அவன் சென்றதும் தான் அவ்விடமே அமைதியானதை போலொரு தோற்றம். குருமூர்த்திக்கு இதனை எப்படி சரி செய்வது என தடுமாற்றம்.
“ஸாரி மாமா…” என்றாள் மதுஸ்ரீ.
“நீ ஏன்ம்மா மன்னிப்பு கேட்டுட்டு?…” என்று ஸ்ரீநிவாசன் கேட்க புன்னகைத்தாள் அவள்.
தான் கேட்கவில்லை என்றால் நிச்சயம் தன் தந்தை கேட்டுவிடுவார். அதை விரும்பவில்லை அவள்.
யாராவது இதை பொறுப்பெடுத்து சரி செய்வதே உசிதம் என அவள் தன் தம்பியின் பேச்சிற்கு மன்னிப்பை வேண்டி நின்றாள்.
“நான் கேட்காம? ஆரி பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் மாமா. நீங்களும் மன்னிச்சிடுங்க….” என்று மீண்டும் நரசிம்மனின் கையை பிடித்து கேட்க,
“அட என்னம்மா நீ? அந்த தம்பி பேசின விதம் தான் எனக்கு பிடிக்கலையே தவிர மன்னிப்பு கேட்கனும்ன்னு நான் நினைக்கலை…” என்றார் நரசிம்மன் மதுஸ்ரீக்காக.
ஸ்ரீநிவாசன் பயந்து போய்ருந்தார். எங்கே தன் தம்பி இதனைக்கொண்டு கோபித்துக்கொண்டு கிளம்பிவிடுவாரோ என்று.
“என்னடா? இப்படி பயந்து போய் பார்க்கற? அப்படியெல்லாம் கிளம்பிட மாட்டேன். எவன் என்ன சொன்னா என்ன? இது என் பிள்ளைங்க கல்யாணம். நானில்லாம போவேனா?…” என்றார் தன் அண்ணனின் மனவோட்டத்தை கணித்து.
‘இவன் பேசிவிட்டால் தான் என்ன அத்தனை குறைந்து போய்விடுவோமா? இவன் யார் பொடிப்பையன்?’ என்று நரசிம்மன் ஆர்யாவை அலட்சியப்படுத்தினார்.
“நீ இல்லாம எப்படி சிம்மா? ஆனா பயந்துதான் போய்ட்டேன்….” என்று வெளிப்படையாக அவர் சொல்ல குருமூர்த்திக்கு அத்தனை சங்கடம்.
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலைங்க சம்பந்தி. ஆரி அப்படி பேசியிருக்க கூடாதுதான். ஏதோ டென்ஷன்ல பேசிட்டான்…” என்று குருமூர்த்தி அவன் சார்பாக எடுத்து சொல்ல,
“புரியுதுங்க சம்பந்தி. ஆனாலும் சொந்தத்துலையும் முக்கியமான வேலையா உடனே கிளம்பறவங்களும் இருப்பாங்க தானே? பிரபலங்களுக்கு மட்டும் தான் அடுத்த வேலை இருக்கறது மாதிரி பேசறது நல்லா இல்லை…” என்ற நரசிம்மன்,
“என்னவோ இதுக்கு மேல அந்த தம்பி பத்தி பேச எனக்கு விருப்பமில்லைங்க. மதிக்க தெரியாதவங்களை பத்தி நான் பேசறதில்லை. இது என் வீட்டு விசேஷம். அதனால நான் கிளம்பாம இருக்கேன். என் குடும்பத்துக்காக மட்டும் தான். அந்த பொறுமை தான் என்னை இருக்க வைக்குது…” என்றவர் மேலும் பேசினால் இன்னும் கடுமையாக வார்த்தையை கொட்டிவிடுவோம் என்று கிளம்பிவிட்டார்.
“சம்பந்தி…” என ஸ்ரீநிவாசன் கையை குருமூர்த்தி பற்ற,
“நல்லகாரியம் நடக்கும் போது இதை எதிர்பார்க்கலை. மனகசப்பாகி போச்சு. ஆர்யன் சொன்னதும் புரியுது. ஆனா அதை என்கிட்ட சொல்லியிருக்கலாம். நான் என் தம்பிக்கிட்ட சொல்லிருப்பேன். அதுல எனக்கு வருத்தம் தான் சம்பந்தி…” என்றார்.
