நசநசவென்று தூறல் விழுந்துகொண்டே இருக்க லேசாய் நனைந்த தலையுடன் அந்த கோவிலை சுற்றி வலம் வந்தாள் நிஷாந்தினி.
செண்பக விநாயகர் சன்னிதியில் விளக்கேற்றியவள் கண்மூடி வணங்கிவிட்டு தன் பூஜை கூடையை கையில் எடுத்துகொண்டவள் மற்ற சன்னிதிகளையும் சுற்றி முடித்து கோவிலை விட்டு வெளியே வந்தாள்.
குற்றாலநாதர் கோவில். குற்றாலத்தின் பிரதான நீரீவீழ்ச்சியான மெயின் பால்ஸை ஒட்டி அமைந்திருக்கும் கோவில்.
வெளியில் வந்தவள் தன் காலனியை தேடி போட்டுக்கொண்டு கையிலிருந்த குடையை விரித்துக்கொண்டாள்.
குற்றால சீசன் முடியும் தருவாயில் இருக்க எந்த நேரமும் சாரலும், குளுமையும் அந்த ஊரையே அழகாக்கிக்கொண்டிருந்தது.
கோவிலில் இருந்து இறங்கி நடந்தவள் மனதில் வழக்கம் போல தோன்றும் எண்ணம் அதுதான்.
“இவ்விடத்தை இன்னும் கொஞ்சம் சுத்தமாக வைத்துக்கொண்டால் தான் என்ன?…” என தன்னைப்போல முணுமுணுப்பு அவளிதழில் அழுத்தமாய் வெளிவந்தது.
சுற்றுலாதலமான அவ்விடத்தில் இந்த சீசன் நேரத்தில் மழைக்கு தரையில் கிடக்கும் குப்பைகளும் நனைந்து நைந்து அத்தனை எரிச்சலை மூட்டிவிடும்.
இப்போதும் காகித குப்பைகள் நைந்து ரோட்டில் கிடக்க அதில் கவனமாக எட்டு வைத்து நடந்தவள் முன்னால் ஒரு பைக் சீறிக்கொண்டு வந்து நின்றதும் பதறி போனாள் நிஷாந்தினி.
“ஈஸ்வரா…” என்ற சத்தத்தோடு நிமிர்ந்து பார்க்க ராயல் என்பீல்டில் அமர்ந்திருந்தவன் அவளின் இந்த பதட்டத்தை ரசித்துவிட்ட நொடிநேர பாவனையை அவளும் கண்டுகொண்டாள்.
அவன் ஆதித்தன். நிஷாந்தினியின் அருமை கணவன். பார்க்கும் பொழுது பற்கள் நறநறவென நெரிந்தது நிஷாந்தினிக்கு.
“ஹைய்யா அம்மா பயந்துட்டாங்க…” என மகன் அபராஜிதன் கைதட்டி குதூகலிக்க இன்னும் கோபமானாள் நிஷாந்தினி.
“என்னடா இது?…” என மகனை அங்கேயே அதட்ட,
“நானும் அப்பாவும் குளிக்க வந்தோம்…” என அரிசி பற்கள் தெரிய அப்படி ஒரு சிரிப்பு மகன் முகத்தில்.
தகப்பன், மகன் இருவருமே தொப்பலாக நனைந்த உடையில் இருக்க ஆயாசமாக இருந்தது நிஷாந்தினிக்கு.
“இப்பதான் உனக்கு…” என்றவளை,
“முதல்ல ஏறு, வீட்டுக்கு போய் உன் உபதேசத்தை பேசிக்கோ…” என்று சொல்ல கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.
அவ்வளவு தான். அதற்கு மேல் அங்கே எதுவும் பேச முடியாது. இப்போது தான் சண்டை முடிந்து சமாதானம் என்னும் நிலைக்கே வாழ்க்கை தேர் வந்து நின்றிருக்கிறது.
