“ரகு இந்த இரண்டு பையிலயும் பழம் இருக்கு கார்ல வைக்கும் போது இதுக்கு மேல எதுவும் வச்சிடாத தனியா வை” என்றவாறே மண்டபத்திற்கு செல்ல வேண்டிய பொருட்களை எல்லாம் பிரித்து எடுத்து கொடுத்தார் பார்வதி.
குளித்து முடித்து ஈரக்கூந்தலை முழுதாக விரித்து விடாமல் நுனியில் சிறு முடிச்சிட்டு பூஜையறையில் கைகூப்பி மனமுருக நின்றிருந்த மதுவர்த்தினி மனதில் எண்ணிலடங்கா எண்ணப்பேரலைகள்..
பதினெட்டு வயதின் ஆரம்பத்தில் இருக்கும் பாவையவள் ஆனால் வயதிற்கு உரிய துள்ளளோ, மகிழ்வோ இன்றி ஏதோ ஒரு தேடல், தீவிரம், வெறுமை அனைத்தும் கலந்த கலவையானவள்…,
சிலநிமிடங்களுக்கு பின் மது வெளியில் வரவும் “உனக்கு டைனிங் டேபிள் மேல பால் வச்சிருக்கேன் பாரு மது எடுத்துக்கோ நான் பொருளெல்லாம் கொடுத்துட்டு வரேன்” என்றவர் அங்கிருந்த பெண்கள் மற்றும் ரகுவிடம் மண்டபத்தில் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டார்.
“ராசாத்தியும் நீயும் முதல்ல மண்டப வாசல்ல கோலம் போட்டுடுங்க… மஞ்சள், குங்குமம், வளையல், பூ எடுத்து வச்சிக்கோங்க நலங்கு வச்சு முடிக்கும் போது கொடுத்திடலாம்… ரகு கிஃப்ட் எல்லாருக்கும் போய் சேருற மாதிரி பார்த்துக்கோ யாரும் விட்டு போககூடாது”
“சரிங்கம்மா”
“அப்புறம் உன்கூட செல்வாவை கூப்ட்டுக்கோ நான் ஐயாக்கிட்ட சொல்லிட்டேன்”
“சரிங்கம்மா”
மது பாலை குடித்தவாறே ஹாலில் நடப்பதை கவனித்து கொண்டிருக்க அங்கே வந்த சவிதா, “காலங்கார்த்தாலயே என்ன வேடிக்கை” என்றாள் அதட்டலாக.
“ஒண்ணுமில்லை அண்ணி சும்மா பார்த்துட்டு இருந்தேன்”
“பார்த்த வரைக்கும் போதும் இன்னைக்கு டிஃபனுக்கு அத்தை பூரி உருளை செய்யறேன் சொன்னாங்க ஆனா உங்க அண்ணனுக்கு ஆயில் ஃபூட் அதிகம் சேர்க்ககூடாது அதோட நான் செய்யறதை விட உங்கண்ணனுக்கு நீ செய்யற பொங்கல் சாம்பார்னா ரொம்ப இஷ்டம் அதனால உங்கண்ணனுக்கு செய்யறதுல எங்க மாமாக்கும் சேர்த்து பண்ணிடு மது’
“சரி அண்ணி” என்ற மது அதற்கு மேல் அங்கு நிற்காமல் சமையலறைக்குள் நுழைந்தாள்.
மது பாசிபருப்பை ஊறபோட அங்கே வந்த பார்வதி, “பரீட்சைக்கு வர எல்லா கேள்வி பதிலும் படிச்சிட்டியா மது உங்கப்பா நைட் வந்ததும் உன்னை கேட்டுட்டு தான் படுக்கபோனார்”
“படிச்சிட்டேன்மா” என்றவள் பூண்டு உரிப்பதை கண்டு “என்ன பண்ண போற..?” என்றார்.
“பெரிய அண்ணாக்கு பொங்கல் சாம்பார்மா”
“சரி சரி சீக்கிரம் செய்து முடிச்சிட்டு ஸ்கூலுக்கு கிளம்பு”
“ம்மா அண்ணியோட வளைகாப்பு இன்னைக்கு தானே.. நான் எப்படி ஸ்கூல்க்கு போகறது..?” என்றவளுக்கு பெரிதாக வளைகாப்பில் கலந்து கொள்ளும் ஆர்வம் இல்லையென்றாலும் ஒருநாள் குடும்பத்தோடு சேர்ந்து இருக்க முடியுமே என்ற எண்ணம் மட்டும் தான்.
பின்னே அண்ணிகளால் சிறு வயதிலேயே அவள் கொண்ட வடு அத்தனை எளிதாக கடக்ககூடியது அல்ல..!!’
இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பின் மதுவர்த்தினி வீட்டிற்கு ஒற்றை பெண்ணாகி போனதால் அனைவரும் அவள் மீது அளவில்லா நேசம் கொண்டிருந்தனர் செல்ல சீமாட்டியான அவள் விரும்பியதை செய்து.., கேட்டதை வாங்கிக் கொடுத்து என்று அவள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களையும் உடன் பிறந்தோர் அத்தனை அழகாக்கி இருந்தனர்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பின்னர் அவளுக்கான வேலைகளை செய்ய அன்னையும் வேலை ஆட்களும் இருக்க தானாக போய் எதையும் எடுத்து செய்யாதவள்., அப்படியே ஆர்வ மிகுதியில் நூடுல்ஸ் செய்யவென்று சமையலறைக்கு சென்றாலும் பார்வதி விடமாட்டார்.
“என்னடாமா..?படிக்கிற பிள்ளைக்கு இங்க என்ன வேலை..? போய் படி என்ன வேணும்னு குரல் மட்டும் கொடு, நான் கொடுத்து அனுப்புறேன்” என்று அனுப்பிவிடுவார்.
அண்ணன்களும் அப்படியே..!! சதீஷுக்கும் மதுவுக்குமே எட்டு வயது வித்யாசம் என்பதால் தங்கை மீது அளவில்லாத நேசம் அவளை சிறுவேலை செய்யவிட்டது இல்லை. ஆனால் இவை அனைத்தும் சவிதா மற்றும் ப்ரியாவின் வரவிற்கு முன் ஆனால் அவர்கள்வரவால் வீடே பெரும் மாற்றம் கொண்டது.
மது நன்றாக படிக்க கூடியவள் தான்.. பத்தாம் வகுப்பு தேர்வில் 90 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தவள்.. ஆனால் உயர்நிலைக் கல்வியில் முதல் தேர்வில் அவளால் நல்ல மதிப்பெண்கள் பெற இயலவில்லை. மதுவை மகப்பேறு மருத்துவராக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த ஏகாம்பரத்திற்கு இதில் ஏக வருத்தம்.
“இதை உன்கிட்ட எதிர்பார்க்கவில்லை மதும்மா” என்ற மாமனாரின் வார்த்தைகள் போதாதா மருமகள்களுக்கு..! சும்மாவே ஆடிக்கொண்டிருந்தவர்களுக்கு சலங்கை கட்டிவிட்டது போல ஆகியது.
“அன்று இரவே கணவர்களிடம் நீங்க உங்க தங்கச்சிக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கீங்க படிப்பு தான் வரலைன்னு பார்த்தா வீட்டு வேலையும் தெரியலை..” என்றனர்.
உடனே தம் சரிபாதியை அவர்கள் முறைக்கவும், கணவர்களிடம் நேரிடையாக மதுவை பற்றி கூறினால் பருப்பு வேகாது என்று தெரிந்தவர்கள் அவர்களின் பாசமும், அவளுக்கு கொடுக்கும் செல்லமே அவளை தவறான பாதையில் பயணிக்க வைக்கும் என்றும் பெண் பிள்ளைகளுக்கு கண்டிப்பும் கட்டுப்பாடும் இருந்தால்தான் நாளை எவ்வித தலைகுனிவு ஏற்படாது என்றும் அவர்களின் பாசம் என்னும் விரலை கொண்டு அவர்களின் கண்ணான தங்கையை தாக்க துவங்கினர்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது இதுதானோ…!!
அண்ணன்களும் மெல்ல மெல்ல மனைவிகளின் வார்த்தையில் உள்ள எதார்த்தத்தை புரிந்து கொண்டு தங்கையிடம் இருந்து விலகி நிற்க ஆரம்பித்தனர். ஆனாலும் திருப்தி அடையாதவர்கள் அவளை பெரிதாய் காயப்படுத்தும் சந்தர்பத்திற்காக காத்திருக்கின்றனர்.
முதலில் அண்ணிகளின் வரவால் ஏற்பட்ட திடீர் மாற்றம் மதுவிற்கு புரிபடவில்லை ஆனால் வருடங்கள் இரண்டை கடக்கவும் புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு பயணிக்க கற்றுக்கொண்டாள். முடிந்தவரை அவர்களிடம் இருந்து ஒதுங்கியும் அவர்கள் பேச்சிற்கு கட்டுபடவும் அவர்களிடம் இருந்து மது பெரும் திட்டுகளும் ஏச்சு பேச்சுகளும் குறைந்தது.
“ம்மா வளைக்காப்பு வச்சிட்டு என்னை ஸ்கூல் போக சொல்றீங்க..?” என்று மது திரும்பவும் கேட்க,
“ஆமா மது ஆனா உனக்கு பரீட்சைக்கு இன்னும் கொஞ்சநாள் தான் இருக்காமே அதனால அப்பா உன்னை இனி ஒருநாள் கூட லீவ் எடுக்ககூடாதுன்னு சொல்லி இருக்கார்.. ஸ்கூல்க்கு போயிட்டு வந்து விசேஷத்தை நீ வீடியோல பார்த்துப்ப சரிதானே” என்ற தாய்க்கு சரிம்மா.. என்ற பதிலை கொடுத்தவள் குக்கரை அடுப்பில் ஏற்றினாள்.
