சசிகலா மகளின் பாவனையில் சட்டென்று சிரித்துவிட அவரை அப்பட்டமாய் முறைத்தவள்,
“ஏன் சிரிக்கமாட்டீங்க? உங்களுக்கு உங்க மருமகளுக்கும் ஒத்து போக்குது. என் மாமியாரை நான் என்னதான் தாஜா பண்ணி கைக்குள்ள வைக்க பார்த்தாலும் என்கிட்டையான்னு நிக்குது. உங்களை பார்த்தா பொறாமையா இருக்கும்மா…” என்றே சொல்லிவிட்டாள் கவிப்ரியா.
“உனக்கு வர நேரமெல்லாம் இதே தான் பேச்சு. அடுத்த வேலையை பாருடி. உன் மக எழுந்திக்கறதுக்குள்ள…” என சசிகலா அதட்டவும்,
“ம்க்கும், இங்க இருக்கற வரைக்கும் அப்படியே என் பாட்டி, என் மாமா, என் அத்தைன்னு உருகி கரையுவா. அங்க போனதும் அப்படியே அந்தம்மாவா மாறி நிப்பா. எங்கருந்துதான் இதை படிச்சாளோ?…” என மகளையும் சேர்த்து பேசிக்கொண்டே வெங்காயத்தை உரிக்க ஆரம்பித்தாள் கவி.
பூஜை கூடையை பூஜையறையில் வைத்துவிட்டு கோவிலில் தந்த பூவை சாமிக்கு போட்டு, எல்லாம் எடுத்து வைத்துவிட்டு சிறிய இலையில் இருந்த சர்க்கரை பொங்கலுடன் மாடிக்கு சென்றாள் நிஷாந்தினி.
“ம்ம்ம்ம். டேஸ்டி…” என கண்களை விரித்து மூவ்விரல்களை சூப்பர் என்பதை போல காண்பித்து தலையசைக்க,
“சமத்து. அப்படியே பூரியையும் சாப்பிடுவியாம்…” என்றாள் நிஷா.
“ம்மா இது மட்டும் போதும்…” என மகன் சொல்ல,
“இதுக்கு தான் உனக்கு ஸ்வீட் தாரதே இல்லை…” என முறைத்தவள்,
“ஓகே பூரி வேண்டாம். தோசை போடவா?…” என கேட்டுக்கொண்டே அந்த கேசரியில் பாதியை தானுமே உண்டுவிட்டாள்.
இல்லையென்றால் மகன் இப்படியே அதை மட்டுமே காலை உணவாக்கி விடுவான்.
“அத்தை ஒரு தோசை போடுங்களேன்…” என சாப்பாட்டு மேஜையில் இருந்தே நிஷாந்தினி சசிகலாவுக்கு குரல் கொடுக்க,
“எல்லாம் காலக்கொடுமை. மாமியாரை மருமக அதிகாரம் பன்றதெல்லாம் இங்க தான் நடக்கும்…” என்றார் கமலா அங்கு வந்தமர்ந்து.
அவர் வரவுமே கவி அவருக்கு தட்டையும் உணவுகளையும் கொண்டுவந்து அவர் கேட்கும் முன் எடுத்து வைத்தாள்.
“மருமகன்னா என் மருமக மாதிரி இருக்கனும். நான் கேட்கறதுக்கு முன்னாடியே எப்படி வரா…” என்று சொல்ல கமாலாவை பார்த்த நிஷா சூடாக திருப்பி கொடுக்கும் முன்,
“ம்மா கேசரி…” என்றான் மகன்.
“நிஷா. இந்தா தோசை. உனக்கும் தோசை வேணுமா?…” என சசிகலா வந்து கேட்க,
“ஆமாத்தை. போடுங்க…” என்றவள் எதுவும் நடவாததை போலவே மகனுக்கு தோசையை தர கமலாவுக்கு அத்தனை கோபம்.
எவ்வளவு அலட்சியம் இவளுக்கு என மூச்சுவாங்க அவளை பார்த்தவர் கண்களில் நிஷாந்தினி தன்னை மதிக்காத ஆத்திரம்.
“இதுவே இவ அக்காளை முடிச்சிருந்தா வாயில்லா பூச்சி கம்முன்னு காலுக்கு கீழ கிடந்திருப்பா. இவளை முடிச்சு வச்சு பாரு, உன் தம்பி இன்னும் சாப்பிட கூட இல்லை. இங்க இவ முழுங்கறதை…” என்று சொல்லிவிட பதறி போனாள் கவி.
