நிச்சயதார்த்தம் அமோகமாக நடைபெற நிஷாந்தினி அவ்வப்போது ஆதித்தனை பார்க்கவும் நிகழ்ச்சியை பார்க்கவுமாக இருந்தாள்.
அவளின் பார்வையில் ஒருகட்டத்தில் ஆதித்தனே கண்களால் மிரட்டி கையசைத்து வேறு திக்கில் திரும்பும்படி சொல்ல கடுப்பாகி போனாள் நிஷா.
“அப்படித்தான் பார்ப்பேன். அக்காவை கட்டிக்க போறவர் எப்படி இருக்கீங்கன்னு நான் பார்க்க வேண்டாமா?…” என அவனிடம் வந்து சிரித்தபடி சொல்லிவிட்டு செல்ல ஆதித்தன் திகைத்து பார்த்தான் அவளை.
அதன்பின் அவள் பார்த்தாலும் அப்புறம் திரும்பாமல் இருந்துகொண்டான் கோபத்துடன்.
நிச்சய விழா சிறப்பாய் நடைபெற்று முடிய அனைவரும் மண்டபத்தில் அங்கே உறங்க சென்றுவிட அதிகாலை ஒரே பாபரப்பு சொந்தங்களுக்கிடையே.
சுரேஷின் சொந்தங்களில் அனேகம்பேர் அதே ஊர் என்பதால் பெரும்பாலோனோர் வீட்டுக்கு ச்நேற்றுவிட்டனர்.
சிலர் மட்டுமே மண்டபத்தில் இருக்க ஆதித்தனின் குடும்பமும் மண்டபத்தில் தங்கி இருந்தனர்.
மற்றவர்கள் அனைவரும் அருகில் இருக்கும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்க நிரஞ்சனியை காணவில்லை என்பது சொற்பமானவர்களுக்கு மட்டுமே தெரியவந்தது.
ஆதித்தனின் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லமுடியாமல் தலைகுனிந்தனர் நிஷாந்தினியின் குடும்பத்தார்.
இதில் நிரஞ்சனியின் காதல் விஷயம் திருமணத்திற்கு முன்பே அவர்களுக்கு தெரிந்து, அவளை சமாதானம் செய்து தான் இங்கு வர அழைத்து வந்தனர் என்பதை கேட்டதில் இருந்து இன்னும் வெகுண்டுவிட்டான் ஆதித்தன்.
சுரேஷும் அனுராதாவும் அத்தனை முறை மன்னிப்பை கேட்டு மருகி நிற்க ஆதித்தன் அசையவில்லை.
இளாகாமல் நின்ற மகனிடம் அங்கிருந்து கிளம்பலாம் என சங்கரலிங்கமும், சசிகலாவும் கூற,
“கிளம்பறதா? எங்க? கல்யாணம் நடக்காமலா?…” என்றவன் கேள்வியில் அனைவரும் ஆடி போயினர்.
“ஆதி?…” என்ற சசிக்கலாவிற்கு மகனின் பேச்சு விளங்கவில்லை.
மீண்டும் நிஷாந்தினியின் தாய், தந்தை மன்னிப்பை கேட்க அவர்கள் சொந்தங்கள் சிலர் ஆதித்தன் வீட்டினரிடம் சமாதானம் பேச என பேச்சுக்கள் நடந்துகொண்டிருந்தது.
நடந்துகொண்டிருந்த இத்தனை கலவரத்திலும் ஆதித்தன் பார்வை நிஷாந்தினியை தான் இப்போது தீவிரமாக பார்த்தது.
அவனின் பார்வையின் வீரியத்தில் உள்ளம் குறுகுறுக்க நிஷாந்தினி அவன் புறம் திரும்பவும்,
“எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா…” என சத்தமிட்டான் ஆதித்தன்.
“ஆதி….” என அவனை சசிகலா கண்ணீருடன் பார்க்க,
“ம்மா, இப்ப இந்த மண்டபத்துல கல்யாணம் நடந்தாகனும். கல்யாணம்ன்னு சொல்லி தானே ஊர்ல இருந்து கிளம்பி வந்தோம். என்னால மத்தவங்க கேலி செய்யறதை பார்த்துட்டு இருக்க முடியாது. எனக்கு என் மரியாதை முக்கியம்…” என்றான்.
“சொல்லுங்க ஸார். என்ன முடிவு உங்களோடது? உங்க பொண்ணோட விருப்பம் கேட்காம எங்ககிட்ட சம்பந்தம் பேசினது தப்பு. இவ்வளவு தூரம் கொண்டுவந்தது எல்லாமே நீங்க. தப்பு செய்யாம நான், என் குடும்பம் அவமானப்படனுமா?….” என்றான் வார்த்தையில் கூர்மையுடன்.
“தம்பி அவ சின்னவ….”
