எல்லாம் நினைத்ததை விட நிறைவாகவே நடந்தேறியது. இருவீட்டாருக்குமே பரம திருப்தி.
ஆதித்தனின் தொழில் பக்தியை இன்னுமே பிடித்தது சுரேஷிற்கு. மகளுக்கு சரியான வாழ்க்கையை, குடும்பத்தை தேர்ந்தெடுத்துவிடதாகவே நினைத்து பூரித்து இருந்தார்.
சொந்தங்கள் இருந்தாலும் பெரும்பாலும் எதிலும் எதற்கும் வந்து விழுந்து செய்பவர்கள் இல்லை. அந்தந்த நேரத்திற்கு வந்துவிட்டு செல்பவர்கள்.
தன் காலத்திலேயே இப்படி என்றால் தனக்கு பின் தன்னுடைய சந்ததிகள் காலத்தில் என்றொரு அச்சம் பிறக்க சுரேஷ் யோசித்த நேரத்தில் தான் ஆதித்தனின் வரன் வந்து சேர்ந்தது.
குடும்பத்தில் இருந்து அவர்களின் உறவுகள் வரை எல்லாம் விசாரித்துக்கொண்டார்.
சிவநேயனின் தாய் முதற்கொண்டு அவர் விசாரித்துவிட அவரால் பெரிதாய் என்ன பிரச்சனை? குடும்பம் என்றால் இவையும் இருக்கும் என்று விட்டுவிட்டார்.
இதோ நான்கு மாதத்தில் திருமணம் என முடிவு செய்யப்பட்டு மாதங்கள் கடந்து பத்து நாட்களில் வந்து நின்றது.
ஆதித்தன் ஒருமுறை கூட தன் பெண்ணிற்கு அழைக்கவில்லை. ஆனால் அவனின் வீட்டில் அனைவருமே பேசிக்கொண்டு தான் இருந்தனர். சுரேஷ் கேட்டதற்கும்,
“உங்க பொண்ணு பேசிட்டாலும்? அவ மாமியார்கிட்டையே நிஷா தான் வாயடிச்சிட்டு இருக்கா. நம்மகிட்ட பேசவே முழுங்குவா. கல்யாணமானா சரியா போயிரும் எல்லாம்…” என சொல்லிவிட்டார் அனுராதா.
நிரஞ்சனியின் சுபாவமும் அவள் மேல் அவர்களுக்கு எந்த சந்தேகத்தையும் தோற்றுவிக்கவில்லை. ஒதுக்கத்தில் இருப்பவள் தானே என எண்ணிவிட்டனர்.
நிஷா தான் எதையாவது பேசி சிரித்து, சமாளித்து நிரஞ்சனியை வழிக்கு கொண்டுவருவாள்.
அனைவருக்குமே நிரஞ்சனிக்கு இந்த திருமணம், இந்த வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்ற கவலையும் பயமும் என்று தான் நினைத்தனர்.
அன்றும் நிஷாந்தினி அவ்வளவு நேரம் போராடி பார்த்து முடியாமல் முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
“இன்னும் பத்து நாள்ல கல்யாணம். மாமாக்கிட்ட பேச உனக்கு இவ்வளோ பாடா? உன்னை வச்சுக்கிட்டு பாவம் அந்த மனுஷன்…” என்ற நிஷா,
“ஆனா ரெண்டுபேரும் ஒரு தராசுல நிப்பீங்க ஏறாம இறங்காம. அவரும் சைலண்ட், நீ அதுக்கு மேல சைலண்ட். சரியான ஜாடிக்கேத்த மூடி. நீங்க குடும்பம் நடத்தி. ஹ்ம்ம், பாவம் உன் மாமியார்…” என கிண்டலும், கேலியுமாய் பேசினாள்.
நிரஞ்சனி தங்கையின் பேச்சு எதையும் காதில் வாங்கவே இல்லை. எனக்கென்ன என்பதை போல தான் அமர்ந்திருந்தாள்.
“இப்ப நீ பேச போறியா? இல்ல நான் பேசவா?…” என கேட்டு சலித்து போனது.
“அப்பாக்கிட்ட கேட்டா போதுமே. அன்னைக்கு அவங்களுக்கு எடுத்த ஷர்ட் அளவு தெரியாதா? ஏன் நிஷா இப்படி பன்ற?…” என நிரஞ்சனி அலுத்துக்கொள்ள,
“உன் மூஞ்சி. தெரியாமலா கால் பன்றேன். அட்லீஸ்ட் இப்பவாச்சும் பேசு. நான் என் நம்பர்ல இருந்து கால் பண்ணா எடுக்கவே இல்ல அவங்க. நீ உன் போன்ல இருந்து கூப்பிடவும் மாட்டேன்ற. நீ பேசனும்ன்னு கூட மாமாக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் இல்ல?…” என நிஷா சொல்ல,
“அப்படியெல்லாம் தெரியலை…” என்றாள் நிரஞ்சனி.
