வீடு முழுவதும் பலகாரங்களின் வாசனை. இரவு உணவிற்கும் சேர்த்தே சமையல் தடபுடல் பட்டது.
“மாம் பேசாம வெளில ஆடர் குடுத்திருக்கலாம். இவ்வளோ தேவையா?…” என நிஷாந்தினி தாய் அனுராதாவிடம் கேட்டபடி வந்து நின்றாள்.
“ப்ச் அப்படியில்லடா நிஷாக்குட்டி. ஹோட்டல்ல வாங்கிடலாம். ஆனா வீட்டுல செய்யற மாதிரி வராது. இதுதான் முறையும் கூட….” என சொல்லிய அனுராதா நெய் டின்னை பிரித்துக்கொண்டிருந்தார்.
“இதுவும் நிச்சயம் தான். பொன்னை வைக்கிற இடத்துல பூவை வச்சு நிச்சயம் பன்றது. நம்மோட பழக்கவழக்கங்கள் சிலதை மாத்திக்காம இருந்தா தான் இதெல்லாம் இருக்குன்னு உனக்கு தெரியும். உனக்கு பின்னால…”
“ம்மா போதும் போதும். தெரியாம வந்து கேட்டுட்டேன்…” நிஷா கையெடுத்து கும்பிட,
“இப்ப எதுக்கு இங்க வந்து தொனத்தொனன்னு பேசிட்டிருக்க? என்ன இங்க வேலை?…” என்று அனுராதா மகளை முறைக்க,
“ரஞ்சனிக்கு எந்த சேரி கட்டன்னு ஒரே கவலை. அதான் உங்களை கூட்டிட்டு வர சொன்னா…”
“அவளுக்கு எல்லாத்துக்கும் நான் வேணும். நீ செலெக்ட் பண்ண வேண்டியது தானே?…”
சின்ன மகளை சத்தம் போட்டபடி அங்கே வேறு என்ன தேவை என பார்த்துவிட்டு சமைப்பவர்களிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தார்.
“நான் எடுத்து குடுத்தா அதுக்கும் திட்டு விழும். தேவையா? இதை ஏன் கட்டினன்னு அவளை சொல்லி என்னையும் சொல்லுவீங்க. கூடவே கல்யாணம்ன்னா விளையாட்டான்னு ப்ளா ப்ளா ப்ளா…” என்றவள் முதுகில் லேசாய் அடித்தவர்,
“அடுத்து உனக்கு தான். ரஞ்சனி கல்யாணம் முடியட்டும். ஒருவருஷத்துல உனக்கும் முடிச்சு அனுப்பினா தான் எனக்கு நிம்மதி…” என அனுராதா மாடிக்கு செல்ல நிரஞ்சனி அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
முகத்தில் அத்தனை கலவரம். கூடவே ஒரு பயமும், பதட்டமும் அவள் முகத்தில் தெள்ள தெளிவாய் தெரிந்தது.
“ம்மா…” என அனுராதா வரவும் பாவமாய் பார்க்க,
“என்ன ரஞ்சி, நீ என்ன குழந்தையா? இன்னும் ஒருமணி நேரம் தான் இருக்கு அவங்க வர. அதுக்குள்ளே ரெடியாகு…” என்றவர் கட்டிலில் வைக்கப்பட்டிருந்த புடவைகளில் ஒன்றை எடுத்தார்,
“இந்த புடவையை கட்டிக்கோ ரஞ்சிம்மா…” என சொல்ல,
“அவ முகமே பேயறைஞ்ச மாதிரி இருக்கும்மா…” என்ற நிஷாவிடம்,
“கல்யாணம்ன்னா பொண்ணுங்களுக்கு முதல்ல அப்படித்தான் இருக்கும். நீ வளவளன்னு பேசாம அவளுக்கு ஹெல்ப் பண்ணு…” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.
“அது என்ன பொண்ணுங்களுக்கு? பசங்களுக்கு இருக்காதாமா?…” என்ற நிஷா நிரஞ்சனிக்கு அந்த உடைக்கு பொருத்தமான நகைகளை எடுத்து வைத்து பார்த்தாள்.