“அப்புறம் மது இனி நைட்ல ரொம்ப நேரம் படிக்காதடாம்மா அப்படியே படிச்சாலும் காலையில சீக்கிரமே எழுந்துக்கோ இல்ல விடிகாலையில படிச்சிக்கோ ராத்திரி தூக்கம் கெட்டா அடுத்தநாள் முழுக்க செய்யற வேலையில கவனம் இருக்காதாம்”
‘அண்ணி சொன்னாங்களாம்மா..?’
“யார் சொன்னா என்ன..? சொல்ற விஷயம் நம்ம நல்லதுக்கான்னு பார்க்கணுமே தவிர யார் என்னன்னு ஆராயகூடாது மது” என்றவர் குரலில் இன்னொருமுறை மருமகள் தன் மகளை எதுவும் பேசி விடக்கூடாதே என்ற ஆதங்கம்.
“சரிம்மா” என்றவாறே மது பொங்கலுக்கு தேவையானவற்றை எடுத்து வைக்க,
“சரி மது பொங்கலை தாளிச்சிட்டு அப்படியே உருளையை தோல் எடுத்து வச்சிடு நான் உங்க சின்ன அண்ணிக்கு பால் கொடுத்துட்டு காலுக்கு எண்ணை தேச்சு விட்டுட்டு வரேன்’ என்றவர் ப்ரியாவிற்கான பாலோடு அவள் அறைக்கு சென்றார்.
மேலும் அரைமணி நேரம் சென்ற பின் சமையலை முடித்துவிட்டு மது வெளியில் வரவும், “மதும்மா” என்று அழைத்தவாறே பரபரப்பாக அங்கே வந்தார் ஏகாம்பரம்.
“ப்ராக்டிகல்ஸ் நல்லா பண்ணினா போதாது மது தியரியும் ரொம்ப முக்கியம்.. மார்க் ஸ்பீக்ஸ் எவ்ரிவேர் ! நல்லா ஸ்கோர் பண்ணிடுவ தானே நேத்து உன்னோட பிரின்சிபால் கிட்ட பேசினேன் என்னதான் நீ டாப்பரா இருந்தாலும் உனக்கு போட்டியா வேற செக்ஷன்ல ரெண்டு கேர்ள்ஸ் இருக்காங்களாமே அப்படியா..?”
“ஆமாப்பா”
“யார் இருந்தா என்னடா..? நீ என் பொண்ணாச்சே..!! எனக்கு நம்பிக்கை இருக்கு அண்ணனுங்க டாக்டர் ஆனது பெருசு இல்லைடா இந்த ஏகாம்பரம் மகள் டாக்டர் ஆகுறதுதான் அப்பாக்கு பெருமை புரியுதா..??” என்று அட்டகாசமான சிரிப்புடன் கூறியவர்,
“படிக்கிற பிள்ளைக்கு நேரத்துக்கு கொடுக்கணும்னு தெரியாதா..? இதோபார் பார்வதி பரீட்சைக்கு படிக்கிறப்போ மனசு எந்த குறையும் இல்லாம இருந்தாதான் படிக்கிறது மனசுல பதியும் இன்னொருமுறை இந்த தப்பு பண்ண கூடாது” என்று கடிந்தவர், நீ சாப்ட்டுட்டு கிளம்புமா என்று மகளை அனுப்பி வைத்து மருத்துவமனைக்கு கிளம்பி இருந்தார்.
கணவர் கிளம்பவும் இரு சம்பந்தி வீட்டினர் அடுத்தடுத்து வர அவர்களுக்கு காலை நேர உணவை கொடுத்து உபசரிக்க சென்ற பார்வதி மகளை மறந்தே போயிருந்தார் இறுதியாக மது பள்ளிக்கு தயாராகி கிளம்பும் போது தான் ஞாபகம் வரவும் அவளுக்கு பரிமாறி இருந்தார்.
“சரிம்மா நான் கிளம்பறேன்” என்ற மதுவர்த்தினியின் கையை பிடித்து நிறுத்தியவர்,
“மது படிச்சதெல்லாம் நினைவிருக்கா…, நீயும் அண்ணனுங்கள மாதிரி டாக்டர் ஆகணும் இது அப்பாவோட ரொம்ப வருஷ ஆசை என்னைக்கும் நீ மறக்ககூடாது…” என்று மகளின் நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்தியவர், அவளோடு கீழே இறங்க வாசலில் தயாராக காரின் முன் காத்திருந்தான் ரகு.
“மண்டபத்துல எல்லாம் சேர்த்தாச்சா ரகு”
“ஆச்சும்மா”
“மளிகை, பழம் எல்லாம் வந்துடுச்சு தானே..?”
“வந்துடுச்சும்மா”
“சரி நீ மதுவை ஸ்கூல்ல விட்டுட்டு வரும்போது இந்த லிஸ்ட்ல இருக்கிறதெல்லாம் வாங்கிட்டு நேரா மண்டபத்துக்கு வந்துடு நாங்க மணிகூட கிளம்புறோம்”
“சரிம்மா” என்று அவரிடம் பணிவாக தலையாட்டியவன் அவர் அருகில் நின்றிருந்த மதுவிடம் “பாப்பா ஏறுங்க” என்று காரின் பின் கதவை திறந்துவிட்டவன் அவள் ஏறி அமரவும் வண்டியை எடுத்தான்.
