“ஆனாலும் எங்க வீட்டுல உன்னை பார்த்து பேசி முடிச்சு வச்சாங்க பாரு. எப்படி புரிஞ்சது அவங்களுக்கு உனக்கு நான் தான் சரின்னு…” என்று சொல்ல அவள் இமைகள் இன்னும் சுருங்கியது.
“ஓகே, புரிஞ்சது. எனக்கு நீ தான் சரின்னு அவங்க முடிவு பண்ணிட்டாங்க. இப்ப சரியா? தூக்கத்துல கூட மாத்தி சொல்ல முடியுதா?…” என்று சொல்ல அவள் இதழோரம் புன்னகை வெளிவர துடித்தது.
“தூங்க விடாம டிஸ்டர்ப் பன்றேனா?…” என்றவன்,
“எனக்காக கேளேன். நீ ரியாக்ட் பண்ணவேண்டாம். கேட்டா போதும் இதழ்…” என்றவன் மூச்சை ஆழமாய் இழுத்துக்கொண்டான்.
“உண்மையா வீட்டுல கேட்காம உன்னை எனக்கு பேச சொல்லிருப்பேனான்னு கேட்டா நிச்சயமா தெரியாது. ஆனா கேட்கும் போது அப்படி குதிச்சேன். வேண்டாம், சரிவராது. வேற பொண்ணை பாருங்கன்னு அவ்வளோ சொன்னேன்….”
“நிஜமாவே ஒத்துவராதுன்னு தான் நினைச்சேன் இதழ். வேண்டாம்ன்னு சொல்லிட்டு வந்தாலும் மனசுக்குள்ள ஒரு பயம். எங்க நான் சொன்னதை கேட்டு சரின்னு வீட்டுல சொல்லிருவாங்களோன்னு. முதல்தடவை நான் பயந்த விஷயம். இது ரகசியம்….” என்று உடல் குலுங்க ஒரு புன்சிரிப்பு அவனிடம்.
“ஆச்சர்யம். நீயும் சரின்னு சொல்லிட்ட. டெலிவிஷன் ஸ்டேஷன்ல நீ என்கிட்ட கோபமா பேசிட்டு போனதுக்கு பின்னாடி எப்படி உன்னால சம்மதிக்க முடிஞ்சதுன்னு எனக்கு தோணுச்சு. ஆனா காமிச்சுக்கலை. நீ வீட்டுல சொன்னதால சரின்னு சொல்லிருப்பன்னு ஒரு யூகம்….”
“ஹ்ம்ம் என்ன சொல்ல? இப்பவும் நீ பேசின பாரு காரை இடிச்சதுக்கு காசை குடுத்துட்டு. சுத்தமா பிடிக்கவே இல்லை. அவ்வளோ கோவம் உன் மேல. அந்த கோவம் உன்னை தொடர வச்சது. பார்க்க வச்சது. நினைக்கவும் வச்சது. அந்த நினைப்பு எனக்குள்ள இடமில்லாம நிறைய வச்சது. என்னை வச்சு செய்யுது…”
இப்படியான பகிரல்கள். அவளிடம் தன் உள்ளக்கிடங்கை மொத்தமாய் திறந்து காண்பித்துக்கொண்டிருந்தான் குருஆர்யன்.
பாதி பேச்சுக்களில் நனியிதழ் முழு உறக்கத்திற்கு சென்றுவிட்டாலும் அவளிடம் மட்டுமே விவரிக்க கூடிய தன் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்துக்கொண்டிருந்தான் குருஆர்யன்.
இடையிடையே சென்று மகளையும் பார்த்துக்கொண்டே தான் இருந்தான். இங்குமங்குமாய் அயர்வில்லாமல் அலையும் அவனை கண்டவர்களுக்கு ஓய்வெடு என்று சொல்லவும் அத்தனை பயம்.
மனைவி, மகளை விட்டு அணுவளவும் அவன் அகலவில்லை. அதனை வலியுறுத்தினால் கோபம் மீறியது.
“எனக்கு தெரியாதா நான் எப்போ டயர்டா இருப்பேன்னு? அப்படி தோணினா நானே சொல்றேன். நீங்க பார்த்துக்கோங்க…” என்று அனைவரிடமும் சொல்லியவன் பேச்சை யாரும் மீறமுடியவில்லை.
உறக்கத்தில் அவன் பேசியவை பாதி கனவு போலிருக்க நனியிதழ் அவனை கேள்வியாய் பார்த்து,
“நான் தூங்கும் போது எதாச்சும் என்கிட்ட சொன்னீங்களா?…” என்று கேட்க,
“எனக்கு வேற வேலையில்லை? தூங்கறவட்ட பேச எனக்கென்ன பைத்தியமா?…” என நழுவினான் குருஆர்யன்.
