திருமணம் முடியும்வரை அங்கே எல்லாம் திட்டமிட்டபடி சரியாகத்தான் சென்றுகொண்டிருந்தது.
ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக ஆட்களை தேர்வு செய்திருந்தான் குருஆர்யன்.
ஈவன்ட் மேனேஜ்மென்ட் ஆட்களை தாண்டி தன்னுடைய ஆட்கள் சிலரையும் அவர்களுடன் சேர்த்து நிறுத்தியிருந்தான்.
சொந்தங்கள் மட்டுமல்லாது, தொழில் துறையிலும் ஆட்கள் பிரபலமானவர்கள் வந்திருந்தனர்.
வரவேற்பிற்கு அழைப்பதை விட திருமணத்திற்கும் அழைக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார் குருமூர்த்தி.
அவரின் உயரத்தில் அவரால் யாரையும் தவிர்க்க முடியாது. அரசியல் வட்டாரத்திலும் அத்தனைபேர் வந்திருக்க ஆளும்கட்சியினர், எதிர்கட்சியினர் என அனைவருமே வந்திருந்தனர் திருமணத்திற்கு.
வரவேற்பு என்பது தனி. அது இளையமகனின் முழு கவனத்தில் விட்டுவிட்டார். ஆனால் திருமணத்திற்கு தாலி எடுத்துக்கொடுக்க முதலமைச்சரின் பிரத்யேக வருகை என்று மிக பிரமாண்டப்பட்டிருந்தது.
உண்மையில் அனைவருக்குமே ஒருவித டென்ஷன். எல்லாவற்றையும் கவனித்து, பிரபலங்களுக்கு எவ்வித இடைஞ்சலுமின்றி அவர்கள் வந்து செல்லும் வரை பார்த்து அனுப்பவேண்டிய அவசியம்.
ஆனால் எல்லாவற்றையும் இழுத்துக்கட்டி செல்வதில் திணறித்தான் போனான் குருஆர்யன்.
குருமூர்த்தி மேடையில் இருக்கவேண்டிய அவசியம். அவரால் கீழே இறங்கி செல்ல முடியவில்லை.
இனி ஒவ்வொருவராய் பரிசு பொருள் கொடுத்து ஆசிர்வதித்து புகைப்படம் எடுக்க வருவார்கள்.
அவர்களை பார்க்க நின்றுகொண்டார் குருமூர்த்தி. உணவு நடக்குமிடத்தில் தணிகாச்சலம், விஷ்ணு என அவர்கள் பொறுப்பேற்று கொண்டனர்.
ஆனால் வீட்டினர் கவனிக்கவேண்டுமே? அங்கேயும் இங்கேயுமாய் குருஆர்யன் சுழன்றுகொண்டிருக்க இன்னொருபக்கம் ஸ்ரீநிவாசன் அழைப்புகள்.
நரசிம்மன் ஸ்ரீனிவாசனை மேடையில் நிறுத்திவிட்டு சொந்தங்களை தான் பார்த்துக்கொள்வதாக சொல்லிவிட்டார்.
இதில் பிரபலங்களுக்கிடையே சொந்தங்களும் மேடைக்கு செல்ல, நேரமாக ஆக காத்திருப்பில் மிக முக்கியமானவர்கள் நின்றுகொண்டனர் என்னும் விதமான செய்தி உணவிற்கு அமைச்சர் ஒருவரை அழைத்து சென்றிருந்த குருஆர்யனின் காதுக்கு வந்து சேர்ந்தது.
மேடை பக்கம் வந்து பார்த்தவனுக்கு அத்தனை டென்ஷன். சொந்தங்கள் இங்கே தானே இருப்பார்கள் என்னும் நினைப்பில் வேகமாய் ஆனந்தை பிடித்து திட்டியவன்,
“யூஸ்லெஸ், நான் என்ன சொல்லிட்டு போயிருந்தேன். நீ என்ன மேன் பன்ற? அப்பாவோட க்ளோஸ் ப்ரென்ட் அவர். அவரை வெய்ட் பண்ண வச்சுட்டு…” என்று எகிறியவன் அந்த நண்பரை வேகமாய் அழைத்துக்கொண்டு முன்னே சென்றான்.
“கொஞ்சம் இருங்க, ஸார் பார்த்துட்டு கிளம்பட்டும்…” என நரசிம்மனின் கையை பிடித்து சொல்லிய ஆர்யா அவரை நகர்த்தியதை போல விட்டு முன்னே சென்றுவிட இதனை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை நரசிம்மன்.
“தம்பி என்ன பன்றீங்க?…” என்று சத்தம் செய்யாமல் ஆர்யாவிடம் கேட்க,
“பேசலாம்ங்க. இருங்க…” என்று சொல்லியவன் அந்த நபரை நிற்க வைத்து போட்டோ எடுத்துக்கொண்டு சிரித்த முகமாய் வழியனுப்ப அவருடன் குருமூர்த்தியும் சேர்ந்து கீழே சென்றார்.
