அவனின் அதட்டல் சத்தத்தில் மூவரும் திகைத்து அவன் புறம் திரும்ப முறைப்புடன் எழுந்து நின்றவன்,
“முதல்ல நம்ம வீட்டு விசேஷம் நல்லபடியா முடியட்டும். அடுத்தவங்களுக்கு கல்யாணம் பேசறதை எல்லாம் அதுக்கப்பறமா வச்சுக்கோங்க…” என்று சொல்ல அவன் பேசியதில் அமைதியாகினர் தமயந்தியும், மதுவும்.
“இது நமக்கு தேவையில்லாததுன்னு சொல்றேன். பேசனும்ன்னா தணிகாச்சலம் மாமாவே பேசிக்கட்டும். அது அவங்க பாடு. உங்களுக்கென்ன?…” என்றவன் மதுவின் புறம் திரும்பினான்.
“கல்யாணம் சின்னவிஷயம் கிடையாது. அதுவும் ரெண்டு சம்பந்திங்களுக்கு நடுவுல ஒரு சம்பந்தம் பேசறப்போ பாசிட்டிவ்வா முடிஞ்சா அதுவேற. நெகட்டிவாகிட்டா யாருக்குமே நிம்மதி இருக்காது. இதுல நீ தலையிடாம இரு…” என்றான் அவளிடம் எச்சரிக்கும் விதமாய்.
“நிதீஷ் நல்ல பையன் ஆரி…” மது சொல்ல,
“நாம பார்க்கிற எல்லாம் நம்ம கண்ணுமுன்ன நல்லவங்களா இருக்கலாம். உள்ளூருக்குள்ளயே ஒவ்வொருத்தர் முன்னாடியும் ஒவ்வொரு மாதிரி இருக்காங்க. பாரின்ல இருக்கறவன். அங்க எப்படி இருக்கான்னு கூட இருந்தா பார்த்தோம்?…” என்று பீதியை கிளப்பினான் குருஆர்யன்.
‘அடப்பாவி மகனே’ என்று தன் சின்ன மகனை கலவரம் கொண்டு பார்த்தார் தமயந்தி.
“இதுதான் பையன், இங்க பொண்ணிருக்குன்னு சொல்லி பேசி முடிக்க இதென்ன பிஸ்னஸா? ஃபேமிலி. உன்னை அங்க பொண்ணு குடுத்திருக்கோம். ப்ரவன் வீட்டுல பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கறோம். சின்ன பிரச்சனைன்னாலும் இத்தனை பேர் வாழ்க்கை இருக்கு…” என்று சொல்ல,
“கேட்போம்ன்னு தானே சொல்லியிருக்காங்க ஆரி. இதுக்கே இவ்வளோ யோசிக்கனுமா?…” என்றார் குருமூர்த்தி.
“கண்டிப்பா யோசிக்கனும். வெளியிடங்கள்ல வரன் சொன்னாலே யார் என்னன்னு யோசிச்சு தான் சொல்லனும். இப்ப அப்படியான காலகட்டத்துல தான் இருக்கோம்….” என்றவன்,
“ஏன் என்னையே யாரும் சொன்னாங்கன்னா வெளில என்ன சொல்லுவாங்க? அமைதியானவன் அப்படின்னு தானே? ஆனா அப்படியா நான்?…” என்றதும்,
“நூத்துல ஒரு வார்த்தை. இப்ப புரிஞ்சது ஆரி…” என்றார் தமயந்தி உடனே மகனிடம் எழுந்து நின்று.
தமயந்தியின் சிரிப்பும், பேச்சும் உணர்த்தியதில் ஆர்யாவின் முகத்தில் ஒரு முறைப்பு வந்தமர,
“அவசரப்பட்டுட்டேன் போல…” என மகளருகே அமர்ந்தவர்,
“நான் சொல்லல, ஆரிட்ட சொன்னா கரெக்ட்டா சொல்யூஷன் சொல்லிடுவான்னு. எப்படி சொன்னான் பாரேன்…” என்று பேச்சை மாற்ற முயல இடுப்பில் கைவைத்து நின்றவன் அப்படியே பார்த்து நின்றான்.
அவருக்கும், மதுஸ்ரீக்கும் சிரிப்பு தாளவில்லை தமயந்தியின் இந்த அட்டகாசம் கண்டு.
“என்ன பார்த்துட்டே இருக்கீங்க? என் மூஞ்சில என்ன இருக்காம்?…” என்றவர் குருமூர்த்தியை தனக்கு துணையாய் அழைக்க,
“சரி சரி. நீ சொல்றது சரிதான். கல்யாண விஷயம். பார்த்தே பேசலாம்….” என்றார் அவரும் தன்மையுடன்.
“அப்போ இன்னும் பேசலாம்ன்ற முடிவுல தான் இருக்கீங்களா?…” என்றவன்,
“அப்படியே அந்த பொண்ணை எடுத்தே ஆகனும்ன்னா தணிகாசலம் மாமாவே நேரடியா அவங்க வீட்டுல பேசிக்கட்டும். ஸ்ரீநிவாசன் மாமாவை தான் அவருக்கு நல்லா தெரியுமே? அப்பறம் என்ன நீங்க தூது?…” என்று கடுகடுக்க,
“சரிப்பா. மது சொல்லிப்பா அவ மாமனார்கிட்ட. வேற எதுவும் பேசனுமா?…” என குருமூர்த்தி கேட்க,
“இல்லை. இப்ப மூட் ஆஃப். மார்னிங் பேசறேன். வெளில கிளம்பிட வேண்டாம்…” என்று சொல்லியவன் எழுந்து செல்ல அவன் அறைகதவு மாடியில் சாற்றப்படும் வரை தமயந்தி கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தார்.
