என்று சுப்ரபாதத்தை ஒலிக்கவிட்டு வீடெங்கும் சாம்பிராணி மணம் கமழ பூஜையறைக்குள் நுழைந்து விளக்கேற்றிய பார்வதி நேராக சமையலறைக்குள் நுழைந்து அடுத்த பதினைந்து நிமிடங்களில் சுட சுட தேநீர் தயாரித்தவர் ஹாலிற்கு வர அங்கு அவர் கணவர் ஏகாம்பரம், மூத்த மகன் செந்தில்குமார் மற்றும் சதீஷ்குமார் மூவரும் அமர்ந்து மும்முரமாக ஏதோ விவாதித்து கொண்டிருந்தனர்.
பார்வதி தேநீர் கொடுக்கவும் எடுத்து கொண்ட ஏகாம்பரம், ‘பார்வதி எனக்கு இன்னைக்கு ரெண்டு சர்ஜரி இருக்கு அதுல ஒன்னு சாயங்காலம் மாத்திட்டேன் ஆனா இன்னொன்னு எமெர்ஜன்சி காலையில முடிச்சிட்டு நான் மண்டபத்துக்கு வர எப்படியும் பதினோரு மணிக்கு மேல ஆகிடும் நீ சமாளிச்சுப்பதானே..??’
‘ம்ம் அப்புறம் ஒன்பது மணிக்கெல்லாம் நீங்க மண்டபத்துக்கு கிளம்பனும் பார்வதி அதுக்கு ஏத்த மாதிரி எல்லாம் எடுத்து வச்சிக்கோ, ரகு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான் முதல்ல அனுப்ப வேண்டியதெல்லாம் அவன்கிட்ட கொடுத்து அனுப்பிடு..’ என்றார்.
‘சரிங்க ஆனா ப்ரியாவை மட்டும் பத்தரை மணிக்கு மேல கூப்பிட்டுக்கலாம்’
‘ஏன்..??’
‘பிள்ளைதாச்சி பொண்ணுங்க அதுவும் நிறைமாசம் வேற விசேஷம் தொடங்கினா ரெண்டு மணி நேரத்துக்கு ஒரே இடத்துல உட்காந்து இருக்கணும் இங்க இருந்தா நல்லா கால் நீட்டி வசதியா ரெஸ்ட் எடுப்பா மண்டபத்துல சொந்தபந்தம் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வந்து பேசிட்டு இருப்பாங்க.. முன்னமே கூட்டிட்டு போய் எதுக்கு அவளுக்கு கஷ்டம்‘
“நீ சொல்றதும் சரி தான் அப்படியே செஞ்சுடலாம் .. உனக்கு ஓகேவா சதீஷ்?” என்று மகனை கேட்க,
‘மதுக்கு இன்னும் ஒரு வாரத்துல எக்ஸாம் இருக்கு சதீஷ் அவ ஸ்கூல் போகட்டும்’
‘என்னப்பா இது ஒருநாள் தானே’
‘நோ நோ எக்ஸாம் வரப்போகுது இனிமேல் ஒருமணி நேரம் கூட வேஸ்ட் பண்ண கூடாது… மது ஸ்கூல் போகட்டும்’ என்று கண்டிப்பான குரலில் கூறி எழுந்து கொண்டார் ஏகாம்பரம்.
சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம்… இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே நகரில் சொந்தமாக மருத்துவமனை கட்டி புகழ்பெற்ற எலும்பு சிகிச்சை நிபுணராக திகழ்பவர். அவரின் கைராசி மிக பிரசித்தம் அதற்கே மருத்துவமனையில் நோயாளிகள் வரவு இரவு பகல் பாராமல் எந்நேரமும் இருந்து கொண்டே இருக்கும்.
அவர் மனைவி பார்வதி அதிகம் படிக்கவில்லை என்றாலும் சிறந்த வீட்டுத்தலைவியாக ஏகாம்பரத்தின் ஒவ்வொரு நிலைகளிலும் துணை இருந்து மூன்று குழந்தைகளை அருமையாக வளர்த்திருப்பவர்.
ஏகாம்பரம் பார்வதி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் அதில் இளையவனான சதீஷ்குமாருக்கு பிறகு எட்டு வருடங்கள் கழித்து பிறந்தவள் தான் நம் நாயகி மதுவர்த்தினி.
