அதுவும் தன்னை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தது எல்லாம் நினைக்கையில் அடப்பாவி என தான் நினைப்பாள்.
அபராஜிதன் பிறக்கும் வரை கூட நிரஞ்சனியிடம் பேச அவன் அனுமதிக்கவே இல்லை.
அதன் பின் பெரிதாய் கண்டுகொள்வதும் இல்லை. ஆனால் நிரஞ்சனி சம்பந்தமாக எதுவும் கேட்டுவிட்டால் இன்றளவும் அந்த கோபம் குறையாமல் நிஷாந்தினியை சுட்டுவிடும்.
இப்போதும் அவளின் அழைப்பை பார்த்துவிட்டு கிளம்பி சென்றவன் கோபத்தில் கொஞ்சம் ஜெர்க்காகி இருந்தாள் நிஷாந்தினி.
‘வேப்பிலை கூட அடிச்சு இறக்க முடியாதே இந்த ஆசாமியை’ என எண்ணியபடி தன் அக்காவிற்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் நிஷா.
“என்னடி நான் பேசிட்டே இருக்கேன், சைலன்ட்டா இருக்க?…” என்றதும்,
“வேற ஒரு யோசனை ரஞ்சி…” என்றவள் மேலோட்டமாக அன்று நடந்ததை சொல்ல,
“என்ன பேச்சு இது? இன்னும்? இதுக்கு நீ என்ன பண்ணுவ?…” என்றாள் ரஞ்சனி.
“நான் என்ன பண்ணுவேனா? முடிஞ்சா கட்டி வைங்கன்னு சொல்லிட்டேன்னு இங்க ஒரே ஆர்ப்பாட்டம். உன் போன் வந்துச்சா இன்னைக்கு மலையேறாது…” என சிரிப்புடன் நிஷா சொல்ல,
“ஆனாலும் நீ சொன்னது தப்பு தானே நிஷா. அதான் கோவப்பட்டிருக்கார்…”
“ஆமாமா, ரொம்ப தப்பு தான். ஒரு பேச்சுக்கு சொன்னா உடனே ஆடுவாராமா? இந்த மனுஷன்கிட்ட இன்னொருத்தியால குப்ப கொட்ட முடியுமா? என்னமோ நானா இருக்க போய் இழுத்து பிடிச்சு போறேன். வேற ஒருத்தினா பிச்சுக்கோன்னு பின்னங்கால் பிடறில பட ஓடிருப்பா…” என நிஷா சிரிக்க,
“கொழுப்புடி உனக்கு…”
“நான் பேசினதை கேட்டா அவரும் இதை தான் சொல்லுவார்…” என இன்னும் நிஷா சிரிக்க,
“ஓகேடா. அம்மாட்ட பேசு. பார்த்துக்கோ…”என்று வைத்த நொடி நிஷாந்தினியின் தாய் அனுராதா அழைத்துவிட்டார்.
“ம்மா…” என்றதுமே,
“பிஸியா நிஷாக்குட்டி?…” என்றார் ராதா.
“இல்ல ம்மா, இப்பத்தான் ரஞ்சிக்கிட்ட பேசினேன்…”
“சொல்லிருப்பாளே பங்க்ஷன் பத்தி. அப்பாக்கு சிறந்த தொழிலதிபர் விருது கிடைச்சிருக்கு…” என்றதும்,
“வேற எப்படி பேச சொல்றீங்க? ஏற்கனவே கோவத்துல காய்ச்சிட்டு இருக்கார். இதுல இதை நான் போய் சொன்னேனா…”
“நாங்க என்ன பண்ணோம்? ஒரு ஹெல்ப் தானே?…”
“ஆமா என் தப்பு தான். நான் கேட்டு அப்பாவும் உடனே ஹெல்ப் பண்ணினாங்க. இல்லைன்னு சொல்லலை. எனக்கொரு பிரச்சனைன்னா உங்ககிட்ட தானே நான் கேட்க முடியும்? என்னவோ அப்பா நீங்களே என்கிட்ட சொல்லிருக்கலாமே மாப்பிள்ளைன்னு அவர்கிட்ட பேசியிருக்காங்க?…” என்றதும் அனுராதா திணறி போனார்.
“அவர் சொல்லி நான் அப்பாவுக்கு பேசலை. சொல்லபோனா அப்பாக்கிட்ட நான் பேசினதும் அவருக்கு தெரியாது. படிச்சு படிச்சு சொன்னேன். யாருக்கும் தெரியாதவிதமா செய்ங்கன்னு. அப்பா என்னன்னா எல்லாம் செஞ்சுட்டு இவர்கிட்டவே போன் போட்டு அவ்வளோ பேசியிருக்காங்க…”
“உங்கப்பா பேச தெரியாம பேசிட்டார் நிஷா…..”
