மகனின் இந்த வேகமும் தீவிரமும் சசிகலாவை அதிகமாக கலவரமூட்டியது.
கோபத்தில் எடுக்கும் முடிவு அதுவும் வாழ்க்கையின் திருப்பமான திருமணத்தில் எடுக்கும் இந்த முடிவு எப்படி சரியாகும் என பயந்தார்.
அதிலும் நிஷாவின் முகம் அவருக்கு வேதனையாக இருந்தது. ஒன்றும் சொல்லவும் முடியாமல், சூழ்நிலை கைதியாய் அப்பெண் நிற்பதை காண சகிக்கவில்லை.
ஆதித்தனிடம் பேசக்கூடிய தருணம் எப்போதோ கடந்துவிட்டது என அவருக்கும் தெரிந்திருந்தது.
தங்களை எங்கே பேச விட்டான்? எந்தவித சமாதானமும் எடுபடவில்லையே என மருகி நின்றார்.
“இதுல நம்ம என்ன செய்ய முடியும்?…” என சங்கரலிங்கம் ஒருபக்கம் மகனின் பேச்சில் சரி என்று நின்றுவிட்டார்.
கவிப்ரியாவிற்கு தான் இந்த திருமணம் நல்லபடியாக நடந்துவிட வேண்டும் என அத்தனை தவிப்பு.
“ம்மா, நீங்க இதையெல்லாம் நினைச்சு குழம்பாதீங்க. ஆதி முடிவு பண்ணின மாதிரியே நடக்கட்டும். இல்லைன்னா என் மாமியார் எப்ப ஆதி தலையில அவங்க சொன்ன பொண்ணை கட்டுவாங்களோனு எனக்கு பயந்து வருது…” என்று சொல்லி அவரை தேற்றினார்.
“அதுக்கு இது சரியா? நிஷா பாவம் கவி…” என சசிகலா நிஷாந்தினிக்காக பரிந்துகொண்டு வந்தார்.
“அத்தை இதுதான் நடக்கனும்னு இருந்திருக்கு. ஆதிக்கு நிஷா இன்னும் பொருத்தம் தான். விடுங்க…” என சிவநேயனும் சொல்லிவிட்டான்.
“போய் வேலையை பார்ப்போம்…” என மற்ற சொந்தங்கள் நகர,
“இங்க பக்கத்துல புடவை கடை எங்க இருக்கும்?…” என சிவநேயனுடன் ஆதித்தன் பேச,
“நிஷா ப்ரெண்டோட பொட்டிக் இங்க பக்கத்துல இருக்கு. போன் பண்ணினா நேர்ல போய் உடனே வாங்கிக்கலாம். இப்ப போன் பன்றேன்..” என கண்ணை துடைத்துக்கொண்டே அனுராதா சொல்லி அந்த பொட்டிக் பெண்ணுக்கு உடனே அழைத்து பேசியும் விட்டார்.
“பக்கத்துல தான் வீடும். திறந்து வைக்கறேன்னு சொன்னா. நான் போய் எடுத்துட்டு வந்திடறேன்…” என்றார் அனுராதா.
“வேண்டாம், லோகேஷன் மட்டும் சொல்லுங்க….” என சிவநேயனுடன் கிளம்பினான் ஆதித்தன்.
“நீயா போற ஆதி?…” சங்கரலிங்கம் கேட்க,
“நான் எடுத்த முடிவு. என் வொய்ப்க்கு என்ன வேணுமோ நான் பார்த்துக்கறேன்…” என்று சொல்லிவிட்டான் ஆதித்தன்.
“அப்போ ஏற்கனவே இருக்கற திருமாங்கல்யத்தை என்னப்பா செய்ய?…” சசிகலா கேட்கவும்,
“கோவில் உண்டியல்ல போடுங்க. இல்லை வேற எதாச்சும் செய்யனுமா செஞ்சுக்கோங்க. அது எனக்கு வேண்டாம்….” என்றுவிட்டான்.
நிஷா ஓரமாக சென்று அமர்ந்துவிட்டாள். நடப்பதெல்லாம் கை மீறிய விஷயங்கள்.
நெஞ்சத்திற்குள் திடுதிடுவென யாரோ வேகமாக ஓடுவதை போல அவளின் இதயத்துடிப்பு பலமடங்காகி இருந்தது.