ரகு ஏகாம்பரத்தின் ஆஸ்தான டிரைவரான கோபாலின் மகன்… இருபத்தைந்து வருடத்திற்கும் மேலாக ஏகாம்பரத்திடம் பணி புரிந்தவர் மூன்று வருடங்களுக்கு முன்பு மாரடைப்பால் தவறவும் படிப்பு ஏறாமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்தவனை அவன் தந்தை இடத்தில அமர வைத்தார் ஏகாம்பரம்.
அன்றிலிந்து அவர்களுக்கு டிரைவராக மட்டுமில்லாமல் அவர்கள் வீட்டின் ஒரு அங்கமாய் மாறிப்போனான் ரகு.
காரினுள் அமர்ந்ததும் புத்தகத்தை பிரித்தவாறே தாயிடம், “போய்ட்டு வரேன் மா..” என்று கை அசைத்தவள் புத்தகத்தை பார்வையிட துவங்கினாள்.
***********************************
“வனிம்மா இறங்குங்க”
“என்ன ரகு எதுக்கு இங்க நிறுத்தின..?” என்று மது கோட்டை கோவிலை பார்க்க,
“ஒரு பத்து நிமிஷம் கோவிலுக்கு போயிட்டு வந்துடலாம் வாங்க”
“இல்ல இருக்கட்டும் ரகு.. நான் காலையிலேயே சாமி கும்பிட்டுட்டு தான் வந்தேன்”
“ப்ச் இன்னைக்கு உங்க முகம் ரொம்பவே வாடி போயிருக்கு வனிம்மா… எனக்கு தெரியும் ஐயாவும் அம்மாவும் உங்களை வளைக்காப்புல இருக்கவிடாம ஸ்கூலுக்கு அனுப்பிட்டதனால தானே இப்படி இருக்கீங்க..?” என்றவன் விடாமல் அவளை கோட்டை கோவிலுக்கு அழைத்து சென்றான்.
மதுவர்த்தினி இயல்பிலேயே அமைதியான சுபாவம் கொண்டவள், பெரிதாக அதிர்த்து பேச தெரியாது என்றாலும் அவளது சரளமான பேச்சுக்கள் எல்லாம் ரகுவோடு மட்டுமே… சரியாக சொல்லவேண்டுமானால் வீட்டில் அண்ணிகள் காலெடுத்து வைத்தபின் தன் உலகை ரகுவோடு சுருக்கி கொண்டுவிட்டாள்.
தீபாராதனையோடு அர்ச்சகர் வரவும் கண்களில் திரண்டுவிட்ட நீரோடு ஈசனை பார்த்து நின்றிருந்தவள் அவசரமாக பார்வையை தழைத்து விபூதியை வைத்து கொண்டு வெளியில் வந்தாள்.
கோவிலின் வெளியே தனக்காக காத்திருந்தவனிடம் “இவ்ளோ தூரம் வந்த நீ எனக்காக உள்ள வரலாம்ல ரகு” என்றவாறே அவனுக்கு விபூதியை வைத்து விட்ட மது கேட்க,
“நான் இப்படிதான் வனிம்மா.. என் தலையெழுத்தை கிறுக்கி வச்ச பிரம்மன்ல இருந்து எல்லார் மேலயும் எனக்கு கோபமிருக்கு ஆனா இதோ இப்போ நீ நெத்தியில வச்சிருக்கிறதை அழிக்காம இருக்கிறதுகூட உனக்காக மட்டும் தான்!! இருட்டை மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட எனக்கு சின்ன வெளிச்சமா நீ கிடைச்சிருக்க வனிம்மா.. உன்னை என்னோட வாழ்க்கையில கொடுத்ததுக்காக தான் இதோ இங்க வந்து நிக்கிறேன் இல்லன்னா நான் ஏன் இவங்களை எல்லாம் திரும்பி பார்க்க போறேன் ..?” என்று கோவிலை பார்த்தவாறே ஆதங்கத்துடன் கலங்கிய விழிகளோடு பின்னந்தலையை கோதியவன்..,
“ப்ச் இப்போ எதுக்கு இந்த பேச்செல்லாம் விடு வனிம்மா நீ என் பக்கத்துல இருக்கப்போ தான் நான் கொஞ்சம் நிம்மதியா, நிறைய சந்தோஷமா இருக்கேன் அது போதும் எனக்கு.., எனக்கும் சேர்த்து நீ வேண்டிக்கிறப்போ நான் எதுக்கு தனியா அவரை தொந்தரவு பண்ணிக்கிட்டு விடுங்க”
“ரகு..” என்றவளின் குரலும் தழுதழுத்தது.
“என்னம்மா இது..?” என்று அவள் கண்ணீரை துடைத்தான்.