“சரியான மண்டைக்கனம் உங்களுக்கு. எப்பருந்து என்னை பிடிச்சது, எப்படி பொண்ணு கேட்டீங்கன்னு எல்லாம் தத்துபித்துன்னு உளறி கொட்டிட்டு ஆணியே புடுங்கலைன்னு எப்படித்தான் வாய் கூசாம சொல்ல முடியுது?…” என்றவளிடம் மாட்டிக்கொண்டவன்,
“ஒட்டு கேட்டிருக்க?…” என்று பேச்சை மாற்றினான்.
“அவ்வளோ ஆணவமா உங்களுக்கு? இதுல என்னமோ சொன்னீங்களே? பயம்? பர்ஸ்ட் டைம் பயந்தது…” என்றவளை பாய்ந்து சென்று வாய் பொத்தியவன்,
“ஷட்அப் இதழ்…” என்றான் முகம் சிவக்க குருஆர்யன்.
“ஒத்துக்கோங்க…” என அவள் கண் சிமிட்ட,
“என்னன்னு?…” என்று கேட்டான்.
“சொன்னீங்களே? பைத்தியம்ன்னு…” என்றதும் அவளை அவன் அப்பட்டமாய் முறைக்க,
“பார்ட் டைம் பைத்தியம்ன்னு வேணும்னா சொல்லலாம்…”
“என்ன?…” என்றாள் புரியாமல் அவள்.
“உன் பக்கத்துல இருக்கும் போது மட்டும். பொண்டாட்டின்னு வந்துட்டா புலியாவே இருந்தாலும் கரைச்சுடறீங்களே…” குருஆர்யன் முகத்தில் அளவில்லா குறுநகை.
“அது புளி…”
“போதும்டி. தாங்கமாட்டேன். பாவம், வாய் பேசாத புள்ளை, அமைதி பூங்கா அது இதுன்னு சொல்லி என் மண்டையை கழுவி ஏமாத்தி உன்னை கட்டி வச்சிட்டாங்க எங்கம்மா…” என்று மீண்டும் உருட்ட ஆரம்பிக்க,
“இப்பவும் அடங்கறீங்களா? அடங்கறீங்களா?…” என்று மெல்லிய அடிகளை அவனுக்கு பரிசாய் தந்தவள் நெஞ்சமும் நிறைந்திருந்தது.
வீடு திரும்பும் வரை குருஆர்யன் மருத்துவமனையை மட்டுமல்லாது அனைவரையும் ஒருவழி செய்துவிட்டான்.
ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் கேள்விகள். மது நொந்து நூலாகும் சமயம் கீதா தான் முன் வருவாள். இதில் அவ்வப்போது பரத்தை தான் குருஆர்யன் முறைப்பான்.
“நானே ஒரு ஓரமா இருக்கேன். என்னை ஏன்டா கைய புடிச்சு இழுக்கற?…” என்று மனைவி, தம்பிக்கிடையில் மாட்டிக்கொண்டு முழிப்பான்.
இப்படியாக அனைவரின் புலம்பல்களையும், சந்தோஷத்தையும் ஒருங்கே பெற்று மனைவி, மகள் சகிதம் வீடு திரும்பினான் குருஆர்யன்.
அவனின் மகவின் வரவின் பின் ஒவ்வொன்றும் தலைப்பு செய்தியாகியது. அவன் உலகத்திற்குள் சின்னஞ்சிறு எட்டு வைத்து முன் வந்தவளின் அருகாமையில் தானும் குழந்தையாகி போவான் தந்தையவன் தாயுமானவனாய்.
மகளுக்கு பெயர் சூட்டும் விழாவையும் பிரமாண்டமாய் சித்திரம் போல் அவன் ஏற்பாடு செய்திருக்க பார்ப்பவர்களை மெச்ச வைத்தது.
“அவ்வளோ திருஷ்டி விழும். இப்படி பன்றானே? என் கண்ணே பட்டுடும்…” என்று தமயந்தி தான் கவலைப்படுவார்.
படத்தின் வெளியீட்டு வேலைகள், விளம்பர வேலைகள் ஒருபுறம் இருந்தாலும் குடும்ப சூழல் அவனை எங்கேயும் தேங்கி நிற்க விடவில்லை.
தன் கூடு தேடி வந்து பாந்தமாய் அடைந்துகொள்ளும் அன்றிலாய் அவனின் வாழ்க்கை.