“ஆனா என் புருஷன் நல்லா பேச தெரிஞ்சவர். எப்படி பேசுவார்ன்னு தெரியும் தானே? இப்பவும் அவங்களுக்கும், என் மாமனார் மாமியாருக்கும் சொல்லாம என்கிட்ட சொல்ல சொல்றீங்க?…” என்ற கேள்வியில்,
“கோவமா இருக்காங்கன்னு சொல்ற. அவர்கிட்ட நாங்க எப்படி பேச?…”
“நீங்க தானே என்னை சமாதானம் செஞ்சு அவருக்கு கட்டி வச்சீங்க? அப்போ நீங்களே பேசிக்கோங்க. கூட்டிட்டு வந்தா வரேன். இல்லைன்னா வரலை நீங்களே நல்லபடியா நடத்துங்க…” என்று சொல்லிவிட மறுபக்கம் ராதா விசும்பினார்.
“ப்ச், ப்ளீஸ்ம்மா எமோஷனலா ப்ளாக் பண்ணாதீங்க. அப்பா பேசினதால எவ்வளோ பிரச்சனை தெரியுமா? எனக்கே இப்ப ஏன் தான் அப்பாவை இதுல இன்வால்வ் பண்ணினோமோன்னு தோணிருச்சு…” என ஆதங்கத்துடன் மகள் பேச,
“மாப்பிள்ளை நல்லவிதமா எடுத்துப்பாருன்னு தான் அப்பா பேசினது. இது இப்படியாகும்ன்னு தெரியாது நிஷா…” என்றவர்,
“இன்னுமா கோவமா இருக்கார்?…”
“ப்ச், அதெல்லாம் நான் பார்த்துப்பேன். நீங்க சொல்றதா இருந்தா அங்க சொல்லுங்க….”
“நிஷா…” அவர் இன்னும் தயங்க,
“ரஞ்சிக்கா வீட்டுக்கே போய் இன்வைட் பண்ணுனீங்களாம்?…” என்ற நிஷாவின் கேள்வியில் அனுராதா மகளை சமாளிக்க முடியாது தடுமாறினார்.
“ஓகே ம்மா. எனக்கு ஆன்ஸர் பேப்பர் திருத்தற வேலை இருக்கு. வைக்கறேன்…” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள்.
ஐந்து நிமிடத்தில் மீண்டும் சுரேஷிடமிருந்து அழைப்பு வந்தது. ஒரு நொடி வெறித்து பார்த்தவள் பின் எடுத்தாள்.
“கங்க்ராட்ஸ் ப்பா…” என ஆரம்பிக்க,
“தேங்க்ஸ் நிஷாக்குட்டி…” என்ற சுரேஷ்,
“நான் உன் மாமனாருக்கு பேசறேன்டா. இப்ப சந்தோஷமா?…” என்றார் சமாதானமாக.
“இதுல என்ன எனக்கு பெரிய சந்தோஷம்? அழைக்கிறது உங்களோட மரியாதைக்கு தான். இதெல்லாம் சொல்லி செய்யறது இல்லை ப்பா. நான் சந்தோஷப்படுவேன், சமாதானமாகிடுவேன் அப்படின்னு நினைச்சு அதை காரணம் காட்டி நீங்க அழைக்கிறதுக்கு அழைக்கவே வேண்டாம்…” என்று குரல் மாறாமல், அலட்டாமல் சொல்லிவிட்டாள் நிஷா.
“நிஷாம்மா…” சுரேஷ் திகைக்க,
“நீங்க நீங்களா அழைக்கிறது என்னோட மரியாதைக்கும் தான். ஆனா இவ்வளோ பேசி, டிஸ்கஸ் பண்ணி கூப்பிட்டா அதுல எங்க மரியாதை இருக்கு? கம்பல்ஷன் தான் இருக்கு. அங்க நான் ஏன் வரனும்? ப்ளீஸ். விட்டுடுங்க. சந்தோஷமா செலிபரேட் பண்ணுங்க. எனக்கு ரொம்பவே ஹேப்பி தான்ப்பா உங்களுக்கு விருது கிடைச்சதுல…” என்று சொல்லிவிட்டாள் நிஷா.
ஒவ்வொரு முறையும் என்னவோ அவர்களின் கழுத்தை பிடித்துவிடுவதை போல பயந்து கேட்பதை போல ‘அதுக்கு கூப்பிடவா, இதுக்கு கூப்பிடவா?’ என தன்னிடம் கேட்டு கேட்டு செய்வது நிஷாந்தினிக்கு அத்தனை எரிச்சலை தந்திருந்தது.
“கூப்பிடறது உங்க விருப்பம். வரதும், வராததும் அவங்க விருப்பம். இதை ஏன் இவ்வளோ பெரிய ஒரு விஷயம் மாதிரியும், சிங்கம் குகைக்குள்ள போக பயப்படற மாதிரியும் ரியாக்ட் பன்றீங்க?…” என எத்தனையோ முறை சொல்லியாகிற்று.
