இதனை ஏற்கவும் முடியாமல், எதையும் வெளிப்படையாக சொல்லவும் முடியாமல் தவித்து போனாள்.
அதிலும் திருமணம் நெருங்க நெருங்க இந்த பேச்சுக்கள் அவளுக்கு அசௌகரியத்தை தான் கொடுத்தது.
ஒருவகையில் பெரிய நிம்மதி என்னவென்றால் ஆதித்தன் தன்னிடம் பேச முயற்சிக்காதது தான்.
இல்லை என்றால் இன்னும் தர்மசங்கடமாக போயிருக்கும் என நினைத்தவள் இதனை தடுக்கும் வகையறியாது தள்ளாடிக்கொண்டிருந்தாள்.
நிஷாவிற்கு நாளுக்கு நாள் நிரஞ்சனி முகத்தில் தெரியும் அந்த கலவரத்தில் உள்ளுக்குள் திடுக்கென்று பயம் உண்டானது.
அதிலும் காய்ச்சல் கண்டுவிட்டது நிரஞ்சனிக்கு. இன்னும் ஐந்தே நாளில் திருமணம் என்றிருக்க காய்ச்சலில் பிதற்ற ஆரம்பித்தாள்.
“அக்கா நீ என்ன லூஸா? இவ்வளோ ஏன் பயப்படற? கல்யாணம் எல்லாம் எல்லாருக்கும் நடக்கறது தானே?…” என்றவளுக்கு தன் அக்கா வேறொருவனை மனதில் நினைத்திருப்பாள் என்று துளியும் எண்ணம் எழவில்லை.
அந்தளவிற்கு தான் நிரஞ்சனியின் நடவடிக்கைகள் இருந்தது. தான் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாததை போல அவளும் எதையும் மறைக்கவில்லை என்றே நினைத்தாள் நிஷாந்தினி.
எங்கே ரஞ்சனி இன்னும் பயப்படுவாளோ என அவளை சமாதானம் செய்ய சொல்ல ரஞ்சனியின் முகத்தில் இன்னும் சோர்வு தான் மிஞ்சியது.
துளியும் மகிழ்ச்சி இல்லாத முகம் ஒளிவிழந்து காணப்பட காய்ச்சலின் காரணம் என்றார் அனுராதா.
மூன்றே நாளில் திருமணம் என்றிருக்க யாரிடமோ போனில் கண்ணீருடன் பேசிக்கொண்டிருந்தவள்,
“அவர் வரலைன்னா நான் வேற மாதிரி தான் முடிவெடுக்கனும். என்னால முடியலை. ப்ளீஸ், வந்து பேசி கூட்டிட்டு போக சொல்லுங்கண்ணா…” என கெஞ்சியவள் பேசி முடித்து போனை வைத்துவிட்டு திரும்ப நிஷாவும், ராதாவும்.
“ம்மா…” என அதிர்ந்து போய் பார்த்தவளை நெருங்கிய ராதா,
“என்ன பண்ணியிருக்க ரஞ்சு?…” என்றார் இன்னும் அதிர்ச்சி விலகாமல்.
நிஷாவால் நம்ப முடியவில்லை. நிரஞ்சனியை பார்த்தபடி அப்படியே நின்றுவிட்டாள் நிஷா.
“ஸாரி ம்மா…” என்பதை தவிர நிரஞ்சனி எதையும் சொல்லவில்லை.
“யாரு ரஞ்சு அவன்? இன்னும் மூணு நாள்ல கல்யாணம். நாளைக்கு மாப்பிள்ளை வீட்டுல இருந்து கிளம்பிருவாங்க. ஊருக்கெல்லாம் பத்திரிக்கை வச்சு அழைச்சிருக்கோம். இந்த நேரம் இப்படி பன்றியே நீ?…”
வழக்கம் போல தாயாய் அவர் என்ன பேசவேண்டுமோ அதை எல்லாம் பேசிவிட்டார்.
மகளை அதட்டி, மிரட்டி, கெஞ்சி, காலில் விழாத குறையாய் மனதை மாற்ற நிரஞ்சனி சூழ்நிலை கைதியானாள்.
“உங்க விருப்பம் ம்மா…” என அழுதுகொண்டே சொல்ல,
“பார்த்துக்கோ. எங்க மானம் மரியாதை எல்லாம் கெடுத்துடாத. இன்னும் உனக்கு தங்கச்சி ஒருத்தி இருக்கா. அவளுக்கும் பார்க்கனும். எல்லாம் மனசுல வச்சுட்டு நடந்துக்கோ…” என்று சொல்லி சென்றுவிட்டார் ராதா.
