“இப்ப சொல்லுங்க இந்த ட்ரெஸ் ஓகே தானே?…” என ஸ்கர்ட்டை பிடித்து சுற்றி காண்பிக்க,
“மாடல் மாதிரி இருக்க நிஷா…” என்றாள் நிரஞ்சனி.
“தாய்க்குலம் ஒன்னும் சொல்லலை. வாயடைச்சு நிக்கிறது இதுதான் போல?…” என கண் சிமிட்டினாள் நிஷா.
உண்மையில் வாயடைத்து தான் நின்றிருந்தார் அனுராதா. மகள்கள் இருவரும் அழகு தான்.
ஆனாலும் நிரஞ்சனி முகத்தில் இருக்கும் சாந்தமான புன்னகையை விட, நிஷாந்தினியின் முகத்தில் மிளிரும் குறும்பு புன்னகையும், துறுதுறுப்பும் சட்டென கவர்ந்துவிட கூடியதாய் தான் இருக்கும்.
ஆரஞ்சும், தக்காளியும் கலந்த ஒரு நிறத்தில் சிக்கன்காரியும், சர்தோஷியும் கலந்த வேலைபாடுகள் நிறைந்த க்ராப் டாப் நிஷாந்தினியை அழகாய் அலங்கரித்திருக்க,
“ரஞ்சிக்கா வா ஒரு செல்பி…” என்றவள் இன்னும் உடை மாற்றாமல் வியர்வையுடன் நின்றிருந்த அனுராதாவையும் கழுத்தை கட்டியபடி பிடித்துக்கொண்டாள் நிஷா.
“ஏய் மேலெல்லாம் ஒரே வேர்வை. பாரு கசகசன்னு இருக்கேன்…” என்றவரை விடவில்லை.
“ப்ச், ம்மா இதுதான் நேச்சுரல். இப்பத்தான் அழகாவும் இருக்கு…” என்று சொல்ல நிரஞ்சனியும் தாயின் கையை பிடித்துக்கொள்ள இரு பெண்களின் கன்னத்திலும் கையை வைத்து கொஞ்சியவாறு அனுராதா நின்றார்.
“பெர்பெக்ட்…” என்ற நிஷா அடுத்து எடுக்க,
“எனக்கு வேலை இருக்கு. நான் கிளம்பறேன்…” என்று கழண்டுகொண்டார் அனுராதா.
“ப்ச், அவங்களை விடு. நீ ஸ்மைல் பண்ணு ரஞ்சி…” என்று நிரஞ்சனியை விதவிதமாய் போட்டோ எடுத்துக்கொண்டாள் நிஷா.
“போதும் நிஷா…” என்று மீண்டும் சோர்ந்த நிரஞ்சனியை முறைத்த நிஷா,
“இப்ப என்னக்கா உன் பிரச்சனை?…” என்றாள்.
எதையும் சொல்லக்கூடிய சூழ்நிலையில் நிரஞ்சனியும் இல்லை. மனதிற்குள் திடுக் திடுக்கென்று என்னவோ பயம்.
“ரஞ்சிக்கா…” என அவளின் கன்னத்தை லேசாய் கிள்ள சட்டென சிவந்து போனது.
“இப்ப தான் இன்னும் அழகா இருக்கு…” என்று அதையும் போட்டோ எடுத்துக்கொள்ள,
“நிஷா ப்ளீஸ்டா…” என்றாள் நிரஞ்சனி.
“இப்ப நீ சொல்ல போறியா இல்லையா?…” என்றதும்,
“இல்லை வர போறவங்களை நினச்சா தான்…” என பேச்சை மாற்றினாள்.