“எனக்கும் வருத்தம் தான் சம்பந்தி. ஆனா என்ன சொல்லி சமாதானம் செய்ய முடியும்ன்னு தெரியலை. இனி இப்படி நடக்காம பார்த்துக்கறேன். இது இதோட முடிய கூடிய உறவில்லை. உங்க தம்பியும் நாளைக்கு நம்ம வீட்டுக்கு வந்துட்டு போகனும். எல்லாம் சுமூகமாகனும்…” என்றார் குருமூர்த்தி கலக்கத்துடன்.
“ச்சே ச்சே, நீங்க அவ்வோ யோசிக்க வேண்டாம். நம்ம பிள்ளைங்களை இது பாதிக்க வேண்டாம். என்னவோ சொல்ல போய் என்னவோ நடந்திருச்சு. விடுங்க. நாம போகலாம்…” என்று அவர்கள் வெளியே வர நரசிம்மன் மேடையில் இல்லாமல் கீழே சொந்தங்களுக்கிடையில் அமர்ந்திருந்தார்.
“என்ன நதி அப்பா அங்க இருக்கார்?…” என்று ஸ்ரீநிவாசன் பதட்டமாய் கேட்க,
“காலையில இருந்து அலைஞ்சுட்டே இருக்காங்க. சரியா தூக்கமும் இல்லைல. அதான் கொஞ்ச நேரம் உக்காரட்டும்…” என்றாள் புன்னகையுடன்.
ஆனாலும் மனது கேட்கவில்லை ஸ்ரீநிவாசனுக்கு. தன் தம்பியின் அருகில் வந்து தானும் அமர,
“உனக்கும் ரெஸ்ட் வேணுமோ? அஞ்சு நிமிஷம் உக்கார்ந்துட்டு எந்திச்சு ஓடிறனும். புரியுதா?…” என்று தன் அண்ணனை நரசிம்மன் மிரட்ட,
“சரி சரி. கொஞ்ச நேரம் தானே?…” என்று உக்கார்ந்திருந்தவரை தேடி ஆட்கள் வர, அந்த சிலநிமிடங்கள் கூட நரசிம்மனின் அருகில் அமர்ந்திருக்க முடியவில்லை அவரால்.
“போ போ. நான் இங்க தான இருக்கேன்…” என்று அனுப்பி வைத்தார் நரசிம்மன்.
நேரம் செல்ல செல்ல வந்திருந்த கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்தது.
இதில் ஊடகங்கள் வேறு இடத்தை அடைத்துக்கொண்டு பிரபலங்கள் ஒருவரை கூட விடவில்லை.
வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். மணமக்களுடன் எடுத்தது போதாமல் தனியாகவும் அவர்களை எடுத்தனர்.
மண்டபத்தின் வாயிலில் துவங்கி அவர்கள் கிளம்பும் வரை பின்னால் சுற்றிக்கொண்டே இருக்க ஒவ்வொன்றையும் பார்த்தபடி இருந்தார் நரசிம்மன்.
இதை எல்லாம் அவர் எப்போதாவது தொலைக்காட்சியில் பார்த்ததுண்டு. நேரில் பார்ப்பது இதுவே முதல்முறை.
குருஆர்யன் சொல்லியதை போல ஒருவித பிரமிப்பையும் கூடவே எரிச்சலையும், சிரிப்பையும் ஒரே சேர எழுப்பியது என்னவோ நிஜம்.
‘இப்படியே பின்னாடி போய் விட்டா பாத்ரூம் வரைக்கும் போயிருவானுங்க போல. நிம்மதியா வந்து போக விடறானுங்களா’ என்று தோன்றும் பொழுதே அவர்களின் கேமராக்களை பிடுங்கி எறியும் அளவிற்கு ஒரு வேகம்.
வந்தவர்கள் அலுங்காமல் குலுங்காமல் இந்த கூட்டத்தில் இருந்து கிளம்பி செல்வது பெரும்பாடு என்பதை போலிருந்தது அவர்களின் நிலையும்.