“நிஷா…” என தங்கையின் கையை பிடித்த நிரஞ்சனி ஓவென்று அழ,
“தப்பு பண்ணிட்டக்கா. இது உன்னோட லைப் மட்டுமில்லை. இன்னொரு குடும்பமும் சம்பந்தப்பட்டது. இதையெல்லாம் யோசிக்கமாட்டியா நீ?…” என நிஷா அதட்ட,
“எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை நிஷா. எப்படி தடுக்கன்னு தெரியலை…”
“இப்ப என்ன பண்ண போற? அம்மா சொன்னதை கேட்ட தானே? இப்படி வரன் வந்திருக்கு. பொண்ணு பார்க்க வர சொல்லுவோமான்னு அப்பா உன்கிட்ட கேட்டு தானே முடிவு பண்ணினாங்க. உங்க இஷ்டம்ன்னு சொல்லி எங்க வரை கொண்டுவந்திருக்க நீ?…” என அத்தனை கோபம் அவளிடம்.
நிரஞ்சனி அழுவதை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. இப்போது காதலித்தவனும் ஊரில் இல்லை.
இந்த திருமணம் நடந்தால் நிச்சயம் தான்னால் வாழ முடியாது என்பதில் அத்தனை நிச்சயம்.
“நீ முதல்லையே சொல்லியிருந்தா அப்பா யோசிச்சிருப்பாங்க. அட்லீஸ்ட் அவங்க யாரு என்னனு விசாரிச்சி சம்மதிச்சிருக்கலாம். இல்லையா அதுவரைக்கும் கூட நீ ஃபைட் பண்ணியிருக்கலாம். எல்லாத்தையும் நீ தான் பாழாக்கிட்ட…” என்றாள் நிஷா.
“என்னால இந்த கல்யாணத்தை பண்ணிக்க முடியாது நிஷா…” நிரஞ்சனி சொல்ல,
“இப்போ அம்மா முன்னாடி என்ன சொன்ன நீ? ஒரு மனசா இருக்கமாட்டியா? எனக்கு கடுப்பாகுது ரஞ்சிக்கா. ஒரு முடிவுல தெளிவா இருக்க முடியாதா?…” என்றவள் சத்தத்தில் மீண்டும் ராதா வந்துவிட்டார்.
“என்னம்மா? இன்னும் என்ன?…” என அவர் மகளிடம் பயந்து போய் கேட்க,
“ஒண்ணுமில்லைம்மா. நான் தான் தப்பு பண்ணிட்டேன். மன்னிச்சிடுங்க. எனக்கு நீங்க என்ன செஞ்சாலும் சரி…” என்ற நிரஞ்சனியை நிஷா திகைத்து பார்த்தாள்.
இதுவரை இப்படியெல்லாம் நிரஞ்சனியை அவள் கவனித்ததே இல்லை. இன்று அடிவயிற்றில் கலவரம் வெடித்தது.
“ரஞ்சிக்கா நீ என்ன நினைக்கிறன்றதை தெளிவா பேசு. ஏன் மாத்தி மாத்தி பேசற?…” என நிஷா கூற,
“மாத்தி மாத்தியா?…” என அனுராதா கலக்கத்துடன் பார்த்தார் பெரிய மகளை.
“ம்மா, நான் சொல்றதை கேளுங்க. கொஞ்சம் ரஞ்சிக்கிட்ட பயம் காட்டாம பேசுங்க. அவ பயத்துல என்னவோ பேசறா. எனக்கும் சரியா படலை…” என நிஷா தாயிடம் பேசவும் அனுராதா அழுதுவிட்டார்.
“என்ன ரஞ்சி? என்ன சொல்றா நிஷா? நீ உண்மையை சொல்லு…” என்ற விதத்திலேயே நிரஞ்சனி இன்னும் பின்வாங்கினாள்.
“எதுவும் இல்லைம்மா. நீங்க சொன்னது தான். அதுல எந்த மாற்றமும் இல்லை…” என சொல்லவும் தான் அனுராதாவிற்கு நிம்மதியே வந்தது.
“உங்கப்பாவுக்கு தெரிஞ்சா என்னாவாரோ?…” என புலம்பியபடி அறையிலிருந்து வெளியேற,
“அதுதான் சந்தேகமா இருக்கு. இங்க பாருக்கா. இது இன்னொரு மனுஷனோட எதிர்காலம். இப்ப இந்த நிமிஷம் தப்பிக்க இன்னொருத்தர் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிடாத. அவ்வளோ தான் சொல்லுவேன்…”
நிஷா சொல்லியதற்கு நிரஞ்சனி எந்த பதிலும் சொல்லவில்லை. கண்ணீருடன் சென்று படுத்துவிட்டாள்.
நிஷாந்தினிக்கு தான் படபடப்பும், பதட்டமும் குறையவில்லை. நிரஞ்சனி முகத்தையே தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
சுரேஷிற்கு விஷயம் தெரிந்துவிட்டது என்பதை அவரின் பாராமுகமே காட்டிக்கொடுத்தது.
