“வேற ஏதாவது கேட்கனுமா?…” என்ற ஆதித்தனின் கேள்வியில் இல்லை என தலையசைத்தாள் நிஷா.
“இங்க பார் இதுவரைக்கும் என் மனசுல எதுவும் இல்லை. கல்யாணம் முடியட்டும்ன்னு தான் நான் பெருசா எந்த அபிப்ராயமும் உன் அக்கா மேல வச்சுக்கலை. அதனால நான் எதுவும் நினைப்பேன்னு அது இதுன்னு நீயா உன் கற்பனையை ஓட விட்டுக்க வேண்டாம்…” என்றவன்,
“இனி தான் நான் உன்னை நினைக்கனும். அதுவும் நினைக்க ஆரம்பிச்சிருவேன் கல்யாணம் முடிஞ்சதும். இது தான் நமக்கானது. நம்மோட வாழ்க்கை. நம்மன்னு நான் சொன்னது உன்னையும் என்னையும். புரியுதா? கிளம்பி வா…” என சொல்லிவிட்டு செல்ல பொம்மை போல அப்படியே நின்றுவிட்டாள் நிஷா.
ஆதித்தன் சென்ற உடனே ராதாவும், கவியும் உள்ளே வந்தனர். அவர்களுடன் சசிகலாவும்.
அனுராதா உறவினர்கள் அனைவரும் இது என்ன பிரச்சனை என ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க சுரேஷிற்கு தாங்க முடியவில்லை.
ஒருபக்கம் மூத்த மகள் என்னவானாள், எங்கே என்ற கோபமும் கவலையும். இப்படி செய்துவிட்டாளே என அவமானமும்.
இன்னொருபக்கம் ஆதித்தனின் ருத்ரதாண்டவம். அவ்வளவு பேசிவிட்டான் அவர்களை.
ஆதித்தனுக்கு இவ்வளவு கோபம் அவனுக்கு வரும் என்பதே அன்று தான் அவர் பார்த்தார். ஆடிப்போனார் அவர்.
உள்ளுக்குள் ஒரு பயம், தன் சின்ன மகள் எப்படி அவனுடன் வாழ்க்கையை வாழ போகிறாளோ என.
இங்கே மகளை குளிக்க அனுப்பி வைத்துவிட்டு சசிகலாவிடம் அத்தனை தூரம் மன்றாடலுடன் பேசினார் அனுராதா.
“அவ பாவம், சின்ன பொண்ணு அண்ணி. மாப்பிள்ளை ரொம்ப கோவமா இருக்கார். அவ விளையாட்டு பொண்ணு. நீங்க தான் பார்த்துக்கனும்…” என சொல்ல,
“இந்த விஷயத்தால தான் ஆதிக்கு இவ்வளோ கோபமும் கூட. இல்லைன்னா ஆதி ரொம்ப அமைதி தான். கோபப்படறவன் கிடையாது…” என சசிகலா சொல்ல,
வேறு என்ன செய்துவிட முடியும் அவரால்? இப்போதைக்கு இந்த சூழ்நிலையை தான் மாற்ற முடியும்.
திருமணம் முடிந்துவிட்டால் எல்லாம் முடிந்துவிடுமா? பிரச்சனை தீர்ந்துவிடுமா? அதன் பின் அவர்கள் எப்படி இருப்பார்கள்?
சஞ்சலத்துடன் தான் இருந்தார் அவர். நிஷாந்தினி வந்ததும் அவளை வேகமாக தயார் செய்தனர்.
நாவல் பழ நிறத்தில் பட்டு புடவையில் மணமகளாய் அவள் தயாராகிவிட்டாள். ஆனால் முகத்தில் அந்த களை கொஞ்சமும் இல்லை.
நிரஞ்சனிக்கு திருமணத்திற்கு புடவை எடுக்க போயிருந்த பொழுதிலேயே அத்தனை சேட்டைகள் நிஷா செய்திருந்தாள்.