இல்லையென்றாலும் அப்படி ஒன்றும் கூடி சிரித்து கலகலப்பாக பேசி செல்லும் வாழ்க்கை அல்லவே அல்ல.
“இவன் பேசிட்டாலும் கழுதையில…” இப்போதும் சொல்லிக்கொண்டாள்.
மைண்ட் வாய்ஸ் என நினைத்து நிஷாந்தினியின் வாய் இப்படி ஏடாகூடமாக பேசி அவனிடம் மாட்டிக்கொள்வதே இத்தனை வருடங்களில் பிழைப்பாக போனது.
நிஷாந்தினியின் நினைவு இப்படி இருக்க அதற்குள் மீண்டும் ஆக்ஸிலேட்டரை அவன் முறுக்கிய விதத்தில் குடையை மடித்துக்கொண்டு பைக்கில் ஏறி அமர்ந்தாள் அவள்.
‘நாரவாயன், நச்சுவாயன் கூட கூட குடும்பம் பண்ணிடலாம். இவன் கூட குடும்பத்தை ஓட்டும் முன்ன’ என நினைக்கும் பொழுதே சத்தமாக பேசிவிடபோகிறோம் என உடனே தன்னை அடக்கிக்கொண்டாள்.
வேண்டுமென்றே பைக்கை வேகம் போல அவன் செலுத்தவும் எங்கே வழுக்கி விழுந்துவிடுவோமோ என சட்டென தோளில் இருந்த கை அவனின் இடையில் இறங்கி இடுப்பை அழுத்தமாக பற்றிக்கொண்டது.
கடுப்பான கடுப்பு. நினைத்ததை எப்படியெல்லாம் சாதிக்கிறான் என்று கணவன் மீது பொங்கிக்கொண்டு வந்தது நிஷாந்தினிக்கு.
“ப்பா இன்னும் ஸ்பீட் ஸ்பீட்…” என்றான் நான்கு வயது குழந்தை அபராஜிதன்.
ஆதித்தனின் உடன்பிறந்த அக்கா கவிப்ரியாவின் மாமியார். முதல்நாள் தான் வந்திருந்தார் மருமகளுடன் பேத்தியை இங்கே விடுமுறைக்கு விட்டு செல்ல.
அம்பாசமுத்திரத்தில் இருக்கும் கமலராணியின் மகன் சிவநேயனுக்கு கவிப்ரியாவை திருமணம் செய்துகொடுத்திருந்தனர்.
ஊரில் பெரிய டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் வைத்து நடத்துபவன் சிவநேயன். எப்போதாவது தான் மாமியார் வீடு வருபவன்.
ஆனால் மனைவி, மகளை எல்லாம் அப்படி விட்டதில்லை. நினைத்த பொழுது சீராட கவிப்ரியா இங்கே வந்துவிடுவாள்.
இன்று கமலராணி ஊருக்கு கிளம்புவதாக இருக்க மதிய உணவு மருமகனுக்கு அடுக்களையில் தடபுடலாக நடந்துகொண்டிருந்தது ஆதித்தன் தாய் சசிகலாவின் கைவண்ணத்தில்.
அவருடன் உதவியாய் நின்றது கவிப்ரியாவும், அந்த வீட்டின் பணியாள் செந்தாழையும்.
“ஆரம்பிச்சுட்டாங்க உன் மாமியார்…” என சசிகலா ஆயாசத்துடன் சொல்ல,
“முதல்ல சமையலை முடிச்சு அவங்களை கிளப்பிவிட்டா போதும்…” என்றாள் கவிப்ரியாவும்.
“இங்க நான் பார்த்துக்கறேன். நீ போய் நிஷா எதுவும் பேசிடாம பார்த்துக்கோ. இல்லன்னா இப்பவும் ஒரு பிரச்சனையோட தான் கிளம்புவாங்க. நீ உன் புருஷனுக்கு புளி போட்டு விளக்கம் சொல்ல வேண்டியதா போகும்…” என மகளை அனுப்பினார்.