“எஸ், உங்க மூத்த பொண்ணுக்கும், சின்ன பொண்ணுக்கும் பெருசா ஒன்னும் வயசு வித்தியாசம் இல்லையே? ஒன்றரை வயசு தானே?….” அவன் முடிவெடுத்துவிட்டது புரிந்தது அனைவருக்கும்.
ஒரு நிமிடம் தயங்கினாலும் அத்தனைபேரும் வெளியே சென்றனர். நிஷாவை தவிர்த்து.
அனைவரும் சென்றதும் கதவை சாற்றிவிட்டு தன்னருகே வந்து நின்றவன் என்ன பேசுவானோ என படபடப்புடன் அவள் பார்க்க ஆதித்தன் தன் மொபைலை எடுத்து என்னவோ செய்துகொண்டிருந்தான்.
“இங்க பாருங்க…” என நிஷா பேச வர,
“வெய்ட்…” என அவளை கையமர்த்தி நிறுத்தியவன் எதையோ தேடி பார்த்து அழுத்த அதில் கேட்டவற்றில் நிஷா அதிர்ந்து பார்த்தாள் ஆதித்தனை.
“என்னோட மொபைல்ல ஆட்டோமேட்டிக் ரெக்காடர் இருக்கும். இது அன்னைக்கு நீ பேசினது தானே?…” என்றதும் தலையை அசைத்தாள் ‘ஆமாம்’ என.
“உனக்கு என்னை பிடிக்கும். நான் ஓகே சொன்னா கல்யாணம் பண்ணிப்பேன்னு நீயே சொல்லியிருக்க. ரைட்?…” என்றதற்கும் சஞ்சலத்துடன் தலையசைத்தாள் நிஷா.
“குட். ப்ராப்ளம் சால்வ்ட்…” என்று ஆதித்தன் சொல்ல பேயறைந்ததை போல பார்த்து நின்றாள் நிஷாந்தினி.
அவனிடம் பேசவோ, எதிர்த்து வாதாடவோ கூட முடியாமல் மூளை மரத்த நிலை அவளது.
என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கிரகித்து தெளிவதற்குள் அனைவரையும் உள்ளே அழைத்தவன் நிஷா சம்மதம் சொல்லிவிட்டதாக சொல்ல தொண்டை வறண்டது.
அவனை பிடிக்கும் தான். அக்காவின் கணவனாக வரபோகிறவன் என்னும் உரிமையுடன் பிடிக்கவும் செய்தது நிஜம்.
ஆனால் இப்படி அவனுக்கே மனைவியாகும் நிலை. வீட்டில் அத்தனை பேரும் சந்தோஷமாகிவிட்டனர்.
“என் மானத்தை காப்பாத்திட்டம்மா நீ….” என அவளின் தாய், தந்தை அணைத்துக்கொண்டனர்.
எதற்கும் அவளிடம் எதிர்வினை இல்லை. வாய் திறவாமலேயே எல்லாம் நடந்துகொண்டிருந்தது.
“ம்மா, இன்னொரு முக்கியமான விஷயம். நிஷாவுக்கு அந்த சேரி, தாலி வேண்டாம்…” என்றான் ஆதித்தன்.
“என்ன ஆதி…”
“நான் சொல்றதை கேளுங்க. முகூர்த்தம் பத்தரை மணிக்கு தானே? அதுக்குள்ள இங்க பொட்டிக், இல்லைன்னா பட்டு புடவை கடைக்கு போய் வேற முகூர்த்த பட்டு எடுத்துட்டு வரலாம். அதே மாதிரி திருமாங்கல்யமும்…” என சொல்ல என்ன செய்வது என யோசித்தனர்.
“கஷ்டமா இருந்தா சொல்லுங்க மஞ்சள் கிழங்கு வச்சுப்போம். புடவை மட்டும் வேற எடுப்போம். ஆனா அந்த பொண்ணுக்கு வாங்கினது நிஷாவுக்கு வேண்டாம்…” என்றான் ஆதித்தன் உறுதியாக.
அவனின் முடிவுகள் அங்கே அங்கீகரிக்கப்பட வேலைகள் மடமடவென்று நடக்க ஆரம்பித்தது.
வாழ்க்கையின் முக்கிய பகுதி இப்படி இந்த சூழ்நிலையில் திசைமாறும் என அவள் நினைக்கவே இல்லை.
கைமீறிய விஷயங்களில் பெரிதும் சோர்ந்து போயிருந்தவள் நடப்பவற்றை எல்லாம் தடுக்கவும், கேள்வி எழுப்பவும் முடியாமல் இருந்துவிட்டாள்.
ஆதித்தன், நிஷாந்தினிக்கு திருமணம் என்ற பரபரப்பு மண்டபம் முழுவதும் தொற்றிக்கொண்டது.
வாசலில் வைத்திருந்த போர்டில் ஆதித்தன் பெயருக்கு நேராக நிஷாந்தினியின் பெயர் பொறிக்கப்பட ஜன்னல் வழியாக அதனை வெறித்தாள் நிஷாந்தினி.