“நீ தேறமாட்ட…” என தானே அழைத்தாள் நிஷா.
“ப்ச், இவங்க ஏன் எடுக்கவே இல்லை? நல்லா வந்து சேர்ந்திருக்கீங்கப்பா….” என்ற நிஷாந்தினி மீண்டும் அவனுக்கு அழைக்க இப்போதும் நான்காம் முறையாக அழைப்பு சென்றுகொண்டே இருந்தது.
“இதுவேற…” என அந்த மொபைலை அருகில் போட்டவள் அழைத்ததை துண்டிக்கவும் மறந்திருந்தாள் அக்காவின் முகத்தின் தயக்கம் பார்த்து.
“என்னக்கா? என்ன நீ இப்படி இருக்க? மாமாகிட்ட பேச என்ன தயக்கம்? அதுவும் இன்னும் பத்து நாள்ல கல்யாணம். நீயெல்லாம் சுத்த வேஸ்ட் போ….” என்று நித்தமும் போல சலித்துக்கொண்டாள்.
“நிஷா உதை வாங்க போற நீ. எனக்கு தான் வேண்டாம்ன்னு சொல்றேன்ல. இப்ப பேசி என்ன செய்ய? அதுவுமில்லாம இத்தனை நாள்ல இப்ப வரை எனக்கு அவங்களா கூப்பிடவே இல்லைல. விடேன்….” கொஞ்சம் சத்தமாகவே சொல்லிவிட்டாள் நிரஞ்சனி.
“ரொம்ப முக்கியம் க்கா. என்ன பேசற நீ? மாமா கொஞ்சம் மூடி டைப் மாதிரி தெரியுது. அதுக்குன்னு தப்பா நினைக்காத. சட்டுன்னு பழக வரலையோ என்னவோ? கல்யாணம் ஆனதும் பாரு, எங்களை மறந்திருவ நீ….” என்ற நிஷா,
“இதுவே நானா இருந்தா இந்நேரம் கடலை போட்டு போனே தீய்ஞ்சிருக்கும்….” என பெருமூச்சு விட்டாள்.
“பேசலாம். ஆனா எனக்கு மாப்பிள்ளை பார்க்கலையே? உனக்குன்னு அமையுது பாரேன். நீ தான் வேஸ்ட் பன்ற. இந்நேரம் பேசி பழகி அவருக்கு என்ன பிடிக்கும்ன்னு லிஸ்ட் போட்டு மனப்பாடம் செஞ்சிருக்க வேண்டாமா? ஒரு ஷர்ட் சைஸ் கேட்க இவ்வளோ பாடா?…” என தலையில் அடித்துக்கொண்டாள் நிஷா.
“நான் எங்க வாங்க போறேன். நீ தான?…” நிரஞ்சனி நழுவ,
“ஆமா உன்னை தான் வெளில எங்கயும் போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களே? நான் தான் போகனும். அதுக்கு நீ கேட்கவுமா கூடாது? ஆனா ஒன்னு, நான் எடுத்துட்டு வரதை நீ எடுத்ததா சொல்லி தான் மாமாக்கு குடுக்கனும். புரியுதா?….”
“எவ்வளோ பேசற நீ? என்னால முடியலை நிஷா…”
“என்ன முடியலை? கல்யாணம் பன்றதுக்கா?…”
“ஆமா, பேசாம நீயே கட்டிக்க நிஷா. என்னை விடு. என்னால முடியாது சாமி. விட்டா போதும்…” என்றுவிட்டாள் நிரஞ்சனி.
தான் சொல்லியதை பற்றி யோசிக்கவே இல்லை. சட்டென நிரஞ்சனி சொல்லவும்,
“ஏன்? மாட்டேனா என்ன? எனக்கு மாமாவை ரொம்ப புடிச்சிருக்கு. அவர் ஓகேன்னு மட்டும் சொல்லட்டும், உடனே டும் டும் தான். உன்னை மாதிரி எல்லாம் நான் பிகு பண்ணமாட்டேன். செம ஸ்மார்ட்டான ஒரு பெர்சன் புருஷனா வரதுன்னா ஆஹா…”
நிஷாந்தினி விளையாட்டாக பேச பேச நிரஞ்சனிக்கு வாய்கொள்ளாமல் அத்தனை சிரிப்பு.
“அவ்வளோ தானே? நானே சொல்றேன். தாராளமா கட்டிக்கோ….” என்றவளுக்கு பேச்சுக்கு கூட ‘வேண்டாம். அது தவறு’ என சொல்ல தோன்றவில்லை.
மனமெல்லாம் இந்த திருமணத்தில் இருந்து எப்படி தப்பிப்போம் என்று தான் இருந்தது நிரஞ்சனிக்கு.