“இந்த ஆதியை வேற காணும். பைக் சத்தம் கேட்டுச்சே…” என வெளியே வந்தாள் கவிப்ரியா.
“ஹ்ம்ம், அப்படியே அம்மாவை மாதிரி சத்தம்?…” என இன்னும் கமலராணி பேசிக்கொண்டிருக்க,
“என்ன த்தை? எதுவும் வேணுமா?…” என கவி வந்து கேட்கவும் கூடவே நிஷாவையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டாள்.
“எனக்கென்ன வேணும்? எப்ப பார்த்தாலும் கூச்சல். என் பேத்தி உள்ள தூங்கறா. இவன் கத்தறான்…” என்ற கமலராணி,
“இவன் அப்பா பேசறதே யாருக்கும் கேட்டுடாது. இவன் என்னன்னா ஊரே வாசலுக்கு வந்து நிக்கிற மாதிரி கூப்பாடு போடறான்…” என்றார் அபராஜிதனை முறைப்புடன் பார்த்துக்கொண்டே.
“அத்தை…” என்றவள் நிஷாவை சங்கடத்துடன் பார்க்க அவள் இதை எல்லாம் கண்டுகொண்டதை போலவே தெரியவில்லை. மகனுடன் போராடிக்கொண்டிருந்தாள்.
“சொல்றதை கேளு அபி, ரொம்ப நேரம் ஈரத்தோட நிக்காத. இப்ப தான் காய்ச்சல் விட்டிருக்கு. ட்ரெஸ் மாத்திட்டு வந்து அம்மா உனக்கு ஊட்டுவேனாம்…” என பேசவும் தான் அபியும் குதூகலித்தான்.
“நிஜமா ஊட்டனும்…”என பேரம் பேசிக்கொண்டே இருக்க உள்ளே நுழைந்தான் ஆதித்தன்.
கமலராணி, கவிப்ரியா இருவரின் வாயும் கப்பென்று பெபிகால் போட்டதை போல ஒட்டிக்கொண்டது.
“உன் தம்பி இவங்களை இறக்கிவிட்டுட்டு கிளம்பிட்டான்னுல நினைச்சேன்….” என்று அவர் பேச கவிப்ரியாவிற்கு அத்தனை கோபம்.
ஆனால் காட்ட முடியாதே? அவர் பக்கம் பேசுவதை போலிருந்தால் மட்டுமே தன்னால் இங்கே இருக்கமுடியும்.
இல்லை என்றால் இரு நாட்களில் அங்கே முடியவில்லை, இங்கே வலிக்கிறது என வரவழைத்துவிடுவார்.
அதற்காகவே வாயை மூடிக்கொண்டு நின்றாள் கவி. உள்ளே வந்த ஆதித்தன் தன் அக்காவை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“அபி இன்னும் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணலையா?…” என்றான் மகனிடம்.
கேட்டுக்கொண்டே அருகே சென்று மகனை கையில் தூக்கிக்கொண்டு மாடிக்கு செல்ல கையில் இருந்த பூஜை கூடையுடன் அடுக்களைக்கு சென்றாள் நிஷாந்தினி.
“பிரசாதம் அத்தை…” என நீட்ட இன்முகத்துடன் வாங்கிக்கொண்டார் சசிகலா.
“இன்னையோட முடிஞ்சதா நிஷா?…” என மருமகளிடம் கேட்க,
“ஆமா த்தை. விளக்கு போடறது முடிஞ்சது. ஈவ்னிங் கோவிலுக்கு போய் அர்ச்சனை பண்ணிட்டு வந்துட்டா போதும். கோவில்ல பொங்கலுக்கும், புளியோதரைக்கும் பணம் கட்டிட்டேன். சாயந்தரம் வரவங்களுக்கு அவங்களே குடுத்திருவாங்க. இருந்தாலும் நாம இருக்கனும்…” என்றாள் அவள்.
