இப்படி ஒரு நிகழ்வை, திருப்பத்தை குருஆர்யன் சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை.
தான் பேசியவைக்கு பதிலடி தரும் விதமாய் அவள் வந்து பணத்தோடு நின்றதும், அவளின் பேச்சுக்களும் அவனை வாயடைக்க செய்ததென்றால், அவள் ப்ரவனின் தங்கை என்பது அடுத்த அதிர்ச்சியாக இருந்தது.
தாய் சொல்லிய அந்த உடல்நிலை சரியில்லாத நபரின் பெண் என்பது இப்போது ஓரளவு கணித்துவிட்டவன் முகத்தில் பெரிதாய் தவறு செய்துவிட்ட பாவனை எல்லாம் இல்லை.
ஆனால் கோபமிருந்தது. கோபத்தில் ‘தான் ஒன்று சொன்னால் அத்தனை ரோஷமா?’ என்பதை போல தான் பார்த்திருந்தான்.
அதனை ப்ரவன் முன் காண்பித்துவிட முடியவில்லை. பல்லை கடித்துக்கொண்டு திகைப்பை மறைத்தபடி பார்க்க,
“நீங்க பேசினதெல்லாம் திரும்ப உங்களால வாங்கிக்க முடியுமா? இல்லை வேற யாராவது இப்படி உங்களை பேசினா ஏத்துக்க முடியுமா?…” என்றாள் நனியிதழ்.
ப்ரவன் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்து தங்கையருகில் வந்து நின்றான் நடப்பது என்னவென்று புரியாமல்.
“என்ன நதி? என்ன பிரச்சனை?…” என கலவரத்துடன் பார்த்தான் அவன்.
ஆர்யாவின் அமைதியும், நதியின் கோபமும் அவனையும் பதட்டமுற செய்திருந்தது.
கேள்வி கேட்டதை கவனித்தாலும் ஆர்யாவை தான் தீர்க்கமான பார்வையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் நனியிதழ்.
முகத்தில் கோபத்தின் சுவடு கிஞ்சித்தும் வெளிப்படவில்லை. ஆனால் அவள் பார்வை கனலை தாங்கி நின்றது.
‘என்னை நீ எப்படி பேசலாம்?’ என்னும் விதமான கேள்வி நின்றது. அலட்சியப்படுத்த முடியாமல், பதில் பேசவும் முடியாமல் ஆர்யாவும் அதனை எதிர்கொண்டான்.
“ப்ச், தப்பு என் மேல தான் ண்ணா. பார்க்கிங்ல இன்னொரு பைக் வரவும் தடுமாறி நின்னிட்டிருந்த இவங்க கார்ல இடிச்சு விழுந்துட்டேன்…” என்றதுமே,
“விழுந்தியா? அடி எதுவும் படலையே?…” என்ற ப்ரவன் தங்கையை ஆராய்ந்தான்.
உள்ளங்கையில், முழங்கையில் லேசாய் சிராய்ப்பு இருந்தது. காலில் நகம் பெயர்ந்திருக்க,
“அடி பட்டிருக்கு. நீ ஹாஸ்பிட்டல் போகாம என்ன பன்ற? வா…” என்று அழைத்தும், அவனின் கையிலிருந்து தன் கையை உருவிக்கொண்டவள்,
“ண்ணா, இதை பெருசு பண்ணவேண்டாம்…” என்று ப்ரவனை தடுத்தவள்,
“எல்லாரும் எப்பவும் எல்லா விஷயத்துலையும் சமமாகிட முடியாது. பணம்ன்றது தேவைக்கு தானே தவிர அந்தஸ்துக்கு இல்லை. உங்ககிட்ட அதிகமிருந்தா என்கிட்ட இல்லவே இல்லைன்னு அர்த்தமில்லை. எங்க தேவைக்கு அதிகமாகவே இருக்கு…” என்று ஆர்யாவிடம் நிதானமாக சொல்லியவள்,
“கரெக்ட்டா சொல்லனும்ன்னா உங்க காரை சேதப்படுத்தினா அதுக்கான நிவாரணம் குடுக்கற அளவுக்கே தாராளமா இருக்கு. நீங்க சொன்னவிதத்துல நான் சொல்லலை. இருக்குன்னு சொன்னேன்….” என்று சொல்ல, அவளிடம் பேச முடியாமல்,
“ப்ரவன்…” என வேகமாய் எழுந்து நின்றான் குருஆர்யன்.
