மது தன்னை அடிப்பாள் என்று எதிர்பாராத ரகு தீயென எரிந்த கன்னத்தை பிடித்துக்கொண்டு அவளை உணர்வற்று பார்த்திருந்தான்.
“என்ன பண்ற ரகு நீ..?” என்று ஷால் கொண்டு அவசரமாக தன் இதழை அழுத்தமாக துடைத்தவள் அப்போது தான் தன் வலக்கரத்தில் சுரீர் என்ற வலி பரவவும் அவனை அடித்ததை உணர்ந்தாள். கன்னத்தை அழுத்தி பிடித்தவாறு அவளையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த ரகுவின் பார்வையில் சற்று தடுமாறியவள் அதன் பொருள் புரியாமல் திகைத்து விழித்தாள்.
நிசப்தம் ஆட்சி செய்ய கண்கள் கலங்க ரகுவையே இமை மூடாது பார்த்து கொண்டிருந்தவளுக்கு வார்த்தை வரவில்லை. பின்னே அவனிடம் அவள் எதிர்பார்த்தது என்ன? அவன் நடந்து கொண்ட முறை என்ன..? நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை.
அண்ணிகளின் வரவிற்கு முன் எப்போதும் தன் தந்தை மற்றும் அண்ணன்களின் அரவணைப்பிலும் அன்பிலும் திளைத்த மதுவுக்கு எப்போது மனம் கனத்தாலும், சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் அண்ணன்கள் அல்லது தந்தையின் தோள் தேடி சாய்ந்து ஆறுதல் அடைவது வழக்கம். ஆனால் இப்போது அவர்களை நெருங்க முடியாமல் போனவளின் பற்றுகோலே ரகு மட்டும் தான்… இன்றும் அதுபோல தன் துயர் தீர்க்க அழுத்தம் தாளாமல் அவனிடம் அடைக்கலம் புகுந்தவளிடம் அவன் செயல் நியாயம் அற்றதாகவே தோன்றியது மதுவுக்கு.
அவள் அடித்ததற்கு அவன் ஏதேனும் திட்டி இருந்தால் கூட அவள் விளக்கம் கொடுத்து அவனை சமாதானம் செய்ய முற்படலாம். ஆனால் அவனின் ஆழ்ந்த பார்வையும் மௌனமும் அவள் மனதை நிலை கொள்ளாமல் தவிக்க செய்தது.
எண்ணத்திற்கு ஏது கடிவாளம்? அது தறிகெட்டு எதை எதையோ யோசிக்க ஆரம்பித்தது.
அவன் செயலை ஏற்க முடியாத ஒரு மனம் அவன் நடந்து கொண்டது இதுநாள் வரை தான் கற்றுவந்த ஒழுக்க நெறிகளுக்கு புறம்பானது என்று வாதிட ஆரம்பித்தது மற்றொரு மனமோ அன்று அவன் கூறியது போல இது தன்னிடம் அவனுக்கான உரிமை தானே பிறகு ஏன் கோபம் என்று கேள்வி கேட்க தொடங்கிவிட்டது. உடனே காரை விட்டு வெளியேறி தலையை இருக்கரங்களாலும் பிடித்துக்கொண்டு அருகிருந்த கல் மீது அமர்ந்துவிட்டாள்.
காரில் அமர்ந்திருந்தவனின் மனமோ உலைக்கலமென கொதித்து கொண்டிருந்தது. நிச்சயமாக அவள் அறைவாள் என்று ரகு எதிர்பார்க்கவில்லை, அதிகபட்சம் தன்னை விலக்குவாள் அப்படி அவள் செய்தால் அதையும் தன்னால் அடக்கி விடமுடியும் என்று எண்ணினான். அவள் இளகி இருக்கும் இத்தருணமே தன்னை அவளிடம் ஆழமாய் பதிய வைப்பதற்கான சிறந்த வாய்ப்பு என்று முடிவெடுத்து அவளிதழை உரசினான்.
அதே சமயம் இதுநாள் வரை தன்னை மட்டுமே உலகம் என்று எண்ணி இருந்தவள் பலவீனமான இந்நேரத்தில் எதிர்க்க மாட்டாள் என்று உறுதியாக நம்பினான். ஆனால் மது அவன் நம்பிக்கையை சுக்குநூறாய் உடைத்தெறிந்தாள்.