மகன்கள் இருவருமே தந்தையை பின்பற்றி மருத்துவத்தில் வெவ்வேறு பிரிவுகளை தேர்ந்தெடுத்து சொந்த மருத்துவமனையில் ஒவ்வொரு தளத்தில் சிறப்பு மருத்துவம் செய்து கொண்டிருக்கின்றனர். வீட்டின் கடைக்குட்டியான மதுவர்த்தினி பன்னிரண்டாம் வகுப்பின் இறுதியில் இருப்பவள்.
மேலும் அரை மணி நேரம் கடந்திருக்க சமையலறையில் இருந்த பார்வதியிடம் வந்த சவிதா, ‘குட் மார்னிங் அத்தை’
‘வாம்மா தலைவலி பரவாலயா..??’
“நைட் நீங்க கொடுத்த காஃபில தலைவலி வந்த இடமே தெரியாம ஓடி போயிடுச்சு தேங்க்ஸ் அத்தை”
“அதுக்கென்னம்மா, பிரணவ்குட்டி எழுந்துட்டானா..??” என்றவாறே அவளுக்கு காபியை கலந்து கொடுத்தார்.
‘சரிம்மா நாம காலையில ஒன்பது மணிக்கெல்லாம் மண்டபத்துக்கு போகணும் அதுக்கு ஏத்த மாதிரி தயார் ஆகிக்கோ உங்க மாமாக்கு முக்கியமான ஆபரேஷன் இருக்கு அவர் வர லேட் ஆகுமாம்’
நாம எல்லாருமா அத்தை..?
“இல்லமா ப்ரியா இங்கதான் இருப்பா அவளை பதினோரு மணி போல அழைச்சுக்கலாம்.. நமக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு முன்னாடியே போனாதானே எல்லாம் சரிபார்க்க முடியும்”
ஓஒ.. என்று காஃபியை பருகியவள் அத்தை உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் என்றவளிடம் பேரனுக்கான பூஸ்ட்டும் போட்டு கொடுத்து, என்ன விஷயம்மா ..?? என்றார்.
“அது ரொம்ப நாளாவே என் அம்மா கோட்டை கோவிலுக்கு போகணும்னு சொல்லிட்டு இருந்தாங்க அத்தை, அதான் இன்னைக்கு பங்க்ஷன் பதினோரு மணிக்கு மேலதானே அதான் துபாய்ல இருந்து வந்திருக்க எங்க மாமா ஃபேமிலியையும் கூட்டிட்டு சீக்கிரம் வர சொல்லிட்டேன் அவங்களும் இந்நேரம் கிளம்பி இருப்பாங்க ஆனா இப்போ எப்படி..” என்று பேச்சை நிறுத்தி மாமியார் முகத்தை ஆராய்ந்தவள்..,
“பரவால அத்தை நீங்க மட்டும் தனியா என்ன பண்ணுவீங்க நான் இப்பவே ஃபோன் பண்ணி சொல்லிடுறேன்” என்றவள் வெளியே செல்ல..,
நில்லுமா.., என்ன பண்ண போற..?
கால் பண்ணி சொல்லிடுறேன் அத்தை…
என்னன்னு சொல்லுவ..??
“என்னால வரமுடியாதுன்னு சொல்லிடுறேன் த்தை… ஒருவேளை நேத்து தெரிஞ்சிருந்தா கூட ப்ரோக்ராம் மாத்தி இருப்பேன் ஆனா இப்போ மட்டும் என்ன என் அம்மா, மாமா தானே அவங்க நிச்சயம் என்னை புரிஞ்சிப்பாங்க நீங்க கவலையை விடுங்க”
“இரு சவி எதுக்கு இப்படி படபடக்கிற, ஏன் நான் உன்னை புரிஞ்சுக்க மாட்டேனா..??”
“என்ன சொல்றீங்க அத்தை..?”
“நீ உன் மாமா குடும்பத்தை கூட்டிட்டு போமா நான் பார்த்துக்குறேன்..”
“ப்ரியா வேற கூட இல்லை உங்களால தனியா முடியுமா அத்தை..?”
‘ஏன் முடியாம நீங்க வரும் முன்ன எல்லாமே நான் பார்த்ததுதானே .., ஆனா ஃபங்க்ஷன் ஆரம்பிக்கும் முன்ன வந்துடுங்க’ என்றார் வெள்ளந்தியாக.