கண்டிப்பாக செல்லவேண்டும் என்றொரு அழுத்தத்தை அவள் மறைமுகமாக வெளிப்படுத்த சசிகலாவும் புரிந்துகொண்டார்.
“இதுல இனிப்பு போதுமா பாரு…” என்று ஒரு சுய்யத்தை எடுத்து மருமகளின் வாயில் திணித்தார்.
“இந்த ஐஸ் தானே வேண்டாம்ன்றது. எதுக்கு அபியை அவரோட பால்ஸ்க்கு அனுப்பி வச்சீங்க?…” என்று சுய்யத்தை உண்டுகொண்டே கேட்க,
“என்னமோ என்னை கேட்டு அவன் செய்யற மாதிரி தான்? நான் வேண்டாம்ன்னா உடனே உன் புருஷன் கேட்டுடுவானா?…” என சசிகலா தப்பிக்க,
“உங்க மகன்னு சொல்லுங்க…” என்றாள் அதற்கும் சலிப்பாய்.
“இப்ப உன் புருஷன் தானே? அதை தான் சொல்லனும். மருமக வந்துட்டா மாமியார் கொஞ்சம் அப்பிடி போயிடனும். இல்லைன்னா எல்லாத்துக்கும் எங்க தலையை இல்ல உருட்டுவீங்க…” என்று சிரிக்க,
“நீங்க சரியான ஆள் அத்தை…” என்று நிஷாந்தினியும் சிரித்துவிட்டாள்.
“முதல்ல உங்க ரெண்டுபேருக்கும் சுத்தி தான் போடனும்…” என்று செந்தா சொல்லியதோடு உப்பை அள்ளி மாமியார் மருமகள் இருவருக்கும் சுற்றி திருஷ்டி கழித்து தண்ணீரில் போட்டாள்.
“அதொண்ணுமில்லை, செந்தாக்காவுக்கு அடுத்த மாசம் இருநூறு ரூபா சம்பளத்தை கூட்டி தர கேட்டிருந்தாங்க…” என்று நிஷா சொல்ல,
“அந்த விபூதிய கொண்டா பாப்பா….” என்று கேட்டு தனக்கும் எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டாள்.
“இன்னிக்கு கோவில்ல சக்கர பொங்கலு தரலையா பாப்பா?…” என்று அவளின் பூஜை கூடையை எட்டி பார்த்துக்கொண்டே கேட்க,
“குடுத்தா உனக்கா கொண்டு வருவா? அவ புருஷனுக்கு போகும். நீ ஏன்டி இதெல்லாம் கேட்கற? பூரியை சுடு. என் பேரன் வந்திருவான்….” என்று சசிகலா செந்தாவை அதட்டிவிட்டு,
“போயி இந்த துணியை மாத்திக்கோ…” என மருமகளை அனுப்ப இதையெல்லாம் கவனித்தபடி நின்றிருந்தாள் கவிப்ரியா.
“பிரசாதம் எடுத்துக்கோங்க அண்ணி…” என்று அவளுக்கும் நீட்ட,
“தேங்க்ஸ் நிஷா. நீ ஒன்னும் வருத்தப்படலையே?…” என அவளிடம் கவி கேட்க,
“எதை கேட்கறீங்க?…” என நிஷாவுக்கு சரியாய் புரியவில்லை.
“இல்லை என் மாமியார் பேசினது…” கவி யோசனையை கேட்க,
“எதுவும் கேட்டாங்களா? கவனிக்கலையே?…” என்றதும் தான் நிம்மதியானது கவிக்கு.
“இல்லை ஈரத்தோட வந்தீங்களா? அதான். சரி போய் ட்ரெஸ் மாத்திக்கோ….” என பேச்சை மாற்றியவள்,
“அம்மா…” என அவளை தாண்டிக்கொண்டு போக நிஷாவும் சென்றதும் தான் கவிப்ரியவுக்கு மூச்சே வந்தது.