கர்ணா பள்ளி வாசலில் காத்திருக்க மற்ற ஆசிரியர்களிடம் விடை பெற்ற சகுந்தலா வண்டியில் அமர்ந்தவாறே “என்ன இந்த முறையும் பட்டை நாமம் போட்டானா..?” என்று கேட்க அவனோ மெளனமாக வண்டியை உதைத்து கிளப்பினான்.
“வீடு கட்டத்தான் ஒரு பைசா கொடுக்கலன்னு பார்த்தா ஒவ்வொரு முறையும் இதே காரணத்தை சொல்லி துரை ஊர்சுத்த கிளம்பிட்டா இருக்கிற வேலையை யார்டா பார்க்கிறது..?”
“ம்மா ராத்திரி எவ்ளோ நேரமானாலும் வேலையை முடிச்சிட்டு தான் படுப்பேன் போதுமா..?”
“ம்க்கும் இந்த வெட்டி ரோஷத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. உன்னை சொல்லி என்ன பிரோஜனம் உனக்கு பணம் கொடுத்த அந்த மனுஷனை சொல்லணும், இங்க என்ன கொட்டியா கிடக்கு..? அப்பவே கொடுக்காதீங்கன்னு தலைபாடா அடிச்சுக்கிட்டேன் எங்க கேட்டார்..?”
“ஆமா உங்களை மீறிதான் கொடுத்தார் அதுக்கு இப்போ என்ன சொல்ல வரீங்க..?” என்று கர்ணாவும் ஆற்றாமையில் தாயிடம் காய்ந்தான்.
“ஏன்டா பேசமாட்ட? முதல்முறை உனக்கு பேக்கிரி வச்சு கொடுத்து கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் காசை அழிச்சார் இந்த முறை கொடுத்த அஞ்சு லட்சத்தையும் எவன்கிட்டயோ ஏமாந்ததும் இல்லாம என்னையே பேசுவியா..?”
“ஏன் நான் காசை கொடுக்க போறேன்னு உங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டு தானே கொடுத்தேன் அப்பவே இது தப்பு வேண்டாம்னு தடுக்க வேண்டியது தானே.. இன்னொரு கவர்ன்மென்ட் சம்பளம் சேரபோகுதுன்னு அமைதியா இருந்துட்டு இப்போ வந்து பேசினா எப்படி..?”
“சரி சரி பேச்சை குறைச்சிட்டு வேலையை பாரு போட்டது போட்டபடி இருக்கு” என்றபடியே வண்டியில் இருந்து இறங்கிய சகுந்தலா கேட்டை திறந்து சென்றார். கர்ணா வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு மாட்டை பிடித்து சென்றான்.
வீட்டினுள் நுழையாமல் வாசலிலேயே நின்ற சகுந்தலா கைப்பையை திண்ணையில் வைத்தவாறே, “ஏன்டி வீணா போனவளே எங்க இருக்க..?” என்று ஆர்பாட்டமாக குரல் கொடுத்தார்.
மாமியாரின் குரல் மூடியிருந்த அவளறை கதவை உடைத்து ஊடுருவ, “இதோ வந்துட்டேன் அத்தை” என்று குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்த அவர்களின் மூத்த மருமகள் வீணா வாரி சுருட்டி கொண்டு அவர் முன் வந்து நின்றாள். வீணா அவருக்கு மருமகள் என்று சொல்வதைவிட சகுந்தலாவிற்கு வாய்த்த அடிமை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
“சொல்லுங்கத்தை”
“என்னத்தை சொல்ல..? ஏன்டி உன்கிட்ட நான் வெஜிடபிள் பிரியாணி செய்ய சொன்னா நீ புளியோதரை கிண்டி கொடுத்திருக்க.. என்னடி நெனச்சிட்டிருக்க உன் இஷ்டத்துக்கு சமைக்க இதென்னா உங்கப்பன் வீடா..? இல்ல அவன் கோடி கோடியா கொட்டி கொடுத்துல செய்யபோறியா..?” என்று வந்ததும் வராததுமாக அவளை தாளித்து கொட்ட தொடங்கினார்.
“அத்தை நைட் இருந்தே குழந்தைக்கு லைட்டா காய்ச்சல் அவன் என்னை கை விடவேயில்ல.., சமைக்க போன போதும் அப்படியே தான்!! அதான் பிள்ளையை ஒருகையில சமாளிச்சுட்டே உங்களுக்காக அவசரமாக புளியோதரை செய்தேன். மன்னிச்சிருங்க த்தை இனி நீங்க சொல்றமாதிரியே செய்திடுறேன்” என்றவள் மாமியாரின் முகம் பார்த்தாள்.