“எனக்கு புடவை வேண்டாம். நான் லெஹெங்கா தான் போடுவேன். என் கல்யாணத்துக்கு வேணும்னா சேரி கட்டிக்கறேன். அக்கா கல்யாணத்துல எனக்கு பிடிச்ச ட்ரெஸ், எனக்கு பிடிச்ச கலர் தான். என் ட்ரெஸ், என் உரிமை…” என்றிருந்தவள் இப்போது கண்ணாடியில் தன்னுருவம் பார்த்தாள்.
வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த ட்ராலி கட்டிலில் திறந்து கிடக்க அதில் அவள் ஆசையுடன் எடுத்து தைத்திருந்த அந்த லெஹெங்கா கேட்பாரற்று கிடந்தது.
“பொண்ணு ரெடியா?…” என்ற சத்தத்தில் நிஷாந்தினி உடல் தூக்கிவாரிபோட்டது.
இன்னும் பீதி, அதுவும் அலட்சியமாக ஆதித்தன் சொல்லியதில் இன்னுமே அச்சம்.
‘வழக்கு போடுவேன்’ என எத்தனை இலகுவாக சொல்கிறான் என யோசித்தபடி இருந்தாள் அவள்.
தைரியமெல்லாம் குறைவதை போலிருந்தது. இவனுடன் தன் வாழ்க்கை எப்படி இருக்க போகிறதோ என்ற எண்ணமே அவளை சுழற்றி அடித்தது.
‘நான் கட்டிக்க போறவன் பாவம், என் பேச்சுல என்னாக போறானோ?’ என்ற தன்னுடைய கிண்டல் கேலிகள் எல்லாம் அவளை பார்த்து சிரிப்பதை போலிருந்தது.
‘வாயை வச்சுட்டு இல்லாம என்னென்னவோ பேசி வச்சு இப்ப எல்லாம் ரிவர்ஸ்ல நடக்குது’ என உள்ளுக்குள் தன்னையே திட்டியபடி அவள் வந்தமர்ந்துவிட்டாள்.
எப்படி வந்தோம், யார் அழைத்து வந்தனர் என எதுவும் நிஷாவின் ஞாபகத்தில் இல்லை.
தனக்குள் யோசனைகளில் உழன்றவள் கையை யாரோ பிடிக்கவும் தான் ஸ்ரமனையே வந்தது நிஷாந்தினிக்கு.
அவளின் கையில் மஞ்சள் கிழங்கு கட்டப்பட்ட கயிற்றை கட்டிக்கொண்டிருந்தான் ஆதித்தன்.
“தேங்காயை நல்லா பிடி நிஷா…” என அவள் கையை திருப்பி பிடித்து கட்டி முடிக்க பே என்ற பார்வையுடன் தான் பார்த்தாள்.
விழிகள் விரிய நடப்பதறியாத குழந்தை போல ஒருவித பதட்டத்துடன் அவள் பார்த்த பார்வையில் சசிகலாவிற்கு உள்ளுக்குள் அத்தனை உருக்கம்.
“பாவம் கவி இந்த பொண்ணு…” என மகளிடம் சொல்ல,
“ப்ச், அவனுக்கு தெரிஞ்சா இன்னும் ஆடுவான். பேசாம இருங்கம்மா…” என்றாள் கவிப்ரியா.
அவளின் மாமியார் கமலா எள்ளும்கொள்ளும் வெடிக்க முன்னால் அமர்ந்திருந்தார்.
மகனின் அதட்டல்கள் அத்தனை. அவரை எதுவும் பேச கூடாது என்றிருந்தான் சிவநேயன்.
அதனால் அவர் அசையாமல் அங்கேயே அமர்ந்துவிட்டார். திருமாங்கல்யம் அனைவரின் ஆசிர்வாதத்தையும் பெற்று மணமக்களை நோக்கி மேடைக்கு வந்தது.
பயத்தில் நிஷா அருகிருந்த ஆதித்தனின் கையை இறுக்கமாய் பற்றிக்கொள்ள அவள் கரத்தை தானும் பற்றி ஒரு அழுத்தம் கொடுத்தவன்,
“எதுக்கு இவ்வளோ பயம்? சரியாகிடும்….” என தன் விரல்களால் தட்டியும் கொடுக்க சட்டென்று உருவிக்கொண்டவள் அவனை பார்த்த பார்வையில் ஆதித்தன் மனது அவளுக்காக இளகிய நொடி மாங்கல்யமும் அவன் கை வந்து சேர்ந்தது.
