ஏகாம்பரத்தின் கார் வந்து நிற்கவும் இராமநாதன் சகுந்தலாவோடு வேலனும் வாசலிலேயே நின்று அவர்களை வரவேற்க ஒரு இன்ஸ்டன்ட் புன்னகையோடு அவர்களுக்கு வணக்கம் வைத்தார் ஏகாம்பரம்.
“ஜெயா ஏய் ஜெயா பாரதி எல்லாரும் எங்கடி இருக்கீங்க? இங்க வந்து பாருங்க யார் வந்திருக்கான்னு” என்று குரல் கொடுத்து கொண்டே “வா ஏகா வா பார்வதி நேத்தே உங்களை எதிர்பார்த்தேன்” என்றார் சகுந்தலா.
“கிளம்பிட்டோம் அண்ணி பாதி வழியில இவருக்கு முக்கிய வேலை வரவும் திரும்ப ஹாஸ்பிட்டல் போயிட்டோம் தப்பா எடுத்துக்காதீங்க” என்று பார்வதி சொல்ல நாற்காலியை தூசி இன்றி துடைத்து போட்ட வேலன், “உட்காருங்க மாமா” என்று உபசரித்தான்.
“தம்பி முதல்ல காபி குடிங்க” என்று தன் கையாலேயே அவர்களுக்கு காபி கொடுத்த சகுந்தலாவை அதிசயமாக பார்த்தபடி அங்கே வந்த ஜெயாவும் பாரதியும் வரவேற்றனர்.
“ராஜா மாமாவையும் அத்தையையும் கூட்டிட்டு போய் வீட்டை சுத்தி காட்டு நான் அதுக்குள்ளே சூடா வடை போடுறேன் ஏகாவுக்கு நான் செய்யற வடை ரொம்ப பிடிக்கும்” என்றவாறே சமையலறைக்குள் சென்றார்.
“ம்மா யாரு இவரு இத்தனை நாள் நம்ம வீட்டு விசேஷம் எதுலயும் பார்த்தது இல்லையே ஆனா நீயும் உன் புள்ளையும் இவ்ளோ ஆர்பாட்டம் பண்றீங்க” என்று பாரதி கேட்க,
“என் ஒண்ணுவிட்ட தம்பி ஏகாம்பரம்டி”
“இருந்துட்டு போகட்டும் இவ்ளோ நாள் இல்லாம இப்போ என்ன புதுசா உறவாடிட்டு இருக்க..” என்று ஜெயா கேட்கவும் அருகே இருந்த பாரதியிடம் “தம்பிக்கும் பார்வதிக்கும் சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணு பாரதி” என்று அவளை அங்கிருந்து கிளப்பவும்,
“ம்மா உன் சொந்த தம்பிக்கே நீ இவ்ளோ செய்யமாட்டியே இப்போ திடீர்ன்னு இவருக்கு ஏன்..?”
‘அடியேய் அவங்க பரம்பர பணக்காரங்க அதுலயும் இவன் இப்போ கோட்டீஸ்வரன், சொந்த ஹாஸ்பித்தரி மட்டும் இல்ல ஏக்கர் கணக்குல சொத்து, தோட்டம் தொறவு இன்னும் ஷேர்ஸ் அது இதுன்னு எக்கசெக்கமா பணம் கொட்டி கிடக்குடி அதோட இப்போ பசங்க பொண்ணுன்னு எல்லாருக்கும் தனி தனியா பங்களாவே கட்டிட்டு இருக்கானாம்”
“அப்படியா ஏன்ம்மா நமக்கு இப்படி ஒரு சொந்தம் இருக்குன்னு ஏன் இத்தனை நாளா சொல்லாம விட்ட..?”
“ஏய் நானே அவன் பெண்ணை ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தானே பார்த்தேன்.. ரொம்ப சின்ன பொண்ணா இருக்கும்னு நெனச்சேன் ஆனா ஸ்கூல் முடிக்க போகுதாம்” என்றவர் அவர் குடும்பம் பிள்ளைகள் குறித்து எல்லாம் சொல்லி முடித்தவர்,
“இப்போ இருந்தே உறவு வச்சிகிட்டா நாளை பின்ன பொண்ணு கேட்க வசதியா இருக்குமே..?”
