மாப்பிள்ளை வீட்டினரை வரவேற்றுவிட்டு அனைவரையும் அமர சொல்லி வந்தவர்களிடம் பயணம் பற்றிய பேச்சை ஆரம்பிக்க மாடிக்கு செல்ல போனாள் நிஷா.
“நிஷா ரஞ்சி கீழே தான் இருக்கா. அந்த ரூம்ல…” என மகளை அங்கே அனுப்பினார் அனுராதா.
நிஷாந்தினியும் கீழிருந்த ஒரு அறைக்குள் நுழைய நிரஞ்சனியின் கையில் போன். யாருக்கோ முயன்று அழைப்பு செல்லாத ஒரு ஆதங்கத்தில் நின்றிருந்தாள்.
“எனக்கு தான் ட்ரை பன்றியா ரஞ்சிக்கா?…” என கேட்டபடி ஸ்கர்ட்டை தூக்கி பிடித்துக்கொண்டு வந்தவளை திடுக்கிட்டு திரும்பி பார்த்தவள்,
“எங்க போன நிஷா…” என்றாள்.
“மாமாவை கூட்டிட்டு வர தான்….”
“மாமாவா?…” நிரஞ்சனி திடுக்கிட,
“ஆமா, உன்னோட வர போற ஹஸ்பன்ட் எனக்கு மாமா தானே?…” என கண் சிமிட்டியவள்,
“ஆனா செம்ம ஹேண்ட்சம் தெரியுமா? பார்த்ததும் பிடிச்சுடுச்சு. உனக்கும் புடிக்கும். என்ன ஒன்னு இன்னைக்கு டென்ஷனா இருப்பார் போல? வர வழில ப்ளாக்கா இருக்கவும் எனக்கு கால் பண்ணி நான் போய் கூட்டிட்டு வந்தேன்…” என்றாள் நிஷா.
“ஓஹ், ஓகே…” என சுரத்தே இல்லாமல் நிரஞ்சனி சொல்ல,
“இப்படி முகத்தை வச்சுக்காத ரஞ்சி. எல்லாம் சரியாகிடும்…” என்று அவளை அணைத்துக்கொண்டவள்,
“நான் போய் அம்மாவுக்கு ஹெல்ப் பன்றேன்…” என்று கிளம்பினாள் நிஷா.
வெளியே வந்தவள் அனுராதாவோடு பம்பரமாய் சுழல சசிகலாவுக்கும், கவிப்ரியாவுக்கும் அத்தனை பிடித்தது நிஷாந்தினியை.
வந்தவர்களிடம் கலகலாப்பாய் பேசுவதாகட்டும், எதுவும் கேட்பதாகட்டும், வீட்டினருக்கு என்னவென பார்த்து பதில் தருவதாகட்டும் எல்லாவற்றிலும் நிஷாந்தினியை பிடித்தது.
ஆதித்தன் தான் எல்லாவற்றிலும் அமைதியாய் இருந்தான். எண்ணி எண்ணி பேசினான்.
நிஷாந்தினி கேட்பவற்றிற்கும் ஓரிரு வார்த்தையில் பதில் தான் அவளுக்கு ஆதித்தனிடமிருந்து வந்தது.
சட்டென ஒரு ஆயாசம் நிஷாந்தினிக்கு ஏற்பட்டதென்னவோ உண்மை. எப்படி நிரஞ்சனி இவனுடன் ஒத்து போவாள் என்று.
கொஞ்சம் பயமும் என்றும் சொல்லலாம். அப்படித்தான் இருந்தான் ஆதித்தன் அங்கே.
எல்லாம் பேசி முடித்து பூ பரிசம் போட்டுவிடலாம் என திருப்தியாய் சொல்ல அதற்கு முன் சிவநேயன்,
“ஆதி நீ வேணும்ன்னா பொண்ணுக்கிட்ட பேசிட்டு வாயேன்…” என்றான்.
ஆதித்தன் எதற்கு இப்போது இது என ஒரு பார்வை பார்க்க சங்கரலிங்கம் மகனை பார்த்துவிட்டு,
“என்ன ஆதி? உனக்கு பேசனுமா?…” என கேட்டார்.
“இல்லைப்பா. போய் என்ன பேச போறேன்? எல்லாம் சரின்னு சொல்லி பிடிச்சு தானே நிச்சயமே பண்ண வந்திருக்கோம். நீங்க ஆரம்பிங்க…” என்று சொல்லிவிட்டான் ஆதித்தன்.
சிவநேயன் பெரிதாய் மொக்கை வாங்கிவிட்ட பாவனையில் அமர்ந்திருக்க நிஷா அந்த முகத்தை பார்த்து சிரித்துவிட்டாள்.
“ரொம்பத்தான் விரைப்பா இருக்காரே…” என அனுராதாவிடம் சொல்ல,
“ஷ்ஷ், பேசாம இரு நிஷா…” என்றார் அனுராதா.
ஒருவகையில் அவனின் நேரடி பேச்சு பிடித்தாலும் சட்டென்று சொல்லிவிட்ட பாங்கில் என்னவோ போல தான் இருந்தது சுரேஷிற்கும், அனுராதாவிற்கும்.