சரிங்கத்தை… என்றவள் அப்போது தான் நினைவு வந்தவளாக, “ஆமா எங்க அத்தை மதுவை காணும் இன்னுமா தூங்கிட்டு இருக்கா..?” என்று ஏளனக்குரலில் கேட்க,
“இல்லமா பரிட்சை வருதே அதனால் ராத்திரி முழுக்க படிச்சிட்டு இருந்தா இப்பவும் நான் பூஜை பண்ணும் முன்னமே எழுந்து வந்தா நான்தான் கொஞ்ச நேரம் படுக்க சொல்லி அனுப்பிட்டேன்”
“பார்த்து அத்தை நாளைக்கு இன்னொருத்தர் வீட்டுக்கு போக போற பொண்ணு இப்படி பொறுப்பில்லாம பொழுது விடிஞ்சும் தூங்கிட்டு இருந்தா உங்களை தான் பேசுவாங்க..” என்றிட பார்வதியோ என்ன பேசுவது என்று புரியாமல் மணியை பார்க்க அது காலை ஏழு என்று காட்டியது.
அவர்கள் வீட்டு மூத்த மருமகள் சவிதா இவர்களை விடவும் இருமடங்கு வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவள். கட்டி கொண்டு வந்த நாளில் இருந்தே துரும்பை அசைக்க மாட்டாள்.., இவளிடம் மருமகள் மெச்சும் மாமியார் என்ற பெயர் வாங்கிய பார்வதி சவிதா காலால் இட்ட வேலைகளை தலையால் செய்தே பழக்கப்பட்டு விட்டவர்.
“என்னடா இப்படி சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க அத்தை”
‘ஐயையோ என்னமா இது பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுற..?? நான் ஏன் உன்னை தப்பா எடுக்க போறேன் மூத்த மருமகள் உனக்கு இல்லாத உரிமையா தயங்காம சொல்லு..’
“ஏனோ தெரியலை அத்தை மத்த பொண்ணுங்க மாதிரி புருஷனோட மட்டுமே நம்ம உறவுன்னு என்னால நினைக்க முடியலை அவரை சார்ந்த எல்லாரையும் என் சொந்தமா பார்த்தே பழக்க பட்டுட்டேன்.., அதுவும் மது அவருக்கு மட்டுமில்ல எனக்குமே தங்கச்சி தான் “
“நாளைக்கு மதுவை யாராவது ஒரு வார்த்தை சொன்னா நமக்கு தாங்குமா..?? அதுவும் வயசு பொண்ணு அவளை பாதுகாக்குறதுலயும் பத்திரமா கட்டி கொடுக்குறதுலயும் அண்ணியான எனக்கும் சரி பங்கு இருக்குன்னு நினைக்குறேன் அத்தை அது தப்பா..??” என்று கேட்க
“இல்லை..” என்று சொல்ல முடியவில்லை பார்வதியால்.
“அதான் இங்க இருந்து போற பொண்ணு மேல எந்த விதத்துலயும் குறை வந்துடகூடாதுன்னு கொஞ்சம் கடுமையா தெரிஞ்சாலும் அவ நல்லதுக்காக சொல்றேன் அத்தை நீங்க தப்பா எடுத்துக்காதீங்க”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லம்மா, இதோ இப்பவே போய் மதுவை எழுப்பி விடுறேன்” என்ற பார்வதி உடனே மகள் அறைக்கு சென்றார்.
*****************************************
“மச்சான் அங்க பாரு’ என்று தன் பின்னே அமர்ந்திருந்த கர்ணாவிடம் தூரத்தே தெரிந்த கோவிலை சுட்டி காண்பித்தான் பிரேம்.
சுருங்கிய நெற்றியுடன் பலத்த யோசனையில் இருந்த கர்ணா பிரேமின் இரண்டாவது அழைப்பில் தான் நடப்பிற்கு திரும்பி அவன் கை காட்டிய திசையை பார்த்தான்.
“அதோ அங்க தெரியுது பார்த்தியா அது தான்டா நான் சொன்ன சக்தி வாய்ந்த விநாயகர் கோவில்.. இங்க நீ மனசார வேண்டிகிட்டா நெனச்சது எல்லாமே நடக்கும் அதுவும் ஒரே மாசத்துல தெரியுமா..?”