“நீ மட்டுமில்ல நானுமே உன் பக்கத்துல இருக்கப்போ தான் ரொம்ப நிம்மதியாவும் ரொம்ப ரொம்ப சந்தோஷமாவும் இருக்கேன் ரகு”
“அதுதான் எனக்கு தெரியுமே வனிம்மா உங்களுக்கு ஸ்கூலுக்கு டைம் ஆகலையா..? வாங்க முதல்ல ஸ்கூல்ல விட்டுடுறேன் மத்ததெல்லாம் சாயந்திரம் பார்த்துக்கலாம்” என்று காரின் பின்பக்க கதவை திறந்து விட்டவன் அவளை அமர சொல்லிட அவளோ கதவை அறைந்து சாற்றிவிட்டு முன்னே வந்து அமர்ந்தாள்.
********************************
முலாம்பழ ஜூசை ஒரு மிடறு விழுங்கிய கர்ணா, “இப்போ நான் என்ன சொல்லணுங்கிற..?” என்றான் தன்னையே பார்த்து நின்ற பிரேமிடம்.
“நானே எதிர்பார்க்கலை இப்படி ஒரு ட்விஸ்ட் வைப்பன்னு அதான் கேட்குறேன் எப்புட்ரா..?”
“எப்படின்னா..? இந்த ரெண்டு வருஷமா பணத்தை கொடுத்துட்டு அவங்க கிட்ட நான் கத்துக்கிட்ட பாடம் அப்படி..! அதான் வேற வழியில்லாம கடைசி முயற்சியா ஒரு கை பார்த்துடலாம்னு முடிவு பண்ணி கிளம்பினேன்” என்றவன் சற்று முன் பி.ஏ வீட்டில் நிகழ்ந்ததை நினைவு கூர்ந்தான்.
என்றும் போல இன்றும் பி.ஏ தன் வழக்கமான சால்ஜாப்பை சொல்ல நிதானம் இழந்து போன கர்ணா ஒரு கட்டத்தில் அவன் சட்டையை பிடிக்க போய்விட்டான்..
“டேய் லஞ்சம் கொடுத்து வேலை வாங்கறதே தப்பு இதுல நீ அவனை பகைச்சிகிட்ட இனி எங்கயும் மூவ் பண்ண முடியாத அளவு உன்னை பண்ணிடுவான் மச்சி கொஞ்சம் பொறுமையா இருடா” என்று பிரேம் அவனை தடுத்து பிடிக்கவும்,
“மச்சான் எனக்கென்ன வேண்டுதலா..? எல்லா தகுதியும் இருக்கிறவனுக்கே ரேஷன் கடையில தொடங்கி டாக்டர் போஸ்டிங் வரைக்கும் இவனுங்களே ஒரு ரேன்ஜ் பிக்ஸ் பண்ணி வச்சிட்டு ஏலத்துல பொருளை விக்கிற மாதிரி யார் அவனுங்க பிக்ஸ் பண்ணின அமௌன்ட்ல இருந்து அதிகமா கொடுக்குறாங்களோ அவங்களுக்கு தான் வேலைன்னு இருக்கப்போ படிக்காத நான் மட்டும் என்ன செய்ய..?”
“சர்டிபிகேட்ல இருந்து எல்லாமே அவனுங்களே ரெடி பண்ணி வேலை வாங்கி கொடுப்பாங்கனு ஏற்கனவே வேலையில இருக்கவன் சொன்னதை நம்பி பணத்தை கொடுத்தேன்.. ஆனா இந்த ரெண்டு வருஷத்துல வீட்லயும் சரி இவனுங்க கிட்டயும் சரி ரொம்ப பட்டுட்டேன்டா” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே,
“டேய் என் மேலயே கை வைக்கிற அளவு வந்துட்டியா இனி எப்படி நீ பணத்தை வாங்குறன்னு நானும் பார்க்குறேன்டா” என்ற பி.ஏ வின் குரல் உச்சபட்சமாக உயர்ந்தது.
“கை என்னடா இப்போ பணம் என் கைக்கு வரலைன்னா அடுத்த காலே வைப்பேன்” என்று கர்ணா பிரேமின் பிடியில் இருந்து திமிர அதற்குள் பி.ஏ வின் அடிபொடிகள் இருவர் வந்து சேர்ந்துவிட்டனர்.
“ஏன்டா கவர்ன்மென்ட் ஆஃபிஸ் என்ன உங்கப்பன் தலைமையிலயா நடக்குது நீ பணம் கொடுத்ததும் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை அடிச்சி நீட்ட… எத்தனை செக்ஷன்க்கு எத்தனை முறை ஏறி இறங்கி நடையா நடந்து எத்தனை எத்தனை ஆயிரம் கப்பம் கட்டணும்னு தெரியுமா உனக்கு.. காசை கொடுத்துட்டா ஆச்சா..? ரெண்டு வருஷம் இல்ல பத்து வருஷம்கூட ஆகலாம் அப்படி அவசரம்னா அந்த வேலை வரதுக்குள்ள நீயே படிச்சி கலெக்டராகு யார் வேணாம்னா” என்று நக்கலாக சிரித்திட சுற்றி இருந்தவர்களையும் சிரிப்பு தொற்றிக்கொண்டது.