தட்டை மாற்றிய பின்னர் புடவையை மாற்றி நிரஞ்சனியை சபைக்கு வரவழைக்க அவளை நிமிர்ந்து ஓரிரு வினாடிகள் பார்த்த ஆதித்தன் மீண்டும் நடக்கும் நிகழ்வுகளை கவனிக்க சிவநேயன் எழுந்து போன் பேச சென்றிருந்தான்.
“என்ன ஆதி? பொண்ணை இப்ப தான் நேர்ல பார்க்கற? பேச தோணலையா?…” என்றாள் கவிப்ரியாவும் தம்பியின் முகம் கண்டு.
“என்ன பேசனும்ன்னு எதிர்பார்க்கறக்கா?…” என சொல்லியவன் தனக்கும் அழைப்பு வர,
“இப்ப வந்திடறேன்…” என்றவன் போனுடன் வெளியே சென்றவன் ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்தான்.
“அக்கா மாமா எங்க? கால் பண்ணினா எங்கேஜ்டா இருக்கு…” என கவியை தனியே அழைத்து கேட்க,
“கடையில இருந்து போன் வந்துச்சேன்னு எழுந்து போனார். வெளில இல்லையா?…” என்றாள் கவி.
“ப்ச், நான் பார்த்துக்கறேன்…” என்றவன் எல்லோர் முன்னிலையிலும்,
“ஒரு முக்கியமான வேலை. என் ப்ரென்ட் வெய்ட் பன்றார். போய் முடிச்சிட்டு வந்திடறேன்…” என்றவன் சசிகலாவிடம் தலையசைக்க,
“என்ன ஆதி இது?…” என்றார் கண்டிக்கும் பார்வையுடன்.
“ம்மா, லாட்ஜ்க்கு லைட்ஸ் பார்க்கறதுக்கு சொல்லியிருந்தேன் தானே? இங்க பக்கம் தான். வந்திருவேன். அதான் நிச்சயம் முடிஞ்சதே?…” என சொல்ல,
“அவன் போய்ட்டு வரட்டுமே? நாம இத்தனை பேர் இருக்கோம்ல…” என்று சங்கரலிங்கமும் அனுப்ப சொல்லிவிட்டார்.
சுரேஷிடமும், அனுராதாவிடமும் சொல்லி ஆதித்தன் வெளியே கிளம்ப இதில் எல்லாம் எந்தவித பாதிப்பையும் அடையவில்லை நிரஞ்சனி.
“என்னப்பா மருமகன் அப்படியே உங்களை மாதிரி இல்லை? வேலைன்னு வந்துட்டா…” என்று நிஷா சொல்ல,
“அடி தான் உனக்கு…” என்றார் அனுராதா.
“விடு ராதா. நீ மத்தவங்களை கவனி…” என்றவர் மகளை செல்லுமாறு கண்ணை காட்டினார்.
கார் சத்தம் எதுவும் கேட்காததால் நிஷா வெளியே போர்டிக்கோவிற்கு வர இன்னும் ஆதித்தன் அங்கே நின்றிருந்தான் கேட்டின் முன்னால்.
கையில் போனும் இருக்க யாருக்கோ அழைத்துக்கொண்டே இருந்தான். நிஷாவும் என்னவென கேட்க சென்றுவிட்டாள்.
“என்ன மாமா? யாரையாச்சும் தேடறீங்களா?…” என்று கேட்கவும் அவளை திரும்பி பார்த்தவன்,
“ம்ம்ம்…” என்று மட்டும் தலையசைத்தவன் முகத்தில் ஏகத்திற்கும் எரிச்சல்.
மாலை நேரம் இன்னும் இருள் கவிழவில்லை. லேசான காற்றும், மாலையின் இதமும் கூட அவனை அசைக்கவில்லை.
“இல்லை ரொம்ப முக்கியமான வேலைன்னு சொன்னீங்க. அதான் லேட்டாகுமேன்னு கேட்டேன். காரை விட ஸ்கூட்டின்னா இன்னும் சீக்கிரம் போய்ட்டு வரலாம் பாருங்க…” என சொல்லவும் பெருமூச்சுடன் என்னவோ பதில் கொடுக்க போனவன்,
“என்ன ஆதி இங்க நின்னுட்டிருக்க?…” என்ற சிவநேயனின் சத்தத்தில் நிம்மதியுடன் திரும்பினான்.
“கார் கீ குடுங்க மாமா. வேலை இருக்கு…” என்று சொல்ல,
“தன்ஷி கையில வச்சு விளையாடிட்டிருந்தா. அதான் நான் வாங்கி வச்சேன்…” சாவியை நீட்டியபடி மேலும் கேட்கும் முன்,
“வரேன்…” என்று சொல்லி சென்றுவிட்டான் ஆதித்தன்.
நொடிப்பொழுதில் புயலாய் கிளம்பி சென்றவன் வேகத்தில் மலைத்து நின்றுவிட்டாள் நிஷாந்தினி.
“என்னம்மா அப்படி நின்னுட்ட?…” என்ற சிவநேயனிடம்,
“ரொம்ப கோவக்காரரோ?…” என்ற கேள்வியில் சிரித்துவிட்டவன்,
“இல்லைம்மா. கோவமெல்லாம் வராது. இது வொர்க் டென்ஷனா இருக்கும். இல்லைன்னா இப்படி இருக்கமாட்டான். ரொம்ப நல்ல பையன்…” என்று அவன் சர்ட்டிபிகேட் கொடுத்து முன்னே செல்ல,