“இல்லண்ணி, உங்க தம்பி வந்த ஐட்டம்ஸ் எல்லாம் மேக்ஸிமம் அவாய்ட் பண்ணிட்டாங்க. டயட் போலன்னு நினைச்சேன்…” என்றதும்,
“அவன் டயட் எல்லாம் இருக்கமாட்டான். ஆனா நிறைய சாப்பாடு எடுத்துக்கறதில்லை. சரியான சூஸி. அவனுக்கு சாப்பாட்டுல ரொம்ப பிடிச்ச ஐட்டங்கள் ரொம்ப ரொம்ப கம்மி…” என்ற மதுஸ்ரீ,
“கட்டிக்க போறவ ஒருவிதத்துல புண்ணியம் பண்ணியிருக்கனும். நிறைய வெரைட்டியா செய்யவேண்டியதில்லை. ஆனா அதுவே பாவமும் கூட. அவளுக்கு மட்டும் தான் செஞ்சுக்கனும்…” என்று சொல்ல,
“இதுல பாவம் என்ன இருக்கு? நமக்கு பிடிச்சதை நாம சமைச்சு சாப்பிட வேண்டியது தான்…” என்றாள் நனியிதழ்.
அவள் எந்த உணவையும் ஒதுக்கவில்லை. எல்லாவற்றையும் ரசித்து உண்டு முடித்தாள்.
அதுவும் அவனுக்கு முன்பே உண்டு முடித்தவள் எழுந்து செல்ல முடியாமல் மதுஸ்ரீ வரவிற்கு அமர்ந்திருக்க, விஷ்ணுவை தேடி உள்ளே வந்தார் தணிகாச்சலம்.
வந்தவரின் பார்வை மேஜையில் தான் படிந்தது. மகன் குடும்பத்தோடு உண்டுகொண்டிருக்க அவர்கள் அருகில் அடுத்தடுத்து ஜோடியாய் குருஆர்யன், நனியிதழ்.
பார்த்ததும் கண்டுகொள்ளாமல் செல்ல முடியாமல் சில நொடிகள் அப்படியே நின்று கவனித்தார் அவர்களை.
அவர் நின்று கவனித்ததில் ஆர்யனும், நனியிதழும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதாகவே தெரியவில்லை.
அன்று வீட்டில் விசேஷத்தன்று குருஆர்யனின் அசையா பார்வை நனியிதழ் மீதிருக்க கண்டவருக்கு மனதில் அந்த யோசனையும் எழுந்தது தான்.
ஆனாலும் அவனின் அதன்பின்னான நடவடிக்கையை கண்காணித்து தான், தன் எண்ணம் தவறு என்று முடிவிற்கு வந்து நனியிதழை தன் குடும்பத்திற்கு பெண் கேட்டது.
இதில் அவர் செய்த தவறு, பெண் வீட்டாரிடம் கேளாமலே அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தங்கை மகனுக்கு அனுப்பியிருந்தது.
அதை வீட்டிலும் சொல்லவில்லை. மகனிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை. எப்படியும் சம்மதிப்பார்கள் என்றொரு நம்பிக்கை அவருக்கு.
இப்போது இவர்கள் இருவரையும் பார்க்க நின்றவரை குருஆர்யனும் கவனித்துவிட,
“என்ன?…” என்றான் தலையசைத்து.
“விஷ்ணுவை தேடி வந்தேன் சின்னமாப்பிள்ளை…” என்றார் அவனிடம். அதோடு நில்லாமல்,
“என்னம்மா சாப்பிட்டியா?…” என்று நனியிதழிடம் கேட்க,
“நானும் உன் அப்பாவும் தான் சேர்ந்து சாப்பிட்டோம்மா. உங்கப்பாவோட தான் பேசிட்டிருந்தேன். விஷ்ணுவை பார்க்க வந்தேன். அப்படியே உன்னையும் பார்த்தேன்…” என்று சொல்ல குருஆர்யன் பார்வை அவரிடம் கண்டனத்துடன் பதிந்தது.
“ஓஹ் சரி…” என்றவள் மேலும் என்ன பேச என்று தெரியாமல் புன்னகையுடன் நிற்க,
“க்கா சாப்பிட்டா எழுந்து போகவேண்டியது தானே? கை காய உக்காரனுமா?…” என்றான் மதுஸ்ரீ பக்கம் சாய்ந்து பார்த்து.
அவர்கள் கிளம்பவும் மகனிடம் தலையசைத்துவிட்டு தணிகாச்சலம் முன்னே செல்ல, செல்லும் அவரையே பார்வையால் துளைத்தான் குருஆர்யன்.
தானும் கையை கழுவிக்கொண்டு மேடையருகே வர அங்கே தணிகாச்சலம் நரசிம்மனுடன் சேர்ந்து அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். உடன் ஸ்ரீநிவாசன்.
ஆர்யாவின் பார்வை நரசிம்மன் பக்கம் திரும்பியது. தன் பேச்சுக்களும் ஞாபகம் வர, தான் பேசியது அவரிடம் அதிகப்படி என்பது உணர்ந்தவன் கீழுதட்டை மடித்தபடி நின்றான்.