இராமநாதன் சகுந்தலாவின் மூத்த மகன் வேலன் இருபத்தைந்தை கடக்கவும் பெற்றோர் பெண் பார்க்கும் படலத்தில் இறங்கினர்.. ஆனால் அதிக படிப்பில்லாததாலும் நிலையில்லாத வேலை என்பதாலும் அத்தனை எளிதாக பெண் கிடைக்கவில்லை. அப்போது சிங்கப்பூரில் இருந்து இராமநாதனின் தங்கை மற்றும் அவர் மகள் அண்ணன் வீட்டிற்கு வந்திருக்க வேலனுக்கோ அத்தை பெண் சுசீலா மீது காதல் பிறந்தது.
ஆனால் சுசீலா அவனை மணம் புரிய மறுக்கவும் தந்தையிடம் வழக்காடி தனக்கென ஒரு வாழை மண்டியை அமைத்து கொண்டான். அதன்பின் இரு வருடங்களை கடந்தும் சரியாக எந்த பெண்ணும் அமையவில்லை அதேநேரம் சிங்கப்பூரில் இருந்து சுசீலாவிற்கு இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் என்ற செய்தி வந்து சேர்ந்தது.
தன்னை மறுத்தவளுக்கு முன்பு அவன் திருமணம் நடக்க வேண்டும் என்ற பிடிவாதத்துடன் வசதியில் குறைந்த சொல்ல போனால் தரகரின் பெண்ணான வீணாவை அவசரமாக திருமணம் செய்துகொண்டான். தங்களுக்கு ஏற்ற இடம் இல்லை, பெரிய மருமகள் பெரிதாக சீர் கொண்டு வரவில்லை என்ற குறை இன்றுவரை சகுந்தலாவிற்கு உண்டு அதனாலேயே அவளை சம்பளம் இல்லாத வேலைக்காரி ஆக்கியதோடு சமயம் கிடைக்கும் போது எல்லாம் அவளை குத்தி கிழித்துவிடுவார்.
இரவு பெரிய மகன் வரவும் மருமகளை சமையலறையினுள் முடக்கியவர் மகனுக்கு தானே பக்கம் இருந்து பரிமாறினார்.
“ஏன் எனக்கு வேற வேலை இல்லையா..? அதான் வீட்டோட ஒருத்தனுக்கு தண்டமா படி அளக்கறீங்களே அவன்கிட்ட சொல்ல வேண்டியதுதானே..”
“இல்லப்பா அவன் பொறுப்பா செய்யமாட்டான், இதே உன்கிட்ட கொடுத்தா எடுத்துகட்டி எல்லாமே சிறப்பா செய்வ. நாங்களும் விசேஷத்தப்போ எந்த பயமும் பதட்டமும் இல்லாம நிம்மதியா இருப்போம்..”
“அதானே பார்த்தேன்! எங்க இருபத்தி அஞ்சாயிரத்தை கொடுத்தா அவன் முழுங்கி ஏப்பம் விட்டுடுவானோன்னு என்னை தேடி வந்திருக்கீங்க.. ஏன் இதே அஞ்சு லட்சத்தை சுளையா தூக்கி கொடுக்கும் போது என்னை கேட்டா கொடுத்தீங்க? இப்போ மட்டும் என்ன..?” என்று இரக்கமே இல்லாமல் கேட்டு வைக்க,
“வேலா எப்படி நீ முன்ன நின்னு இந்த வீட்டு வேலையை நல்லபடியா செய்து கொடுத்தியோ அதேபோல கிரகபிரவேசமும் கௌரவமா செய்து கொடுத்துடுப்பா. அந்த மனுஷனை பற்றி உனக்கே தெரியும், பேருக்கு தான் ஹெட்மாஸ்டர் ஆனா எதையும் எடுத்து கட்டி செய்ய தெரியாது, நாள் பொழுது சாயகூடாது பாட்டிலை தவிர வேற எதுவும் கண்ணுக்கு தெரியாது… எனக்கு கட்டினதும் சரியில்ல பிறந்ததும் சரியில்ல. ஏதோ புண்ணியம் பண்ணி இருக்க போய் உன்னை பெத்தெடுத்தேன் நீ தான்யா என் குலசாமி..” என்று கண்களில் நீர் கசிய மகனை தூக்கி வைக்க சத்தமே இல்லாமல் சமையலறை வாசலில் நின்று இதை எல்லாம் கவனித்து கொண்டிருந்தாள் வீணா.