“நான் ஏன் மாட்டேன்னு சொல்ல போறேன். அப்பறம் நீ போட்டிக்கு வரக்கூடாது. வட போச்சேன்னு. அழுது புலம்ப மாட்டியே மிஸ் பண்ணிட்டோம்ன்னு…” நிஷாந்தினி அப்போதும் கிண்டல் பேச,
“நிஷா உன்னை பாரு இப்போ….” என அவளை அடிப்பதை போல பாசாங்கு செய்ய சில நொடிகளில் நிஷாவின் போன் இசைத்தது.
“அக்கா மாமா தான் கால் பன்றார்….” என சொல்லி அழைப்பை சட்டென ஏற்க நிரஞ்சனி கையை உதறினாள்.
“நீயே பேசு….” என தள்ளி அமர்ந்துகொண்டாள் நிரஞ்சனி.
“அட போக்கா…” என்ற நிஷா,
“ஹாய் மாம்ஸ் எப்படி இருக்கீங்க?… என கேட்க அந்த பக்கம் ஒரு நொடி மௌனம்.
“ஹலோ, ஹலோ லைன்ல இருக்கீங்களா? மாம்ஸ், மாமா? கால் அட்டன் பண்ணினதும் ஒரு செகெண்ட் மௌன விரதம் இருக்கறது உங்க வழக்கமா மாமா?…” அந்த ஒரு நொடியில் அத்தனை மாமா போட்டுவிட கிண்டலடித்தாள் நிஷா.
“ப்ச், எவ்வளோ சத்தம்? மெதுவா பேச தெரியாதா?…” என அதட்டியவன்,
“எதுக்கு கால் பண்ணினீங்க? எடுக்கலைன்னா வேலையா இருப்பாங்கன்னு தெரியாதா?…” சுள்ளென்று வந்தது பதில் ஆதித்தனிடமிருந்து.
“ஹலோ மாம்ஸ், ரொம்ப சூடா இருக்கீங்க. கொஞ்சம் தண்ணியை குடிங்க. இங்க எங்களுக்கும் வேலை தான். அதுவும் முக்கியமான வேலை. சும்மா வெட்டியா யாரும் யாருக்கும் கால் பண்ணமாட்டாங்க. அடிக்கடி கூப்பிடறாங்களே, என்ன அவசரமோன்னு நீங்க எடுக்கமாட்டீங்களா?…” என்றாள் நிஷாந்தினி பதிலுக்கு.
“அதுவா, உங்க ஷர்ட் அன்ட் பேண்ட், வெஸ்ட் சைஸ் எல்லாம் சொல்லுங்க. அதுக்காக தான் கால் பண்ணினோம். அக்கா உங்களுக்கு ட்ரெஸ் எடுத்து ப்ரெசென்ட் பண்ணனும்ன்னு ஆசைப்படறா. அதான் கால் பண்ணேன்….” என்றவள்,
“அக்காக்கிட்ட குடுக்கறேன்…” என சொல்லி ரஞ்சனியிடம் தந்துவிட வெடவெடத்து போனாள்.
“சுத்த வேஸ்ட்க்கா நீ…” என்று தலையில் அடித்துகொண்டவள் நிஷா,
“என்கிட்டையே சொல்லுங்க மாமா. நான் சொல்லிக்கறேன்….” என அவனின் கோபத்தை பொருட்படுத்தாமல் கேட்க அளவை சொல்லிவிட்டு வைத்துவிட்டான் ஆதித்தன்.
“இன்னும் பேசியே முடிக்கலை. பார்த்தியா?…” என மீண்டும் அவனுக்கு அழைக்க உடனே எடுத்தவன்,
“இப்போ என்ன அவசரம்?…” என பல்லை கடித்தான் ஆதித்தன்.
“அந்த ட்ரெஸ் நீங்க இங்க வரும்போது போட்டுட்டு வரதுக்கு. மறக்காம போட்டுக்கோங்க மாமா…” என வேகமாக சொல்லி இந்த முறை போனை அவளே துண்டித்துவிட்டாள்.
“யார்க்கிட்ட?…” என்ற நிஷா,
“இங்க பாருக்கா கல்யாணம் முடிஞ்சதும் சொல்லி வை. என்கிட்ட கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்க சொல்லி. அக்கா புருஷன்னு பாவம்லாம் பார்க்கமாட்டேன்…” என நிஷா சொல்ல,
“அராத்து குட்டி நீ…” என தங்கையை கொஞ்சினாள் நிரஞ்சனி.
“ஹப்பா, சரியான காஞ்சமிளகா. ஆனா வளவள கொழகொழன்னு இல்லாம ஷார்ட்டா சொல்லிட்டு வச்சிட்டார். உனக்கு காதே வலிக்காது. என்னை கட்டிக்க போறவன் தான் பாவம், யார் பெத்த புள்ளையோ? வசமா சிக்க போறான் என்கிட்ட. காதை கழட்டி தான் வைக்கனும்…” என சிரிக்க நிரஞ்சனி மனதிற்குள் அத்தனை வருத்தம்.