நிஷாவிற்கு சட்டென கண்ணீர் நிறைந்துவிட லேசாய் தலையை குனிந்துகொண்டவள் அந்த வாழ்க்கைக்குள் முழுமனதாக அடியெடுத்து வைக்க முயற்சி செய்தாள்.
இனி இது தான். தன்னுடைய எதிர்காலம் அவனுடன் தான் என்றானபின் எதையும் எண்ணி கலக்கம் கொண்டால் வாழும் வாழ்க்கை நரகமாகிவிடும் என்ற நேர்மறை சிந்தனையை நோக்கி நகர்ந்தாள் நிஷா.
குனிந்தபடி இருந்தவளின் முகத்தை லேசாய் நிமிர்த்திய ஆதித்தன் தன் பக்கம் திருப்ப இதை எதிர்பார்க்காதவள் திகைக்கும் பொழுதே அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டுவிட்டான்.
நிஷாவின் கழுத்தில் இருந்த மாலையை தூக்கி பிடித்திருந்த கவிப்ரியா துணை முடிச்சிடும் முன் ஆதித்தனே மூன்றையும் முடிச்சிட்டிருக்க ஒன்றும் சொல்லாமல் நிமிர்ந்து நின்றாள் கவி.
“ம்மா உங்க மகன் என்னை முடிச்சு போடவே விடலை. அவனே போட்டுட்டான்…” என சசிகலாவின் காதை கடிக்க,
“சரி விடு…” என்றார் அவர் மகள் மனத்தாங்கலுடன் சொல்கிறாளோ என நினைத்து.
“ப்ச், நான் கவலை எல்லாம் படலை. எனக்கு நிம்மதியா இருக்கு…” என்றவள் மாமியாரை பார்க்க உர்ரென அமர்ந்திருந்தார் கமலா.
திடீரென முடிவான திருமணமாக இருந்தாலும் ஒரு சடங்கை கூட செய்யாமல் விடவில்லை ஆதித்தன்.
விட்டால் போதும் எழுந்து ஓடிவிடலாம் என்ற மனநிலையுடன் இருந்தவளையும் இழுத்து பிடித்து செய்ய வைத்துவிட்டான்.
எல்லாவற்றையுமே நிதானமாக, அமைதியான பாவனையுடன் ஆதித்தன் செய்ய செய்ய நிஷாவின் முகத்தில் அவன் குறித்தான எண்ணங்கள் இன்னுமே அதிகமானது.
அவளின் பார்வை அதிகமாய் அவனை தான் யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தது.
மதிய உணவு நேரம் முடிந்து ஆதித்தன் தனியே அமர்ந்துவிட சிவநேயனை தவிர யாரும் அவனுக்கருகில் வரவில்லை. எதையும் பேசவில்லை.
இருக்கும் கோபத்தில் நிச்சயம் மாமனார் வீடு வரமாட்டான் என்று மற்றவர்கள் யோசித்து சுரேஷிடம் வந்தனர்.
“இப்ப இருக்கற கோவத்துல அங்க வருவானோ இல்லையோ தெரியலை. அதனால நீங்க எதுவும் சங்கடப்படவேண்டாம். நிஷாவை நாங்க பார்த்துக்கறோம். ஆதி அவளை கஷ்டப்படுத்தாம வச்சுப்பான்…” என்று சங்கரலிங்கம் சொல்ல,
“நாங்களே இதை எதிர்பார்க்கலை சம்பந்தி. ரஞ்சனி இப்படி செய்வான்னு நினைக்கலை. அந்த கோபத்தை நிஷாக்கிட்ட காமிக்காம இருந்தா போதும். என் பொண்ணு கலகலன்னு சிரிச்சுட்டே இருந்தவ. இன்னைக்கு இந்த விஷயத்தால அவ முகத்துல துளி சிரிப்பு கூட இல்லை…”
சுரேஷின் கண்களில் கண்ணீர் வழிந்துவிட்டது. அவரால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை.