“அடப்போம்மா நீ பெத்தது என்ன இங்க கலெக்டராவா இருக்கு தைரியமா பொண்ணு கேட்க, அவனே ஒரு உதவாக்கரை’
“ஏன்டி அப்படி சொல்ற..?”
“பின்ன என்னம்மா இவங்க டாக்டர் குடும்பம்னு சொல்ற பசங்களுக்கு பண்ணி இருக்க சம்பந்தமும் பெரிய இடம் அப்புறம் எப்படி நம்மகூட சம்பந்தம் பண்ணுவாங்க..?”
“இருடி வடையை கொடுத்துட்டு வரேன்..” என்றவர் ஹாலில் போடபட்டிருந்த மேஜை எதிரே அமர்ந்திருந்த ஏகாம்பரம் பார்வதிக்கு தன் கையால் பரிமாறினார்.
**********************************
“அந்த மகாலட்சுமி நம்ம வீட்டுக்கு வந்தா நல்லா இருக்கும் ஜெயா” என்று ஏக்கத்தோடு அவர் சொல்ல..
“எங்கம்மா நீ பெத்தது ஒரு அதிர்ஷ்ட கட்டை, அவனை வச்சிக்கிட்டு பகல் கனவு காணாத நமக்கெல்லாம் அந்த கொடுப்பனை இல்லை”
“ஏய் நான் ஏகாவை தூக்கி வளர்த்தவடி எனக்கு இல்லாத உரிமையா..? இன்னும் அந்த நன்றி அவனுக்கு இருக்கு அதான் எப்போ போனாலும் எனக்கு மாத்திரை மருந்தெல்லாம் ஃப்ரீயாவே கொடுப்பான்டி”
“ம்மா ஆனா எனக்கென்னமோ அவர் பார்வை எல்லாம் பார்த்தா பொண்ணு கொடுப்பாருன்னு தோணலை”
“ஏன்டி கல் எறிஞ்சு பார்த்தாதானே மாங்கா விழுமா இல்லையான்னு தெரியும் நீ எறியாமயே விழாதுன்னு சொன்னா எப்படி..?”
“அதுக்கில்லம்மா அப்பா ரிடையர்மென்ட் பணத்தை வச்சு இந்நேரத்துக்கு உன் மகன் ஒரு வேலையில இருந்தா அதை வச்சாவது சம்பந்தம் பேசலாம்” என்றவள் சட்டென நினைவு வர,
“ச்சே நீங்க மட்டும் தம்பிக்கு அவசரப்பட்டு கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா அவன் அறிவுக்கும், நிறத்துக்கும் , அழகுக்குமே இவங்க வசதி பார்க்காம பொண்ணு கொடுத்திருப்பாங்க” என்று அங்கலாய்த்தாள் ஜெயா.
“நான் என்னடி பண்ண உன் தம்பி தான் அந்த சிங்கப்பூர்காரிக்கு முன்ன கல்யாணம் பண்ணனும்னு அவசரபட்டான் இல்லைன்னா நம்ம அந்தஸ்த்துக்கு ஏத்த மாதிரி பெண் எடுத்திருக்கலாம்.. ஹ்ம்ம் எங்க எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பனை வேணும்”
“அடப்போம்மா ஒரே பொண்ணு அதுவும் எல்லாருக்கும் செல்லம்னு சொல்ற, இப்போபார் இந்த சம்பந்தம் யாருக்கு போக போகுதோ எந்த மகராசனுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகுதோ.. ஒருவேளை நூத்துல ஒரு வாய்ப்பா அந்த மாமா ஒத்துகிட்டாலும் மத்தவங்க ஒத்துக்கணுமே..?” என்று பெருமூச்சு விட,
“அதுவும் சரி தான் ஜெயா நீ சொல்றதையும் யோசிக்கணும்”
“என்னதும்மா..?”
“அதான்டி நீ சொன்ன மாதிரி என் தம்பி என்னமோ நல்லவன் தான் வந்து சேர்த்திருக்க மகராசி தான் யார் கூடவும் ஓட்டவிடாம பண்றா என்று ஆதிகாலத்து கதைகளை எல்லாம் எடுத்து போட்டு பார்வதியை குறை பேசியவர் இறுதியாக, “ஏதோ அதிசயமா இன்னைக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்கா..” என்று முடித்தார்.