“மாப்பிள்ளையை பத்தி சொல்றியா? அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவாங்களே? உன்னை பொண்ணு பார்க்க வந்தன்னைக்கு மாதிரி அம்மாப்பா, அக்கா மட்டும் வராம இந்ததடவை நிறைய பேர் வராங்களாம். கூடவே மாப்பிள்ளையும்….” என்ற நிஷா,
“பர்ஸ்ட் டைம் மாப்பிள்ளையை பார்க்க போற. உனக்கு எதாச்சும் ஃபீலாகுதா?…” என கேட்க,
“என்ன பீல்?…” நிரஞ்சனி திணறினாள்.
“அதான், இந்த பட்டாம்பூச்சி பறக்கறது. ஒருமாதிரி இருக்கும்ன்னு எல்லாம் சொல்லுவாங்களே?…” என நிஷா பாடாய் படுத்த,
“ப்ச், அதெல்லாம் இல்லை. என்னை விடேன் நிஷா…” என கெஞ்சவே செய்ய,
“ஓகே ஓகே…” என்றவள் எழுந்து வெளியே வர அப்போது தான் விருந்தாளிகளை போல உள்ளே நுழைந்தனர் நிஷாந்தினியின் அத்தையும், சித்தியும்.
“என்ன நிஷா நீ கல்யாண பொண்ணு மாதிரி ரெடியா இருக்கியே?…” என அவளின் அத்தை கேலியாய் கேட்க,
“அத்தை எனக்கு மாப்பிள்ளையை கையோட கூட்டிட்டு வந்திருக்கற மாதிரியில்ல இருக்கு…” என பதிலுக்கு குடுத்தாள் நிஷா.
“இதுக்குத்தான் இவக்கிட்ட நான் வாயே குடுக்கறதில்லை…” என அவளின் சித்தி சொல்ல,
“வாங்க, வாங்க. வாங்க பூமாண்ணி, வா சுசி..” என வந்து அழைத்தார் அனுராதா.
நிஷா எதுவும் சொல்லாமல் அவர்களை பார்த்தபடியே நின்றாள். அனுராதா அவர்களை அழைத்து அமர சொல்லி,
“எங்க அண்ணனையும், கொழுந்தனாரையும் காணும்?…” என கேட்க,
“ராதா எங்களுக்கு காபி அனுப்பு…” என்று அனுராதாவிடம் சொல்லிவிட்டு பூமா செல்ல,
“ம்மா…” என பல்லை கடித்தாள் நிஷா.
“ப்ச், விடு. இவங்க முதல்நாள் வந்தா கூட அதுக்கும் சேர்த்து நாம கவனிக்கனும். இதுவே போதும். சபைக்கு நம்ம வீட்டு பக்கம் இருந்தாங்கனாலே போதும்…” என்றவர் தனது அண்ணனுக்கு அழைக்க அருகில் வந்துவிட்டதாய் கூறினார்.
“அதை அன்னைக்கு பார்ப்போம், மாமா இப்ப வந்திருவாங்க. வந்ததும் சொல்லு. அதுவரை ஹால்ல இரு. நான் போய் புடவை மாத்திட்டு வரேன். உங்கப்பா வேற இன்னும் காணும்…” என்று சொல்லி சென்றார் அனுராதா.
போனை ஹாலிலேயே வைத்துவிட்டு செல்ல ஹாலில் இருந்த இருக்கைகளை எல்லாம் கவனித்து சரி செய்துகொண்டிருந்தாள் நிஷா.
சுரேஷ் அரக்கபரக்க வேகமாய் வந்து சேர்ந்தார் அப்போது தான். மகளின் விசேஷ நேரம் அலுவலகத்தில் ஒரு அவசர வேலை என்று கிளம்பவேண்டிய சூழல்.