“சரி சரி கண்ணை துடை இந்த இருபத்தி ஐந்தாயிரம் மட்டுமில்ல கிரகபிரவேசம் முடியும் வரை செலவு மொத்தமும் நானே செய்யறேன் ஆனா அதுக்கு முன்ன எனக்கு ஐந்து லட்சம் கையில கொடுத்தடனும் ஒவ்வொன்னுத்துக்கும் உங்ககிட்ட விளக்கம் சொல்லி கையேந்தி நிற்க முடியாது புரிஞ்சதா..?”
“ஐந்து லட்சமா..?” என்று சகுந்தலா வாயை பிளக்க..
“எந்த காலத்துல இருக்க நீ? விலைவாசி எல்லாம் ராக்கெட் வேகத்துல எகிறுது டீச்சரா இருக்கியே தவிர நாட்டு நடப்பு எதுவும் தெரியலை இன்னும் அந்த காலத்துலேயே இரு… காலையில மதியம் சாப்பாட்டுக்கு ஒரு லட்சம் குறையாம ஆகும்… அப்புறம் பூசாரிக்கு தட்சணை, மேஸ்திரிக்கு தட்சணை, கார்பெண்டர்ல இருந்து டெயில்ஸ் ஒட்ட வந்தவன் வரை எல்லாருக்கும் துணி வாங்கி கொடுக்கணும்..”
“நிஜத்தை சொல்றேன்! அந்த காலம் மாதிரியா? பூசாரி எல்லாம் ரொம்ப காஸ்ட்லி ஆகிட்டானுங்க, பலர் வரதே காருல தான் அதுவும் சிலரை நாம போய் பிக்கப் பண்ணனும் தெரியுமா உனக்கு..? கணபதி ஹோமத்துக்கு இப்போல்லாம் யாரும் பத்தாயிரத்துக்கு கம்மியா செய்யறது இல்ல பூமாலை, பந்தல், வாழைமரம், சமையல் சாமானம், வாழையிலை, தண்ணி பாட்டில், ஃபோட்டோகிராபர் லொட்டு லொசுக்குன்னு எவ்ளோ இருக்கு..” என்று அவன் அடுக்கி கொண்டே செல்ல, சகுந்தலாவிற்கோ தலை சுற்றாத குறைதான்..
பின்னே கிரகபிரவேசத்தை குறைந்தபட்சம் ஒன்றரை லட்சத்தில் முடித்துவிடலாம் என்று அவர் நினைத்திருக்கு மகனோ மும்மடங்காக கணக்கு சொல்லவும் ஜீரணிக்க முடியவில்லை.
“என்ன சொல்லு உன் திறமை மத்தவங்களுக்கு வருமா? இதே நீயின்னா ஐந்து லட்சத்துக்குள்ள முடிச்சிடுவ”
“ம்ம் அதுக்குள்ளே முடிக்க பார்க்கிறேன் இல்ல எப்பவும் போல என் கை காசை போட்டு தான் செய்யணும்.. ஏற்கனவே இந்த வீட்டுக்கு உங்களுக்கு கடனா கொடுத்தது இல்லாம என் பங்கு பத்து லட்சம் போட்டிருக்கேன் நியாபகம் இருக்கட்டும்” என்றவன்,
“ஸ்ஹப்பாஆ உங்களுக்கு எல்லாம் விளக்கம் சொல்லியே நான் விளங்காம போயிடுவேன் போல. அலைஞ்சு திரிஞ்சுட்டு வீட்டுக்கு வந்தா நிம்மதியா சாப்பிட கூட முடியலை பேசியே உயிரை எடுக்குறீங்க.. ஏன்டா இந்த வீட்ல மூத்த பிள்ளையா பிறந்தோம்னு இருக்கு உங்களுக்கு கப்பம் கட்டியே நான் சேர்த்து வச்ச காசெல்லாம் கறைஞ்சிடும்..” என்று நெற்றியை பிடித்து கொண்டவன் ‘இன்னும் கிளம்பலையா ?’ என்பதாக தாயை பார்த்தவன்,
“ஆவி போக கத்திட்டிருக்கேன், எங்க அவ..?” என்று கண்களை சுழன்றினான்.
“யாரு ராஜா..?”
“வேற யாரை கேட்க போறேன்..? அதான் கிடைச்சது சாக்குன்னு ஒரு வீணா போனவளை என் தலையில் கட்டிவச்சு என் வாழ்க்கையை வீணடிச்சீங்களே அவளைதான் கேட்கிறேன்.. ப்ச் எனக்கு சோறு போடகூட முடியாதளவு என்னத்தை வெட்டி முறிக்கிறா..?”
“அடியேய் எங்கடி போன..?” என்றதும் தான் தாமதம் “இதோ வந்துட்டேங்க..” என்று கழுவி கொண்டிருந்த பாத்திரத்தோடு வீணா அங்கே வந்து சேர்ந்தாள்.
