“ஆமா, ஸ்டார்ட்டிங் வொர்க் போய்ட்டிருக்கு…” என சொல்லவும்,
“எங்க விஷ்ணு?…” என தன் மகனை தேடினார்.
“பையனை கூட்டிட்டு போனாங்க. உள்ள தான் இருப்பாங்க மாமா…” என்று மதுஸ்ரீ வேகமாய் சொல்லிவிட்டு கணவனை அழைக்க செல்ல,
“இங்க தான் இருப்பாங்க. வருவாங்க….” என்றான் குருஆர்யன் தணிக்காச்சலத்திடம்.
“சரி உள்ள வாங்க எல்லாரும்…” என தமயந்தி அழைத்து செல்ல அனைவரும் உள்ளே சென்றனர்.
இதையெல்லாம் கவனியாமல் பூஜை முடிந்ததும் நனியிதழ் அனுஷாவை தோட்டத்தில் ஆங்காங்கே நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தாள்.
“ம்ஹூம், இந்த சைட்ல போக்கஸ் இல்லை. இப்படி வாங்கண்ணி…” என்று சொல்ல,
“அனு…” என்ற மதுஸ்ரீயின் குரலில்,
“நதி இப்ப வந்திடறேன். இருங்க…” என்று உள்ளே ஓடினாள் அனுஷா.
மிகப்பெரிய தோட்டம். அத்தனை இடத்தையும் வளைத்து போட்டு அழகிய நந்தவனம் போலிருந்தது.
அனுஷா செல்லவும் கீதாவிற்கும், ப்ரவனுக்கும் தான் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துகொள்ள ப்ரவன் அழைத்துவிட்டான்.
“என்னண்ணா, எங்களோடவே வந்திருக்கலாம்ன்னு தோணுதா?…” என எடுத்ததும் கேட்க,
“நான் ஏன் வரனும்? ஒரு கால் பண்ணினா என் மிஸஸ் என்னை தேடி வந்துட்டு போறாங்க?…” என்றான் ப்ரவன் கேலியும், கர்வமுமாய்.
“அந்த சேட்டை தான் இவ்வளோ பேச சொல்லுது. பாவம் அனுஷா அண்ணி…”
“யார் அவளா? சொல்ல போனா நான் தான் பாவம்…” என்றவன்,
“அதைவிடு, அனு எப்படி இருக்கா? அவளுக்கு சந்தோஷமா?…” என கேட்க,
“இதை ஏன் என்கிட்ட கேட்கனும்? நீங்களே கேட்கலாமே அண்ணிட்ட?…” என்றாள் நனியிதழ்.
“இல்லடா நதி, அதான் சொன்னேனே அந்த இண்டர்வ்யூ ப்ராப்ளம்ல இருந்தே நான் நார்மலா பேசினா கூட சீரியஸா எடுத்துக்கறா. விளையாட்டு பேச்சுக்கும் பயந்து போறா. ரொம்ப கஷ்டபடுத்திட்டேன் போல…” என வருத்தமாய் சொல்ல,
“உடனே எல்லாம் சரியாகிடுமா என்ன? அவங்க பயப்படற மாதிரி தானே நீங்களும் நடந்துக்கிட்டது. சீக்கிரம் புரிஞ்சுப்பாங்க…”
“ஹ்ம்ம், காதலிச்சு கல்யாணம் செய்ய போறோம். ஆனா எங்க?…” என பெருமூச்சு விட்டவன்,
“சாப்பிட்டு கிளம்பனும்ன்னு அம்மா சொன்னாங்க. இப்பவே இங்க மழை வர மாதிரி இருட்டிட்டு நிக்குது….” என்றாள் கருமேகம் சூழ்ந்த வானத்தை பார்த்தபடி.
“ஹ்ம்ம், ஹெவி ரெய்ன் இருக்கும்ன்னு சொல்லியிருக்காங்க. முடிஞ்சளவு சீக்கிரம் கிளம்புங்க. சும்மாவே அங்க இருந்து நம்ம வீடு வர நேரமாகும். பார்த்துடா. அம்மாவுக்கு மழையில நனைஞ்சா ஒத்துக்காது…” என்று எச்சரிக்க,
“நல்லா நியூஸ் வாசிக்கிறீங்க…” என கிண்டல் பேசினாள் நனியிதழ்.
“வாலு, வா பேசிக்கறேன்….” என்று சிரிப்புடன் அழைப்பை துண்டித்தான் ப்ரவன்.
போனை வைத்தவள் அந்த குளுமையை ரசித்தபடி திரும்பி நடக்க அவளெதிரே தணிகாச்சலத்துடன் பேசிக்கொண்டு நின்றான் குருஆர்யன்.
சில்லென்ற ஈரக்காற்றும், அதனுடனான மெல்லிய சாரலும் குளிர்விக்க துவங்க, நடந்து வந்துகொண்டிருந்தவள் வேக எட்டுக்கள் போட்டு போர்ட்டிக்கோவினுள் ஓடி வரும்முன் சாரல் பெருந்தூறலாய் மாறி மழை வலுத்தது.