கட்டுக்கடங்காத ஆத்திரத்தோடு இருந்தவனுக்கு உடனே அவளை பழி தீர்க்கும் எண்ணம் மேலோங்க அதை செயல்படுத்த கார் கதவை திறக்க போனவன் அந்நொடி விழித்துகொண்டான். கதவை திறக்காமல் நிதானித்தவன் வெளியில் முகம் பொத்தி அமர்ந்திருந்தவளை கண்ணெடுக்காமல் வெறித்திருந்தான்.
அவள் குறித்து அவன் போட்ட கணக்குகள் என்ன? இப்போதைய சூழல் என்ன? என்பதை எண்ணி பார்த்தவன் ‘பதறிய காரியம் சிதறி போகும்’ என்பதால் அவளிடம் இழந்த நம்பிக்கையை திரும்ப பெற மதுவை வேறு விதமாக தான் கையாள வேண்டும் என்று முடிவெடுத்து அவளை தேடி சென்றான்.
“வனிக்குட்டி” என்று மதுவின் முன் மண்டியிட்டு அமர்ந்திட அவளோ அவன் முகம் பார்க்காமல் வேறுபுறம் திரும்பினாள்.
“வனிக்குட்டி இங்க பாரு.. இங்க பாரும்மா..” என்று அவள் முகத்தை தன் கரங்களில் ஏந்தவும் அதை தட்டி விட்டவள், “தொடாம பேசுடா..!” என்றாள்.
“சரி.. சரி… நான் தொடலை போதுமா..?” எனவும் கலங்கிய கண்களோடு அமைதியாய் அவனை பார்த்திருந்தாள்.
“மன்னிச்சிடு வனிம்மா இதை தவிர வேற என்ன சொல்றதுன்னு தெரியலை.., நிஜமா இப்படி நடக்கும்னு நானே எதிர்பார்க்கலை உன்கிட்ட எனக்கு உரிமை இருக்குன்னு நானே ஏதேதோ நெனச்சு.. ச்சு அதைவிட உனக்கு பிடிக்காததை நான் செய்திருக்கவே கூடாது ஆனா அழுதுட்டே இருந்த உன்னை சமாதனபடுத்த எனக்கு வேற வழி தெரியலை அதான் அப்படி பண்ணிட்டேன்” என்றதுமே மது அவனை பார்த்த பார்வையில் அத்தனை ரௌத்திரம்.
“என்ன சொன்னாலும் நான் பண்ணினது தப்புன்னு உன் முகத்தை பார்க்கிறப்போ புரியுது ப்ளீஸ் வனிம்மா உன்னோட ரகுவை இந்த ஒருமுறை மன்னிச்சுடு டா ப்ளீஸ்..!! நான் வேணும்னு பண்ணலை என்னை நம்பு நீ கதறி அழுறதை என்னால தாங்கிக்க முடியலை. உன்னை எப்படி சமாதான படுத்துறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன் ஏதோ ஒரு வேகத்துல அப்படி பண்ணிட்டேன் சாரிடா” என்ற போதும் மதுவின் குற்றம் சுமத்தும் பார்வையில் மாற்றம் இல்லை.
“உனக்கு இன்னும் என்மேல கோபம் போகலை தானே வேணும்னா இதோ இந்த கன்னத்துலயும் அடி.. என்னை அடிக்கிற உரிமை என் வனி குட்டிக்கு மட்டும் தான் இருக்கு” என்று அவள் கையை பிடிக்க போக அவளோ அவன் பிடிக்காத வகையில் கையை பின்னால் இழுத்துகொண்டாள்.
“ப்ச் சாரி சாரி இனி கண்டிப்பா எதுக்காகவும் உன்னோட பர்மிஷன் இல்லாம உன்னை தொடமாட்டேன் சாரி வனிம்மா ஆனா நீ அடிச்சது எனக்கு எவ்வளவு பெருமையாய் இருக்கு தெரியுமா…?” என்று கேட்க இத்தனை நேரம் கோபமும் ஆதங்கமும் குறையாமல் இருந்த மது,
‘என்னது..?’ என்று வியந்தாள்.
“ஆமாடா உனக்கு பிடிக்கலைன்னா யாரா இருந்தாலும் தயங்காமல் எதிர்க்கிற பாத்தியா..? அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சொல்லப்போனா அழுது வடியுற வனிகுட்டியை விட இப்படி கோபபடுற வனிகுட்டிய எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றவனின் வார்த்தைகள் பெண்ணவளை சிறிது தளர்த்தி இருந்தது.
