“என் ஒருத்தனுக்காக என்னத்துக்கும்மா அலையனும்? இங்கவே குடுங்க. வாங்கிக்கறேன். அடுத்தவங்களா என்ன? கல்யாணம் முடிஞ்சதும் புள்ளைங்களோட வாங்க. நம்ம வீடு தானே?…” என்று இலகுவாய் நரசிம்மன் எவ்வித பாசாங்கும் இன்றி சொல்ல குருமூர்த்தி இதை எதிர்பார்க்கவில்லை.
இன்றளவும் சொந்தங்கள் நேரில் வந்து பத்திரிக்கை வைக்காமல் சென்றால் எத்தனை தூரம் பேச்சுக்களை கொட்டுவார்கள் என்று அறிந்திருந்தாரே.
சூழ்நிலை, வேலைப்பளு, அலைச்சல் என எதையும் யாரும் யோசிப்பதில்லை இந்த காலகட்டத்தில்.
‘நேர்ல கூட வந்து பத்திரிக்கை வைக்கலை. என்ன மரியாதை? என்ன மதிச்சு வச்சிருக்காங்க?’ என்ற பேச்சுகள் மத்தியில் எத்தனை சாதாரணமாக சொல்லிவிட்டார் என வியந்து பார்த்தார் நரசிம்மனை.
“மனசுக்குள்ள என்னவும் நினைச்சுக்காதீங்க. என்னடா வீட்டுக்கு வரோம்ன்னு சொல்லியும் வேண்டாம்ன்னு சொல்றேன்னு. சாதாரண நாள்ல வரது வேற. ஆற அமர இருந்து பார்க்க நல்லாயிருக்கும். கல்யாணம், விசேஷங்கள் பத்திரிக்கை வைக்கிறது எல்லாம் அரக்கபரக்க போற காரியம்…” என்றவர்,
“படபடப்பா போயிரும். நின்னு பேச நேரமிருக்காது. அதான் சொன்னேன். கல்யாணம் முடிஞ்சு வந்தீங்கன்னா ரெண்டுநாள் சேர்ந்தாப்ல தங்கி ஓய்வெடுத்து நிம்மதியா இருக்கலாம் பாருங்க…” என்றார் நரசிம்மன்.
பேச்சில்லை குருமூர்த்தியிடம். அவர் சொல்வதை அப்படியே முழுமனதாக ஏற்றுக்கொண்டவருக்கு நரசிம்மனின் அந்த எதார்த்த பேச்சு பிடித்து போனது.
“ரொம்ப சரியா சொன்னீங்க…” என்றும் புன்னகையுடன் கூறினார் குருமூர்த்தி.
பத்திரிக்கை கொடுக்கபோகும் விஷயமாக சொந்தங்களை பற்றி சுஜாதா விசாரிக்க அதை பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்தேறியது.
பரத் மருத்துவமனை சென்றிருக்க வீட்டில் குருஆர்யனும் வீட்டில் இல்லை. அனைவரும் பேசிக்கொண்டிருக்க நரசிம்மனின் போனுக்கு அழைப்பு வர,
“பேசிட்டிருங்க. ஊர்ல இருந்துதான் போன். என்னன்னு கேட்டுட்டு வரேன்…” என எழுந்து வெளியே வந்தார் நரசிம்மன்.
போன் பேசியபடி நகர்ந்தவர் பேசி முடித்து வீட்டிற்குள் திரும்பும் பொழுது கேட்டை திறந்துகொண்டு நடந்து வந்தவனின் மேல் மோதியவர் அவனை பிடித்தபடி சுதாரித்து நின்றார்.
“இந்தாப்பா பார்த்து வரமாட்டியோ?…” என்று சொல்லியவரை பார்த்தவன் புருவம் சுருக்க அவனை அத்தனை பார்த்திராதவருக்கும் அடையாளம் தெரியவில்லை.
“இந்த காலத்து பசங்களுக்கு எல்லாத்துலையும் வேகம். மெல்ல நட…” என்றபடி ஆர்யாவின் தோளில் தட்டிவிட்டு அவனை கண்டுகொள்ளாமல் உள்ளே செல்ல அவர் யார் என பார்த்தபடி சிலநொடி தேங்கி நின்றவன் பின் வீட்டிற்குள் வர,
“என் சின்ன பையன். குருஆர்யன்…” என்று குருமூர்த்தி நரசிம்மனுக்கு அறிமுகப்படுத்த, அவன் வந்தவர்கள் அனைவரையும் பார்த்து ‘வாங்க’ என்றான் பொதுவாய்.
“இவர் உன் மாமாவோட தம்பி. நரசிம்மன். தக்கலைல ஸ்கூல் ஹெட்மாஸ்டரா இருக்கார்…” என மகனிடம் தமயந்தி கூற,
“வணக்கம்…” என்றவன் அவர்கள் எதிரில் அமர நரசிம்மன் தலையசைத்தார் அவனை பார்த்து.