“ஏன்டி இங்க ஒருத்தன் காட்டு கத்தா கத்திட்டு இருக்கேனே உள்ள என்ன கழட்டிட்டு இருக்க..?” என்று உறுமினான்.
“இல்லைங்க நீங்களும் அத்தையும் பேசும் போது குறுக்க வரக்கூடாதுன்னு தான் அமைதியா இருந்தேன் இதோ நீங்க கூப்பிட்டதும் வந்துட்டேனே…” என்று அவள் பரிதாபமாக பார்த்தாள்.
“நல்லா வந்து கிழிச்ச..” என்று கண்களை உருட்டியவன் “போ போய் முதல்ல ஒரு காபி போட்டு எடுத்துட்டு வா.. இவ்ளோ நேரம் பதில் சொல்லி தலைவலியே வந்துடுச்சு இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தா என் ஆவி போயிரும்” என்றவன் தன் அறைக்கு சென்று கதவை சாற்றி கொண்டான்.
***********************
மேலும் இருநாட்கள் கழிந்த நிலையில் இராமநாதனின் மகள்கள் அனைவரும் கிரகபிரவேசத்தை முன்னிட்டு அவர் வீட்டில் ஒன்று கூடி இருந்தனர். மிக ரம்மியமான மாலைப்பொழுதில் இராமநாதனின் வீடே பேரன் பேத்திகளின் ஓட்டத்திலும் சிரிப்பிலும் நிறைத்திருந்தது.
“மாமா! மாமா! சீக்கிரம் இங்க வா…” என்ற குழந்தைகளின் அலறல் தோட்டத்தில் இருந்து கேட்கவும், மும்முரமாக அன்றைய பைனான்ஸ் பணத்தை எண்ணிக் கொண்டிருந்த சக்திவேலனை அழைத்தாள் வீணா. வேலன் பணம் எண்ணி கொண்டிருக்கும் போது கட்டிய மனைவியாகவே இருந்தாலும் யாருமே அவன் அறைக்குள் நுழையகூடாது என்பது அவன் விதித்திருந்த சட்டம் அதையும் மீறி உள்ளே நுழைந்தவள் பதட்டத்துடன்,
“என்னங்க, என்னங்க, ஏதோ அவசரம் போல குழந்தைங்க கத்திட்டு இருக்காங்க போய் என்னன்னு கேளுங்க” என்று கூறியது தான் தாமதம் சட்டென பணத்தை மெத்தையில் போட்டுவிட்டு எழுந்து நின்றவன்,
“ஏன்டி வீணா போனவளே எத்தனை முறை சொல்லி இருப்பேன் பணத்தை எண்ணும் போது உள்ள வராதன்னு வந்ததும் இல்லாம கதவை வேற தொறந்து வச்சிருக்க உன்னை…” என்று பற்களை கடித்துக்கொண்டு சீறியவன்,
“அப்படி என்னடி தலை போற காரியம் முதல்ல கதவை சாத்திட்டு வந்து பேசு” என்று கட்டளை இட, அவன் கோபத்தில் மிரண்ட வீணாவும் கதவை சாற்றிவிட்டு வந்தவர், “ஏங்க குழந்தைங்க பதறி போய் கூப்பிடுறாங்க அதான் சொல்ல வந்தேன்” என்றவளின் குரல் இப்போது இறங்கி இருந்தது.
“அந்த குட்டிசாத்தானுங்க என்னை கூப்பிட்டு இருக்காதுங்க… அந்த வீணா போனவன தான் கூப்பிட்டு இருக்குங்க அது தெரியாம பெருசா பேச வந்துட்டா…, இங்க எவ்ளோ முக்கியமான வேலையில இருக்கேன் அதை விட்டுட்டு கொழுப்பெடுத்து போய் சுத்துறதுங்களை நான் போய் பார்க்கணுமாம் போடி.., போ முதல்ல கதவை சாத்திட்டு வெளியே போய் தொலைடி ..!!” என்று சினந்தவன் மீண்டும் பணத்தை எண்ண தொடங்கினான்.
சில நொடிகள் கணவனை வெறுமையாக பார்த்து நின்ற வீணா பின் கையில் இருந்த மூன்று மாத குழந்தையை தட்டி கொடுத்தபடி வெளியேறினாள்.
அதற்குள் குழந்தைகளின் சப்தம் கேட்டு ஓடி வந்த கர்ணா தோட்டத்தில் அவர்களை அச்சுறுத்திய பாம்பை அடித்து போட்டுவிட்டு கைகால் கழுவிக்கொண்டு வந்தவன் சகுந்தலாவிடம், “ம்மா பசிக்குது சாப்பாடு போடு” என்றான்.