சரியாக சொல்ல வேண்டுமானால் ரகுவின் வார்த்தைகள் மது செவிகளில் தேனாய் பாய்ந்திருந்தது.
இருக்காதா பின்னே..? இவ்வளவு நேரமும் சிறுவயதிலிருந்து அவள் கற்று கொண்ட ஒழுக்க நெறிகள் அவள் செயல் நூறு சதவிகிதம் சரியே என்று கூற, மற்றோரு காதல் கொண்ட மனமோ தனக்காக இருக்கும் ஒரே ஜீவனையும் அடித்து துன்புறுத்தி விட்டோமோ என்று பெரிதும் அலைப்புருதல் கொண்டிருந்தது.
இப்போது அவனே அவள் செயல் சரி என்று சொல்லவும் அவள் கோபம் மட்டுப்பட்டது.
“வனிம்மா நான் தான் சொல்றேனே உன் கோபம் போக இந்த கன்னத்துலயும் அடி இல்ல கையாள அடிக்கிறது போதலைன்னு நெனச்சா வேற எதுல அடிக்க நினைக்கிறியோ அதுல அடி… உன்ன கஷ்டபடுத்தினதுக்கு என்னை நீ செருப்பால அடிச்ச கூட தப்பில்லை.. அடி வனிம்மா அடி” என்று அவள் முன் தன் செருப்பை கழற்றி நீட்ட அதை தட்டி விட்ட மது, “என்ன ரகு இது லூசு மாதிரி பண்ணிட்டு இருக்க”
“இல்லடா உன் வீட்ல இருக்கிறவங்க மாதிரி நானும் உன்னை கஷ்டபடுத்திடேனே என்னாலேயே என்னை மன்னிக்க முடியலை” என்று கூற மதுவின் விழிகளில் மீண்டும் கண்ணீர் திரண்டுவிட மெளனமாக அமர்ந்திருந்தாள்.
“ப்ளீஸ் வனிம்மா என்னை செருப்பால கூட அடி ஆனா இப்படி பேசாம இருக்காத என்னால தாங்கிக்க முடியாது” என்ற பின்பே தன் மௌனம் உடைத்தாள் மதுவர்த்தினி.
“உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கலை ரகு..? என் அப்பா அண்ணனுங்க மாதிரி தான் நீயும் எனக்கு சப்போர்ட்டிவா இருப்பன்னு நெனச்சேன் ஆனா நீ இப்படி செய்வன்னு நான் கனவுல கூட நினைச்சி பார்க்கலை டா..! ஏன் இப்படி பண்ணின..?”
“சாரி வனிம்மா நான் தான் சொல்றேனே தெரியாம பண்ணிட்டேன்”
“இல்ல ரகு நீ என்ன சொன்னாலும் என்னால இப்பவும் ஏத்துக்க முடியல”
“சாரிடா வேணும்னு அப்படி பண்ணலை. இப்போ நீ கை எடுக்க சொன்னதும் நான் எடுக்கலயா..? எனக்கு எப்பவும் என் வனிக்குட்டி தான் முக்கியம்” என்றவன் இருகைகளால் தன் காதுகளை பிடித்துக்கொண்டு அவள் முன் சாரி என்றவாறு தோப்புக்கரணம் போட ஆரம்பித்தான்.
நடுரோட்டில் அவனின் செய்கையில் சிரிப்பு வர அதை மறைத்தவாறு அமர்ந்திருந்தவள் அவன் இருபத்தியெட்டு என்று எண்ணிக்கொண்டே கீழே அமரவும்,
“போதும் போதும் இதெல்லாம் வேண்டாம்… ஆனா இனி இது போல செய்யாதே எனக்கு பிடிக்கலை”
“கண்டிப்பாடா இனி உன் விருப்பம் இல்லாம என் மூச்சு காத்துகூட உன் மேல படாது என்று தள்ளி அமர்ந்தவன்… இப்பவாவது உன்னோட ரகுவை மன்னிச்சிடு ப்ளீஸ்” என்றிட மதுவின் மனம் அவன் செய்கையில் பெரிதும் குளிர்ந்து போனது.
“என்னாலையும் உன்னோட பேசாம இருக்க முடியாது ரகு நிஜமா சொல்லனும்னா இப்போ எனக்குன்னு இருக்குறது நீ மட்டும் தான் உன்னோடும் பேசாம இருந்தேன்னா எனக்கு பைத்தியமே புடிச்சிடும்… ப்ளீஸ் ரகு புரிஞ்சிக்க..!” எனவும் ஆமோதிப்பதாய் தலையசைத்தான்.