“ஆனா பாரு ரஞ்சிக்கா நான்லாம் பயப்படமாட்டேன். இப்படி பதட்டமாவும் இருக்கமாட்டேன். வேணும்னா என்னை பார்க்க வர மாப்பிள்ளை பதறட்டுமே. கூடாதா என்ன?…” என பேசிக்கொண்டே நிரஞ்சனியை புடவை கட்ட செய்துவிட்டாள் நிஷா.
“ஒரு புடவை கட்ட இவ்வளோ நேரமா? கதை பேசிட்டே இருந்தீங்களா ரெண்டுபேரும்?…” என வந்துவிட்டார் அனுராதா.
கையில் ஒரு ட்ரேயில் ப்ளாஸ்க், இரண்டு கப், கேசரி, மெதுவடையுடன் வந்துவிட்டார்.
“நீ என்ன இன்னும் ஷார்ட்ஸ், டீஷர்ட்ல நிக்கற நிஷா? இப்படியேவா இருக்க போற? முதல்ல ட்ரெஸ் மாத்து. சேரி கட்டு…” என மகளை அதட்ட,
“என்னையா பார்க்க வராங்க? நான் புடவை கட்ட?…” என்ற நிஷா,
“ரெண்டு பொண்ணு இருக்கற வீட்டுல மூத்த பொண்ணை பார்க்க வரப்போ இன்னொரு பொண்ணை மறைச்சு வைக்கிறதெல்லாம் தெரியாதாம்மா உங்களுக்கு? அப்பறம் ரஞ்சிக்கு பதில் என்னை பிக்ஸ் பண்ணிட போறாங்க…” என கிண்டல் பேச,
“நிஷா உன் வாயை தைக்க போறேன் நான்….” என்றார் அனுராதா.
“ஓகே, அப்ஜெக்ஷன் ஓவர் ரூலாகிருச்சு. நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கறேன்…” என்றவள் தனது வாட்ரோபை திறக்க,
“இங்க சேரி இருக்கே. அப்பறம் என்ன?…” என்று அனுராதா ஒரு புடவையை எடுக்க,
“இப்ப தானே சொன்னேன், நான் பொண்ணில்லைன்னு. எனக்கு சேரி வேண்டாம். எனக்கு புடிச்ச ட்ரெஸ் தான் நான் போட்டுப்பேன்…” என்றவள் ஒரு உடையை எடுக்க,
“சொல் பேச்சே கேட்டுடாத நீ…” என்று முறைத்தார் அனுராதா.
“ப்ச், இந்த ட்ரெஸ்க்கு என்னவாம்?…” என நிஷா தனது கிராப்டாப், ஸ்கர்ட்டை காண்பித்து கேட்க,
“க்ராப்டாப் வேண்டாம். வேற ஏதாவது போடேன்…” என்றவருக்கு பதிலெல்லாம் சொல்லவில்லை நிஷா.
“அவகிட்ட நீ சொல்லு ரஞ்சி…” என மூத்த மகளை பார்க்க அவள் இன்னும் ஏதோ யோசனையில் தான் இருந்தாள்.
“ரஞ்சி உன்னை தான்…” என்று அவள் தோளை தட்டவும் தான் அவள் நிமிர்ந்து பார்க்க,
“எதுக்கு இவ்வளோ டென்ஷன் ரஞ்சி?…” என அவளருகே அமர்ந்தார்.
“ம்மா, எனக்கு இப்பவே ஏன்?…” என்றவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
பட்டுப்புடவை கட்டி தலையை மட்டும் வாரி இருந்தாள் நிரஞ்சனி. இன்னும் சிறுபிள்ளை போல ஒவ்வொன்றிற்கும் தாய் மடி தேடுபவளாகவே தான் அனுராதாவிற்கு தோன்றியது.
“என்ன இப்ப ரஞ்சி?…” என்றவர் நிஷாவை பார்க்க அவள் தன்னுடையை எடுத்துக்கொண்டு வெளியேற போனாள்.