அப்படி ஒன்றும் அவர்கள் அழைத்து புகுந்தவீட்டினர் அலட்டிக்கொண்டு பிகு செய்ததில்லை.
எத்தனை கோபம் இருப்பினும் நிஷாந்தினிக்காக என ஆதித்தனும் வராமல் இருந்ததில்லை.
அதிகமாக தங்கிக்கொள்ளமாட்டான். அவனுக்கு எல்லோரும் சேர்ந்து தன்னை அவமதித்துவிட்டனரே என்னும் கோபம் தான்.
சில நேரங்களில் நிரஞ்சனியின் கணவரோடு சில விஷயங்கள் ஒப்பிட்டு பேச இன்னுமே நெருக்கத்தை குறைத்துக்கொண்டான் ஆதித்தன்.
“எதுக்குப்பா கம்பேர் பன்றீங்க? எல்லாரும் ஒரே மாதிரி இருக்கறதில்லை. கோவக்காரர்ன்னா என்னவோ பெரிய குற்றவாளி மாதிரி பயந்து பேசறதும், கமென்ட் பன்றதும் நல்லா இல்லை…” என்று நிஷாந்தினி எச்சரித்திருந்தும் சில நேரங்கள் அது தொடரத்தான் செய்தது.
அவனிடம் ஆயிரம் சண்டை போடுபவள், ரஞ்சனியிடம் கூட விளையாட்டாக பேசிவிடுபவள் தான்.
ஆனால் விட்டுக்கொடுத்தோ, மட்டம் தட்டியோ எங்கும் அவனை விட்டு அகன்று நின்று பார்த்ததில்லை.
இப்போதும் தகப்பனிடம் சொல்லிவிட்டு வைத்துவிட்டவளுக்கு தலைவலி மண்டையை பிளந்தது.
வருஷமெல்லாம் இதே தானா தனக்கு என நினைத்தபடி போனை தன் நெற்றியில் அடித்துக்கொண்டே தூக்கி போட விரல் பட்டு ஒலித்தது ஆதித்தன் அவளுக்கு அனுப்பியிருந்த அவள் குரல்.
“ஏன்? மாட்டேனா என்ன? எனக்கு மாமாவை ரொம்ப புடிச்சிருக்கு. உன்னை விட்டுட்டு என்கிட்ட வந்து நீ ஓகேன்னு மட்டும் அவர் சொல்லட்டும். உடனே டும் டும் தான். உன்னை மாதிரி எல்லாம் நான் பிகு பண்ணமாட்டேன். செம ஸ்மார்ட்டான ஒருத்தர் புருஷனா வரதுன்னா சும்மாவா? ஆஹா…” என்ற அவளின் குரல்.
அத்தனை துள்ளலாய், குறும்பாய் திருமணத்தின் பத்துநாட்களுக்கு முன்பு நிரஞ்சனியிடம் விளையாட்டாக பேசிய நிஷாந்தினியின் குரல் அது.
அவள் வாழ்க்கையின் திசையை மாற்றிய அந்த பதிவு. இப்போதும் அதை கேட்கவும்,
“வாய் வாய். வாய்க்கொழுப்புடி உனக்குன்னு என் புருஷன் சொல்றது கொஞ்சமும் தப்பில்லை. எப்படி பேசி எங்க வந்து சிக்கிருக்கேன்?…” என அந்த போனையே ஆதித்தனாக நினைத்து தலையணையால் மொத்தினாள் நிஷாந்தினி.
“என்னை படுத்தறடா நீ…” என்று மற்ற வேலைகள் எல்லாவற்றையும் மறந்து அவள் அந்த போனை உடைத்தால் என்னவெனும் வேகத்துடன் அடிக்க மீண்டும் அறையில் பிரவேசித்தான் ஆதித்தான்.
இவள் அடிக்க அடிக்க அந்த குரல் நிற்பதும், ஒலிப்பதுமாக இருக்க கேட்டவன் இதழ்களுக்கடியில் அமர்த்தலான அடக்கப்பட்ட புன்னகை.
பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்தவாரு நின்றவனை பார்த்ததும் அத்தனையும் தலைக்கேற அந்த தலையணையை அவன் மீது வீசி எறிந்தாள் நிஷாந்தினி.
அது ஆதித்தனின் முகத்தில் பட்டு கீழே விழுந்தும் அவன் அப்படியே நிற்க அங்கிருக்கமுடியாமல் எழுந்தவள் அறையை விட்டு வெளியேற முனைந்தாள்.
கணவனை தாண்டி செல்ல முயன்றவளின் கைகள் அவன் வசம் சிக்க அடுத்தநொடி அவள் முழுவதும் அவன் அணைப்பிற்குள் நின்றாள்.