‘உன்னை நம்பி உட்காந்திருக்கேன்னு சும்மா அளந்துவிடாத மச்சி’ என்று கர்ணா அவன் பிடரியில் லேசாக தட்ட,
“ப்ச் நீ என்ன பொண்ணா உன்னை நான் அளக்க..??” என்றான் எள்ளலாக…
‘டேய்’ என்று புன்னகையுடன் நண்பனின் கழுத்தை வளைத்த கர்ணா வண்டியில் இருந்து இறங்கவும்..,
“பின்ன என்ன மச்சி ரெண்டு வருஷமாச்சு இன்னும் அந்தாளு கிட்ட கொடுத்த பணம் கிணத்துல போட்ட கல்லா இருக்கேன்னு உனக்கு ஒரு வழி சொன்னேன் அதுவும் எனக்கு நடந்ததை வச்சு தான் சொல்றேன்.. மச்சி ஆறு மாசத்துல கல்யாணம் முடிவாகி இருந்தும் என் ஆளையே அளக்க முடியாத கடுப்புல இருக்கேன் இதுல உன்னை அளந்து பார்த்து நான் என்னத்தை சாதிக்க போறேன் சொல்லு..” என்றபோதே கர்ணா சப்தமாக சிரித்துவிட்டான்.
“இப்பதான் கொஞ்சம் முகம் தெளிஞ்சிருக்கு.. பிறந்தநாள் அதுவுமா எதையோ பறிகொடுத்தவன் மாதிரி எப்படி இருக்கடா நீ.. பார்க்கவே சகிக்கலை” என்று நண்பனின் புஜத்தில் பிரேம் ஒரு குத்து வைத்தான்.
“அப்புறம் ஏன் என்னை பார்க்கிற மலரை வர சொல்றேன் ஆசை தீர பாரு மச்சி’ என்று கர்ணா கேலி செய்ய,
‘அடபோடா நிச்சயம் முடிஞ்ச பிறகும் ஃபோன்ல பேசவே அப்படி பயந்து நடுங்குறா அவ நேர்ல வந்துட்டாலும்.. ஏன்டா என் வயத்தெரிச்சலை கிளப்புற.. அதை விடு நீ ஏன் இப்படி இருக்க..??’
“நிஜமாவே என் பிறந்த நாள்னு நீ சொல்லி தான் நியாபகம் வந்தது பிரேம், எப்பவும் பாரதி அக்கா முதல்ல வாழ்த்து சொல்லும் அதுவும் இப்போ டூர் போயிருக்கறதுல மறந்துடுச்சி போல”
“ஆமா வீடு கிரகப்ரவேசம் வச்சிருக்கீங்க இப்போ ஏகப்பட்ட வேலை இருக்கு இதுல எதுக்குடா இன்னைக்கு இவ்ளோ அவசரமா கிளம்பி வந்த..?? முடிச்சிட்டு பார்த்துக்கலாமே..”
“அதுவரை யாருடா விட்டு வச்சா..?? நேத்து ராத்திரியே ஒருத்தன் ஏழரையை கூட்டிட்டான்..”
“யாரு வேலனா ..??”
“அவனை தவிர வேற யாரு..?? தினமும் சுப்ரபாதம் மாதிரி ஒருநாளாவது இந்த பணம் பத்தின பேச்சு வீட்ல வராம இருந்தது இல்லை.. அதோட எங்க முகம் காட்டாம இருந்தா அந்த எம்.எல்.ஏ பி.ஏ என்னை டீல்ல விட்டுடுவானோன்னு வழக்கம் போல ரெண்டு மாசத்துக்கு ஒருமுறை அட்டெண்டன்ஸ் போடுறேனே தவிர எனக்கு மொத்தமா வெறுத்து போச்சுடா…’
“கர்ணா..”
“நிஜமாதான் மச்சான் எனக்கு மட்டும் ஏன் ஜான் கூட ஏற முடியாம சரிக்கிட்டே இருக்கு! எனக்கு நம்பிக்கையில்ல வேணும்னா நீ கும்பிட்டு வா நான் இங்கயே நிக்கிறேன்” என்று பைக்கின் மீது அமர்ந்து கொண்டான்.