“என்ன அதுக்குள்ள சாப்பிட உக்காந்துட்ட, போடா போய் நேத்து அடிச்ச காத்துல சாய்ஞ்சிருக்க மரத்தை எல்லாம் வெட்டி போடு அடுப்புக்கு ஆகும்”
“ம்மா மரம் ஈரமா இருக்கு கொஞ்ச நாள் ஆகட்டும்” என்று கர்ணா கூற அதற்குள் அவன் தமக்கை ஜெயா, “டேய் கர்ணா உங்க மாமாக்கு நம்ம தோப்பு இளநீர் தான் சளி பிடிக்கிறது இல்லை அதனால வரும்போது ஒரு பத்து காயை சீவி எடுத்துட்டு வாடா” என்றாள்.
அவளுக்கு சரி என்று தலை அசைத்தவன், “ம்மா சாப்பாடு போடும்மா” என்று மீண்டும் கேட்க,
“ஈரமா இருந்தா என்ன…? அது பொதுவுல இருக்க மரம் நீ ஆற அமர தின்னு முடிச்சுட்டு போறதுக்குள்ள எவனாவது லவுட்டிட்டு போயிட்டானா என்ன பண்றது போ, முதல்ல சொன்னதை செய்” என்று மகனை துரத்தினார்.
“டேய் வெறும் வயித்தோட போகாத இருடா சாப்பிட்டு போவ” என்ற பாரதி சமையலறைக்கு சென்று தம்பியை சாப்பிட கூட விடாமல் துரத்தும் தாயை கடிந்து விட்டு, வேண்டியதை போட்டு கொண்டு தண்ணீர் சொம்போடு வெளியில் வந்தவள் தம்பியை சாப்பிட வைத்த பின்பே அனுப்பி வைத்தாள்.
அன்று ஞாயிறு என்பதால் மகள்களின் வரவில் வழக்கம் போல இராமநாதன் அதிகாலையே சென்று ஆட்டுக்கறி, தலைகறி, ஈரல் என்று அனைத்து வகை இறைச்சியும் வாங்கி வந்துவிட்டார்.
வீணா இந்த வீட்டிற்கு மருமகளாக வரும் முன்பு வரையில் சகுந்தலா செய்து கொண்டிருந்த ஒரே வேலை சமையல் தான். அதுவும் உடன் பணி புரியும் ஆசிரியர்களின் பாராட்டுக்களை பெறுவதற்காக சிரமம் பார்க்காமல் செய்வார். ஆனால் வீணா வந்த பிறகு இப்போது அதுவும் அவள் பொறுப்பு என்றாகி விட்டதில் வீட்டிற்கு வந்த பின் அவளை அதிகாரம் செய்வதை மட்டுமே முழு நேர வேலையாக கொண்டிருப்பவர்.
அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வீட்டு வேலைகளை தொடங்கும் வீணா மாமியாரின் ருசிக்கு ஏற்ப சமைப்பதற்கு இங்கு வந்த ஒரே மாதத்தில் கற்று கொண்டாள். பின்னே லட்ச லட்சமாக சீர் சினத்தியும் நகை நட்டும் கொண்டு வராதவள் பெரிய பின்புலம் இல்லாதவள் குறைந்த பட்சம் இதைகூட செய்யாமல் போனால் எப்படி..?
“வீணா… ஏய் வீணா போனவளே எங்கடி இருக்க” என்று உரக்க கத்தியவாறே இஞ்சி பூண்டை அரைத்து கொண்டிருந்தவளிடம் வந்து நின்றான் வேலன்.
“என்னங்க என்னாச்சு..? குழந்தை முழிச்சுட்டானா..?” என்று பதற அவனோ மிக்சியின் சுவிட்சை அணைத்து,
“ஏன்டி எத்தனை முறை இந்த குட்டி சாத்தானுங்க வரும் போது கதவை சாத்தி வைன்னு சொல்லியிருப்பேன்…, மனுஷனை நிம்மதியா தூங்ககூட விடமாட்டேங்குதுங்க” என்று கத்தவும்,
“எதுக்குங்க இப்ப கத்தறீங்க..? என்ன ஆச்சு பொறுமையா சொல்..” என்று அவள் முடிக்கும் முன்னமே..,
“ராஜா என்னப்பா ஆச்சு..?” என்றவாறு அங்கு வந்து சேர்ந்தார் சகுந்தலா.
“என்ன என்னப்பா ..?” என்று பாரபட்சமே இல்லாமல் தாயிடமும் எரிந்து விழுந்தான்.