“என்னம்மா சொல்ற அவங்களை பார்த்தா அப்பாவியா தான் தெரியுறாங்க” என்று பார்வதி குறித்த சகுந்தலாவின் பேச்சை விடைபெற வந்த ஏகாம்பரமும் பார்வதியும் கேட்டுவிட்டனர்.
மனைவியை பேசியதில் கோபத்தோடு பார்வதி தடுத்த போதும் நிற்காமல் ஏகாம்பரம் அங்கிருந்து வெளியேறி காரில் சென்று அமர்ந்துவிட்டார். கண்ணீரை துடைத்து கொண்டு உள்ளே சென்ற பார்வதி, “சரிங்கண்ணி அவருக்கு கொஞ்சம் தலைவலியா இருக்காம் நாங்க கிளம்பறோம்” என்றிட,
“என்ன பார்வதி இவ்ளோ சீக்கிரம் கிளம்பனுமா..? இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாமே”
“இல்ல அண்ணி அவருக்கு முக்கியமான ஆபரேஷன் இருக்கு இப்போ போனாதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ஹாஸ்பிட்டல் போக சரியா இருக்கும்”
“சரி சரி என்ன இருந்தாலும் பொழப்பு நடக்கணுமே! ஆனா இது உங்க வீடு இங்க வர நாள் கிழமை எல்லாம் பார்க்ககூடாது அடிக்கடி வரணும் அப்பதானே பிள்ளைகளுக்கு நாலு சொந்தபந்தம் தெரியும்” என்றவர் ஏகாம்பரத்திடம்,
“நீங்க ரெண்டு பேரும் வந்ததுல ரொம்ப சந்தோஷம் தம்பி ஆனா பாப்பா தம்பி எல்லாம் கூட்டிட்டு வந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் ஒரு நாள் சாவதானமா குடும்பத்தோட இங்க வாங்க” என்று புன்னகையோடு வழி அனுப்பினார்.
கணவரின் முகத்தையே பார்த்திருந்த பார்வதி மெல்லிய குரலில் ஏகாவை அழைக்கவும், “வாயை மூடுடி இதெல்லாம் உனக்கு தேவையா..? இதுக்குதான் அப்பவே சொன்னேன்” என்ற கணவரை சமாதனபடுத்துவதற்குள் பார்வதிக்கு போதும் போதுமென்றாகி போனது.
****************************
மது இறங்கி பள்ளிக்குள் செல்லவும் ‘என்னையாடி அடிச்ச’ என்று மதுவை வாய்க்குள் வசை பாடியவாறே சிகரெட்டை எடுத்து பற்ற வைத்த ரகுவின் கண்களில் இன்னுமே ஆத்திரம் குறையவில்லை. செல்லும் அவளை இப்போதே இழுத்து கசக்கி முகர்ந்துவிடும் வேகம் எழுந்தாலும் அதற்கான நேரம் இதுவல்ல என்பதால் அமைதி காத்தவனின் உள்ளமோ நீறுபூத்த நெருப்பாய் அழன்று கொண்டிருந்தது.
‘காட்டுறேன்டி இந்த ரகு யாருன்னு உனக்கு கூடிய சீக்கிரம் காட்டுறேன், நான் தொடக்கூடாதா..?’ என்று இதழ் வளைய வாகனத்தை எடுத்தவன் கிட்டத்தட்ட அதை பறக்க விட்டவன் தன் நண்பர்களை தேடி சென்றான்.
வழக்கமாக அவர்கள் கூடும் இடத்தில் அவனை கண்டதும் “வாடா பெரிய வீட்டு மாப்பிள்ளை என்ன அதிசயமா இந்த பக்கம் காத்தடிக்குது ?” என்று வரவேற்றான் காளி.
“அடங்குடா” என்றவாறே அவன் கைகளில் இருந்த சிகரெட்டை பிடுங்கிய ரகு வேகமாக புகையை இழுத்துவிட்டான்.