“இப்ப சொல்லுங்க. என்ன பேசனும்? எது பேசறதா இருந்தாலும் மேடையில வேண்டாம். தனியா பேசிக்கலாம்…” என்று நரசிம்மனின் பக்கம் திரும்பியவன் சிரித்த முகமாய் பேச இதையும் அவர் திகைத்து பார்த்தார்.
“முக்கியமான கெஸ்ட் நிறைய பேர் இருக்காங்க. முதல்ல அவங்க கிளம்பட்டும். முக்கியமான அப்பாயின்மென்ட் எல்லாம் இருக்கும் அவங்களுக்கு. அப்பறம் மத்தவங்க வரட்டும்…” என்றும் குருஆர்யன் சொல்ல,
“எனக்கு என் சொந்தக்காரங்க எல்லாம் முக்கியம். அவங்களும் கல்யாணத்துக்கு தானே வந்திருக்காங்க…” என்று அவர் பல்லை கடிக்க,
“மீடியா போக்கஸ் பண்ணுவாங்க. அனாவசியமா ஸீன் கிரியேட் பண்ணாம இருங்க. எதுவா இருந்தாலும் அப்பறம் பேசுங்க. இப்ப வந்தவங்களை கவனிக்கனும்….” என்று நகர பார்த்தான் ஆர்யன்,
“அதான் கவனிக்க விடமாட்டிக்கிறீங்களே?…” என்றவரை மீண்டும் நின்று பெருமூச்சுடன் பார்த்தவன்,
“ஒரு நிமிஷம்…” என்று சொல்லி,
“ஆனந்த், என்னன்னு பாரு இங்க…” என்று நரசிம்மனை அழைத்துக்கொண்டு அங்கிருந்த அறை ஒன்றில் நுழைய, என்ன என புரியாமல் தற்செயலாய் இதனை கவனித்த மதுஸ்ரீயும் சேர்ந்தே வந்தாள்.
“என்னாச்சு ஆரி? இங்க என்ன பன்றீங்க?…” என்றவள்,
“மாமா உங்களுக்கு உடம்புக்கு எதுவும் செய்யுதா?…” என்றாள் கனிவுடன் நரசிம்மனிடம்.
“எதாச்சும் வந்து தொலைஞ்சிரும் போல. என்ன பன்றார்ம்மா உன் தம்பி?…” என்று நரசிம்மன் வெடிக்க,
“என்ன பண்ணிட்டாங்க? ஒரு செலிபிரிட்டி மேரேஜ் எப்படி இருக்கும்ன்னு தெரியுதா உங்களுக்கு? உங்க அண்ணனோட சைட்ல எதாச்சும் நடந்திருக்கா இப்படி? பார்த்திருக்கீங்களா அதை?…” என்று குருஆர்யன் பொறுமை இழந்து கேட்க,
“அக்கா நம்ம வீட்டு கல்யாணத்துக்கு எவ்வளோ மினிஸ்டர்ஸ் வந்திருக்காங்க. சினி பீல்ட்லயும் மேக்ஸிமம் கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணியிருக்கோம். எல்லாருக்குமே வேற வேற கமிட்மெண்ட்ஸ் இருக்குமே? இந்த டைம்க்கு இந்த ஈவன்ட்ன்னு தானே பிக்ஸ் பண்ணி கிளம்புவாங்க?…” என்றான் மதுஸ்ரீயிடம்.
“இப்ப என்ன ஆரி அதுக்கு?…” என்றவள் நரசிம்மனின் அருகில் நின்றுகொண்டாள்.
“என்னவா? நானும் பார்த்துட்டு இருக்கேன். இவர் ஒவ்வொருத்தவங்களையா கூட்டிட்டு போய்ட்டே இருக்கார். முதல்ல இந்த பொலிட்டிகல் க்ரவுடை குறைச்சாலே போதும்ன்னு நான் சீக்கிரம் அவங்களை ரிசீவ் பண்ணி ஸ்நாப் முடிச்சு அனுப்பிட்டிருக்கேன்….” என்று குருஆர்யன் சொல்ல ஸ்ரீநிவாசனும், குருமூர்த்தியும் வந்துவிட்டனர் இவர்களை தேடி.
“இல்லையா கல்யாணத்துக்கு சொந்தத்தை மட்டும் கூப்பிட்டுட்டு உங்க உசரத்துக்கு இருக்கறவங்களுக்கு தனி நிகழ்ச்சி வச்சிருக்கனும். எல்லாரையும் இழுத்து சேர்த்து வச்சிக்கிட்டு குத்துதே குடையுதேன்னா உங்க இஷ்டத்துக்கு எல்லாம் எல்லாரும் ஆட முடியாது…” என்றார் நரசிம்மன்.