அவன் பேச்சில் கர்ணாவின் கைமுஷ்டி இறுகிட, “மச்சி உன் கோபம் புரியுது ஆனா பொறுமையா இருடா இவனுங்களை பகைச்சிகிட்டா சல்லி பைசா வாங்க முடியாது… இப்போ நாம கொஞ்சம் இறங்கி போனா தான் காரியம் நடக்கும்”
“டேய் ஒன்னு ரெண்டு இல்லை சுளையா அஞ்சு லட்சம் மச்சி..!! எங்கப்பா ரிடைர்மென்ட் பணம் எல்லாருக்கும் மூணு லட்சம் கொடுத்தவர் எனக்கு மட்டும் அதிகமா கொடுத்தப்பவே பிரச்சனையாச்சு .. அதனாலேயே எப்படியாவது ஒரு வேலையை வாங்கி என்கூட பிறந்தவன் வாயை அடைக்கனும்னு கொடுத்தேன்டா.. ஆனா இப்படி ஆகும்னு நினைக்கலை”
“அதுக்கு தான் சொல்றேன் மச்சி நமக்கு வீரியம் முக்கியமில்லை இப்போதைக்கு காரியம் தான் முக்கியம் இவன்கிட்ட இருந்து பணத்தை நைசா கழட்டறதை தான் பார்க்கணுமே தவிர கோபப்பட்டு இழந்துட கூடாதுடா” என்று பிரேம் கர்ணாவை சமாதானபடுத்த முற்பட்டான்.
சட்டையை சரி செய்தவாறே “சரி விடுடா” என்று கர்ணா சாதாரண குரலில் கூற,
“நீ திரும்ப அடிக்க போகமாட்டேன் சொல்லு விடறேன்”
“விடுடா நான் பிரச்சனை பண்ணாம பேசறேன்” என்றவன் மீண்டும் நாற்காலியில் அமர்ந்தான்.
“அப்போ முடிவா என்ன சொல்ற..?”
“ஏன்டா உன் முடிவை நீயே தேடிகிட்ட பிறகு என்னை ஏன் கேட்கிற.. கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்” என்று பி.ஏ சட்டையை பின்னே இழுத்து விட்டு தெனாவட்டாக சாய்ந்தமர,
“அப்போ என் முடிவுலயும் எந்த மாற்றமும் பண்ணவேண்டாம்னு சொல்ற அப்படிதானே..?”
“உன் முடிவா..?”
“ஆமாடா இன்னும் ரெண்டு மாசத்துல எலெக்ஷன் வச்சிட்டு எங்களுக்கு ஆட்டமா காட்டுற பார்த்துடலாம்டா நீயா இல்ல நாங்களா..?” என்ற கர்ணாவும் சாய்ந்தமர்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு அவனை எள்ளலாக பார்த்தான்.
“என்னடா சொல்ற..?” என்ற பி.ஏ முன் தன் கைபேசியை திறந்து குறிப்பிட்ட காணொளியை கர்ணா ஓடவிட அரண்டு போனார் பி.ஏ.
கர்ணாவிடம் மட்டுமல்லாமல் இன்ன பிறரிடமும் எம்.எல்.எ க்கு தெரியாமல் அவர் பெயரை உபயோகித்து அரசாங்க வேலை வாங்கி தருவதாக சொல்லி அவரே சொந்தமாய் வசூலித்த பணம்… இதற்கு பெரிதாக சாட்சியோ ஆதாரமோ கிடையாது வங்கி பரிவர்த்தனை இல்லாமல் எல்லாமே பல தவணைகளில் பணமாக பெற்றிருப்பதால் யாராலும் நிருபிக்க முடியாது என்று அவர் நினைத்திருக்க இப்போது கர்ணா அவர் பேசியதை எல்லாம் வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறான்.
அதோடு நில்லாமல் அவனை போலவே பி.ஏ விடம் பணம் கொடுத்து ஏமாந்திருப்போரிடம் தகவல்கள் திரட்டி கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஓடக்கூடிய காணொளியை தயாரித்து வைத்திருக்கிறான்.
தேர்தல் நேரத்தில் இது எம்.எல்.ஏ பார்வைக்கு சென்றால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பதால் பெரிதும் அரண்டு போனவர் என்ன செய்வது என்று புரியாமல் வீடியோவை வெறித்திருந்தார்.
“டேய் நீ இருக்கிறது என் இடம்.. அதிகபட்சம் இந்த ஃபோனை உன்கிட்ட இருந்து வாங்க எனக்கு எத்தனை செகேன்ட் ஆகும்னு நினைக்கிற..?” என்று மேவாயை நீவியவாறு அவர் பார்க்க,
“என்கிட்ட இருந்து வாங்கிடலாம் ஆனா இந்த வீடியோவை இந்த ஃபோன்ல மட்டும் தான் வச்சிருக்கிறதா யார் சொன்னா..?”
