காரை கிளப்பிக்கொண்டு வாசல்வரை வந்துவிட்டவன் கேட் திறக்கப்படவும் வீதியில் வாகனத்தை இறக்கவும் எதிரே தன்னை கடந்து சென்ற ஸ்கூட்டியை பார்த்ததும்,
“எப்படி ட்ரைவ் பன்றாங்க பாரு?…” என்று சட்டென்று துளிர்த்துவிட்ட கோபத்தில் சடன் ப்ரேக் போட்டு காரை நிறுத்தியவன் ஆசுவாசமாக சில நொடிகள் பிடிபட்டது.
கொஞ்சம் வேகமாக இறங்கியிருந்தால் தூக்கி வீசியிருப்போம் என்றவனுக்கு நொடியில் விபத்து ஒன்றை கடந்திருக்க மீண்டும் அந்த வாகனத்தை திரும்பி பார்த்தான்.
அது கண்ணை விட்டு தூரம் சென்றிருந்தது. சட்டென காரணமின்றி அவளும், அந்த ஸ்கூட்டியும் தான் அவன் கண்களுக்கு. நனியிதழ்.
முதன்முதலில் அவளை பார்த்ததும், தன் காரை இடித்துவிட்டு தன்னிடம் பேசி நின்றதும் என்னத்தினுள் வந்து நிற்க கூடுதலாய் சற்று முன் பேசிய அவளின் கலங்கிய குரல்.
“காட்…” என அப்போது தான் அவளின் அழைப்பே ஞாபகம் வந்தது.
கேட்டை அடைக்கமுடியாமல் பார்த்தபடி நின்றிருந்த காவலாளி குருஆர்யன் காரிலிருந்து அப்படியே இறங்கி வருவதை கண்டு பதறி பின் சென்று நிற்க வேகமாய் வீட்டினுள் ஓடினான் குருஆர்யன்.
அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க பார்க்க கண்டவனின் வருகையை முதலில் கண்டது கீதா தான்.
“அத்தை ஆர்யன்…” என்றாள் தமயந்தியிடம் கீதா.
“என்ன ஆரி?…” என்று அவர் கேட்க மகன் எதையும் மறந்து விட்டுவிட்டானோ என குருமூர்த்தி பார்த்தார்.
அவர்கள் பரபரப்புடன் வந்தவனை என்னவென்று கேட்கும் முன்னரே ஸ்ரீநிவாசனிடம் வந்து நின்றவன்,
“உங்க மொபைலுக்கு தக்கலைல இருந்து உங்க பொண்ணு கால் பண்ணியிருந்தாங்க. என்னவோ எமர்ஜென்ஸி போல. என்னன்னு கேளுங்க…” என்றதும்,
“நதியா?…” என்றபடி தன் போனை தேட,
“அப்பா டைனிங் டேபிள்ல இருக்கு…” என்று கீதா சென்று எடுத்து வந்தாள்.
“என்னாச்சு ஆரி? என்னன்னு சொன்னாளா நதி?…” என்று தமயந்தி கேட்க,
“இல்லை, அழுதுட்டு பேசினாங்க. சொல்றதுக்குள்ள கால் கட்டாகிருச்சு….” என்றவன் பார்வை முழுவதும் ஸ்ரீநிவாசன் மீது தான்.
என்ன செய்துவிட்டேன் என்று தன்னை தானே கடிந்தபடி நின்றவன் மனதிலும் படபடப்பு.
“உங்க நம்பருக்கு ரெண்டுதடவைக்கு மேல கால் வந்துச்சு. யாருன்னு தெரியலை. இம்பார்ட்டென்ட் காலா இருந்தா என்னன்னு தான் திரும்ப திரும்ப வரவும் நான் தான் அட்டன் பண்ணேன்…” என்றான் நெற்றியில் துளிர்த்த வியர்வையை துடைத்தபடி.
