“ஒருவேளை அசந்து தூங்கிருப்பா. இல்லையா குளிச்சிட்டிருக்கலாம். ஏன் பயப்படறீங்க த்தை?…” என்ற கவி,
“அந்த காபியை என்கிட்ட குடுங்க. நான் கொண்டுபோறேன்…” என சொல்லி வாங்கிக்கொண்டு செல்ல அப்போதும் ஆதித்தன் தான் கதவை திறந்தான்.
“நிஷா எங்க ஆதி?…” என்று பிளாஸ்க்கை நீட்ட,
“தூங்கறா க்கா. இன்னும் நேரமிருக்கே. நான் எழுப்பி கூட்டிட்டு வரேன்…” என்று சொல்லியவன் கவி சென்றதும் வந்து மனைவியை எழுப்பினான்.
“ம்மா கொஞ்சநேரம்…” என்று திரும்பி படுத்தவள் அந்த வித்தியாசத்தை நுகர அதே பர்ப்யூம்.
“கொஞ்ச நேரம்ன்னா குற்றாலம் கிளம்ப வேண்டாமா நம்ம?…” என்று அவள் எதிரில் நின்றான் அவளின் நிதர்சனம்.
“அப்பறம் முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன். இனிமே கடிச்சு வைக்கிறதுன்னா வெளில யார் பார்வைக்கும் தெரியாம வச்சுக்கோ. மார்க்ஸ் தெரியுது…” என இலகுவாய் சொல்லி சட்டையின் முழுநீள கையை இழுத்து பட்டன் போட்டபடி சொல்லியவன் சாதாரணமாக தான் இருந்தான்.
“எவ்வளோ நேரம் இருக்க போற? குளிச்சு கிளம்பி வா…” என்று கண்ணாடியை பார்த்துக்கொண்டே தலைவாரியபடி ஆதித்தன் சொல்ல திகைப்பு மறைந்து எழுந்து குளியலறை ஓடினாள் நிஷா.
தன் பார்வையிலிருந்து அவள் விலகி செல்லும் வேகத்தை கவனித்தவன் முகத்தில் இளமுறுவல் பூத்தது.
தன்னுடமைகளை எல்லாம் எடுத்து பேக்கில் மடித்து வைத்து ஒழுங்குபடுத்தியவன் பாத்ரூம் கதவை தட்டினான்.
‘இவனை வச்சுக்கிட்டு நிம்மதியா குளிக்கவாச்சும் முடியுதா?’ என்ற நிஷாவிற்கு பற்றிக்கொண்டு வந்தது.
“சொல்லுங்க…” என்றாள் கதவை திறவாமலே அதன் அருகில் நின்று.
“கதவை திற, உள்ள வரமாட்டேன். நான் ரெடியாகிட்டேன்…” என்ற குரலில் ‘மண்டையில் எதை போட்டு உடைக்கலாம்’ என கதவை லேசாய் திறக்க,
“நான் கீழே வெய்ட் பன்றேன். என் பேக்கை எடுத்துட்டேன். நீ கிளம்பி வா…” என்று சொல்லிவிட்டு தலையசைத்து நகர்ந்தான்.
“ரொம்ப தாராள மனசு தான்…” என்று நிஷா சொல்லிவிட,
“இன்னும் ரூம்க்குள்ள தான் இருக்கேன். சார்ஜர் எடுக்கனும்…” ஆதித்தன் சத்தமாகவே சொல்ல,
“போச்சு…” என கதவை மூடிக்கொண்டாள் நிஷா.
“ஹ்ம்ம், சமாளிப்போம்…” என்றபடி ஆதித்தன் கீழே செல்ல அவனின் முகத்தையே தான் அத்தனைபேரும் பார்த்தனர்.
“எதாச்சும் எழுதி ஒட்டிருக்கேனா?…” பொதுவாகவே அவன் கேட்கவும் அத்தனைபேரும் பார்வையை திருப்பிக்கொள்ள,
“மாமா முக்கியமான விஷயம் பேசனும். வாங்க…” என்று சொல்ல அனுராதா மாடியை பார்த்தார்.
“அக்கா நிஷா குளிச்சிட்டிருக்கா. இப்ப வந்துருவா…” என கவியிடம் சொல்லிவிட்டு அவன் செல்ல,
“என்ன கவி என்ன நடந்திருக்கும்?…” என அனுராதா குழம்ப,
“எதுவும் நடக்க வாய்ப்பில்லை தான் போல. விடுங்க. சரியாகிடும். எங்க நடந்தா என்ன?…” என அவரை தேற்றினாள்.
“நேத்து தான் ஆதி கல்யாணம் முடிஞ்சிருக்கு. ஊருக்கு போகும் போது புடவையில போனா தான் நல்லா இருக்கும். பார்க்கறவங்க எல்லாம்…” என்றவளை நிமிர்ந்து பார்த்தவன்,
“இங்க இருந்து எவ்வளோ நேரம் ட்ராவல்? ரீச்சாக நைட்டாகிடும். யார் பார்த்து, என்ன சொல்லுவாங்க? சொன்னாலும் சொல்லட்டும். நான் பதில் குடுத்துப்பேன்…” என்றவன் நிஷாவை பார்க்க அவள் மாடிக்கு படி ஏறிவிட்டாள்.
“அவன் குரலே அப்படித்தான் த்தை. சாதாரணமா தான் சொல்றான். பாருங்க நிஷாவுக்காக அவ வசதிக்காக பார்த்து சொல்றான். இதுலையே நீங்க புரிஞ்சுக்க வேண்டாமா?…” என்றாள் கவி.