“இப்பத்தான் வெளில பார்த்தேன்…” என்று சொல்லியவரை தான் ஆராய்ந்தான் குருஆர்யன்.
நனியிதழின் தந்தை என்ற எண்ணம் அவனுக்குள் சுறுசுறுவென்று என்னவோ செய்ய,
“நீங்க பேசிக்கிட்டிருங்க. வரேன்…” என எழுந்தான்.
“அட இருங்க தம்பி. உங்க அண்ணன், தங்கச்சி கல்யாண விஷயமா தானே பேச வந்திருக்கோம். வந்ததும் புறப்படறீங்க?…” என்றவரின் பேச்சில் ஆர்யன் திகைக்க, தமயந்தி பதறிவிட்டார்.
‘சபாஷ்’ என்றது குருமூர்த்தி மனது. எதிர்பார்க்கவில்லை தான். ஆனாலும் சந்தோஷம். ஸ்ரீநிவாசன் சுஜாதாவை பார்க்க,
“தம்பிக்கு எதுவும் வேலை இருக்குமோ என்னமோ…” என்றார் சுஜாதா.
“இது வேலை இல்லையே. கடமை. இதெல்லாம் தம்பியும் தானே செய்யனும். தெரிஞ்சுக்கனும் இல்லையா?…” என்று நரசிம்மன் சொல்ல,
“என்ன செய்யனும்?…” என்றான் ஆர்யா ஸ்ரீநிவாசனை ஒரு பார்வை பார்த்துவிட்டு.
“அந்த நோட்டு, பேப்பரை தம்பிட்ட குடுங்க. யார் யாருக்கு பத்திரிக்கை வைக்கனும்ன்னு எழுதிருவோம்…” என்றவர்,
“நீங்க சொல்லுங்க. பேரும், போன் நம்பரும், எங்க இருக்காங்கன்றதும் எழுதினா போதும். அட்ரஸ் எல்லாம் போன்ல பேசி கேட்டுப்போம். உள்ளூர்ல இருக்கறதை விட தூரத்துல அவசியமா குடுக்க வேண்டியவங்களுக்கு குடுத்திருவோம்…” என பேசிக்கொண்டிருந்தார் குருமூர்த்தியிடம்.
“நானே நாளைக்கு எழுதி குடுத்தனுப்பறேன் அண்ணே…” என்று தமயந்தி சொல்ல,
“ப்ச், அதெல்லாம் வேண்டாம். இப்ப சொல்லுங்க…” என்ற ஆர்யா நோட் பேடை தூரம் வைத்தவன்,
“எழுதவெல்லாம் வேண்டாம். போன்ல அனுப்பறேன்…” என்று ஸ்ரீநிவாசனிடம் சொல்லி நரசிம்மனை பார்த்துக்கொண்டே,
“பேப்பர்ன்னா எங்கையாவது மிஸ்ஸாகிடும். போன்ல அப்படியே இருக்கும்…” என்று சொல்லி டைப் செய்ய ஆயத்தமாக,
“போன் மட்டும் தொலையாதாக்கும்…” என்றார் நரசிம்மன் கேலியாய்.
இதென்னடா என்றானது அங்கிருந்தவர்களுக்கு. இருவரின் பேச்சுக்களும் மறைமுகமான பனிப்போர் போல தோற்றமளித்தது.
ஸ்ரீநிவாசன், சுஜாதாவிற்கு நரசிம்மனின் பேச்சுக்கள் பழகிய ஒன்று தான். அதனால் எப்போதும் போலிருந்தனர்.
ஆர்யாவை பிடித்து வைத்ததில் தான் சங்கடத்துடன் பார்த்திருந்தனர். ஆனால் ஆர்யா வீட்டில் அவனின் பேச்சும், பார்வையும் என்னவோ காரணமிருப்பதை உணர்த்துவதை போலிருந்தது.
“எவ்வளவு நேரம் முகத்தை பார்த்துட்டே நிப்பீங்க ம்மா? சொல்லுங்க…” என்று கேட்டவனின் குரலின் பேதத்தில் தமயந்தி ஒவ்வொன்றாய் சொல்ல இடையிடையே அவர்கள் எங்கே என்பதை நரசிம்மனும், சுஜாதாவும் கேட்டுக்கொண்டனர்.
எல்லாம் ஓரளவு ஞாபகம் இருந்தளவு உறவுகளின் பெயர்களை அறிந்து விவரங்களை சேமித்துக்கொண்ட பின்னர் தான் புறப்பட ஆயத்தமாகினார்கள்.