“ப்ச் எந்த பக்கமும் நகரவிடாத மாதிரி ஏதோ ஒன்னு இறுக்கி பிடிக்குதுடா.. எதை நோக்கி வாழ்க்கை போகுதுன்னே புரியலை, பெருசா படிப்பும் இல்ல தொழில் தொடங்க கொடுத்த பணத்தையும் கண்ட பரதேசி பேச்சை கேட்டு எவன் கிட்டயோ கொடுத்து இப்போ படாதபாடு பட்டுட்டு இருக்கேன், யாருக்கும் என்மேல நம்பிக்கை இல்ல அப்புறம் எங்க இருந்து நீ சொல்ற நேரத்துக்கு வாய்ப்பு இருக்க போகுது…”
‘கர்ணா இதுக்கு நீ மட்டுமே காரணம் இல்ல..’
‘அப்படி நினைக்க முடில மச்சி மத்தவங்க மேல பழியை போட்டு தப்பிக்கிறது ஈசிடா.. ஆனா அதன் மூலமாவே நாம சரின்னோ ஜெயிச்சிட்டோம்னோ அர்த்தம் ஆகிடாதே..’
‘கர்ணா கொஞ்சம் நிதானமா இரு டென்ஷனாகாத..’
“டேய் நானே எல்லாத்தையும் மறக்கனும்னு நெனச்சாலும் யாராவது ஒருத்தர் ஷிப்ட் போட்டு நியாபக படுத்திட்டே இருக்காங்கடா.., இன்னையோட இருபத்தி மூணு முடிஞ்சும் சரியான வேலை அமைச்சுக்க முடியாம வீட்ல தண்டசோறு, திண்ணைதூங்கின்னு பேர் வாங்கிட்டு இருக்கேன்டா… நீயே சொல்லு நான் அப்படியா..?” என்று கலங்கிய குரலில் கேட்டவனை அங்கே இருந்த திட்டில் அமர செய்த பிரேம் அருகிருந்த கடைக்கு நகர்ந்தான்.
கர்ணா இருபத்தி நான்கு வயதில் அடி எடுத்து வைத்திருக்கும் இளைஞன்… மாநிறம், சராசரி உயரம், கரடு முரடான வேலைகளில் ஈடுபடுவதில் உரமேறிய திடமான உடல்வாகு, படிப்பு பெரிதாய் சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை ஆனால் உழைப்பிற்கு அஞ்சாதவன், குடும்பத்தினர் மீது அளவற்ற பற்றுகொண்ட சராசரி ஆண்மகன்.
பசுமாத்தூரை சேர்ந்த இராமநாதன் சகுந்தலா தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கர்ணா.
இராமநாதன் சில வருடங்களுக்கு முன் தலைமை ஆசிரியராய் இருந்து ஒய்வு பெற்றிருப்பவர் அவர் மனைவி சகுந்தலாவும் அரசு பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இராமநாதன் சகுந்தலா தம்பதியினருக்கு ஐந்து பிள்ளைகள். மூத்த பெண் ஜெயலட்சுமி , இரண்டாமானவள் பாரதி முதல் இரண்டுமே பெண்ணாக பிறந்து விட மூன்றாவதாக கருத்தரித்த போது ஆண் பிள்ளைக்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கி வேண்டி விரதம் இருந்து சக்திவேலனை பெற்று எடுத்தார்.
வேலனுக்கு துணையாக மற்றோரு ஆண் மகவு வேண்டும் என்றெண்ணியவர்களுக்கு நான்காவதாகவும் பெண்குழந்தையே பிறக்க இத்தோடு போதும் என்று முடிவெடுத்தனர். ஆனால் மூன்று ஆண்டுகள் கழித்து எதிர்பாராவிதமாய் கர்ணா தங்கிவிட எங்கே அதுவும் பெண்ணாக போய் விடுமோ என்று கருக்கலைப்பிற்கு செல்ல இருந்த சகுந்தலா மாமியாரின் கட்டாயத்தால் வேண்டா வெறுப்பாக கர்ணாவை சுமந்திருந்தார்.
அதுவும் முதல் நான்கு குழந்தைகளும் சுகபிரசவமாகி இருந்த நிலையில் ஐந்தாம் குழந்தையின் பிரசவத்தின் போது பெரும் சிக்கல் எழுந்து சகுந்தலா கிட்டத்தட்ட செத்து பிழைத்தார் என்றுதான் கூறவேண்டும்.
