனுஷாவும், ப்ரவனும் இருக்காங்க…” என்று சொல்ல மீண்டும் கதவை அடைத்துவிட்டான்.
உள்ளே திரும்பியவன் நனியிதழை பார்க்க பாதி கண்ணில் உறக்கம் சுமந்து அவனை பார்த்தாள் நனியிதழ்.
உறக்கத்தை விரட்டிக்கொண்டு தன்னை பார்த்து அவள் புன்னகைக்க கண்டவன் அவளருகில் அமர கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தாள் மதுஸ்ரீ.
“வா க்கா…” என்று குருஆர்யன் தலையசைக்க,
“தூக்கம் வருதா நதி? தூங்கு. ஏன் முழிச்சிருக்க ட்ரை பன்ற?…” என்றாள் மது.
“ஹ்ம்ம்…” என்றவளுக்கு பதில் கூட சொல்லமுடியாமல் இன்னும் உறக்கத்திற்கு செல்ல, மது அவளை பரிசோதித்துவிட்டு தம்பியிடம் திரும்பினாள்.
“தண்ணி இப்ப குடுக்க வேண்டாம் ஆரி. உதடு இப்படி காய்ஞ்சு போய் தான் இருக்கும். இந்த சுடுதண்ணியை வச்சு ரெண்டு ரெண்டு ஸ்பூன் நதி கேட்டா மட்டும் அப்பப்ப குடு. லேசா ஈரம் பண்ணு. போதும்…” என்று சொல்லி எடுத்து தந்துவிட்டு செல்ல, அந்த நீரை எடுத்து காய்ந்திருந்தவளின் இதழ்களை ஈரம் செய்தான் குருஆர்யன்.
அதன்பின் வெகுநேரம் மனைவியின் முகம் பார்த்தபடி அசையாது அமர்ந்துவிட்டான்.
உறக்கத்தில் கூட அவனின் விரல்களை பற்றிக்கொண்டு அவள் தூங்க மெல்ல அவளின் இன்னொரு கரத்தை எடுத்து பார்த்தான்.
ஊசி ஏற்றப்பட்டு உடலுக்குள் மருந்து சென்றுகொண்டிருந்த புறங்கை லேசாய் வீக்கம் பெற்றிருந்தது.
ஓரிரண்டு இடத்தில் ஊசி குத்தப்பட்டு எடுக்கப்பட்ட சிறு புள்ளிகளும், அதனருகே துளிகளாய் குருதி திட்டுகளும் காய்ந்திருந்தது.
நெஞ்சை அடைக்க அதனை மெல்ல வருடி கொடுத்தவன் விரல்கள் விலகவே இல்லை.
“இதழ்…” என்றவன் அழைப்பு உறக்கத்திலும் அவளை அசைக்க மூடிய கண்கள் சுருங்கி விரிந்தது.
“ஹேய் கேடி, இன்னும் சரியா தூங்கலையா நீ?…” என்று தன்னைப்போல ஒரு புன்னகை அவனிதழில்.
அவளும் சிரிக்க முயன்றாள். உடல் ஒத்துழைக்கவில்லை. ஆனாலும் அந்த இதழ்கள் லேசாய் நெளிய,
கண்ணசைவில் அவளும் தன்னை உணர்கிறாள் என்று புரிந்தவனின் உயிர் செல்கள் பூ பூத்தது.
“கேளு, கிட்டத்தட்ட எத்தனைமணி நேரம் நான் மௌனவிரதம் மாதிரி இருந்தேன். என்னால யாரோடையும் பேச முடியாம, என்னன்னு கேட்க முடியாம. கொடுமைடி. இப்ப நான் பேசறேன். நீ கேளு. நீ எதுவும் பேசவோ, பதில் சொல்லவோ வேண்டாம்….” என்றவன்,
“முழிச்சிருந்தா என்னை கலாய்ச்சாலும் கலாய்ப்ப. ஆனாலும் உன்னை மாதிரி என்னை ஒருத்தரும் சீண்டினதில்லை. ராஸ்கல் சுத்தல்ல விட்டுட்ட…” என்றவன் லேசாய் சாய்ந்து அவளின் கன்னத்தை வருடினான்.