அத்தனை கோபம் அவருக்கு, எதையும் சொல்லாமல் இவ்வளவு தூரம் வந்த பின் இந்த பெண் இப்படி இருக்கிறாளே என்று.
மகளிடம் பேசவும் இல்லை. எங்கே பேசினால் திருமணம் நின்றுவிடுமோ என்னும் அளவிற்கு யோசித்துவிட்டார்.
அதிலேயே நிரஞ்சனியின் தைரியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வந்தது.
மறுநாள் திருமணம். அன்று நிச்சயதார்த்தம் காலையே மாப்பிள்ளை வீட்டினர் அனைவரும் மண்டபத்திற்கு வந்துவிட்டதாக செய்தி வந்துவிட்டது.
நிரஞ்சனி இன்னும் பீதியிலேயே இருக்க நிஷாந்தினி உற்சாகம் எல்லாம் எங்கோ சென்றுவிட்டது.
மாலை பெண் அழைப்பு. நிஷாந்தினியும் நிரஞ்சனியும் வந்ததும் வந்திருந்த சொந்தங்கள் சூழ்ந்துகொண்டனர்.
அதிலும் மாப்பிள்ளை வீட்டினர் நிரஞ்சனியை விடவில்லை. அத்தனை அன்பாய், பாசமாய் பேசி சிரித்து மகிழ்ந்திருக்க நிஷாவின் பார்வை ஆதித்தன் எங்கே என்பதில் இருந்தது.
தூரத்தில் சிவநேயனுடன் அமைதியாய் வேடிக்கை பார்க்கும் பாவனையுடன் அமர்ந்திருந்தான் அவன்.
நிஷா அவனை கண்டதுமே மனதிற்குள் ஒரு அச்சம். அன்று அவள் எடுத்து அனுப்பியிருந்த உடையை தான் அணிந்திருந்தான் ஆதித்தன்.
“கடவுளே யாரையும் கஷ்டப்படுத்தாம நல்லவிதமா இந்த கல்யாணம் நடக்கனும். கண்டிப்பா நடக்கனும்…” என மண்டபத்தின் முன்னிருந்த பிள்ளையார் கோவிலில் விளக்கேற்றி வணங்க,
“ம்க்கும்…” என்ற செருமல்.
கண் திறந்து பார்த்தவள் அங்கே ஆதித்தனை எதிர்பார்க்கவில்லை. அதிலும் முறைப்புடன் அவன் நின்றதில் வாய் திறக்கமுயாமல் நின்றாள்.
நிரஞ்சனியின் விஷயம் மட்டும் இல்லை என்றால் இந்த நேரம் அவனை கிண்டல் செய்து ஒருவழி செய்திருக்க கூடும்.
இப்போது உண்மைக்கும் பயம் மட்டுமே. அதிலும் நிரஞ்சனியின் நிலையற்ற மனதினை கண்டத்தில் இருந்து அது மட்டுமே இருந்தது.
“யாருக்கும் கால் பண்ணினா அவங்க அட்டன் பண்ணினாங்களா, லைன்ல இருக்காங்களான்னு பார்த்துட்டு ரகசியம் பேசற பழக்கம் இல்லையா?…” என்றான் அவன்.
“ஹாங், என்ன?…” என நிஷாந்தினி புரியாமல் விழிக்க,
“அன்னைக்கு ட்ரெஸ் அளவு கேட்டு போன் பண்ணின அன்னைக்கு அக்காவை கல்யாணம் பண்ணிக்க போறவனை பத்தி பேசற பேச்சாம்மா நீங்க பேசினது?…” என்றவன்,
“விளையாட்டுக்கு எதை பேசனும்ன்ற சென்ஸ் வேண்டாமா?…” என்று சொல்லிவிட நிஷாந்தினி முகம் கறுத்துவிட்டது.
“அது சும்மா…” என்றவளை பேச விடவில்லை ஆதித்தன்.
“அக்கா தங்கச்சிக்குள்ள என்னவும் இருக்கட்டும். என்னை அந்த மாதிரி பேசறதை நான் விரும்பலை. கொஞ்சம் மரியாதையா பார்க்க பழகிக்கோங்க. புரியுதா?…” என்று சொல்லிவிட்டு அவள் பேச இடம் தராமல் உள்ளே சென்றுவிட்டான் ஆதித்தன்.
“போச்சு, இதுவேறையா? பெரிய இவரு. போயா. உனக்காக நான் பாவப்பட்டா என்னையே பேசற…” என்றவள் அவன் சொல்லிய மரியாதையில்,
“எல்லாத்துக்கும் இனி ங்க போட்டு மரியாதையாவே கலாய்க்கறேன்…” என்று சொல்லிக்கொண்டவள் உள்ளே செல்ல மேடைக்கு நிரஞ்சனி வரவழைக்கப்பட்டாள்.