பலமணி நேர போராட்டத்திற்கு பின் சிசேரியன் செய்து தான் குழந்தையை எடுத்திருந்தனர்.
கர்ணா பிறந்தது மக்களிடம் சிசேரியன் குறித்த அச்சம் மிகுந்திருந்த காலகட்டம். குழந்தையை பார்க்க வந்த சொந்தங்கள் எல்லாம் “பெரிய ஆபரேஷன் ஆஆஆ…” என்று வாயை பிளந்து கிட்டத்தட்ட சகுந்தலாவை துக்கம் விசாரித்து சென்றனர்.
ஏதோ தான் மிகபெரிய பாவம் செய்தது போலவும் அதன் தண்டனையாகவே அவருக்கு சிசேரியனாகியது போலவும் அவர்கள் சித்தரித்ததில் மன பெரும் உளைச்சளுக்கு ஆளாகி போனார் சகுந்தலா.., அதோடு உறவுகளின் பேச்சிற்கு தூபம் போடுவது போல மேலும் சிலரின் ஏளன பார்வையும் அவர் மீது படிந்தது.
ஏற்கனவே உடல் உபாதையில் தவித்து கொண்டிருந்தவருக்கு மற்றவர்களின் பார்வை பேச்சினால் எழுந்த கோபம் அனைத்தும் குழந்தையின் மீதே திரும்பியது. அதிலும் தினமும் தன் மாமியாரை நிந்திக்காமல் குழந்தைக்கு பால் கொடுத்து இருக்க மாட்டார் சகுந்தலா ஏனோ அப்போது தோன்றிய கசப்பு மகன் வளர்ந்த பின்பும் அப்படியே தங்கிவிட்டது.
ஆசிரியர் பிள்ளை மக்கு என்பதற்கு இணங்க பெற்றோர் இருவருமே ஆசிரியராக இருந்த போதும் அவர்களின் பிள்ளைகள் அனைவரும் பள்ளி படிப்போடு நின்றுவிட்டனர்..,
படிப்பில் கவனம் செலுத்தாது விளையாட்டு, வீட்டு வேலை என்று இருந்த பிள்ளைகளுக்கு கல்வி அறிவின் அவசியத்தை உணர்த்தி அவர்களை மேற்படிப்பிற்கு அனுப்பும் எண்ணமே இல்லாமல் திருமணம் முடித்து விட்டால் தங்களின் கடமை தீர்ந்துவிடும் என்பதால் மூன்று பெண்களையும் அடுத்தடுத்து திருமணம் செய்து கொடுத்துவிட்டனர்.
கடந்த வருட ஆரம்பத்தில் தான் சக்திவேலனுக்கு முடித்தனர்.
வேலனுக்கு படிப்பு ஏறாததால் பத்தாவதோடு படிப்பை நிறுத்தி கொண்டவன் ஆரம்பத்தில் பல இடங்களில் வேலை செய்து இறுதியாக பாரதியின் கணவரிடம் தொழில் கற்றுகொண்டான். திருமணத்திற்கு முன் தந்தையிடம் பேசி சொந்தமாய் வாழை மண்டி வைத்து கொண்டவன் அதனோடு பைனான்ஸ், வட்டி தொழில் என்று பல தொழில்களும் செய்து வருகிறான்.
அதேநேரம் ஆறாம் வகுப்போடு படிப்பு தடைபட்டு போன கர்ணா இன்றுவரை நிலையாக எந்த வேலையும் இல்லாமல் இருக்கிறான்.
************************************
“மச்சி முதல்ல தண்ணி குடி” என்ற பிரேம் குளிர்ந்த நீரை கொடுக்க வாங்கி குடித்த கர்ணாவின் கைபேசி ஒலித்தது.
பாரதி தான் அழைத்திருந்தார்.
‘பிறந்த நாள் வாழ்த்துக்கள் கர்ணா’ என்ற பாரதியின் குரலோடு ‘ம்மா நானு நானு…’ என்று போட்டிப்போட்டு ‘ஹாப்பி பர்த்டே மாமா’ என்ற குழந்தைகளின் உற்சாக குரலும் அவனை சேர்ந்தது…
‘தேங்க்ஸ் பட்டு’ என்ற கர்ணா முகத்தில் அத்தனை மகிழ்ச்சி,
‘மாமா உனக்கு என்ன கிப்ட் வேணும்’ என்றான் ஐந்து வயதான மித்ரன்.