அவன் சொல்லவும் ப்ரவன் தன் எண்ணிலிருந்து நனியிதழுக்கு அழைக்க அழைப்பு செல்லவில்லை.
“நதி போன் ஸ்விச்சாஃப்…” என்றான் ப்ரவன்.
“நானும் கூப்பிடறேன். அப்படித்தான் இருக்கு. தம்பி நம்பரும் நாட் ரீச்சபிள்…” என்று ஸ்ரீநிவாசன் சொல்ல இன்னும் பதட்டமானது.
“ப்ரவன் உங்களுக்கு வந்த கால் அன்-நோன் நம்பர். அந்த நம்பருக்கு ட்ரை பண்ணுங்க…” என்றான் குருஆர்யன்.
“என்ன?…” என்றவன் கடைசியாக வந்த அழைப்பை பார்த்து அதற்கு அழைக்க அது ஒரு மருத்துவமனை.
நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனையில் இருந்து தான் நனியிதழ் அழைத்திருந்தாள்.
“ஹாஸ்பிடல்ன்னு சொல்றாங்கப்பா…” என்ற ப்ரவன்,
“ஹலோ இந்த நம்பர்ல இருந்து ஒரு கால் வந்திருந்தது. யார் பண்ணினதுன்னு சொல்ல முடியுமா?…” என்று கேட்பதற்குள் அவனருகில் நின்றவர்களின் இருதயத்தில் பலமடங்கு ஓசை.
ப்ரவன் பேசி முடிக்கும் முன் ஸ்ரீநிவாசன் நரசிம்மனுடன் பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கு அழைப்பு விடுக்க,
“பரத், நீயும் கூட போ. கண்டிப்பா நீ கூட இருக்கறது பெட்டர். அப்பறம் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் ஒருத்தரை காண்டேக்ட் பண்ண ட்ரை பண்ணிட்டிருக்கேன். நீங்க அங்க ரீச்சாகறதுக்குள்ள பேசிடறேன்…” என்றான்.
“ஓகே ஆரி. பார்த்துக்கோ…” என்ற பரத்,
“நான் ட்ரைவரை வர சொல்றேன் மாமா…” என்றான் ஸ்ரீநிவாசனை பார்த்து.
“கார்லயா?…” இப்போதும் குருஆர்யன் தான் இடையிட்டான்.
“ஆனந்த்கிட்ட சொல்லி ப்ளைட் டிக்கெட்க்கு பேசியாச்சு. இங்க இருந்து திருவனத்தபுரம். அங்க இருந்து நாகர்கோவில். நீங்க இன்னும் கால்மணி நேரத்துல புறப்பட்டா சரியா இருக்கும்…” என்று சொல்ல,
“ஆரி…”
“ப்ச், நின்னு பேசெல்லாம் டைம் இல்லை. முதல்ல கிளம்புங்க. போற வழில பேசிக்கோங்க…” என்று சொல்லி,
“ம்மா, கிளம்ப சொல்லுங்க…” என்று தமயந்தியிடமும் சொல்ல அடித்துபிடித்து வேகவேகமாய் கிளம்பி சென்றனர் அனைவரும்.
தன் பெற்றோருடன் அனுஷாவை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு குருமூர்த்தியுடன் மற்றவர்களை ஏர்போர்ட் வரை வந்து அனுப்பி வைத்தான் குருஆர்யன்.
‘எதுவுமாகாது’ என அவனுக்கு அவனே மனதார சொல்லிக்கொண்டான். ‘அவ கால் பண்ணின அப்பவே கேட்டிருக்கனும். என்னடா உனக்கு அப்படி ஒரு கடுப்பு?’ என தன்னை தானே நிந்தித்துக்கொண்டவன் அதன் பின்னும் அமைதி காக்கவில்லை.
