“நல்ல மனசோட எந்த நேரம் வந்தா என்ன? இருட்டின பின்னாடி தான் பெண் தெய்வங்கள் வீதி உலா வருவாங்க. நம்ம வீட்டுக்கும் அப்படி மகாலட்சுமி வர போறா. அப்படி நினைங்க பெரியத்தை…” என்று சசிகலா மருமகளை அப்போதே தாங்க ஆரம்பித்துவிட்டார்.
“பார்த்துக்க கவி, உங்கம்மா விட்டா உன் தம்பி பொண்டாட்டிக்கு தங்கத்துல வாசப்படி வச்சிருவாங்க போல மகாலட்சுமின்னு…” என்று கமலா இடக்காக சொல்ல,
“ம்மா ஊருக்கு நைட்டே கிளம்பறதா, நாளைக்கா?…” என்று அவரை அடக்கினான் சிவநேயன்.
அதன் பின் எதுவும் பேசாத கமலா இதோ இப்போது மணமக்கள் வந்ததும் ஆரம்பித்துவிட்டார்.
“வந்ததே சாமத்துல. இதுல சேலைய கட்டிட்டு வர தெரியாதா? இதத்தான் உன்ன பெத்தவங்க சொல்லி வளர்த்தாங்களா?…” என அத்தனைபேரின் முன்பும் வேண்டுமென்றே கேட்க,
“நான் தான் சுடிதார் போட சொன்னேன். என்ன இப்போ? என்கிட்ட சொல்லுங்க…” என்ற ஆதித்தனின் வெடுக்கென்ற பேச்சில் கமலா உள்ளே சென்றுவிட்டார்.
“அவங்க எப்பவும் அப்படித்தான். நீ எதுவும் நினைச்சுக்காதம்மா…” என்ற சசிகலா,
“கவி ஆரத்தி எங்க? இன்னுமா எடுத்துட்டு வர?…” என்று மகளை அழைத்தார்.
நிஷாந்தினியால் நிற்கவே முடியவில்லை. லேசாய் தள்ளாடுவதை போலிருக்க அவளை இன்னும் சேர்ந்து நின்றான் ஆதித்தன்.
“என்ன பண்ணுது?…” என லேசாய் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல கவி வந்துவிட்டாள்.
“செருப்பை அங்க கழட்டிட்டு வந்து நில்லும்மா…” என சசிகலா சொல்லவும் ஆதித்தன் சென்று ரேக் இருந்த இடத்தில் கழற்ற தானும் கழற்றினாள்.
“நிஷா என்ன இது?…” என அவன் முகமே மாறிவிட்டது அவள் கால்களை வெளிச்சத்தில் பார்த்து.
“ப்ச், பேசாம இருங்க. எல்லாரும் பார்த்தா கேட்பாங்க. பதில் சொல்ல தெம்பில்லை எனக்கு…” என அவனை அதட்டியவள் வந்து நின்றுகொண்டாள்.
ஆலம் சுற்றப்பட்டு இருவரையும் உள்ளே அழைக்கப்பட அவன் பார்வை எல்லாம் அவளின் பாதத்தில் தான்.
அத்தனை பெரிதாய் வீக்கமாகி இருந்தது. அதுவே அவளுக்கு இத்தனை தூர பயணம் பழக்கமில்லை என்பதை காண்பிக்க மௌனமாய் பார்த்தான்.
கண்ணுக்குள் மெல்லிய நீர்ப்படலம் நிஷாவின் கண்களை நிறைத்துக்கொண்டே இருந்தது.
வலியில் கூட முகம் சுருக்காமல் பல்லை கடித்துக்கொண்டு அவள் சமாளிப்பதும் தெரிந்தது.
விளக்கேற்றி முடித்ததும் இருவரையும் பால் பழம் சாப்பிட அமர வைக்க ஆதித்தனுக்கு அத்தனை கூட்டத்தில் ஒன்றும் செய்யமுடியவில்லை.
“சரி எல்லாரும் போய் தூங்குங்க. காலையில பேசுவோம். அவங்களும் இவ்வளோ நேரம் உக்கார்ந்தே வந்திருக்காங்க…” என்று சொல்லிய சங்கரலிங்கம் மகனிடம் கண்ணை காண்பித்தார் மேலே செல்லுமாறு.
ஆதித்தன் வந்தபொழுது இருந்த முகத்திற்கும், ஆலம் சுற்றிய பின்பு இருந்ததற்குமான வேறுபாட்டை கண்டுகொண்டார்.
“என்னண்ணே புள்ளைங்க இன்னும் சாப்பிடவே இல்லை. அதுக்குள்ளே போக சொல்றீங்க? இன்னும் எவ்வளோ சடங்கு இருக்கு?…” என அவரின் ஒன்றுவிட்ட சகோதரி கேட்க,
“ஏம்மா ஆதி நாளைக்கு வந்திருந்தா சடங்கை எல்லாம் நாளைக்கு தானே பண்ணியிருப்பீங்க? அப்படி நினைச்சுக்கோங்க. நேத்து சென்னையில இருந்து கிளம்பி ட்ரெயின்ல தூங்கிட்டு வந்ததுக்கே ஐயோ, அம்மான்னு இங்க என்ன பண்ணுனீங்க. புள்ளைங்களுக்கும் அப்படித்தான இருக்கும். போங்கம்மா போங்க…” என அனுப்பிவிட்டார் அவர்.
சசிகலாவிற்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் காரணமின்றி அவர் சொல்லமாட்டார் என கணவரின் முகம் பார்த்து அமைதியாகிவிட்டார்.