மது முகம் கழுவ “ஒரு நிமிஷம்” வனிம்மா என்றவன் உடனே ஓடி சென்று அவளுக்கு மிகவும் பிடித்த பழச்சாறை கொண்டு வந்து அவள் கைகளில் திணித்து அவள் குடித்து முடித்து சகஜமாகவும் வண்டியை எடுத்திருந்தான்.
******************************
கிரகப்ரவேசம் முடிந்த இரண்டாம் நாள் குடும்பத்தினர் அனைவரும் குழுமி இருக்க வேலன் இராமநாதனிடம் செலவு கணக்கை கொடுத்தவன் திட்டமிட்டதற்கு மேல் ஒன்றரை லட்சம் அதிகமாக செலவழிந்துள்ளதாக கூறி பணத்தை எடுத்து வைக்குமாறு கூறி இருந்தான்.
கணக்கை பார்த்தவர் அவனிடம் ஏதோ சந்தேகம் கேட்கவும் “எல்லாம் செய்யற என்னையே கேள்வி கேளுங்க அழிக்கவே பிறந்திருக்க அவனை எதுவும் கேட்டுடாதீங்க” என்று அவர் கேட்ட கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் பேச ஆரம்பித்து சலங்கை கட்டாத குறையாக ஒரு மூச்சு ஆடி தீர்த்துவிட்டான்.
அவன் சீற்றத்தில் சுற்றி இருந்தவர்கள் எதுவும் பேச முடியாமல் மெளனமாக அவனையே பார்த்திருந்தனர்.
அரை மணி நேரத்திற்கு நீண்ட அவன் பேச்சில் தேவையே இல்லாமல் வார்த்தைக்கு வார்த்தை கர்ணாவின் பெயரை வேலன் எடுக்கவும் பாரதி அவனுக்கு பதிலடி கொடுக்க அதை தொடர்ந்து ஜெயா, சகுந்தலா என்று அனைவரும் தங்கள் பங்குக்கு பேச தொடங்கியதில் நொடிக்கு நொடி பேச்சின் கணம் கூடிக்கொண்டே சென்றது.
ஒரு கட்டத்தில் வேலன் முன் வந்து நின்ற கர்ணாவின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய வேலன் ஐந்து லட்சம் குறித்து எள்ளி நகையாடவும் பொறுமை இழந்த கர்ணாவுக்கும் வேலனுக்கும் கைகலப்பு ஆகிவிட்டது.
மகன்களுக்கு இடையில் வந்த சகுந்தலா வழக்கம் போல பெரிய மகன் புறம் நிற்க கைகளை உதறிக்கொண்டு கட்டுபடுத்த முடியாத கோபத்தோடு கர்ணா வெளியில் சென்றவன் பிரேமிடம், “மச்சான் எப்படியாவது அந்த எம்.எல்.ஏ வை பார்க்க ஏற்பாடு பண்ணுடா இல்ல நான் கொலைகாரன் ஆகறது நிச்சயம்” என்றான் குறையாத ஆத்திரத்தோடு.
“என்னடா ஆச்சு ஏன் இப்படி கோபமா இருக்க..?”
“எல்லாம் வழக்கம் போல தான்டா என்று நடந்ததை அவனிடம் பகிர்ந்தவன் ஆனா எப்படியாவது அந்த பணத்தை சீக்கிரம் வாங்கிட்டு வரணும்டா” என்று அவன் பேசிக்கொண்டு இருக்கும் போதே அவன் எதிரே வந்து நின்றாள் மைதிலி.
“நீ எதுக்கும்மா இங்க வந்த முதல்ல இங்க இருந்து போ” என்று பிரேம் கூற அதை கேட்காதவள் கர்ணாவிடம்,
“இப்படி உங்களை தொந்தரவு பண்றதுக்கு எனக்கும் விருப்பம் இல்லை தான்.., ஆனாலும் என்னால உங்களை மறக்க முடியலை… அதான் உங்களோட முடிவுல ஏதாவது மாற்றம் இருக்குமான்னு தெரிஞ்சிக்கத்தான் வந்தேன் தப்பா எடுத்துக்காதீங்க” என்றது தான் தாமதம்.