மகனின் கோபத்தை நன்கு அறிந்திருந்த சகுந்தலா உடனே எதிரே இருந்த வீணாவிடம் “கட்டிட்டு வந்து ஒன்றரை வருஷம் ஆச்சு இன்னும் புருஷனுக்கு ஏத்த மாதிரி நடந்துக்க துப்பில்லை, பேச்சு மட்டும் நீளும் இவளுக்கு.. வெளியே கிளம்பற ஆம்பளையை நல்லபடியா வழியனுப்ப தெரியலை இவளை கட்டிக்கிட்டு வந்ததுல இருந்தே…” என்று என்னவென்று தெரியாமல் வழக்கம் போல மருமகளை வசைபாட தொடங்கியவர் இறுதியாக, “சம்பாதிக்கிற பிள்ளையை நிம்மதியா இருக்க விடாம என்னடி பண்ணி தொலைச்ச..?” என்று முறைத்தார்.
“உன் உளறலை கொஞ்சம் நிறுத்துறியா…?” என்று தாயிடம் கடிந்தவன்,
“இங்க பாரு” என்று தன் கையில் இருந்த ஃபோனை வீணாவிடம் காண்பிக்க அதுவோ ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக அவன் கையில் கிடந்தது.
“ஏங்க நீங்க கொடுத்ததும் நான் சார்ஜர்ல போட்டுட்டு டேபிள் மேல வச்சிட்டு தான் வந்தேன், அப்புறம் எப்படிங்க இப்படி..?”
“ஏய் சார்ஜர்ல போட்டவளுக்கு கதவை சாத்திட்டு போக தெரியாதாடி, எத்தனை முறை சொல்றது இதென்ன உங்கப்பன் வீட்டுல இருந்து வந்த சீரா எல்லாம் என் உழைப்பு.. நாய் பாடுபட்டு சம்பாதிச்சா அதை ஒழிக்கன்னே வந்து சேர்ந்திருக்க” என்று வேலன் கையை ஓங்கி கொண்டு வர, வீணாவோ விழிகளில் மிரட்சியுடன் இரண்டடி பின்னே நகர்ந்தாள்.
சகுந்தலா கை ஓங்கிய மகனை தடுக்காமல் மருமகளை முறைத்து கொண்டு நின்றிருந்தார்.
“என்னங்க மன்னிச்சிடுங்க இனி கதவை சாத்தி வைக்கிறேன் பசங்களையும் அந்த பக்கம் வராம பார்த்துக்குறேன்” என்ற அதே நேரம் குழந்தை அழவும் ஓங்கிய கையை இறக்கியவன்,
“எந்த பிசாசு வந்ததுன்னு தெரியலை சார்ஜர்ல இருந்த ஃபோனை எடுத்து கீழ போட்டு உடைச்சிட்டு ஓடிடுச்சிங்க .இது தான்டி கடைசி இன்னொரு முறை இப்படி நடந்தது அடிச்சு மூஞ்சியை உடைச்சிடுவேன், போ போய் குழந்தையை பாரு” என்று அவளை எச்சரித்து அனுப்பியவன் சகுந்தலா புறம் திரும்பி,
“இந்த பிசாசுங்களை இன்னொருமுறை கூட்டிட்டு வரக்கூடாதுன்னு உன் பொண்ணுங்க கிட்ட சொல்லி வை..”, என்றவன் “விடியலே மோசமா இருக்கு இன்னைக்கு பொழப்பு விளங்கின மாதிரிதான்” என்று சிடுசிடுத்தவாறு அங்கிருந்து கிளம்பினான்.
***********************
“வீணா இன்னும் என்ன பண்ற சீக்கிரம் கறியை கழுவி எடுத்துட்டு வா” என்ற ஜெயா வீட்டின் இடப்புறம் இருந்த காலி இடத்தில அமைக்கபட்டிருந்த மண் அடுப்பில் விறகுவைத்து தீ மூட்டி ஒன்றில் செட்டியை வைத்து தலைக்கறியை உப்பு மஞ்சள் போட்டு வேக வைத்தார்.
மற்றொரு அடுப்பில் ஈரல் குழம்பிற்கான மசாலாவை சேர்த்து விட்டு வதக்க தொடங்க அருகே இருந்த பாரதியோ மூன்றாவது அடுப்பில் இட்லி பாத்திரத்தை ஏற்றி தட்டுகளில் மாவு ஊற்றி வைத்து கொண்டிருந்தார்.