“ண்ணா, நான் கிளம்பறேன். இதை வச்சு எதாச்சும் நீங்க பேசுனீங்க…” என்ற நனியிதழ் வார்த்தைகள் கட்டளை பிறப்பித்து,
“பேசக்கூடாது…” என்று அழுத்தமான சொல்லி அதற்கு மேல் நிற்காமல் வெளியேற போக,
“ஆர்யன் நான் அனுப்பிட்டு வரேன்….” என்று ப்ரவனும் சேர்ந்தே வெளியேறினான்.
அவன் வெளியேறவுமே ஆர்யாவின் முகம் ஆவேசத்தில் ஜிவுஜிவுத்தது. எத்தனை பேச்சுக்கள் பேசிவிட்டாள் என்று கொந்தளித்தவன் கோபத்தை அடக்கியபடி அந்த அறையின் பக்கவாட்டில் இருந்த ஜன்னல் புறம் வந்துநின்றான்.
பார்வை தன்னிச்சையாக கீழே செல்ல அங்கே ப்ரவன் நனியிதழிடம் என்னவோ சொல்லிக்கொண்டிருக்க ஸ்கூட்டியில் அமர்ந்தவாறு காலை ஊன்றி நின்றவள் மேலே தலையுயர்த்தி பார்த்தாள்.
குருஆர்யனின் பார்வை கூர்மையாக அந்த நிமிடம் தான் அவளை முதன்முதலில் பார்த்தது நினைவுக்கு வந்தது.
‘அன்று இண்டர்வ்யூ பொழுதிலும் இவள் தானே இடையில் வந்தது’ என்று ஞாபகம் வர பாக்கெட்டினுள் இருந்த வலது கை, கண்ணாடி தடுப்பில் அழுந்த பதிய இன்னும் நெருங்கி நின்று கீழே பார்த்தான் அவளை.
ப்ரவன் அவளிடம் பேசி அந்த ஸ்கூட்டியை செக்யூரிட்டியை வரவழைத்து எடுத்து போக சொல்லியவன் காரை அழைத்து தங்கையை அனுப்பி வைத்தான்.
ஒவ்வொரு நிகழ்வுகளையும் மேலிருந்து பார்த்தபடி இருந்தவனின் முகம் இறுகி கிடந்தது.
மீண்டும் இருக்கையில் வந்தமர்ந்தான். ப்ரவன் வரும்வரையில் அவன் அந்த பணத்தை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
ஒருமனது இடித்துரைத்தது அவனின் தவறை. ‘உன்னை இப்படி பேசியிருந்தால் விட்டுவைப்பாயா?’ என்று.
உண்மை தான். அத்தனை இலகுவில் விட்டுவிடமாட்டான். ஆனால் இதுவரை இப்படி முகத்திற்கு நேரே யாரும் தன்னை பேசியிராததால் இந்த அனுபவம் அவனின் கோபக்கிடங்கில் தீ மூள செய்திருந்தது.
பல்லை கடித்துக்கொண்டு தன்னை சமன் செய்ய முயன்றுகொண்டிருக்க கதவு திறக்கப்படும் ஓசை கேட்டது.
ப்ரவன் தான். ஆனால் ஆர்யா திரும்பவும் இல்லை. கண்ணை திறக்கவும் இல்லை.
தன்னிருக்கையில் வந்தமர்ந்த ப்ரவனுக்கு சட்டென ஆர்யாவை கேட்க வார்த்தைகள் வந்துவிட்டாலும் தங்கையிடம் சொல்லி வந்த வார்த்தைகள் அவனை கட்டுப்படுத்தியது.