“நீ எங்க போற நிஷா?…” என அவளை நிறுத்த,
“நீங்க பொண்ணை ரெடி பண்ணுங்க. நான் என் ரூம்ல போய் ரெடியாகறேன். இல்லைன்னா ஒன்னொண்ணுக்கும் இது ஏன்? அது ஏன்னு என்னை ஒருவழி பண்ணிடுவீங்க…” என்று சொல்லி கிளம்பிவிட பெருமூச்சுடன் நிரஞ்சனி பக்கம் திரும்பியவர்,
“இங்க வந்து உட்கார். இன்னும் நகை கூட போடாம இருக்க. நீ ரெடியாகவும் தான் நான் போய் புடவை மாத்தனும்…” என சொல்ல,
“நான் போட்டுக்கறேன் ம்மா…” என அவரின் கையில் இருந்த ஆரத்தை வாங்கிக்கொண்டாள் நிரஞ்சனி.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் ரெடியாகி வந்தாலும் நீ இப்படித்தான் இருப்ப. எனக்கென்ன டக்குன்னு வந்திருவேன்…” என்று சொல்லியவர்,
“இங்க பாரு ரஞ்சிம்மா உனக்கு எப்ப என்ன வேணும்ன்னு இத்தனை வருஷம் பார்த்து வளர்த்த எங்களுக்கு தெரியாதா என்ன? எப்பவும் உன் நல்லதுக்கு தான நாங்க செய்வோம்…” என்றவர்,
“என் பொண்ணு என்னைக்கு எங்க பேச்சை மீறி இருக்கா? இது சரியான நேரம் ரஞ்சிம்மா. உனக்கு முடிச்சிட்டு அடுத்து நிஷாவுக்கு பார்க்கனும். ரெண்டுபேருக்கும் ஒன்றரை வயசு தான் வித்தியாசம். இப்பவே நிஷாவையும் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க…” என்று சொல்ல,
“அதுக்கில்லம்மா. நான் ஒன்னு சொல்லனும்…” என தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பேச முற்பட,
“எனக்கு தெரியாதா என் பொண்ணை பத்தி. எங்களை விட்டு போக மனசில்லை. இப்ப கல்யாணம் வேண்டாம். அதுதானே?…” என சிரித்தார் அனுராதா.
“ம்மா…”
“இப்ப உனக்கு கஷ்டமா தான் இருக்கும் ரஞ்சி. அப்பறம் சரியாகிடும்…” என்றவர்,
“மாப்பிள்ளையும் அவங்க குடும்பமும் ரொம்ப நல்லவிதம். நல்ல குடும்பமும் கூட. இந்த சம்பந்தம் தட்டி போயிடாம இருக்கனும்ன்னு நான் கடவுளை அவ்வளோ வேண்டிட்டு இருக்கேன்….” என்று பேசிக்கொண்டே ரஞ்சனியை தயார் செய்துவிட்டார் அனுராதா.
“நிஷாவை பாரு, எங்கனாலும் அவ வளமா வாழ்ந்திருவா. போற இடத்தை அவளுக்கேத்த மாதிரி மாத்திப்பா. சாமர்த்தியக்காரி. ஆனா உன்னை நினைச்சு தான் என்னோட கவலை எல்லாம்…” என்றவரை நிரஞ்சனி மௌனமாய் நிமிர்ந்து பார்க்க,
அதற்குமே நிரஞ்சனி எதையும் பேசாமல் மனதிற்குள்ளேயே அலைபாய்ந்துகொண்டிருந்தாள்.
“இவங்களை நல்லா விசாரிச்சுட்டேன். உன் மாமியார், மாமனார், ஏன் நாத்தனார் கூட ரொம்ப நல்ல மாதிரி. அமைதியானவங்க. உன் குணத்துக்கு பொருந்தி போவாங்க…” என்றும் பொழுதே,
“ஆமாமா மாப்பிள்ளை தான் கொஞ்சம் நல்லா சிரிக்கலாம். மத்தபடி எனக்கு இந்த மாப்பிள்ளை ஓகே தான்…” என்று வந்துவிட்டாள் நிஷாந்தினி.