“நிஷா…” என்று அருகே வந்த ராதாவிடம்,
“நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கனும்மா. ப்ளீஸ்…” என்று நிஷா சொல்லவும்,
“எங்களை மன்னிச்சிடுடா குட்டிம்மா. வேற வழி தெரியலை…” என சுரேஷ் கேட்க,
“ப்பா ப்ளீஸ், நான் ஏற்கனவே ரொம்ப நொந்துபோய் இருக்கேன். மன்னிப்பு கேட்டு இன்னும் என்னை கஷ்டப்படுத்தாதீங்க….” என்றவள் பேச்சில் கொஞ்சமும் திடமில்லை.
அழுதுவிட கூடாதென்பதில் மனதை இறுக்கமாய் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
அழுதால் மட்டும் மாறிவிடுமா என்ன? எல்லாம் சரியாகிவிடுமா? எப்படியும் இந்த திருமணம் நடக்கத்தான் போகிறது.
ஆனாலும் ஆதித்தன் செய்ததை ஜீரணிக்க முடியவில்லை. பெற்றோர் பேச்சில் ஓரளவு அடுத்து என்ன நடக்கும் என அவளுக்கும் தெரிந்தது.
ஆதித்தன் தன்னை கேட்டதும், அனுராதா உடனே சரி என்றதும் கூட சில இடங்களில் நிகழ்வது தானே?
ஆனால் தான் பேசியதை வைத்து தன்னிடம் அவன் சொல்லியதும், சொல்லிய விதமும்?
ஆற்றாமையை தாண்டிய ஒரு கோபம். ஆனால் எதையும் காண்பித்துவிட முடியாதே?
முந்தையநாள் நிரஞ்சனிக்கு சொல்லியவை எல்லாம் ஞாபகம் வந்து தன்னையே தேற்றிக்கொண்டாள்.
அவனின் நிலையில் அவன் கோபமும், வேகமும் சரி என்றாலும் ஓரிடத்தில் தன்னை கட்டாயப்படுத்தும் முறையில் பேசியதில் கோபமுடன் இருந்தாள்.
“ப்ச், நிஷா கொஞ்சம் அமைதியா இரு. இனி அடுத்து என்னன்னு தான் யோசிக்கனும். கோவப்பட்டு ஒன்னும் ஆக போறதில்லை…” என தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.
நிரஞ்சனி மேல் அவ்வளவு கோபம். தன் வீட்டினரின் மேல் அதற்கு மேல் கோபம். மூன்று நாள் முன்பு எத்தனை பேசியிருப்போம்?
கொஞ்சமாவது யோசித்தார்களா? என ஆதித்தன் மீதான கோபம் எல்லாம் அந்த பக்கமும் சென்றது.
அவர்களால் தானே இத்தனையும் என யோசித்து பார்த்து இன்னுமே பாரமேறி கொண்டது நிஷாவிற்கு.
வெளியே சப்தம் கேட்க ஜன்னல் பக்கம் எட்டி பார்த்தாள். மண்டபத்தின் வாயிலில் வைத்திருந்த மிகப்பெரிய போர்டில் ஆதித்தனுடன் நிஷாந்தினி என சேர்த்திருக்க விழிகள் அதிலேயே நின்றுவிட்டது.
அவளின் மோனநிலையை கலைப்பதை போல கைபேசியில் அழைப்பு வர திரும்பி வந்து எடுத்து பார்த்தாள்.
பொட்டிக் வைத்திருக்கும் தோழி சரிகா தான் நிஷாந்தினிக்கு அழைத்திருந்தாள். அங்கே தானே அவன் சென்றிருக்கிறான் என்ற நினைவுடன் அதனை ஏற்க,
“என்ன நிஷா? என்ன நடக்குது?…” என அதிர்ச்சி விலகாத குரலில் கேட்க,
“ஹ்ம்ம், இப்ப தான். நிரஞ்சனி இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லை. வீட்டுல சொல்லிட்டிருந்தேன் இன்னைக்கு உங்கக்காவுக்கு கல்யாணம். நான் போகனும்ன்னு. இப்ப…” என்றவள் முடிக்காமல் மௌனமாக,
“விடு சரிகா….” என அதை தொடர நிஷா விரும்பவில்லை.