ஆனந்திடம் சொல்லி திருவனந்தபுரத்திற்கு வந்து சேருபவர்களை அழைக்க வாகனத்தையும் ஏற்பாடு செய்திருக்க, பரத் தந்திருந்த நம்பரில் இருந்த அந்த மருத்துவருக்கும் அழைத்து விசாரித்துக்கொண்டான்.
நரசிம்மனின் உயிர் மருத்துவ உபகரணங்கள் கொண்டு பிடித்து வைக்கப்பட்டிருந்தது.
அனைவரும் வருவதற்குள் தன் தைரியத்தை பிடித்துக்கொண்டு தகப்பனை மனதார அழைத்தபடி சுருண்டிருந்தாள் நனியிதழ்.
என்றைக்கும் போல அன்று காலை தான் மருத்துவமனை கிளம்பி சென்றிருக்க பள்ளிக்கு சென்ற சிறிது நேரத்தில் அங்கிருந்து அழைப்பு.
“உன் கல்யாண விஷயமா பேசிட்டிருந்தார்ம்மா. அப்படியே நெஞ்சை புடிச்சுட்டு சாய்ஞ்சுட்டார்…” என்று மருத்துவமனையின் பெயரை சொல்லி அழைக்க வந்து சேர்வதற்குள் பாதி உயிர் போயிருந்தது.
கண்ணீருடன் நரசிம்மனை அனுமதித்திருந்த அறையின் முன்னாள் சுவற்றில் சாய்ந்து கண் மூடியிருந்தாள் நனியிதழ்.
புதிதாய் ஒரு மருத்துவரும் வந்திருக்க அவர் பேசியதிலிருந்து பரத் தான் அனுப்பியிருப்பான் என நினைத்தாள்.
அறுவைசிகிச்சைக்கான ஆயத்தங்கள் நடந்தேற இரவுக்குள் வந்து சேர்ந்திருந்தனர் குடும்பத்தினர்.
“நதிம்மா…” என்ற ஒற்றை அழைப்பில் ஸ்ரீநிவாசனின் கைகளுக்குள் அடங்கியிருந்தாள் அவள்.
“ப்பா…” என்று மட்டுமே வார்த்தைகள் வர,
“ஒன்னுமில்லடா. நாங்க வந்துட்டோம்ல. எல்லாம் சரியாகிருச்சு. அப்பா வந்திருவான்…” என்று அவளை ஆறுதல்படுத்த வந்ததும் பரத் மருத்துவரை பார்க்க சென்றான் ப்ரவனுடன்.
“நதியை நீ பார்த்துக்கோ சுஜா…” என்று மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு தானும் கீதாவும் அங்கே செல்ல மீண்டும் விளக்கமாக நரசிம்மனின் உடல்நிலை பற்றி கேட்டு அறிந்துகொண்டனர்.
இதற்கிடையில் தமயந்தியும், குருமூர்த்தியும் அழைத்து விசாரித்துக்கொள்ள ப்ரவனிடம் அனுஷா பேச என்று நேரம் கடந்தது.
நரசிம்மனின் அந்த நண்பருக்கு நன்றி சொல்லி ஸ்ரீநிவாசன் பேசி செல்ல பரவன் அவரிடம் இன்னும் நின்று கேட்டுக்கொண்டிருந்தான். உடன் பரத்தும்.
“பொண்ணு கல்யாண விஷயமா ரொம்ப அழுத்தத்துல இருந்தார் போல…” என்று மட்டும் சொல்ல,
நல்லபடியாக சிகிச்சை முடிந்து நரசிம்மன் உயிருக்கு ஆபத்தில்லை என்னும் வார்த்தையை கேட்கும் வரை ஒருவருக்கும் உயிர்ப்பில்லை.
அவ்வப்போது பரத் மட்டும் ஆர்யாவிற்கு அழைத்து விஷயத்தை அவ்வப்போது சொல்லிக்கொள்வான்.
நரசிம்மன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிய பரத் கீதாவுடன் சென்னைக்கு புறப்பட்டிருந்தான்.
மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு புறப்படும் பொழுதே சுஜாதா சொல்லிவிட்டார் தங்களுடன் வந்தாக வேண்டும் என்று.
“அங்க இருந்து இங்க வர வரை யாருக்கும் உயிரில்லை. இனியும் இப்படி தனியா விட முடியாது. யாருமில்லாம என் பொண்ணு துடிச்சு போய்ட்டா. இவ்வளோ பேர் இருந்தும் எத்தனை வேதனை அவளுக்கு….” என்றவர்,
“இனி வரலைன்னெல்லாம் சொல்ல முடியாது. வேலை பார்த்த வரை போதும். எழுதிக்குடுத்துட்டு புறப்படுங்க. அவ்வளோ தான்…” என்று சொல்லிவிட்டார் உறுதியாக.
நரசிம்மனை பேசி சரிகட்டி அவர்களை சென்னை அழைத்து வருவதற்குள் போதும் போதும் என்றானது ஸ்ரீநிவாசன் குடும்பத்திற்கு.
——————————————-
அத்தனை பேர் முகத்திலும் பயம் அப்பிக்கிடக்க அவ்வளவு கோபத்துடன் பல்லை கடித்தபடி நின்றிருந்தான் குருஆர்யன்.
“ஒரு டயலாக் டெலிவரி கூட சரியில்லை. ஒழுங்கா சொல்ல தெரியலை. என்ன கவனம் இருக்கு நடிப்புல? நினைப்பை கடன் குடுத்திருக்கியாம்மா?…” என கதாநாயகியுடன் நிற்கும் தோழி பெண்ணை பார்த்து ஏகவசனத்தில் திட்டிக்கொண்டிருந்தான் அவன்.
“ஸ்க்ரீன் டெஸ்ட்கே இந்த பாடு. உங்களை நம்பி ஷூட் ஆரம்பிச்சா?…” என்றவன் தலையில் மாட்டியிருந்த கைக்குட்டையை வீசி எறிந்துவிட்டு இங்குமங்குமாய் நடந்தவன்,
“லக்ஸ், டையலாக் மாடுலேஷன் ஒழுங்கா சொல்லி குடு…” என தன் உதவி இயக்குனரிடம் சொல்ல,
“ஓகே ஸார்…” என்று டயலாக் ஷீட்டுடன் அப்பெண் முன்னே சென்றாள்.
“ப்ரேக்…” என சொல்லிவிட்டு தன் அலுவலக அறைக்குள் நுழையவும் ஆர்யாவின் போன் சிணுங்கவும் சரியாய் இருந்தது.
“தக்கலைல இருந்து எல்லாரும் கிளம்பிட்டாங்க ஆரி. உன் நம்பருக்கு ப்ரவன் ட்ரை பண்ணிருக்கார். ரீச்சாகலை போல. அதான் என்னை சொல்ல சொன்னார். வந்து பேசறாங்களாம்…” என்று பரத் சொல்ல,
“என்கிட்ட என்ன பேசனுமாம்? இதென்ன பரத் பார்மாலிட்டீஸ்? நல்லாருக்கார்ல அவர் சித்தப்பா. அதுவரை ஓகே. புரியுதா?…”
“பை டா…” என்று வைத்துவிட்டான் பரத்.
முதல்நாளே தமயந்தி குருமூர்த்தியிடம் பேசியிருக்க அப்போதே ஆர்யாவின் காதிலும் விழத்தான் செய்தது அந்த விஷயம்.
நரசிம்மனும், நனியிதழும் இனி சென்னை வாசம். நனியிதழ் தன் பணியை பரத்தின் மருத்துவமனையில் தொடரவிருப்பதும் அப்படித்தான் தெரிந்தது.
தெரிந்து மட்டும் என்னவாகிவிடும்? அது தனக்கு தேவையில்லை என்று தெரிந்தவன் மறுநாளே தணிகாச்சலத்தை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டான் நனியிதழ் விஷயமாக.