காலை உணவிற்கு வந்த வேலன், “என்னக்கா, சமையல் ஆச்சா? இல்லையா?” என்று ஒருவித எரிச்சலோடு கேட்கவும், கைகளை துடைத்தவாறே உடனே எழுந்து நின்ற ஜெயா ஆசிரியரின் கேள்விக்கு பதிலளிக்கும் மாணவி போல மிக மெல்லிய குரலில், “இதோ தம்பி குழம்புக்கு தேங்காய் அரைச்சு ஊத்தினா முடிஞ்சிடும்… இட்லி இறக்க வேண்டியதுதான் பாக்கி” என்று பவ்யமாக கூறியவர் இட்லி பாத்திரத்தை திறந்து வெந்து விட்டதா? என்று பார்த்தார்.
“அதுக்கெல்லாம் நேரமில்ல நீ போட்டு வச்சிட்டு சொல்லு வரேன்” என்று அங்கிருந்து கிளம்பினான்.
மடமடவென்று வேலையை முடித்தவர் தன் மகளை அழைத்து “பெரிய மாமாவை சாப்பிட கூப்ட்டேன்னு சொல்லு” என்றவர் தட்டில் ஐந்து இட்லியை வைத்து, ஈரல் குழம்பை ஊற்றி தண்ணீர் செம்போடு சென்றவர் அதே பணிவோடு தம்பியின் முன் வைத்தார்.
“வேற எதுவும் வேணும்னா ஒரு குரல் கொடு தம்பி நான் வரேன்” என்றவளை ஒரு ஆளாகவே மதிக்காத வேலன் தன் போக்கில் உணவில் கவனம் செலுத்தி இருந்தான்.
உள்ளே செல்லவிருந்த ஜெயா போகும் போது பாரதியிடம், “ஈரலை உப்பு மிளகா தடவி கம்பில கோர்த்து வெச்சிருக்கேன் பாரு அத அடுப்புல வை நான் அப்பாவை கூட்டிட்டு வரேன்.. தம்பிக்கு சாப்பிட உட்காந்தாச்சு என்ன தேவைன்னு பார்த்து செய்” என்றுவிட்டு சென்றார்.
குழந்தைகளோடு காலை உடற்பயிற்சியை முடித்துவிட்டு அவர்களோடு கிணற்றில் ஒரு குளியல் போட்டுவிட்டு வந்த கர்ணா, “க்கா, குழம்பு ஆகிடுச்சா எங்க எல்லாருக்கும் செம பசி சீக்கிரம் போடு” என்றான்.
“எடுத்துட்டு வரேண்டா ஆனா நீ இங்கயே உட்காரனும் எழுந்து எங்கயாவது ஓடின பிச்சி போடுவேன் பிச்சி !!” என்று அவனோடு சேர்த்து அனைவரையும் அங்கேயே இருக்க செய்து தோட்டத்திற்கு சென்று ஆளுயரத்திற்கு பெரியதாக வாழை இலை எடுத்து வந்தான்.
அதை கண்ட குழந்தைகள் குதூகலித்து கூச்சலிட சாப்பிட்டுக்கொண்டிருந்த வேலனோ எரிச்சல் அடைந்தவனாக.. “டேய் வாயை மூடுங்க டா..!! எப்பபாரு கழுதை மாதிரி கத்திக்கிட்டு நிம்மதியா சாப்பிட விடுதுங்களா பிசாசுங்க” என்று திட்டவும்,
“என்னடா சொன்ன..?” என்று அவன் முன் வந்து நின்றார் பாரதி,
“குழந்தைங்கன்னா அப்படி தான் இருப்பாங்க அதுக்காக என்னானாலும் பேசுவியா நீ..? உனக்கு இடைஞ்சலா இருந்தா நீ உள்ள போய் உட்காருடா” என்று பாரதியும் எச்சரிக்க,
“வித்துட்ட மாடு நீயெல்லாம் இங்க அதிகாரம் பண்ணகூடாது அம்மா வீட்டுக்கு வந்தோமா ரெண்டு வாய் சாப்ட்டோமா, நாலு பை மூட்டை கட்டினோமான்னு போயிகிட்டே இருக்கணும்”
“என்னடா சொன்ன..?” என்று பாரதி சினக்கவும்,
“நிஜத்தை சொன்னேன்.. இன்னைக்கு இதுங்களால எனக்கு பதினஞ்சாயிரம் ரூபாய் நஷ்டம்..!! எண்ணி எடுத்து வை நான் பேசலை” என்ற தம்பியிடம்,
“என்னடா பேசுற காசு தான் எல்லாமா..?”
“ஆமா காசு தான் எல்லாம் இப்போ அதுக்கு என்னங்கிற..?”