“உன்னோட லெஹெங்கா ப்ளவுஸ் கலர்க்கு மேட்சா தான் புடவை எடுத்திருக்கார் மாப்பிள்ளை…” என சரிகா சொல்ல,
“ஓஹ்…” என்றாள் நிஷா.
“இப்படி மாத்தி பன்றதா இருந்தாலும் ஆள் ரொம்ப நல்ல டைப் தான் போல. புடவை எதை எடுக்கன்னு பார்த்துட்டு ரெடிமேட் ப்ளவுஸ் பக்கம் வந்தார். நான் தான் உனக்கு இங்க தான் ப்ளவுஸ் டிஸைன் பண்ணி தந்தேன்னு சொன்னேன். அது என்ன கலர்ன்னு பார்த்து அதுக்கு மேட்சிங் சேரி எடுத்துட்டார். ஆனா வேகம் தான்…” என சரிகா கொஞ்சம் பாராட்டுதலாக சொல்ல,
“ஹ்ம்ம்…” என்றவள் பேசாமல் இருக்க,
“ஓகே, உன்னோட சூழ்நிலை புரியுது. நான் அங்க வந்து உன்னை பார்க்கறேன்…” என சொல்லி வைத்துவிடவும் போனை வைத்துவிட்டு இருக்கையில் கால்களை மடக்கியபடி அமர்ந்து அதில் முகம் சாய்த்துக்கொண்டாள் நிஷாந்தினி.
இடையில் மகளை என்ன செய்கிறாள் என ராதா ஒருமுறை வந்து பார்க்க உடன் வந்த கவிப்ரியா,
“முகூர்த்தத்துக்கு இன்னும் நேரம் இருக்கே த்தை. கொஞ்ச நேரம் விடுங்க. ஆதி புடவை எடுத்துட்டானாம். நகை கடைக்கு கிளம்பி இருக்கான். கொஞ்ச நேரத்துல வந்திருவாங்க…” என்றாள் கவிப்ரியா நிஷாவுக்கு கேட்கும் குரலி.
எதற்கும் அசையவில்லை அவள். மௌனமாய் யாரையும் நிமிர்ந்து பாராமல் அப்படியே தான் இருந்தாள்.
கூடவே இந்த நேரம் நகைக்கடையா என்றும் தோன்றாமல் இல்லை. இதில் நிச்சயம் தன் தந்தை எதுவும் செய்திருக்க கூடும். அதுதான் அவன் சென்றிருக்கிறான் என தோன்றியது.
மண்டபத்திற்கு அரைமணி நேரத்திற்குள் வந்துவிட்டான் ஆதித்தன். வந்தவன் நேராக நிஷாந்தினியின் அறைக்கு தான் வந்தான்.
இன்னும் குளிக்கவில்லை. இரவு அணிந்திருந்த சுடிதாரில் தான் இருந்தாள் நிஷாந்தினி.
அவன் தான் என்று தெரிந்தும் அவள் அப்படியே இருக்க நிஷாவின் முன் புடவையை வைத்தவன்,
“உனக்கு புடவை. குளிச்சிட்டு தயாராகு…” என்றதும் வேகமாய் எழுந்து நின்றாள்.
“ஒரு நிமிஷம் உங்ககிட்ட ஒன்னு கேட்கனும்…” என அவள் நிறுத்த ஆதித்தன் பார்வை அவள் கண்களை சந்தித்தது.
வார்த்தைக்கு வார்த்தை தன்னை வெறுப்பேற்றி உரிமையாய் மாமா என அழைக்கும் அந்த அழைப்பு இங்கே தொலைந்திருந்ததையும் உணர்ந்தான்.
அவள் அழவில்லை. ஆனால் லேசாய் கசிந்து சிவந்து போயிருந்ததில் அவ்வளவு வலி நிறைந்திருந்தது.
“சொல்லு…” என்றவன் அங்கிருந்த கட்டிலில் சென்று அமர்ந்தான்.
இத்தனை அலைச்சலில் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டதை போலிருந்தது அவனின் ஓய்ந்த தோற்றம்.
அதுவே நிஷாந்தினியை தயங்க செய்தது. கூடவே அவனின் இந்த நிலை கொஞ்சமேனும் கொஞ்சம் பரிதாபத்தையும் தந்தது.
எத்தனைபேர் வெளியில் எத்தனை பேசியிருப்பார்கள்? பேச்சுக்கு சொல்லவா வேண்டும் என்று நினைத்தாள்.