“ஆரி…” என வேறு எதையோ கேட்க வந்த மதுஸ்ரீ தம்பியின் பார்வையை கவனித்து,
“என்னடா, அவரை அப்படி பார்க்கற?…” என்றாள்.
“ப்ச், கொஞ்சம் கோபமா பேசிட்டேன். அவருக்கு உடம்பு வேற சரியில்லைன்னு சொல்லியிருந்தாங்க வீட்டுல. அதான்…” என்று சொல்ல,
“ஏன், ஸாரி கேட்க போறியா?…”
“எதுக்கு? நான் தப்பா எதுவும் பேசலையே? எதுக்கு ஸாரி கேட்கனும்? அவர் வாயா போயான்னு பேசவும் எனக்கும் ஹைப்பராகிடுச்சு. சொல்ல சொல்ல புரியாம பேசிட்டு என்னையும் பேச வச்சிட்டு…” என்று சொல்ல,
“நிஜமா சொல்லனும்ன்னா உன்னோட இன்னொரு வெர்ஷன் தான் அவர்….” என்று மதுஸ்ரீ சிரித்துவிட்டாள்.
“உதை வாங்குவ க்கா. அவரும் நானும் ஒண்ணா? சூழ்நிலை புரியாம பேசறார். அவரோட என்னை சேர்த்துட்டு. ப்ச் இப்ப எதுக்கு வந்த?…” என்றான் எரிச்சலுடன்.
“நான் கூட நீ ரொம்ப பீல் பன்றன்னு நினைச்சுட்டேன்…”
“இதை சொல்ல தான் வந்தியா?…”
“அடடா, வீட்டுக்கு கிளம்பனும் ஆரி. அதான் அப்பா சொல்லிட்டு வர சொன்னாங்க…” என்றாள்.
“ஹ்ம்ம், டைம் என்ன?…” என நேரத்தை பார்த்தவன், மீண்டும் கழுத்தை ஒரு விரலால் நீவியபடி,
“உன் மாமனார் அந்த வீட்டுல பொண்ணு கேட்கிறதை பத்தி எதுவும் பேசினாரா உன்கிட்ட?…” என்றான் வெகு யோசனையுடன்.
“ஏன், என்ன திடீர்ன்னு?…” மதுஸ்ரீயும் தணிகாச்சலத்தை பார்த்தபடி கேட்க,
“தோணுச்சு. கேட்டிருக்கலாமோன்னு. இல்லைன்னா வான்ட்டடா போய் ப்ரெண்ட்ஷிப் க்ரியேட் பண்ணிக்கறவர் இல்லையே உன் மாமனார். காரியவாதி. காரியமில்லாம இவ்வளோ யோசிக்க மாட்டாரே?…” என்று நக்கலுடன் கேட்க,
“செய்யக்கூடியவர் தான். என்கிட்ட பேச சொல்லி சொன்னப்போ கல்யாணம் எல்லாம் முடியட்டும். மெதுவா பேசுவோம்ன்னு சொல்லியிருந்தேன்…”
“எதுக்காம் இவ்வளோ அவசரம்? அதுவும் இந்த பொண்ணே தான் வேணுமா?…” என்றவனை சிரிப்புடன் மதுஸ்ரீ பார்க்க,
“சாப்பிடும் போது அவ பக்கத்துல நீயும் தானே இருந்த. மருமகன்னு உன்னை சாப்பிட்டியான்னு கேட்டாரா பாரு…” என்றும் அவன் சொல்ல,
“என்னடா வத்தி வைக்கிறியா?…”
“நீ இவ்வளோ தத்தின்னு இப்ப தான் தெரியுது. இது உனக்கே தோணிருக்கனும். நான் சொல்லியும் உனக்கு புரியலை. என்னவோ போ…” என்றவன் நகர,
“ஆரி வீட்டுக்கு கிளம்பனும்…”
“நான் பார்த்துக்கறேன். நீ போய் அப்பாட்ட சொல்லிரு…” என்றவன் ஆனந்தை போனில் அழைத்தான்.
வீட்டிற்கு செல்லும் ஏற்பாடுகளை கவனித்தவன் இரு மணமக்களையும் முதலில் குருமூர்த்தியின் வீட்டிற்கு அழைத்து செல்வதென முடிவாகியது.
“என்ன இது? முறைப்படி பார்த்தா மாப்பிள்ளை வீட்டுக்கு தானே முதல்ல பொண்ணை அழைச்சிட்டு போகனும்? அப்படின்னா கீதா அவங்க வீட்டுக்கும், அனுஷா நம்ம வீட்டுக்கும் தானே வரனும்?…” என்றார் நரசிம்மன்.
ஸ்ரீநிவாசனுக்கு அவர் சொல்வது புரிந்தது. தன்னிடம் கேட்கும் பொழுது சரி என்றுவிட்டோமே என யோசனையுடன் அவர் நிற்க,
“நான் சொல்லனும்ன்னு நினைச்சேன். நீங்க அதுக்குள்ள அதுக்கென்ன, அப்படியே பண்ணிடலாம்ன்னு சொல்லிட்டீங்க. அதான் என்னால அங்க மறுத்து பேச முடியலை…” என்றார் சுஜாதா.