“ம்மா, போய்ட்டான்…” என்று மதுஸ்ரீ அடக்கிவைத்திருந்த சிரிப்பை சத்தமாய் வெளிப்படுத்த குருமூர்த்திக்கும் புன்னகை.
“ம்மா, இன்னும் என்ன?…” என்று மதுஸ்ரீ கேட்க,
“சரி விடு. அவன் சொன்னதும் ஒருவகையில சரி தானே? அந்த பொண்ணு தாயில்லா பொண்ணு வேற. நாலையும் யோசிக்கனுமே. காட்டமா சொன்னாலும் ஆரி சொன்னதுலயும் அர்த்தம் இருக்கு தானே?…” என்று குருமூர்த்தி சொல்ல,
“நான் அதை யோசிக்கலை…” என்றார் தமயந்தி பெருமூச்சுடன்.
“பின்ன?…” என்றனர் தகப்பனும், மகளும் ஒரேசேர.
“இவனுக்கு நான் என்னன்னு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ண? இப்பவே கண்ணை கட்டுது. கண்ணு முன்னாடி என்னென்னவோ வந்து போகுது…” என சிறுபிள்ளை போல கண்ணை உருட்டி அவர் சொல்லிய பாவத்தில் அடக்கமாட்டாமல் மதுஸ்ரீ சிரிக்க,
“நீ பார்க்கற வரைக்கும் அவன் இருப்பானா? அவனுக்கே யாரையும் பிடிச்சா?…” என்றார் குருமூர்த்தி.
“பிடிச்சிட கிடிச்சிட போகுது. நீங்க வேற ஏன்? இவனுக்கு பிடிச்சா போதுமா? இவன் குணத்துக்கு எந்த பொண்ணும் ஒத்துப்போக மாட்டா. நாமளா பார்த்து கட்டிவச்சா தான் உண்டு. ஆனாலும் அந்த புள்ளை பாவம்ல…” என்று இன்னும் வராத மருமகளை எண்ணி கவலையில் ஆழ்ந்து போக,
“ம்மா, முதல்ல பேசி வச்ச கல்யாணம் முடியட்டும். இந்த கவலை எல்லாம் அப்பறம் பார்த்துப்போம்…” என்று மதுஸ்ரீ சொல்ல,
“ஏன் மது, சின்னவனை கட்டிக்க போற பொண்ணும் நாளைக்கு என்கூட இப்படி உக்கார்ந்து கம்பெனி குடுப்பா இல்ல? எனக்காச்சும் உங்கப்பா டமார்ன்னு வந்து சப்போட்டா பழம் விப்பார். உன் தம்பி அதுக்கு சரிப்பட்டு வரமாட்டானே?…”
தமயந்தியின் புலம்பல்கள் அத்துடன் நிற்கவில்லை. அன்று இரவெல்லாம் உறக்கத்தில் கூட உளறல்களாக வெளிப்பட்டது.
“நான் எங்க பொண்ணு பார்த்தேன்?…” என அரைத்தூக்கத்தில் எழுந்தமர்ந்து ‘கனவா?’ என மீண்டும் படுத்துறங்கும் நிகழ்வெல்லாம் நடந்துவிட்டது.
மகனின் பேச்சிற்கு பயந்தே நனியிதழை பெண் கேட்டதை பற்றி தமயந்தி சுஜாதாவிடம் மூச்சுவிடவில்லை.
“இந்த சம்பந்தம் தான் நடக்கனும்ன்னு விதிச்சிருந்தா நடக்கும். விடுங்கம்மா…” என்றுவிட்டாள் மதுஸ்ரீ.
“நதி நல்ல பொண்ணு, நல்ல மாப்பிள்ளை அமையனும். பார்த்துட்டே இரு. எல்லாரும் மூக்குமேல விரல் வைக்கிற மாதிரி தான் மாப்பிள்ளை அமையும்…” என்றுவேறு மகளிடம் கூறினார் தமயந்தி.
திருமண நாளும் நெருங்க ஒவ்வொரு விசேஷ நிகழ்வுகளும் பிரமாண்டமாகவும், பெருந்திரளுடனும் நடந்தேறியது.
அன்று காலை தான் எந்தவித சச்சரவுகளும் இன்றி சுமூகமாக கொண்டாட்டமாக திருமணம் நடந்து முடிந்திருந்தது.
எல்லாம் சந்தோஷத்துடன் நகர்ந்துகொண்டிருக்க யாருமே எதிர்பாராத விதமாக நரசிம்மனுக்கும், குருஆர்யனுக்கும் நேரடியாக முட்டிக்கொண்டது.
இருவரும் முறைப்புடனும், கோபத்துடனும் ஒருவரை ஒருவர் எதிர்த்து நின்றனர்.