“நதி இவ்வளோ கோபப்படற பொண்ணில்லை. அவளே ரொம்ப வருத்தப்படற அளவுக்கு பேசியிருக்கீங்க…” என்று அப்போதும் அவன் தன்மையாக சொல்ல,
“ஸீ மிஸ்டர் ப்ரவன், அந்த பொண்ணு சொன்ன மாதிரி…”
“நனியிதழ். என் தங்கச்சி. எங்க குடும்பத்தோட கடைக்குட்டி. அவ பிரபஷன் பிஸியோதெரபிஸ்ட். வீட்டுல நாங்க நதின்னு கூப்பிடுவோம். உங்க தங்கச்சிக்கு சின்ன நாத்தனார்…” என்றான் வரிசையாக.
நனியிதழ் தங்களுக்கு எத்தனை முக்கியம் என்பதை ப்ரவன் இதன் மூலம் சொல்லிவிட ஆர்யா சிறிது அமைதி காத்தான்.
“ஓகே, இன்னைக்கு எதையும் பேச முடியாது. இன்னொருநாள் வரேன். கிளம்பறேன்…” என்றான் குருஆர்யன்.
அப்போதும் தான் செய்ததற்கு வருத்தம் கூட தெரிவிக்காமல் அவன் எழுந்துநின்ற விதம் கண்டு ப்ரவனுக்கு என்னவோ போலானது.
“அன்ட் ப்ரவன், உங்க தங்கச்சியை ஹர்ட் பண்ணனும்ன்னு பேசலை நான். புது கார். அந்த நிமிஷம் சட்டுன்னு ஹைப்பராகிட்டேன். இது இயல்பு தானே? நமக்கு பிடிச்ச விஷயம் பாதிக்கப்படும் போது நம்மோட எமோஷன்ஸ் இப்படித்தானே?…” என்ற ஆர்யா,
“அந்த கோபத்துல அப்படி பேசிட்டேன். சொல்லிடுங்க உங்க கடைக்குட்டிட்ட. கிளம்பறேன்…” என்று வாசலை நோக்கி நடக்க,
“ஆர்யன் பணம்…” என்ற ப்ரவனின் குரலை காதில் வாங்காதது போல கைபேசியை காதுக்கு கொடுத்தபடி வெளியேறினான் குருஆர்யன்.
“என்ன ஒரு ஹெட்வெய்ட்?…” என்று பல்லை கடித்த ப்ரவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
வீட்டிலும் இதனை சொல்லக்கூடாதென்று சொல்லிவிட்டாள் நனியிதழ். விஷயம் தெரிந்தால் தன்னை அவமதித்ததாக மட்டுமல்ல, ஆர்யாவின் மீதான அபிப்ராயம் வேறு விதமாய் திரும்பிவிடும், உறவுகளுக்குள் அது நல்லதல்ல என்று எச்சரித்திருந்தாள்.
நரசிம்மனுக்கு இது அறவே பிடிக்காது. ஆர்யன் எப்படி இருந்தால் என்ன? பெண் கொடுத்து பெண் எடுக்கும் குடும்பம். இதனைக்கொண்டு கசப்பு எதுவும் வந்துவிட வேண்டாம் என்று நினைத்தாள்.
சபிதாவிடம் சொல்லிவிட்டு புறப்பட்டிருக்க வீட்டில் அடிபட்டு வந்ததற்கு அத்தனை கேள்விகள்.
மீண்டும் ஊருக்கு அனுப்பவே முடியாதென்றார் சுஜாதா. திருமணம் முடியும் வரையேனும் தங்களுடன் இருக்கும்படி சொல்ல,
“அங்க வேலையே இல்லையா? இத்தனை நாள் லீவ் போட்டதே பெருசு. இப்ப போனா ரிட்டையர்ட் ஆனதும் இங்க வருவேன். இல்லைன்னா பார்த்துக்கோ…” என்று ஸ்ரீநிவாசனிடம் எகிறியிருந்தார் நரசிம்மன்.
அதன்பின் யாரும் வற்புறுத்தவில்லை அவர்களை. இரண்டு நாட்களில் கிளம்பவேண்டும்.