“அட என்ன நீங்க?…” என்ற நரசிம்மன் விறுவிறுவென குருமூர்த்தியிடம் சென்றுவிட்டார்.
“எல்லாமே முறைப்படி நடக்கனும்ங்க சம்பந்தி. மாப்பிள்ளை வீட்டுக்கு தான் பொண்ணு வந்து விளக்கேத்திட்டு அப்பறம் மறுவீடா பொண்ணு வீட்டுக்கு வரனும். நீங்க ரெண்டுபேரையுமே கூட்டிட்டு போறது சரிவருமா?…” என்று கேட்க குருமூர்த்தி யோசிக்க,
“அவங்க சொல்றது சரி தானே? அப்படியே பண்ணிடலாம்…” என்றுவிட்டான் குருஆர்யன் யாரும் எதிர்பாராத நேரத்தில்.
அனைவரும் திகைத்து பார்க்கும் நேரமும் இன்றி கிளப்பிவிட்டான் உடனே. நரசிம்மன் சொல்லியதை போலவே மணமக்களை அனுப்பியிருக்க அடுத்த சம்பிரதாயங்கள் அடுத்தடுத்த நாட்களில் அரங்கேறியது.
இத்தனையிலும் நனியிதழ் மட்டுமே குருஆர்யன் இல்லத்திற்கு வந்து சென்றிருந்தாள்.
“என்னால முடியல நதி. நீயே போய்ட்டு வா…” என்று சொல்லிவிட்டார் நரசிம்மன்.
உடல்நிலையை காரணம் காட்டி குருஆர்யன் வீட்டிற்கு செல்வதை தவிர்த்துவிட்டார் அவர்.
அவன் பேசியவை எல்லாம் மனதில் காயத்தை ஏற்படுத்தி இருக்க அவரால் இறங்கி செல்ல முடியவில்லை.
தான் சொல்லிய முறையை ஏற்று அவன் சரி என்றாலும் என்னவோ முதல் முறை அவன் பேசியவை அவரை பாதித்திருந்தது.
அதனைக்கொண்டு அவர் தவிர்க்க வேறு யாருக்கும் இன்னும் நடந்த விஷயம் சொல்லப்படவில்லை.
மதுஸ்ரீ மட்டும் தமயந்தியிடம் சொல்லியிருக்க அத்தனை வருத்தம் மகனின் மேல்.
“இவனுக்கு எதுக்கு இவ்வளோ கோவம் வருது மது? சொந்தத்துக்குள்ள நல்லாவா இருக்கு? சின்ன விஷயத்துக்கு எல்லாம் இவ்வளோ கோவப்பட்டா எப்படி பொண்டாட்டி, பிள்ளைன்னு இவன் பொறுமையா இருப்பான்?….”
மீண்டும் மகனின் எதிர்காலம் பற்றிய பயம் பெரியளவில் பிடித்துக்கொண்டது அவரை.
“ப்ச், இதை இப்பவே யோசிக்கனுமா? விடுங்கம்மா…” என்று தாயை தேற்றியவள் நரசிம்மனிடம் அழைப்பு விடுக்க,
“நிஜமாவே மேலுக்கு தான் முடியலைம்மா. ஆஞ்சுஓஞ்சு இப்பத்தான் உக்கார்ந்திருக்கேன்…” என்று சோர்வுடன் சொல்லியவரை வற்புறுத்தவும் முடியவில்லை.
முதல்நாள் வந்து செல்லாதபோது கவனிக்காத குருஆர்யனுக்கு அதற்கடுத்த விசேஷங்களிலும் அவர் தங்கள் வீடு வருவதை தவிர்ப்பது தெரியவர அதனை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை.
வரவில்லை என்றால் போகட்டும் என்பதை போல எண்ணிக்கொண்டவனும் விட்டுவிட்டான்.
திருமணமும் முடிந்து நான்கு நாட்களில் மீண்டும் தக்கலை கிளம்பிவிட்டனர் நரசிம்மனும், நனியிதழும்.
அன்றாட வாழ்க்கையில் கலந்து செல்ல குருஆர்யனும் தன் அடுத்த படத்திற்கான வேலையில் ஆழ்ந்துவிட்டான்.
திருமணம் முடிந்து ஒன்பது மாதங்கள் கடந்திருக்க அன்று அனுஷாவிற்கு ஐந்தாம் மாதம் மருந்து கொடுக்கும் வைபவம்.
இரு குடும்பத்தினரும் அங்கே குழுமி இருக்க குருஆர்யனும் அங்கு தான் இருந்தான்.
ப்ரவனின் எண்ணிற்கு இரண்டுமுறை அந்த அழைப்பு வந்துவிட்டது. முதலிரண்டுமுறை கண்டுகொள்ளாதவன் மூன்றாம் முறையும் அழைப்பு வர தானே எடுத்துவிட்டான்.