“கல்யாணத்துல சந்திப்போம்…” என்று நரசிம்மன் விடைபெற கைகளை கட்டியபடி பார்த்திருந்தான் குருஆர்யன்.
‘அப்பாவுக்கும், பொண்ணுக்கும் அதிகாரம் பன்றது தான் வேலை போல’ என்று உள்ளூர புகைந்த மனதை அதட்டி அடக்கியபடி தன்னறைக்குள் நுழைந்துகொண்டான் அவன்.
அதன்பின்னர் அவர்களை முழுதாய் மறந்திருந்தவன் வேலைகளும், திருமண வேலைகளும் மொத்தமாய் இழுத்துக்கொள்ள நாட்கள் சென்ற வேகம் தெரியவில்லை.
அவ்வப்போது இரு குடும்பங்களின் சேர்ந்த ஓரிரு சந்திப்பில் நனியிதழ் பெயர் அடிபடும்.
கேட்பவனுக்கு அந்த சமயம் தான் அவளின் ஞாபகம். அதுவும் அவள் தன்னிடம் பணத்தை வைத்து பேசியவை தான் தோன்றி எழும். (Klonopin)
அன்று குருஆர்யன் வீட்டில் முகூர்த்தக்கால் நடும் வைபவம். வெளியூர் சென்றிருந்தவன் அன்று காலை தான் வீடு திரும்ப இருந்தான்.
ஏர்போர்ட்டில் இருந்து வீடு வரும்வழியில் இரண்டொரு முறை அழைப்பு வந்துவிட்டது அவனுக்கு.
“இன்னும் கால்மணி நேரத்துல வீட்டுல இருப்பேன் ம்மா…” என சலிப்புடன் சொன்னாலும் மீண்டும் அழைப்பு.
“கோபப்படாத ஆரி. நல்லநேரம்…” என்று முடிக்கும் முன்,
“கல்யாணம் என்ன எனக்கா? நல்லநேரம் போயிடும்ன்னா நீங்க ஆரம்பிக்க வேண்டியது தானே? வரும்போது வருவேன்…” என்று பொரிந்துவிட்டு அழைப்பை துண்டித்திருந்தவன் போனில் பரத்தின் எண்.
அழைப்பை ஏற்கவில்லை. இதை தான் அவனும் பேசுவான் என அடித்து ஓயவிட்டுவிட்டான் குருஆர்யன்.
கால்மணி நேரத்தில் செல்லவேண்டியவன் கூடுதலாய் பத்துநிமிடமாகிவிட்டது செல்வதற்கு.
வீட்டின் வெளியே ஆங்காங்கே உறவுகள் ஒருசிலர் கண்களுக்கு அகப்பட எதிர்பட்டவர்களின் விசாரிப்புகளுக்கு தலையசைப்பும், பதிலும் கொடுத்தபடி உள்ளே நுழைந்தவன் மேல் குளிர்ச்சியாய் என்னவோ கொட்ட,
“ஷிட்…” என்று நின்று அவனின் சட்டையை பிடித்து நிமிர்ந்து பார்க்க நனியிதழ்.
அவளின் பின்னால் பேயறைந்த முகத்துடன் அனுஷாவும், முகம் கொள்ளா சிரிப்புடன் மதுஸ்ரீயும்.
நனியிதழ் கையிலிருந்த சந்தனம் மொத்தமும் குருஆர்யனின் மேல் சிந்தி சிதறியிருந்தது. அவன் பேசும் முன்,
“ஆரி நான் தான் நதியை பிடிக்க வந்தேன். நீ வரது தெரியாம தள்ளிவிட்டுட்டேன்…” என முந்திக்கொண்டு வந்தாள் மதுஸ்ரீ.
இவை அவனின் சிந்தையில் விழுந்தாலும் எதிரே சந்தன கும்பாவுடன் நின்றிருந்தவளை பார்த்தவன்,
“கண்ணை…” என ஆரம்பிக்க,
“என் கண்ணு இருக்கற இடத்துல தான் இருக்கு…” என்று அசராமல் அவனின் காதிலும் விழாமல் சொல்லி,
“அம்மா கூப்பிடறாங்க. வெளில இருக்கேன் அண்ணி…” என்று விலகி சென்றாள் நனியிதழ்.
“நேரமே சரியில்லை…” என்றபடி தன்னறை நோக்கி சென்றான் குருஆர்யன்.
“ஆரிக்கு செம்ம வரவேற்பு இல்ல? ஆச்சர்யம், அதிசயம் ஆனால் உண்மை. எரிமலை ஆரி இவ்வளோ சைலண்டா போய் பார்த்ததில்லை. இந்த நியூஸை முதல்ல என் புருஷனுக்கு தான் சொல்லனும்…” என்றபடி மதுஸ்ரீ அனுஷாவை அழைத்துக்கொண்டு சென்றாள்.