இதோ இவன் ஃபோன், லேப்டாப், என் மாமா ஃபோன் இவ்ளோ ஏன் உன் ஃபோன்லயும் இருக்கும் பாரு’ என்று கூறவும் அவசரமாக தன் கைபேசியை திறந்து பார்க்க பி.ஏவை சந்திக்க காத்திருந்த நேரத்தில் அவருக்கும் கர்ணா அனுப்பி வைத்திருக்கிறான்.
அதை கண்டவருக்கு குப்பென வியர்த்து விட்டது… இன்னும் எத்தனை பேருக்கு அனுப்பினானோ என்ற கேள்வியோடு அவனை பார்க்க, “அடுத்து நான் பெரிய இடத்துக்கு அனுப்புறதும் அனுப்பாம போறதும் உன் கையில இருக்கு” என்றிட அவர் மனதிலோ இனி தன்னை பார்க்க வரும் யாரும் ஃபோனை எடுத்துட்டு உள்ள வரக்கூடாதுன்னு ஒரு போர்ட் மாட்டனும் இல்ல நம்ம பிழைக்க முடியாது என்று நினைத்து கொண்டவர் மெல்ல கர்ணாவிடம் நைச்சியமாக பேச தொடங்கினார்..
“அதான் தம்பிக்கே தெரியுதே எலெக்ஷன் வரபோகுது.. அதுக்கு நிதியா கட்சிக்கு நான் மட்டுமே அரை சி கொடுத்திருக்கேன்”
“நீ எவ்ளோ கொடுத்தா எனக்கென்ன..?”
“இல்ல தம்பி எப்படியும் இன்னும் நாலஞ்சு மாசத்துல ஆட்சியும் மாறும் காட்சியும் மாறும்”
“ஏன் நீ என்ன எலெக்ஷன்ல நிற்க போறியா..?” என்று கர்ணா எள்ளலாக கேட்க
“ஆமா தம்பி நீங்க எல்லாம் இருக்கிற தைரியத்துல தான் களம் இறங்குறேன்.., தம்பிங்க எல்லாம் பெரிய மனசு பண்ணி அண்ணனை ஜெயிக்க வைக்கணும், நான் ஜெயிச்சா நீங்க ஜெயிச்ச மாதிரி தானே…?” என்று அசடு வழிந்தவர்,
“டேய் தம்பிங்களுக்கு ரெண்டு இளநீர்..” என்று குரல் கொடுக்க அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் முன் பெரிய அளவிலான செவ்விளநீர் நீட்டப்பட்டது.
கர்ணா அதை வாங்காமல் சந்தேகமாக அவரை பார்க்க, “என்ன தம்பி இது நீங்க நம்ப ஆளுங்க அதுவும் அண்ணன் தலை எழுத்தையே மாத்தி எழுத போறவங்க உங்களை போய் என்ன பண்ணிட போறேன்… ஒரு தாய் பிள்ளையா பழகற நம்ம உறவை ஒரு வீடியோ மாத்திடுமா என்ன..?”
“என்னடா இது படுத்தே விட்டான் ஐயா ரேஞ்சுக்கு இறங்கிட்டான்” என்று பிரேம் கர்ணாவை பார்க்க அவனோ இதுக்கு மேலயும் போவான் பாரு என்பதாக நண்பனை பார்த்தான்.
“என்ன ஒன்னு தம்பி கொஞ்சம் மனசு வச்சு இந்த அண்ணனுக்காக ஒரே ஒரு மாசம் மட்டும் பொறுத்துக்கோங்க அப்புறம் மொத்த தொகையும் கொடுத்துடுறேன்…” என்று கூற அதையும் வீடியோ எடுத்து கொண்ட பின்பே அங்கிருந்து கிளம்பினர்.
“எப்படிடா வீடியோ ரெடி பண்ண எனக்குகூட சொல்லலை..”
அதான் சொன்னேனே மச்சி இந்த ரெண்டு வருஷத்துல நிறைய பட்டுட்டேன் அது கத்து கொடுத்த பாடம்..,
“அதான் அப்பப்போ போன போது எடுத்த வீடியோ எல்லாம் எப்படி சேர்க்கிறதுன்னு பெரியக்கா பொண்ணுகிட்ட கேட்டேன் அது கொஞ்ச நேரத்துல கத்து கொடுத்துடுச்சிடா..”
“சரி சரி மச்சி எதுக்கும் நீ கொஞ்சம் உஷாரா இருந்துக்கோ அடுத்த முறை அவனை பார்க்க தனியா போகாத… என்னைக்குன்னு முன்னாடியே எனக்கு சொல்லு நான் லீவ் போட்டுட்டு கூட வரேன் ஆனா தனியா மட்டும் போகாத”
“சரிடா” என்றவன் அவனிடம் விடைபெற்று வீடு சென்று சேர்ந்தான்.
****************
ஆசிரியர்களின் ஓய்வறையில் பரபரப்பாக தன் பொருட்களை கைப்பையில் திணித்து கொண்டிருந்தார் சகுந்தலா.