“என்ன மச்சி அன்னைக்கு என்னமோ அடுத்தமுறை எங்களை பார்க்க வரப்போ உன் ஆளை கூட்டிட்டு வருவேன்னு சவால் விட்டுட்டு போன இப்போ ஒத்தையா வந்திருக்க..?” என்று நக்கலா கேட்க,
“ஏன்டா என்னமோ அந்த பெண்ணை அவங்க அப்பன்கிட்டயே உன்னை வேணும்னு கேட்க வைப்பேன்னு வீராப்பா சொன்ன என்னா புட்டுகிச்சா..?” என்று மற்றொருவன் சிரித்தான்.
“அட நீ வேற மாப்பிள்ளை நான்தான் சொன்னேனே இவன் அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டான்னு யாரும் நம்பலை” எனவும் சுற்றி இருந்தவர்களின் சிரிப்பொலி அடங்க நேரம் எடுத்தது.
“ஆமா மச்சி இதே உன் எடத்துல நா இருந்திருந்தா இந்நேரம் அவளை என் புள்ளைய சுமக்க வெச்சிருப்பேன் உனக்கு ஏது அந்த தில்லு!” என்று காளியும் எகத்தாளமாக பார்த்தான்.
நண்பர்களின் கேலி பேச்சு எரிந்து கொண்டிருந்த தீக்கு எண்ணெய் வார்க்க செல்வம் கையில் இருந்த மது பாட்டிலை பிடுங்கி தன் வாயில் சரித்த ரகு அதே வேகத்தில் “வாயை மூடுங்கடா பரதேசிகளா” என்றவாறு அதை ஓங்கி அடித்து உடைத்தான்.
“என்ன மச்சி ரொம்ப டென்ஷனா இருக்க மாதிரி தெரியுது, ஏதாவது பிரச்சனையா சொல்லு நம்ம பசங்களை கூட்டிட்டு போய் ஒரு கை பார்த்துடலாம்”
“சும்மா விடக்கூடாதுடா! என்ன தைரியம் இருந்தா லேசா தொட்டதுக்கே பளார்னு அறைவா அவளை எல்லாம் சும்மாவே விட கூடாதுடா”
“யாருடா யார் உன் மேல கை வச்சது..?” என்று சகா கேட்க,
“எல்லாம் அந்த *** தான்” என்று ரகு மதுவை குறிப்பிட,
“டேய் அது சின்ன பொண்ணுன்னு சொன்னியேடா..”
“அப்படிதான்டா நெனச்சிருந்தேன் ஆனா இன்னைக்கு என் மேலேயே கை வச்சிட்டா அவளை ஏதாவது பண்ணனும்…” என்றவன் காலை நடந்ததை சொல்லி, “லேசா தான் மச்சி உரசினேன் அதுக்கே என்னை அடிச்சிட்டாடா மனசுல பெரிய பத்தினின்னு நெனப்பு… அத்தனை முறை ஐ லவ் யூ ன்னு சொல்லி நான் இல்லாம இருக்க முடியாதுன்னு சொல்ற நாய்க்கு நான் தொடக்கூடாதாம்” என்று பல்லை கடித்தவன்,
“அவளுக்கு நான் யாருன்னு காட்டனும்.. என்னையா தொடக்கூடாதுன்னு சொன்னா இனி அவளை யாரெல்லாம் தொடணும்னு நான் முடிவு பண்றேன்.., மச்சான் அன்னைக்கு ஏதோ பொண்ணுங்க எக்ஸ்போர்ட்ன்னு சொல்லிட்டு இருந்தியே அது என்ன கொஞ்சம் விளக்கமா சொல்லு…?”
“டேய் அது பெரிய இடத்து பொண்ணுடா..”