மாமாக்கு உங்களை எல்லாம் பார்க்கணும்… எப்போ வருவீங்க..? என்றவனிடம், இப்போ மதுரையில இருக்கோம் கர்ணா இன்னும் ரெண்டு நாளுல வந்துடுவோம் என்றாள் பாரதி.
“சரிக்கா அடுத்த வாரம் கிரகபிரவேசம் நீ லேட் பண்ணாம பசங்களோட சீக்கிரம் வந்துடு.., மாமா பக்கத்துல இருக்காரா..?”
‘இல்லடா வெளியே போயிருக்கார் கொஞ்சம் முன்ன தான் வீட்டுக்கு பேசினேன், நீ அங்க இல்லன்னு சொன்னாங்க, எங்க இருக்க கர்ணா..??
‘கழுதை கெட்டா குட்டிசுவர் இப்பவும் அந்த எம். எல். ஏ பிஏவை பார்க்க தான்க்கா போயிட்டு இருக்கேன்’
“டேய் நேத்தும் ஏதோ பிரச்சனை ஆச்சாமே ! கிட்டத்தட்ட கைகலப்பாகி இருக்கும் அண்ணி நல்லவேளை நான் இடையில் வரவும் தம்பி அமைதியானாருன்னு வீணா சொன்னா.. ஏன்டா அவனை பத்தி தான் தெரியுமே நீ கொஞ்சம் பொறுமையா இருக்கலாமே”
‘ப்ச் போக்கா குட்ட குட்ட குனிஞ்சிட்டே இருக்க சொல்றியா..? என்னமோ அவன்தான் குடும்பத்தையே தூக்கி சுமக்கிற மாதிரியும் நான் என்னமோ தண்டமா இருக்க மாதிரியும்..’
‘ச்சு கர்ணா யார் என்ன சொன்னா என்ன..?? உனக்கான நேரம் வரும் கொஞ்சம் பொறுமையா இரு.. நேத்துல இருந்து ஒவ்வொரு கோவில்லையும் என்னோட முதல் வேண்டுதலே உனக்காக தான்’
‘க்கா..’
‘நான் மாமா கிட்டயும் பேசுறேன் அவருக்கு தெரிஞ்ச ஆளுங்க மூலமா அந்த பணத்தை திரும்ப வாங்க முடியுமா பார்க்கலாம்.. ஆனா அந்த பணம் கிடைக்கிற வரை நான் முன்ன சொன்ன மாதிரி மாமாகிட்ட வந்து வேலை பாருடா.. ‘ என்று அழைக்க அவரிடம் மேலும் பத்து நிமிடங்கள் பேசி முடித்தவன் ஒரு பெருமூச்சுடன் கைபேசியை அணைத்தான்.
‘என்ன மச்சான் சொல்றாங்க அக்கா..??’
“வேற என்னடா சொல்ல போறாங்க எல்லாம் வழக்கம் போல தான்! சரி அதை விடு இப்போ நீ சொன்னது நிஜமாடா..?”
எதை கேட்கிற..?
இதோ இந்த விநாயகர் பற்றி நீ சொன்னது.. என்று கண்களால் எதிரே இருந்த கோவிலை காண்பிக்க
“நிஜமா தான் மச்சி.. படிச்சு முடிச்சு சரியான பிளேஸ்மென்ட் கிடைக்காம இருந்த எனக்கு நான் நினைச்ச இடத்துல வேலை கிடைச்சதே இந்த விநாயகர்கிட்ட எங்கம்மா வேண்டின பிறகுதான்…”
“அதனால சும்மா வாடா இந்த முறையாவது அந்த ஆளு இழுத்தடிக்காம உன் பணத்தை கொடுக்கணும்னு வேண்டிட்டு போகலாம்” என்றவன் கர்ணாவை இழுத்து கொண்டு கோவிலுக்குள் சென்றான்.
‘வேண்டுதல் பலிக்குதோ இல்லையோ உன் வாக்காவது பலிக்கட்டும் மச்சி’ என்றான் கர்ணா உடன் நடந்தவாறே..
விநாயகர் சந்நிதானத்தில் கண்மூடி நின்ற இருவரின் மனதிலும் எப்படியாவது இந்தமுறை பி.ஏ கர்ணாவின் ஐந்து லட்சத்தை திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்பது மட்டுமே.