அதில் ஏக பெருமை குருமூர்த்திக்கு. தன் மகனை சரியாக கணித்திருக்கிறோம் என்று.
தமயந்தி இதனை சொல்லி சொல்லி மாய்ந்துபோவார் எப்படி சரியாக அவனுக்கொரு பூவிலங்கை போட்டுவைத்தார் என்று.
————————————————–
காதில் சிணுங்கல் சத்தமும், அதனுடன் சமாதான குரலும் குருஆர்யனின் உறக்கத்தை உடனே கலைத்தது.
கண்ணை திறந்து பார்க்க நனியிதழ் மகளை தோளில் போட்டு தட்டிக்கொடுத்தபடி மெல்ல பூம்பாதம் வைத்து சத்தமின்றி நடந்துகொண்டிருந்தாள்.
குருஆர்யனின் உறக்கம் கலைந்துவிடாதிருக்க மகள் ஊரை கூட்டும் முன் அணைத்து சமாதானங்கள் சொல்லி வருட, பெண்ணரசி தகப்பனை எழுப்பவென்றே இன்னும் சத்தம் செய்ய பார்த்தாள்.
“சரிம்மா, சரிம்மா. அம்மா இருக்கேன்ல. அப்பா பாவம்டா. தூங்கட்டும். கேளுமா…” என்று தாலாட்ட,
“நீ குட்டிக்கரணமே அடிச்சாலும் அவ கேட்கமாட்டா. குடு என்கிட்ட…” என்றவனின் சத்தத்தில் திடுக்கிட்டு பார்க்க கட்டிலில் அமர்ந்து சம்மனமிட்டிருந்தான் குருஆர்யன்.
“அச்சோ, டிஸ்டர்ப் பண்ணிட்டோமா? நீங்க தூங்குங்க. நான் பார்த்துக்கறேன்…” என்று சொல்ல மகள் சிணுங்கல் அழுகைக்கு மாறியது.
“ப்ச், குடு இதழ். என் வாய்ஸ் கேட்டு நீ குடுக்கலைன்னா வீடே முழிச்சுக்கனும்…” என்று அதட்ட,
“என்னமோ பண்ணுங்க…” என்று சொல்லி அவனிடம் தந்தவள் விளக்கை ஒளிரவிட்டாள்.
“என்னடா குட்டி? அப்பாவை தேடுனீங்களா?…” என்று சொல்லி வாங்கவும்,
“பஹ் பஹ்…” என்று அப்பா சொல்ல முயன்றாள் குழந்தை அஹானா இதழினி.
அஹானா என்ற பெயர் விடியல் என்னும் பொருளும், சூரியனின் முதல் கதிர் என்னும் பொருளும் கொடுக்க தேடி தேடி மகளுக்கு சூட்டியிருந்தான் குருஆர்யன்.
இதழினி அவனின் வாழ்வில் பிரிக்கமுடியாதவளான இதழும் அவள் தந்த இனிமையும் என்று சேர்த்து வைத்திருக்க,
“உக்கார்ந்து யோசிப்பாரோ?…” என்றார் நரசிம்மன்.
“வழக்கமான டயலாக் தான். ஆனாலும் சொல்றேன். குடும்பஸ்தன்ற பேர்ல அராஜகம் பன்றான் இவன்…” என்னும் படியாக இருந்தது பரத்தின் புலம்பல்கள் இன்றும்.
“ஹனி குட்டிக்கு என்ன வேணுமாம்?…” என்று மடியில் போட்டு அவன் கேட்க மறுபக்கம் வந்தமர்ந்தாள் நனியிதழ்.
“நீ வேணா தூங்கேன் இதழ்…” என்றான் மனைவியிடம்.
“நான் சும்மா தான் நடந்துட்டு இருந்தேன். அவ்வளோ டயர்ட் இல்லை. நீங்க தான் ஒருவாரமாவே தூங்கவும் இல்லை. அலைச்சல் வேற…” என்று கவலை கொள்ள,
“ப்ச், இதுல என்ன டயர்ட்?…” என்று அவளிடம் பேசும் பொழுதே மகள் சிணுங்கிவிட்டாள்.
“அப்பா இருக்கேன். இருக்கேன்…” என்று அவனின் மார்பில் போட்டு தட்டிக்கொடுக்க சிறிது நேரம் உறங்கவும், பின் சிணுங்கவுமாக இருந்தாள்.