“பார்த்தியா திமிரை? எப்படி பேசறா பார் கவி? இதுவே நான் சொன்ன பொண்ணை கட்டி வச்சிருந்தா…” என கமலா சொல்ல,
“இங்க பாருங்க, என் மாமியார்கிட்ட நான் எப்படி இருக்கனும்னு நீங்க சொல்ல வேண்டாம். உங்களோட அதிகாரத்தை உங்க வீட்டுல வச்சுக்கோங்க….” என்றவள்,
“அப்பறம் இப்பவும் ஏன் இவ்வளோ வருத்தம்? தாராளமா கட்டி வைங்க. யார் வேண்டாம்ன்னு சொன்னா? என் புருஷன் சம்மதிச்சா முடிஞ்சா செஞ்சு பாருங்களேன்….” என சொல்லி,
“அத்தை உங்களுக்கு இன்னொரு மருமகளை ரெடி பண்ணியிருக்காங்களாம் உங்க சம்பந்தி…” என்று நிஷா சொல்லி முடிக்கும் நொடி என்னவோ மடாரென எதையோ இடிக்கும் சத்தம்.
அங்கே ஆதித்தன் தன் கால்களால் மரத்தினாலான டீப்பாயை உதைத்திருந்தான் கோபமாக.
“செந்தா…” என்று அதற்கு மேல் கத்தவும் செய்ய பதறி அவர் வெளியே வந்தார்.
கவிக்கும், கமலாவுக்கும் சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது. அவன் கோபமாக இருக்கிறான் என புரிந்துபோக அச்சத்துடன் பார்த்தனர்.
“டீப்பாய்க்கு கீழே கவனிக்க மாட்டீங்களா? என்ன இது தூசி? கண்ணுக்கு தெரியாத தூசி தான் உறுத்த ஆரம்பிக்கும். கிளீன் பண்ணுங்க…” என சொல்ல அது யாருக்கு என புரிந்தது.
கமலா ஒன்றும் சொல்லாமல் உணவை வாய்க்குள் வைக்க நிஷாந்தினியும் இறுக்கத்துடன் அமர்ந்திருந்தாள்.
அபியின் முகத்தில் கலவரம். இப்படி பிள்ளையின் முன் பேச வைத்துவிட்டாரே என நிஷாந்தினி அந்த கோபத்தில் வேறு இருந்தாள்.
“உக்காரு ஆதி. சாப்பிடு…” என கவி அவனுக்கு தட்டை வைக்க அவன் வந்து அமர்ந்தான்.
“கார் ரெடி அத்தை. எப்போ ஊருக்கு கிளம்பறீங்க?…” என அடுத்ததாக ஆதித்தன் கேட்ட கேள்வியில் அவர் கவியை பார்த்தார்.
முகத்தில் அடித்ததை போல கிளம்புங்கள் என்றதில் அவமானமாய் அவர் முகத்தை சுருக்கினார்.
“அரைமணி நேரத்துல கிளம்பினா உங்களை ஊர்ல கொண்டு போய் விட்டுட்டு வந்திருவார் ட்ரைவர்…” என்று அவன் சொல்லவும் கவி பேச வர,
“நீ இரு க்கா. இன்னைக்கு அப்பாவுக்கு செக்கப் இருக்கு. இவங்களை விட்டுட்டு வரவும் நாங்க கிளம்பனும்…” என்று முடித்தவன் அவ்வளவு தான் என சாப்பிட ஆரம்பித்தான்.
நிஷாந்தினி ஒன்றும் சொல்லாமல் மகனுக்கு ஊட்டி தானும் உண்டு முடித்து மாடிக்கு சென்றதும் கமாலாவும் எழுந்துகொள்ள,
“உட்காருங்க…” என்றான் அதட்டலாக அவரிடம்.
“ஆதி…” சசிகலாவும் மகனை அவஸ்தையுடன் பார்க்க,
“அக்கா, இனிமே உன் மாமியார் இந்த பேச்சை பேச கூடாது. இதுதான் லாஸ்ட். இல்லைனா நான் சொல்ல வேண்டியவங்கட்ட சொல்லி கடுமையா பேசவேண்டியதாகிடும்…” என்று எச்சரித்தவன் எழுந்துகொண்டான்.
“ஆதி சரியா சாப்பிடலையே?…” கவி தம்பியை பாவம் போல பார்க்க,
“என் பொண்டாட்டி கோவமா போயிருக்கா. சமாதானம் செய்ய வேண்டாமா நான்?…” என்று சொல்லியவன் பாவனையே அவர்களுக்கு கிலி மூட்டியது.
போச்சு திரும்பவும் சண்டையா? என சசிகலாவும், கவிப்ரியாவும் வேண்டாம் என்பதை போல பார்க்க அதனை அலட்சியம் செய்து வேகமாய் மாடிப்படிகளை தாண்டி அறையை திறந்து உள்ளே நுழைந்தான் ஆதித்தன்.