“டேய் குழந்தைங்கடா அவங்களுக்கு என்ன தெரியும் எதோ விளையாடும் போது விழுந்திருக்கும் அதுக்கு இத்தனை பேசுவியா நீ..? வேலா உனக்கும் ஒன்னு இருக்கு அதை மறந்துடாத..”
“என் புள்ளைக்கும் இதேதான் சொல்லுவேன்”
“உன்னை எல்லாம் திருத்தவே முடியாது” என்ற பாரதி வேதனையுடன் அங்கிருந்து நகர்ந்தார்.
இன்னும் குழந்தைகளின் கூச்சல் குறையாது போக, “ஏய் இப்போ வாயை மூடலை மொத்த பேரையும் மரத்துல கட்டி வச்சு தவக்களையை பிடிச்சு ட்ரவுசர்ல விட்டுடுவேன்” என்று மிரட்ட குழந்தைகள் கப்சிப் ஆகினர்.
“ச்சை எந்நேரமும் கத்திட்டு நிம்மதியா சாப்பிடக்கூட விடமாட்டேங்குதுங்க இதுங்க வரலைன்னு இங்க யார் அழுதா இம்சைங்க” என்று கத்தியவாறே சாப்பிட்டு முடித்து கிளம்பினான் வேலன்.
கர்ணா வாழை இலையை கழுவி அவர்கள் முன் வைக்க பாரதி அனைவருக்கும் மொத்தமாக ஒரே இலையில் பரிமாறினார்.
இது கர்ணா ஏற்படுத்திய வழக்கம்.
இங்கு வரும்போது எல்லாம் அனைவரும் ஒன்றாக ஒரே இலையில் அமர்ந்து உண்ணும் போது போட்டி போட்டுகொண்டு சாப்பிடும் குழந்தைகள் குதூகலத்தில் வழக்கத்திருக்கு அதிகமாகாவே உண்பர். ஆனால் மித்ரன் மட்டும் உண்ணாமல் ஓடிக்கொண்டே இருக்க கர்ணா அவனை பிடித்து மிரட்டி முதலில் குழந்தைக்கு ஊட்டிவிட்டவன் பிள்ளைகள் அனைவரும் உண்ட பின்பே அவன் சாப்பிட ஆரம்பித்தான்.
“ஏன்டா!! பசங்களே சாப்பிட்டு முடிச்சிடுச்சுங்க இன்னும் நீ முடிக்கலயா? தீனிப்பண்டாரம்… எங்களுக்கு ஏதாவது மிச்சம் வெச்சிருக்கியா இல்ல வழிச்சு முழுங்கிட்டியா?” என்று ஜெயா கேட்கவும் வாயருகே கொண்டு சென்ற இட்லியை தட்டில் போட்டுவிட்டு கை கழுவியவன் வெளியே கிளம்பிவிட்டான்.
“ஒத்த பைசாக்கு பிரயோஜனம் இல்லைனாலும் இந்த வெட்டி ரோஷத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல” என்று ஜெயா நொடித்துவிட்டு செல்ல மித்ரனின் கை, வாய் கழுவி விட்டு வெளியில் வந்த பாரதி இலையில் சாப்பாடு அப்படியே இருப்பதையும் தம்பி அங்கு இல்லாததையும் கண்டவள் , “க்கா கர்ணா எங்க…? சாப்பிடாம எங்க போயிட்டான்..?” என்றாள்.
“எனக்கு என்ன தெரியும்..? நானே இப்போ தான் வந்தேன்.., அப்பாவை சாப்பிட கூப்பிட்டா அவர் மேலயே எடுத்துட்டு வர சொல்லிட்டார். நான் எங்க ரெண்டு பேருக்கும் கொண்டு போறேன் நீயும் அம்மாவும் சாப்பிடுங்க” என்றவாறே அனைத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.
சில அடிகள் சென்றவர் திடீரென ஞாபகம் வந்தவராய் , “தம்பிக்கு அஞ்சு இட்லி தான் வெச்சேன் முழுசா சாப்பிட்டானா? வேலை வேலைன்னு ஓட்டமா இருக்கவன் தன்னை கவனிக்கிறதே இல்லை.. வர வர இளைச்சுட்டே போறான் அவனை ஒழுங்கா கவனிச்சியா இல்லை அவசரத்துல எப்பவும் போல அப்படியே கிளம்பிட்டானா..?” என்று வேலனை விசாரிக்கவும்,
“அதெல்லாம் ரொம்ப திவ்யமாவே ஆச்சு நீ போட்டு கொடுத்த எல்லாத்தையும் முழுசா முழுங்கிட்டு தான் போனான்” என்றவள் கிழே கிடந்த இலையை அப்புறப்படுத்தி தாயை தேடி சென்றாள்.