“என்ன டீச்சர் எங்களுக்கு தான் காலேஜ்க்கும் ஸ்கூலுக்கும் போயிருக்க பசங்க இந்நேரம் வந்திருப்பங்களேன்னு அவசரமா ஓடுறோம் உங்களுக்கென்ன…? நிதானமா கிளம்பலாமே ஏன் இவ்ளோ அவசரம்..?” என்று ஷைலஜா கேட்க,
“அதானே ! ஏன் டீச்சர் உங்களை உட்கார வச்சு செய்ய மருமகள் வந்த பின்னும் உங்க ஓட்டம் நின்னபாடு இல்லையே எப்பவும் போல அதே அவசரம் அதே வேகம் ஏன் இப்படி..?”
“அட போங்க டீச்சர் பேருக்கு தான் மருமகள் ஆனா அவளை வச்சு நாம இல்ல சேவை செய்ய வேண்டி இருக்கு” என்று சகுந்தலா அலுத்து கொண்டே நீரை எடுத்து பருக.,
“என்னக்கா இப்படி சொல்றீங்க..?”
“வேற என்ன சொல்ல..? இருக்கிறதை தான் சொல்றேன் கல்யாணமாகி ஒன்றரை வருஷம் மேல ஆகபோகுது இன்னும் வாய்க்கு ருசியா சமைக்க தெரியலை… அந்த மகராசி வந்த முதல் வாரமே அவ செஞ்சு கொடுத்த கேசரியை சாப்பிட்ட என் மகன் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டான் இனி அவ சமைக்கிறதா இருந்தா வீட்ல சாப்பிடவே மாட்டேன்னு…’
“அப்படியா..? என்ன டீச்சர் இது அவ்ளோ மோசமாவா இருக்கும்..?”
“நீங்க வேற ஒரு காபிகூட உருப்படியா போட தெரியாது.. இப்பவும் தினமும் காலையில நாலு மணிக்கு எழுந்து இட்லி, பொங்கல், பூரி, ஓட்ஸ் கஞ்சில தொடங்கி மதிய சமையலுக்கு எல்லாருக்கும் ஆளுக்கு ஒருவகை பொரியல் அவியல்னு செய்யறதோட இல்லாம பிள்ளை பெத்திருக்க மகராசிக்கு காரம் குறைச்சு சமைச்சுன்னு இன்னும் என் வேலை ஓயலை..”
“அச்சோ பாவம் டீச்சர் நீங்க எப்படி தான் வீட்டையும் வேலையையும் சமாளிக்கறீங்களோ..”
“இத்தனைக்கும் அவங்க நம்மளை போல வீட்டு வேலைக்கு கூட ஆள் வச்சுக்கலை தெரியுமா செண்பகம்” என்று மற்றொருவர் கூற..,
“அட ஆமாப்பா ரெண்டு முறை அவங்க வீட்டுக்கு போனப்போ கூட அவங்கதான் கூடம் எல்லாம் கூட்டி பெருக்கிட்டு இருந்தாங்க..”
“அப்படியா..?? அப்போ வேலைக்கு போகாத உங்க மருமகள் நாள் தோறும் வீட்ல என்னதான் செய்யற..?”
“அதை ஏன் கேட்குறீங்க…, வந்த ரெண்டாம் மாசமே பிள்ளை தங்கிடுச்சு வீக்கான உடம்பு எதுவும் செய்ய கூடாதுன்னு சொல்லவும் அது தான் சாக்குன்னு அம்மா வீட்டுக்கு கிளம்பிட்டா.., அடுத்து வந்து இருந்த கொஞ்ச மாசமும் வாந்தி மயக்கம்னு அவளை உட்கார வச்சு நானும் என் பொண்ணுங்களும் தான் சேவை செஞ்சோம் அப்புறம் பிள்ளை பெத்துட்டு இப்ப தான் மகராசி வீடு திரும்பி இருக்கா.. குழந்தையை சாக்கு சொல்லி ரூமுக்குள்ள போய் உட்காந்துப்பா… என் ரிடைர்மென்ட்டுக்கு அப்புறம் தான் பக்கத்துல இருந்து ஒவ்வொன்னும் கத்து கொடுக்கணும்..”
”என்ன சொல்ல டீச்சர் உங்களை பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு.., மருமகள் வந்தா நமக்கு ஓய்வு கிடைக்கும்னு பார்த்தா ரிடைர்மென்ட்க்கு அப்புறமும் உங்க நிலைமை மோசம் தான் போல.. இப்போ இருக்க பொண்ணுங்கள மருமகளா வரும்னு பார்த்தா நமக்கு மாமியாரா இல்ல வந்து சேருதுங்க…” என்றார் ஷைலஜா.
இருவர் அதை ஆமோதிக்க, ‘அட நீங்க வேற டீச்சர் இவளை பார்க்கிறப்போ சில நேரம் நம்ம மாமியாருங்களே பரவாலனு தோணும்னா பாத்துக்கோங்களேன்’ என்றார் சகுந்தலா.
‘உங்களுக்கே இந்த பாடுன்னா எங்க நிலைமை இன்னும் மோசமா இருக்கும் போலயே…’ என்று பேசிக்கொண்டே அனைவரும் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே வர அங்கு வழக்கம் போல கர்ணா அன்னைக்காக காத்திருந்தான்.