ஆனாலும் அனுராதாவிற்கு அது மகளை அதட்டுவதாகவே பட்டது. அந்த தொனியும், அதற்கு மகளும் பதில் பேசாமல், வாய் திறவாமல் சென்றது இன்னுமே அச்சத்தை அதிகப்படுத்தியது.
உடை விஷயத்தில் மட்டுமல்ல நிஷாவின் தனிப்பட்ட விஷயங்களில் கூட யாரையும் அவள் அனுமதித்ததில்லை.
இப்போது மகள் சுரத்தின்றி செல்வதை கண்டவருக்கு இன்னுமே கலங்கி போனது.
ஒருநாளுக்கே இப்படி என்றால் காலம் முழுவதும் வாழ வேண்டுமே? வந்த கண்ணீரை துடைத்தபடி சுரேஷை பார்க்க அவர் கண்களால் ஆறுதல் சொன்னார்.
“சரிங்க மாப்பிள்ளை, நீங்க சாப்பிட வாங்க…” என சுரேஷ் ஆதித்தனை அழைக்க,
“நிஷாவும் வந்திடட்டும்…” என்று சொல்லிவிட்டான் அவன்.
மனைவி வரும் வரை காத்திருந்தவன் அவளுடன் சேர்ந்து உண்டுவிட்டு புறப்பட அவர்களின் பயணப்பைகள் காரில் நிரப்பப்பட்டது.
“நானும் அப்பாவும் நாளை மறுநாள் வருவோம்டா நிஷா. தைரியமா போய்ட்டு வா. எதுவானாலும் எங்களுக்கு கால் பண்ணு. சரியா?…” என்றவர் சொல்ல சொல்ல சிறு புன்னகையுடன் கேட்டுகொண்டிருந்தவள் தலையசைத்துவிட்டு அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி புறப்பட்டாள்.
முன்பக்கம் ஆதித்தன் கார் ஓட்ட அருகில் சிவநேயன் அமர்ந்திருந்தான். பின்னால் கவியுடன் நிஷா அமர்ந்திருக்க மகள் கிளம்பும்வரை பார்த்தவருக்கு அவளும் கிளம்பியதும் வீடே வெறிச்சிட்டது.
அதுவரை அடக்கப்பட்ட கண்ணீரெல்லாம் ஆறாய் ஓட சுரேஷும் மனைவியை தேற்ற முடியாமல் கலங்கி போய் அமர்ந்திருந்தார்.
கவி கேட்பதற்கு மட்டும் நிஷா பதில் சொல்லிக்கொண்டிருக்க கார் செல்லும் திசையை அவள் கருத்தில் எடுக்கவே இல்லை.
சென்னை விமான நிலையத்திற்கு வந்து ஆதித்தன் காரை நிறுத்தவும் தான் இங்கே எதற்கு என பார்த்தாள்.
“இறங்குங்க…” என்று அவனும் இறங்கிக்கொள்ள,
“என்ன ஏர்ப்போர்ட் வந்திருக்கோம்?…” என்ற கவிக்குமே புரியவில்லை.
“ப்ளைட்ல போறோம் கவி…” என்றான் சிவநேயன்.
“சொல்லவே இல்லை…” என பேசிக்கொண்டே நடக்க வழியனுப்பும் பகுதி வரை வந்த ஆதித்தன் ஒன்றும் பேசாமல் அவர்களுடன் செல்ல போன நிஷாவின் கை பிடித்து நிறுத்தி,
“ஏன் என் கூட தனியா…” என்றவன் முடிக்கும் முன் வில்லங்கமாக பேசிவிடுவானோ என,
“போதும்…” என பல்லை கடித்தவள்,
“பை…” என்று கவி, சிவநேயனுக்கு பொதுவாக சொல்லிவிட்டு பார்க்கிங் நோக்கி சென்றுவிட்டாள்.
“என்ன ஆதி?…” என்றாள் கவி.
“கிளம்புங்க…” என்றவன் தானும் காரை நோக்கி வர அங்கே நிஷா நின்றுகொண்டிருந்தாள்.
இருவரும் மட்டும் சென்னையிலிருந்து குற்றாலம். காரை கிளப்பியவன் பார்வை பின்னிருக்கையில் அமர்ந்திருந்த மனைவியை பார்த்தது.
ஜனசந்தடி இல்லாத இடத்தில் காரை நிறுத்தியவன் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருக்க எனக்கென்ன என்பதை போல கையை கட்டியபடி நிஷா கண்ணை மூடினாள்.
அவள் செய்வதை பார்த்தவன் தானும் தன்னிருக்கையை பின்னால் சரிக்க விழித்து பார்த்தவள் அவனின் செயலில் கொந்தளித்து முன்னிருக்கைக்கு மாறிய நிமிடம்,
“எவ்வளோ ஆணவம் உங்களுக்கு? நானும் ஓரளவு தான் பொறுமையா போவேன். எனக்கும் பொறுமை ரொம்பவே கம்மி. என்கிட்ட வேண்டாம். பார்த்துக்கோங்க…” என வெடித்துவிட தன் முன் நீட்டியிருந்த நிஷாவின் விரலை பிடித்து முத்தமிட்ட ஆதித்தன்,
“இப்ப போகலாம். நீ பின்னாடி தூங்கினா நானும் முன்னாடி தூங்கிருவேன். வண்டியை எங்கியாச்சும் விட வேண்டியது தான்….” என்று சொல்லவும் இன்னும் நெற்றிக்கண்ணை திறந்தாள் நிஷா.
“சாதிக்கிறீங்க இல்ல?…” என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் ஆதித்தன் புன்னகைக்க,