இதில் ஒருசிலர் உண்டுவிட்டு சென்றனர். சிலர் வந்து மரியாதை நிமித்தம் கலந்துகொண்டு கிளம்பினார்கள்.
இதனை காணும்பொழுது அவர்களை எல்லாம் கவனித்து அனுப்புவதில் பம்பரமாய் சுழன்ற குருஆர்யன் அவரின் மீதும் கவனம் குவிந்தது.
முகத்தில் சோர்வை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சிரித்தமுகமாக பேசி வரவேற்று அனுப்பியவன் முகபாவனை ஆச்சர்யமளித்தது.
சற்றுமுன் தன்னிடம் அறையில் எத்தனை திமிரும், தெனாவெட்டும் அந்த முகத்தில் தாண்டவமாடியிருக்க, இப்போது அப்படி ஒரு உணர்வே அவனுக்கு வராது என்பதை போலான குழந்தை முகம்.
‘நடிகன் இவன்’ குருஆர்யன் என்பவனின் முத்திரையாய் இதுதான் நரசிம்மனின் மனதில் ஆழமாய் பதிந்தது.
அவன் சொல்லியதில் இருந்த நியாயமும் புலப்பட்டது. நரசிம்மன் வந்தமர்ந்ததும் சொந்தங்களும் ஒருபக்கம் அவர்களின் வேலையை பார்க்க, வந்திருந்த பிரபலங்களோடு சிலர் புகைப்படம் எடுக்க என்று இருந்தனர்.
எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தவரை அவ்வப்போது நனியிதழ், ஸ்ரீநிவாசன், சுஜாதா, மதுஸ்ரீ என்று மாற்றி மாற்றி வந்து கவனிக்க, குருமூர்த்தியும் சில நிமிடங்கள் நரசிம்மனுடன் வந்து அமர்ந்துவிட்டு எழுந்து சென்றார்.
இத்தனை செய்தாலும் நரசிம்மனால் ஆர்யாவின் பேச்சிற்கு முன்பு இருந்ததை போல அவ்விடத்தில் ஒன்றி இருக்க முடியவில்லை.
மதிய உணவிற்கு வந்து தணிகாச்சலம் அவரை அழைத்து சென்று சேர்ந்தே உணவருந்தினார்.
சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் இருவரும் நல்ல பழக்கமாகி, தொலைபேசி எண்களையும் பரிமாறி இருக்க, பேச்சுவாக்கில் நனியிதழுக்கு வரன் பார்ப்பதை பற்றியும் விசாரித்து தன் தங்கை மகனை பற்றியும் நரசிம்மனின் காதில் போட்டுவைத்துவிட்டார் அவர்.
நரசிம்மனுக்கு அத்தனை யோசனை. உடனடியாக ஒப்புக்கொள்ளவில்லை அவர்.
“முதல்ல என் அண்ணன் குடும்பத்துல பேசனும். என் பொண்ணும் சம்மதிக்கனும். ஆனா இப்ப வரைக்கும் கல்யாணம் பத்தி நாங்க யோசிக்கலை. பேசிட்டு தகவல் சொல்றேன்…” என்று தன்மையாக சொல்லியிருந்தார் நரசிம்மன்.
இவர்கள் பேச்சு இப்படி இருக்க இதை அறியாத நனியிதழ் மதுஸ்ரீயுடன் மதிய உணவிற்கு செல்ல அங்கே குருஆர்யனும் அமர்ந்திருந்தான்.
“இவ்வளோ நேரமாவா சாப்பிடாம இருந்த நீ?…” என தன் அக்கா வந்ததும் அவளை ஒரு அதட்டல்.
அதை எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத நனியிதழ் மதுஸ்ரீயின் மறுபக்கம் அமர்ந்துகொள்ள,
“நானும் வரேன்…” என்று வந்துவிட்டான் விஷ்ணு மனைவியின் அருகில்.
“ம்மா நானு தனியா…” என்று மதுஸ்ரீயின் மகன் வருண் வர இருக்கைகள் மாற்றப்பட்டு குருஆர்யன் அருகில் நனியிதழ்.