“இருக்கட்டுமே ஆனா எப்போ என்மேல கை வச்சாளோ அதோட விளைவை அவ அனுபவிக்க வேண்டாம்”
“மச்சான் உனக்கு பிரச்சனை”
“ஆடு எப்பவும் கசாப்புகாரனை தான் நம்பும் நீ கேள்வி பட்டதில்ல” என்று ஆற்றாமையுடன் நடை போட்டவன்.,
“அவளுக்கு மட்டுமில்ல அவ குடும்பத்துக்கே என்மேல அவ்வளவு நம்பிக்கை, சந்தேகமே வராத மாதிரி காரியத்தை முடிப்பேன்” என்று காலரை தூக்கிவிட காளி அவர்கள் புதிதாக ஈடுபட்டிருக்கும் தொழில் குறித்து அவனுக்கு விளக்கியவன்,
“மச்சி அவசரபடாத பொறுமையா ஸ்கெட்ச் போடு நீ நினைக்கிற மாதிரி இது சாதாரணமா எங்களோட முடியுற சமாசாரம் இல்ல, பெரிய தலை எல்லாம் சம்பந்தப்பட்டு இருக்கு உன் அவசரத்துக்கு எங்களை பலி கொடுதுடாதடா”
“இல்ல மாப்பிள்ளை அவளை இங்க வச்சு தூக்கினா கண்டிப்பா பிரச்சனையாகும் இன்னும் நாலு நாளுல சென்னை கிளம்பறா சரியான நேரம் பார்த்து அங்க அவளை தூக்கினா தான் சந்தேகம் வராது நான் உங்களுக்கு என்னைக்குன்னு மெசேஜ் பண்றேன் தயாரா இருங்க ஆனா ஒன்னு… அவளை கை மாத்தும் முன்ன அவளுக்கு நான் பதில் கொடுக்கணும் அதனால ஒரு நாள் முழுக்க அவ என்கூட அடுத்த நாள் உங்களுக்கு..” என்று சப்தமாக சிரித்திருந்தான்.
“மச்சான் என்ன சொல்ற..?”
“என் ட்ரீட் மச்சி என்ஜாய் !! அதுக்கு அப்புறம் தொழில்ல இறக்குங்க எனக்கு கமிஷன் கூட தேவையில்ல நீங்களே பிரிச்சு எடுத்துக்கங்க”
“என்னடா சொல்ற..?”
“ஆமாடா… கிட்டத்தட்ட ஒன்றரை வருசமா அவளை கரெக்ட் பண்ண நான் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை. அவ பெரிய அண்ணனுக்கு கை நீளம் சின்ன நாய்க்கு வாய் நீளம் இந்த ரகு யாருன்னு அவளுக்கும் அவ அண்ணனுங்களுக்கும் சீக்கிரமே புரிய வைக்கிறேன்” என்று சூளுரைத்திருந்தான்.
***************************************
அடுத்த நாள் அவளை பள்ளியில் இருந்து அழைத்து செல்ல வந்த ரகு வண்டியை ஓரம் கட்டிவிட்டு டேஷ்போர்டில் இருந்து பரிசை எடுத்து மதுவிடம் கொடுத்தான்.
ஆவலோடு பெட்டியை பிரித்தவள் அதனுள் இருந்த மொபைல் ஃபோனை கண்டு ஆசையுடன் வருடி கொடுத்தவள் “ரொம்ப அழகா இருக்கு ரகு !! யாருக்கு..?” என்றாள்.
“உன்கிட்ட கொடுக்குறேன்னா அது உனக்கு வாங்கினதா தானே இருக்கும்..!!”
“நிஜமாவா…?” என்று மீண்டும் அதை தூக்கி பார்த்தவளுக்குள் வேண்டும், வேண்டாம் என்ற இரட்டை மனோபாவம்.
“என்ன ரகு இது…? உனக்கு தான் என்னோட நிலைமை தெரியுமில்ல அப்புறம் எதுக்கு வாங்கின..?” என்று தவிப்புடன் கேட்க..,
“அதுக்காக நீ சென்னையில இருந்து வரவரைக்கும் என்னால காத்திருக்க முடியாது வனிக்குட்டி, விட்டா இப்படியே உன்னை தூக்கிட்டு போயிடுவேன்”
“தூக்கிட்டு போகலாமே ஆனா கல்யாணம் பண்ணின பிறகு” என்று அவள் புன்னகைக்க,
“என்னோட காதல் உன்னை உயர்த்தனுமே தவிர உனக்கு உன்னோட வளர்ச்சிக்கு முட்டுகட்டையா இருக்கவே கூடாது அதுக்கு தான் இந்த செல்போன் நீ நினைக்கிறப்போ என்கூட பேசலாம்.. நீ நல்லா படி !! படிச்சி முடிச்சதும் நாம நம்மளோட காதலை அவங்களுக்கு புரிய வச்சு அவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றவன் வார்த்தைகளில் நெக்குருகி போனவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது.