“காய்ச்சல் கூட இல்லையே? என்னவா இருக்கும்?…” என பார்த்தவன்,
“அப்பா ஸ்டோரி சொல்லுவேணாம். பாப்பா தூங்குவியாம்…” என்று சொல்ல நனியிதழ் முறைத்தாள்.
“போடி என் பொண்ணுக்கு நான் சொல்றேன். நீ காதை மூடிக்கோ…” என்று வழக்கம் போல அலட்டிக்கொள்ளவே இல்லை.
“சொல்ற அவ்வளவும் பொய். இதுல பெருமை வேற. அதை கேட்டு இவளும் தூங்கறாளே…” என்று சரிந்து தலை சாய்த்தாள்.
“என் பொண்ணுக்கு தெரியற அருமை…” என்றவன் எங்கே நனியிதழ் அதற்கு எதிர்பதம் சொல்லிவிடுவாளோ என்று அவசரமாய் அவளின் இதழணைத்தவன்,
“தூங்கு. இல்லைன்னா குட்நைட் சொல்லிடுவேன்…” என்று மிரட்ட,
“பயந்துட்டோம். நான் சொல்லவா குட்நைட்?…” என்றாள் நனியிதழ் கண்சிமிட்டி.
“உன்னை போய், எங்கம்மா…”
“தூங்கிட்டேன்…” என்று அவள் கண்ணை மூடிவிட அடக்கமாட்டாமல் சிரித்தவன் கைகள் மனைவியை தன்னருகில் இழுத்துக்கொண்டது.
“பஹ்…” மகளின் அழைப்பு.
“கதை சொல்லவா குட்டி?…” என்று புன்னகை முகமாய் சொல்ல ஆரம்பித்தான் நனியிதழை பார்த்த அன்றிலிருந்து.
“இந்த போட்டோல இருக்கற இடத்துல தான் உங்கம்மாவை பார்த்தேன். செம்ம ஹெட்வைட். என்னை யாரோன்னு கண்டுக்காம் போனா குட்டி…” என்று சொல்லவும், புரிந்ததை போல தன்னிரு கை விரல்களை வாய்க்குள் நுழைத்தபடி தேன் வழிய அப்படி ஒரு அழகு சிரிப்பு.
“இந்த போட்டோ அன்னைக்கு நடந்த இன்டர்வ்யூல கிடைச்சது. அதான் உனக்கு காமிக்கனுமேன்னு ஞாபகத்துக்கு எடுத்து பிரேம் போட்டு வச்சிருக்கேன்…” என்று அதற்கொரு கதை கூறினான்.
அதிலிருந்து ஒவ்வொன்றாய் அவர்கள் வாழ்வில் நடந்ததை எல்லாம் குழந்தைக்கு புரியும்படி கதையாய் சுவாரஸியமாய் கூறியவன்,
“என்ன பன்றது? உன்னோட தாத்தா பாட்டி சொன்னாங்களேன்னு தான் அவங்களை மதிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அப்பா. அதனால தான் ஹனி பேபி அப்பா கையில…” என்றும் கதைவிட கையை, காலை உதைத்துக்கொண்டு கதை கேட்டது குழந்தை.
அவன் பேச பேச பிள்ளையும் மெல்ல உறங்க ஆரம்பிக்க நனியிதழ் ஆழ்ந்த சயன நிலைக்கே சென்றிருந்தாள்.
“பாப்பா, குட்டிம்மா…” என்று அழைத்து பார்க்க மகள் உறங்கிவிட்டாள்.
அதன் பின்னரே குருஆர்யன் மகளை அணைத்தபடி ஒட்டி படுத்திருக்க சற்று நேரத்தில் மீண்டும் கண்ணை கசக்கிக்கொண்டு அவனின் நெஞ்சில் மகள் முட்ட விழித்துவிட்டான் குருஆர்யன்.
“என்னடா? என்ன?…” என்றபடி தூக்கிக்கொண்டு வெளியே வந்துவிட்டான்.
மகளின் மெல்லிய அழுகை குரலில் கூட நனியிதழ் விழிக்கவில்லை. அதிக சத்தம் கொடுக்கும் முன் கீழே வந்துவிட்டவன் கூடத்தில் அங்குமிங்குமாய் நடக்க சத்தம் கேட்டு வந்தார் தமயந்தி.
“என்ன ஆரி? ஏன் குழந்தை அழறா?…” என்றார்.
“தெரியலை ம்மா. தூங்கவே மாட்டேன்றா….” என சொல்ல,
“பாட்டிட்ட வாங்கடா குட்டி…” என்ற தமயந்தியின் கைகளுக்கு செல்லவே இல்லை.