“என்னடா நிஷா எல்லாம் ரெடியா?…” என கேட்க,
“ஓஹ் ரெடி. பொண்ணுக்கு அப்பாவா நீங்க சபையில டிப்டாப்பா நிக்க வேண்டியதுக்கு மட்டும் தான் வெய்ட்டிங்…” என கிண்டலும் சற்று கோபமுமாக சொல்ல,
“என்னடா? அப்பா வேணும்ன்னா போனேன்?…”
“ப்ச், ஓகே ப்பா. நானும் சும்மா சொன்னேன். எல்லாம் உங்க உடன்பிறப்பு மேல வந்த கடுப்பு…”
“வந்துட்டாங்களா?…” என சுரேஷ் சட்டையின் பட்டனை கழற்றியபடி கேட்க,
“இங்க வச்சு தான் செய்வீங்களா? உங்க ரூம்க்கு போங்க. முதல்ல மாத்திட்டு வாங்க. கதை அப்பறம் கேட்போம்…” என்றதும் சிரித்துக்கொண்டே கிளம்பினார் சுரேஷ்.
அவர் அந்த பக்கம் நகர்ந்ததும் அனுராதாவின் கைபேசி சப்தம் எழுப்ப நிஷாந்தினி எடுத்தாள்.
“ஹலோ…” என்றதும்,
“நான் ஆதித்தன் பேசறேன்…” என்றவனின் குரலில்,
“ஹாய் மாமா, நான் நிஷாந்தினி…” என்றாள் நிஷா துள்ளலாக.
அவளின் குரலிலும், அந்த அழைப்பிலும் ஒரு நொடி மௌனம் மறுபக்கம். நிஷாந்தினி பற்றி அவன் அறிந்திருக்கவில்லை.
தனக்கு பார்த்திருக்கும் பெண்ணிற்கு ஒரு தங்கை உண்டு என்று மட்டுமே அறிந்திருந்தவன் அவளின் அழைப்பில் அவள் தானோ என எண்ணிக்கொண்டான்.
“வீட்டுக்கு வர வேற வழி இருக்கா? நாங்க வந்த வழில க்ளோஸ் பண்ணி வச்சிருக்காங்க…” என்றான் அவள் பேசியதை எல்லாம் கண்டுகொள்ளாமல்.
“ஓஹ், ஆமா. அந்த ஸ்ட்ரீட்ல ரோட் ப்ளாக் பண்ணியிருக்காங்க. நீங்க எங்க இருக்கீங்க?…” என கேட்டவள் அவன் சொல்லிய தெருவை கேட்டுவிட்டு,
“அங்க இருந்து லெப்ட் எடுத்து ஸ்ட்ரெய்ட்டா வாங்க. நான் வந்திடறேன்…” என சொல்லி போனை வைத்தவள் அனுராதா வருவதை பார்த்துவிட்டு விஷயத்தை சொல்லி,
“நான் என் வண்டில போய் கூட்டிட்டு வரேன்…” என கிளம்பினாள் அனுராதாவின் போனுடன்.
சொன்னபடி ஆதித்தன் வரும் பாதையின் எதிரில் நிஷாந்தினி தனது ஸ்கூட்டியோடு வந்துவிட்டாள்.
“ஹாய்…” என வேகமாய் கையை காண்பித்து சொல்லியவள் காருக்குள் இருப்பவர்களையும் பார்த்து புன்னகைத்தாள்.
“நீங்க முன்னாடி போங்க. வரேன்…” என்றான் ஆதித்தன்.
“அம்மாடியோவ், முகத்துல சிரிப்பையே காணும். ரஞ்சி நீ காலி….” என்று சொல்லிக்கொண்டே முன்னே செல்ல ஆதித்தன் தன் காரில் பின் தொடர்ந்தான்.
அதற்கு பின்னால் ஒரு இன்னோவா காரும் வந்துகொண்டிருந்தது. வீட்டை அடைந்ததும் தனது வண்டியை நிறுத்தியவள்,
“வாங்க வாங்க…” என அனைவரையும் வரவேற்க அதற்குள் சுரேஷும் அனுராதாவும் வந்துவிட்டனர்.
அனுராதாவின் அண்ணன் குடும்பத்தாரும் கூட சரியாக வந்திருந்தனர் அந்த நேரத்திற்கு.