“ஹலோ, நாங்க எப்படி கல்யாணத்தை நடத்தனும்ன்னு நீங்க சொல்ல வேண்டாம். இது எங்க வீட்டு விசேஷம். சொந்தமா வந்தீங்களா, கல்யாணத்துக்கு நின்னீங்களான்னு இருக்கனும். உங்க கருத்தை என்கிட்ட கொண்டுவராதீங்க…” என்றான் குருஆர்யன் காட்டமாய்.
“அதை நீ எதுக்குய்யா சொல்ற?…” நரசிம்மனும் இறங்கிவிட்டார் அவனின் பேச்சிற்கு.
“மரியாதையா பேசுங்க. வாயா போயான்னு பேசினீங்க…” என்று குருஆர்யன் குதிக்க,
“யாருக்கு மரியாதை குடுக்கனும்ன்னு எனக்கு தெரியும். தன்மையா பேசினா நானும் தன்மையா பேசுவேன்…” என்ற நரசிம்மனை ஸ்ரீநிவாசன் பிடித்து நிறுத்தினார்.
“என்ன சிம்மா இதெல்லாம்?…” என பதறி போனார்.
“என்னன்னு என்கிட்ட கேட்கிற? அவனை கேளு…” என்று மீண்டும் குருஆர்யன் கோபத்தை தூண்ட,
“மிஸ்டர்…” என்றவனை குருமூர்த்தியும், மதுஸ்ரீயும் நிறுத்த பார்த்தனர்.
“ஆரி இது நம்ம வீட்டுவிசேஷம். என்ன பண்ணிட்டிருக்க?…” என்றார் குருமூர்த்தி.
“ப்பா, உங்களுக்கும் ஏன் புரியலை? சொந்தமெல்லாம் இங்க தான் இருப்பாங்க. அவசரமில்லை. நிதானமா பார்த்து, மேடைக்கு வரலாம். இப்ப இந்த கூட்டத்துக்குள்ள யார் யாரை பார்த்து பேச முடியும்? ரெண்டு செகேன்ட் தான் மேடைக்கு வந்துட்டு ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு போட்டோ எடுத்துட்டு போக முடியும்…” என்றவன்,
“சொந்தமும், மத்தவங்களும் ஒண்ணா? விஐபி கெஸ்ட் எல்லாம் நின்னு பேசனும்ன்னு இல்லை. ஒரு விஷ். ஒரு ஸ்டில். போயிருவாங்க. நமக்கும் ரிலாக்ஸா இருக்கும். அதை சொன்னா இவர் புரிஞ்சுக்க மாட்டேன்றார்…” என தகப்பனிடம் சொல்ல அவருக்கும் மகன் சொல்லும் விதம் புரிந்தது.
இங்கே சொல்லும் விதத்தை விட சொல்லப்பட்ட விதம் தான் பிரச்சனைக்குரியதாய் மாறியிருந்தது.
“சொந்தக்காரங்க வந்து நின்னா உடனே போறதில்லை. எல்லாரையும் விசாரிச்சு அவங்க வீட்டுக்கு அழைக்கிறதுல இருந்து சொந்தக்கதை பேசின்னு எவ்வளோ நேரம்?…” என்றவன்,
“அதான் முதல்ல நம்ம பீல்ட்ல இருக்கறவங்களை ரிசீவ் பண்ணி அனுப்பிடலாம்ன்னு பார்த்தா இவருக்கு புரியவே மாட்டேங்குது. மேடையில வச்சே முகத்தை காமிக்கிறார். இதை கேப்சர் பண்ணி நாளைக்கு இதையும் ஹாட் ந்யூஸா போட்டு டென்ஷன் பண்ணுவாங்க. கல்யாணமான சந்தோஷமே போயிடும்…” என்று சொல்ல குருமூர்த்தி செய்வதறியாது பார்த்தார் ஸ்ரீநிவாசனை.
“அதுக்கு பேச்சுல ஒரு தினுசு வேண்டாமா? எப்படி பேசின நீ?…” என்றார் நரசிம்மன்.
“சிம்மா, ப்ளீஸ். கொஞ்சம் பொறுமையா இரு…” என்று ஸ்ரீநிவாசன் சொல்ல,
“என்ன பொறுமையா இருக்க? என்னமோ நீ இதுக்கு முன்னாடி இந்த மாதிரி இடத்துக்கு போயிருக்கியான்ற மாதிரி பேசிட்டான் தெரியுமா?…” என்றதும் அவருக்கே தாளவில்லை.
குருஆர்யனை ‘என்ன இதெல்லாம்?’ என்பதை போல அவர்கள் பார்க்க தான் பேசியதை பற்றி எந்த கவலையும் இன்றி தான் நின்றிருந்தான் அவன்.
இத்தனை தூரம் பேசும் பெரியவருக்கு இந்த விவரம் இருக்கவேண்டாமா? சூழ்நிலை அறிந்து நடக்க வேண்டாமா? என்ற எண்ணம் தான் நரசிம்மன் மீது.