“ஏய் பொண்ணுதானடி நீ..!இப்படி ஆம்பளை பின்னாடி சுத்துறதுக்கு உனக்கு வெட்கமா இல்லை..? அதான் என் பதிலை தெளிவா சொல்லிட்டேனே அப்புறம் எதுக்கு சும்மா பின்னாடியே திரிஞ்சி நைநைங்குற.. அசிங்கமாயில்ல” என்று மொத்தமாக வெடித்துவிட கட்டுபடுத்த முடியாத கண்ணீருடன் தலை நிமிர்த்தாமல் நின்றிருந்தாள் மைதிலி.
“டேய் மச்சான் என்னடா பேசுற.. கொஞ்சம் அமைதியா இரு எல்லாரும் பாக்குறாங்க” எனவும்,
“நானாடா தேடி போறேன் எனக்குன்னே வந்து சேருதுங்க ச்சை இவளுக்கெல்லாம் ஒருதரம் சொன்னா புரியாதா..? ஏன்டா இப்படி உயிரை எடுக்குறா..?” என்றதில் மைதிலி உறைந்து போனாள்.
“கர்ணா நான் மைதிலிகிட்ட சொல்றேன் நீ கொஞ்சம் அமைதியா இருடா” என்று நண்பனை அமைதிபடுத்த முயன்றான்.
“சொல்லு அப்போ எங்க வீட்ல எனக்கு பொண்ணு பார்த்துட்டாங்க இந்த மாசம் எனக்கு கல்யாணம்னு இந்த முட்டாளுக்கு புரியிற மாதிரி சொல்லி அனுப்பு” என்றான்.
“அவன் தான் சொல்றானேம்மா கேட்டுச்சுதான இனிமேலாவது அவனை மறந்துட்டு உன் வாழ்க்கையை பாரும்மா ” எனவும் பதிலேதும் அளிக்காமல் கண்ணீரை கட்டுப்படுத்தியவளாய் திரும்பி சென்றாள்.
அவள் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்த கர்ணாவை உலுக்கியவன் “மச்சி உண்மையாத்தான் சொல்றியாடா உனக்கு பொண்ணு பாத்துட்டாங்களா..? இது எப்போ..?” என்று கேட்க கர்ணா பதிலளிக்கும் நிலையில் இல்லை.
“டேய் உன்னை தான் கேட்கிறேன் சொல்லு”
‘ப்ச் இல்லடா’ என்றவனின் குரல் கரகரத்திருந்தது.
‘அப்புறம் ஏன்டா அந்த பொண்ணுகிட்ட அப்படி சொன்ன..?’ என்றதும்,
“ரொம்ப நல்ல பொண்ணுடா என் குடும்ப சூழல் உனக்கு நல்லாவே தெரியும், என்னை கட்டிகிட்டா அவ ரொம்ப கஷ்டப்படுவாடா” என்றான்.
“மச்சான் என்ன பேசுற அப்போ நீ அவளை விரும்புறியாடா..?”
“மச்சி என்னடா சொல்ற..? அப்புறம் ஏன் மைதிலிக்கிட்ட மறுத்த..?”
“ப்ச் என்னடா சொல்லணும் இப்போ உனக்கு..?”
“உனக்கும் மைதிலி மேல விருப்பம் இருக்கப்போ ஏன்டா இப்படி பேசி அனுப்பின..?”
“விடு மச்சான் விருப்பம் இருந்தா மட்டும் போதுமா..? இது ஒத்துவராது, எனக்கு காதல்னு வீட்ல சொன்னேன்னா எல்லாரும் சிரிக்கத்தான் செய்வாங்க.., துடுப்பில்லாத படகா தத்தளிக்கிற என்னை நம்பி அந்த பொண்ணு வாழ்க்கை பாழாகிட கூடாது… என்னை முதல்ல நான் நிலை நிறுத்தணும் இப்போ அதுதான் என் மனசுல இருக்கு”
“அப்போ மைதிலி..?”
‘….’
“அந்த பொண்ணு உன்மேல உயிரே வச்சிருக்கு கர்ணா இல்லன்னா இப்படி திரும்ப திரும்ப வராது புரியுதாடா உனக்கு..?”
“ஏன்டா வரணும், எந்த நம்பிக்கையில அவளை வர சொல்ற..? வேண்டாம்டா அந்த பொண்ணாவது நல்லா இருக்கட்டும்” என்றவாறு கிளப்பி சென்றான்.