“நிஜமா எனக்கு படிக்கவே பிடிக்கலை ரகு அப்பாவோட கட்டாயத்துக்காக தான் படிக்கிறேன் ப்ளீஸ் எதுக்கு அவ்ளோ நாள் நாம வைட் பண்ணனும் நீ இப்போவே வந்து அப்பாகிட்ட பேசி என்னை கல்யாணம் பண்ணிக்கோயேன் நான் உன்கூடவே வந்துடுறேன்”
“இல்லடா அது சரி வராது உனக்கு கல்யாணம் பண்ற வயசும் இல்ல.. எனக்கு இப்போ பொண்ணு கேட்கிற தகுதியும் இல்ல.., அதைவிட படிப்பு ரொம்ப முக்கியம்! படிக்காத எனக்கு தான் அதோட அருமை புரியும் தயவுசெய்து எனக்காக இன்னும் கொஞ்சநாள் மட்டும் பொறுத்துக்கோ நானே சரியான சமயம் பார்த்து என் வனிம்மாவை என்னோட கூப்ட்டுப்பேன் சரியா..?”
“சரி ரகு ஆனா நான் எப்படி இதை எடுத்துக்க முடியும் வீ…. வீட்ல யாருக்காவது தெரிஞ்சா நான் தொலைஞ்சேன்.., எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா வேண்டாம்” என்று திருப்பி கொடுக்க அதை வாங்காமல் அவளை அழுத்தமாக பார்த்தவன்,
“அவங்களுக்கு தெரிஞ்சா தானே பிரச்சனை, தெரியாம பார்த்துக்கலாம் அது ஒன்னும் பெரிய விஷயமில்லை” என்றவன் அவள் கையிலிருந்த பேசியை வாங்கி அதன் பாகங்களை தனித்தனியாக பிரித்து சிம்கார்டையும் கழட்டி அவளிடம் கொடுத்தவன்,
“இந்த பார்ட்ஸ் எல்லாம் உன்னோட ரூம்ல வேற வேற இடத்துல ஈசியா பார்க்க முடியாத படி ஒளிச்சி வச்சிடு நீ என்கூட பேசும் போது மட்டும் அதை எடுத்து ஒன்னு சேர்த்து அசம்பில் பண்ணி எனக்கு கால் பண்ணு அப்புறம் பேசி முடிச்சதும் அதே மாதிரி பண்ணிடு அவ்ளோதான்”
‘அப்படி பண்ணா யாருக்கும் தெரியாதா…??’
“கண்டிப்பா தெரியாது, ஆனா நீ ரூம்ல இருக்கப்போ சார்ஜ் போடு வெளியே போகும் முன்னாடி அதை எல்லாம் மறக்காம எடுத்து வச்சிடு ஃபோன் எப்பவும் சைலென்ட்ல இருக்கான்னு செக் பண்ணிக்கோ மெசேஜ் டோன்ல இருந்து எல்லாமே சைலென்ட் பண்ணிடு யாருக்கும் சின்ன சந்தேகம் வராது”
மிகவும் கட்டுகோப்பான குடும்பத்தில் வளர்பவளுக்கு ரகு கூறிய அனைத்துமே பிரமிப்பை ஏற்படுத்த அதற்கு மேல் பெரிதாக கேள்வி கேட்காமல் சரி என தலை அசைத்தவள்,
“என்னாலயும் உன்கிட்ட பேசாம இருக்க முடியாது ரகு என்னை நீ மட்டும் தான் சரியா புரிஞ்சி வச்சிருக்க நீ கிடைக்க நான் ரொம்ப லக்கி ரகு தேங்க்ஸ்” என்று அவன் கைகளை பிடித்து கொண்டு சொல்ல சிறு புன்னகையில் அதை ஏற்று கொண்டவன் அடுத்த சில நிமிடங்களில் அவளோடு வீட்டை நோக்கி கிளம்பினான்.