“வருத்தப்படாதீங்க சம்பந்தி…” என்ற சங்கரலிங்கம்,
“சசி நீ போய் அவனை வர சொல்லு. அவங்களை கூட்டிட்டு கிளம்புவோம்…” என்றார்.
திருமணம் முடிந்ததும் மற்ற சொந்தங்கள் எல்லோரும் கிளம்பி இருக்க தாங்களும் நல்ல நேரத்தில் கிளம்பிவிடலாம் என முடிவெடுத்துவிட்டார்.
இப்போது ஆட்களும் குறைவு. காரிலேயே சென்றுவிடலாம் என்று சங்கரலிங்கம் சொல்ல சசிகலா ஆதித்தனிடம் வந்தார்.
“கிளம்புவோம் ஆதி. அப்பா கூப்பிட்டாங்க…” என தாய் சொல்ல,
“எங்க?…” என்றான் அவன்.
“நம்ம ஊருக்கு தான். கல்யாணம் ஆகிடுச்சுல. அதான்…” என அவர் இழுக்க ஆதித்தன் பார்வை நிஷாவை தீண்டியது.
முந்தையநாள் அவள் செய்ததை திருமணம் முடிந்ததில் இருந்து அவன் செய்துகொண்டிருந்தான்.
எங்கு நின்றாலும் அவனின் பார்வை அவளிடம், அவளின் முகபாவங்களிடம், என்ன நினைக்கிறாள், என்ன பேசுகிறாள், என்ன செய்கிறாள் என்பதில் தான் இருந்தது.
இப்போது அனுராதாவிடம் நிஷா அமர்ந்திருக்க அவர் என்னவோ மகளிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
திருமணத்திற்கு வந்திருந்த தன் தோழிகள் நடந்ததில் அதிர்ந்து ஒவ்வொருவரிடமுமாக சொல்லியிருக்க அதன் விசாரிப்புகள் ஆரம்பித்திருந்தது.
எதையும் சமாளிக்கமுடியாமல் திணறுதலுடன் அவள் இருக்க ஆதித்தன் மீண்டும் சசிகலாவை பார்த்தான்.
“கல்யாணம் முடிஞ்சா மாமனார் வீட்டுக்கு தான போகனும்? அது தானே வழக்கம், நம்ம சம்பிரதாயமும்?…” என்றவன்,
“ஏன் அவர் கூப்பிடலையா?…” என்று கேட்டவிதத்தில் சசிகலா பதறி போனார்.
“இல்ல ஆதி, அப்பா தான் நீ அங்க போக பிரியப்படுவியோன்னு இந்த முடிவு எடுத்தார்…” என வேகமாக சொல்ல,
“நான் சொன்னேனா மாட்டேன்னு? என்கிட்ட கேட்கமாட்டீங்களா முதல்ல?…” என கடுப்படித்தவன்,
“அந்த வீடு நிஷாவுக்குமானது. எனக்கொண்ணும் கஷ்டம் இல்லை. இன்னைக்கு போய்ட்டு நாளைக்கு கிளம்பிருவோம் நாங்க. நான் இருக்கேன்…” என்றவனை எந்த வகையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை அவருக்கு.
“என் கல்யாணம் நல்லபடியா தானே நடந்திருக்கு? இதுல எல்லா முறையும் குறையில்லாம இருக்கனும். புரியுதா?…” என்று சொல்லியவன்,
“எனக்கு எப்படியோ நிஷாவுக்கு கொஞ்சம் டைம் வேணும். இன்னைக்கே அவளை கூட்டிட்டு குற்றாலம் போனா சரிவராதுன்னு நினைக்கறேன். ப்ளான் பண்ணின மாதிரி நாளைக்கே கிளம்பலாம்…” என்று சொல்லிவிட்டான் ஆதித்தன்.
இதனை கேட்ட சுரேஷிற்கும் அனுராதாவிற்கும் அவ்வளவு சந்தோஷம். உடனடியாக மறுவீடு செல்லும் சடங்கு ஏற்பாடானது.