அவனுக்கு இது எப்படி இருந்திருக்கும் என அவன் பக்கமாய் யோசித்தாள் நிஷாந்தினி.
“எவ்வளவு நேரம் இப்படியே இருப்ப நீ? நேரமாகுது நிஷா. என்ன கேட்கனும்?…” என்றான் ஆதித்தன்.
“ஹாங்…” என்று அவனின் தன்மையான பேச்சில் திகைத்து சுதாரித்தவள்,
“ஒருவேளை ஒருவேளை…” என திணறினாள்.
“உனக்கு இவ்வளோ யோசிச்சு பேச வருமா?…” என்றவன் கேள்வியில் தயக்கம் உடைத்தவள்,
“நான் ஒருவேளை யாரையாச்சும் நினைச்சிருந்தா? விரும்பி இருந்தா? மாட்டேன்னு சொன்னா?…” என்று கேட்டுவிட்டாள் நிஷா.
“இவ்வளோ தானா?…” என்றவன் பெருமூச்சுடன் எழுந்து நின்று தன் சட்டையின் கையை சரி செய்தபடி,
“சிம்பிள் லாஜிக். இது என்னோட ஒப்பீனியன் தான். வேற ஒருத்தரை விரும்பற பொண்ணு என்ன தான் கேலியாவே இருந்தாலும் இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிப்பேன்னு எல்லாம் சொல்லாது…” என்று சொல்லி நிஷா அதற்கு பதில் சொல்லும் முன்,
“அக்காவை கிண்டல் பேசலாம், பொசஸிவ்வை தூண்டி விடலாம், சைட் கூட அடிக்கலாம். ஆனா நீ வேண்டாம்ன்னா இப்பவே நான் மேரேஜ் பண்ணிப்பேன்னு சொல்லமுடியாது. அதும் நான் கேட்டப்பவே இல்லைன்னு ஒருவார்த்தையாச்சும் சொல்லியிருப்ப….” என்று சொல்ல பல்லை கடித்தாள் நிஷா.
‘உன் லாஜிக்ல தீயை வைக்க? எங்கடா சொல்லவிட்ட?’ என மனதிற்குள் புலம்பியவள் அடுத்ததாக,
“அக்கா போய்ட்டான்னு என்னை கேட்டீங்களே? ஒருவேளை நான் மாட்டேன்னு சொல்லியிருந்தாலோ இல்லை தங்கச்சின்னு ஒருத்தி நான் இல்லாம போயிருந்தாலோ என்ன பண்ணியிருப்பீங்க?…” என்றாள்.
“உறுதியா உங்கப்பாம்மா மேல கம்ப்ளைன்ட் பண்ணியிருப்பேன். கேஸ் போட்டிருப்பேன். அவ்வளோ ஈஸியா இதை விட்டிருக்க மாட்டேன்….” என அலட்டிக்கொள்ளாமல் அவன் சொல்லவும் அதிர்ச்சியில் உறைந்தே போனாள்.
“இதுல என் தப்பு என்ன இருக்கு? அதுவும் மூணுநாள் முன்னாடியே தெரிஞ்சிருந்தும் வேற ஒருத்தரை விரும்பற பொண்ணை மிரட்டி எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி பண்ணியிருக்கீங்க. என் வாழ்க்கையை சேர்த்து முடிவு பண்ண உன் அம்மாப்பா யார்?…” என்றவன்,
“ஏன் என்னோட ட்ரெஸ் சைஸ் தெரிஞ்சுக்க போன் பண்ணின நீ நான் இங்க கிளம்பி வரதுக்கு முன்னாடியே போன் பண்ணி இப்படின்னு சொல்லியிருக்கனும் தானே? தெரிஞ்சிருந்தா நானே அங்க இருந்தே ஸ்டாப் பண்ணியிருப்பேன். அவ்வளோ வாய் பேசற உனக்கு என்கிட்ட சொல்ல சொல்லியா தரனும்?…” என தீட்டு தீட்டு என தீட்டிவிட்டான் ஆதித்தன்.
‘பேசலை பேசலைன்னு தலைப்படா அடிச்சுக்கிட்டதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு பேசறானே?’ என நிஷாந்தினி வாயை திறக்க முடியாமல் நின்றாள்.