பாவாடை தாவணியில் இருந்தவள் ஒரு கையை தலைக்கு மேலும், இன்னொரு கையினால் தாவணியை சுற்றி பிடித்து, பாவாடையையும் சேர்த்து லேசாய் தூக்கி பிடித்தபடி ஓடி வந்தவள் அவனை தாண்டிக்கொண்டு வீட்டினுள் சென்றாள்.
“யார் மாப்பிள்ளை இந்த பொண்ணு?…” என்றார் தணிகாச்சலம்.
அவரின் கேள்வியில் தான் இத்தனை நேரம் அவள் வந்து சென்றதை தான் தான் பார்த்துக்கொண்டிருந்ததையே உணர்ந்தான் குருஆர்யன்.
“என்ன மாமா?…” மீண்டும் கேட்க,
“இந்த உலகத்துல தானே இருக்கீங்க?…” என்று சிரித்த தணிகாச்சலம்,
“இப்ப உள்ள போற பொண்ணை நீங்க பார்த்தீங்களே? அந்த பொண்ணு யாருன்னு கேட்டேன். இதுவரைக்கும் இங்க பார்த்ததில்லையே அதான்…” என்றார்.
“ப்ரவனுக்கு சித்தப்பா பொண்ணு. கல்யாணத்துக்கு வந்திருக்காங்க…” என்று அந்த பேச்சை நிறுத்திக்கொண்டான்.
“அதானே? நம்ம சொந்தபந்தம் எல்லாம் தான் நமக்கு தெரிஞ்சவங்களாச்சே. புதுசா பார்க்கவும் தெரியலை. என்ன வழி சொந்தமாம்?…” என்று மீண்டும் கேட்க,
“ஸ்ரீநிவாசன் மாமாவுக்கு தம்பி பொண்ணு…” என்றான் ஆர்யா உள்ளுக்குள் மண்டும் எரிச்சலுடன்.
“தெரிஞ்சு என்னாக போகுது? உங்க ப்ராடக்ட் பிரமோஷனுக்கு நல்ல ஆர்ட்டிஸ்ட் கேட்டீங்கல்ல…” என பேச்சை மாற்றவும் பேச்சு தொழில் சம்பந்தமாக மீண்டும் திரும்பியது.
காலை உணவுக்கு அனைவரும் மாடிக்கு செல்ல அங்கே விஷ்ணு, மதுஸ்ரீ, அனுஷா, நனியிதழ், பரத் என்று கூட்டணி அமைக்கப்பட்டிருந்தது.
“நோ அண்ணி. அதுவும் கல்யாண வீடு தான். கீதாக்காவுக்கு இன்னும் நிறைய சர்ப்ரைஸ் எல்லாம் ரெடி பண்ணனும். நாளும் கம்மியா இருக்கே. கல்யாணம் முடியட்டும் நீங்க அங்க வந்திருவீங்க தானே?…” என நனியிதழ் சொல்ல,
“நதி கிளம்புவோமா?…” என்று வந்தார் சுஜாதா.
“போகலாம்மா…” என அவள் எழுந்துகொள்ள,
“எங்களுக்கு இவளை அனுப்ப மனசே இல்லை அத்தை. ஈவ்னிங் வரை இருன்னு சொன்னா கேட்கமாட்டேன்றா…” மதுஸ்ரீ சொல்ல,
“பெண்கள் கூட்டணி ஸ்ட்ராங் ஆகிருச்சு. அதான் பிரிய மனசில்லை…” என்று விஷ்ணு சிரிப்புடன் சொல்ல சுஜாதாவின் முகத்தில் புன்னகை.
“அடுத்து கல்யாணம் தானே? மெஹந்தி, சங்கீத்ன்னு எல்லாம் சேர்ந்து தானே இருக்க போறீங்க. அப்பறம் என்ன…” என்று சிரித்தவர் நனியிதழை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.
அன்றைய விசேஷத்திற்கு என்று வந்திருந்த உறவுகளும் கிளம்பியிருக்க இரவு உணவை முடித்துக்கொண்டு வந்தமர்ந்தனர் குருமூர்த்தியும் தமயந்தியும்.
மதுஸ்ரீ பிள்ளையை உறங்க வைத்துவிட்டு தானும் வந்து அமர்ந்துகொண்டாள் பெற்றோருடன்.
“கீதா நம்ம ஹாஸ்பிட்டல்ல ஜாயின் பன்றதை பத்தி பேசினாங்க சம்பந்தி. அதை பரத்தும், கீதாவும் சேர்ந்து முடிவு பண்ணட்டும்ன்னு சொல்லிட்டேன். கீதா மனசுல என்ன இருக்குன்னு தெரியாதுல…” என்று சொல்ல குருஆர்யனும் வந்துவிட்டான்.