“நீங்க போங்கப்பா…” என ஆதி, நிஷா இருவரையும் பார்த்து சொல்ல நிஷா எதுவும் பேசவில்லை.
மௌனமாய் எழுந்துகொள்ள ஆதித்தன் உடன் சென்றான். கூடத்தில் இருந்த ஆட்கள் கலைந்திருக்க சுற்றிலும் பார்த்தவர் மாடிப்படிக்கருகே சென்ற மகனிடம் வந்து,
“என்னப்பா? உடம்புக்கு எதுவும் முடியலையா?…” என்றார் கவலையுடன்.
நிஷாவும் நின்றுவிட்டாள் அவன் வராமல். மாடிப்படியின் மரத்தினாலான கைப்பிடியை பிடித்திருந்தவள் கீழுதட்டை கடித்தபடி திரும்பி இருக்க,
“கால் எல்லாம் வீங்கி இருக்குப்பா. லாங் ட்ராவல் ஒத்துக்கலை போல?…” என்றான் அவன் தகப்பனிடம்.
“சரி எல்லாரும் போய்ட்டாங்க. நீ கை தாங்கலா கூட்டிட்டு போ…” என அவனின் முகம் பாராமல் சொல்லிவிட்டு சென்றுவிட ஆதித்தன் முகத்தில் இளம்புன்னகை.
“என்ன ஆதி? என்னாச்சு?…” என சசிகலா வர,
“ம்மா ரத்தக்கட்டுக்கு பூசற அந்த எண்ணெய்யை எடுத்து வைங்க. வரேன்…” என்று மகன் சொல்லவுமே,
“நிஷாவுக்கா? கால் ரத்தம் கட்டிருச்சா?…” என கேட்டவர் நிஷாவை பார்க்க,
“ம்மா, நான் பார்த்துக்கறேன்…” என்று அவரை போகும்படி கையை காண்பித்தான்.
“இல்ல ஆதி…” என அவர் தயங்கவும்,
“அப்ப உங்க ரூம்க்கு கூட்டிட்டு போய் பார்த்துக்கறீங்களா? நான் போகவா?…” என்று பல்லை கடிக்கவும் அடுத்த நொடி நகர்ந்துவிட்டார்.
“நீ ஏன் நின்னுட்ட? மேல தான் ரூம். வா…” என சொல்லி அவள் மெல்ல காலை எடுத்து வைக்க வலி உயிர் போனது.
“கால் வலிச்சா சொல்லமாட்டியா நீ? அவ்வளோ அடமென்ட்…” என்றவன் சட்டென அவளை கையில் தூக்கிக்கொள்ள,
“என்னை நீங்க இறக்கி விடலை, நான் மனுஷியா இருக்கமாட்டேன்…” என்று திமிறினாள் நிஷா.
“காலையில நீங்க மனுஷனான்னு என்னை கேட்ட? இப்ப நீ மனுஷியா இருக்க முடியாதுன்னு சொல்ற? அப்போ சேர்ந்தது கரெக்ட் தான்…” என பேசிக்கொண்டே அறைக்கு வந்தவன்,
“கதவை திற…” என ஒரு அறையின் முன் நிற்க,
“மாட்டேன்…” என்றாள் வீம்புடன்.
“எனக்கு ஒண்ணுமில்லை. காலாலே ஒரே மிதி. கதவை தான் சொன்னேன். அப்பறம் கீழே எல்லாருக்கும் கேட்கும். எல்லாம் என்னன்னு வருவாங்க…” என்றதும் கதவை சட்டென தள்ளி திறந்துவிட்டாள்.
“நீங்க என்னை மி…” என்று ஆரம்பிக்க,
“என்னை அப்படி மிரட்ட வைக்கிற நீ…” என அவன் முடித்தான்.
‘இவன்கிட்ட பேசிட்டாலும் கழுதையில’ என அப்போது தோன்ற ஆரம்பித்தது நிஷாந்தினிக்கு.
கட்டிலில் அமர வைத்தவன் அவளின் காலை பார்க்க செருப்பின் தடமெல்லாம் கோடாய் பதிந்திருந்தது.
“ஷிட்…” என பல்லை கடித்தான்.
என்னவும் செய்துகொள் என்று நிஷாந்தினி இறுக்கமாய் அமர்ந்திருக்க அவளையும் முறைத்தவன்,
“உங்க வீட்டுக்கு சொல்லிடு வந்துட்டோம்ன்னு…” என்று அவளின் போனை தந்துவிட்டு கீழே சென்றான்.
அவன் இருக்கும் வரை பிடிவாதமாய் அவன் முன் வலியை காண்பித்துக்கொள்ளாமல் இருக்க பிரயத்தனப்பட்டவள் கண்ணீர் கரகரவென இறங்கி கன்னம் நனைத்தது.
கண்ணீரை துப்பட்டாவால் துடைத்துக்கொண்டவள் வீட்டிற்கு அழைத்து தாயிடம் மட்டும் வந்துவிட்டதாக சொல்லி அவர் மேலும் விசாரிக்கும் முன்,
“நிறையப்பேர் இருக்காங்கம்மா. நாளைக்கு பேசறேன்…” என்று வைத்துவிட்டாள்.
இன்னும் ஓரிரு வார்த்தை அவர் எதுவும் கேட்டிருந்தால் கோபத்தில் வெடித்துவிட கூடும் என நாவை அடக்கிக்கொண்டவள் சாய்ந்துகொண்டாள் கட்டிலில்.
அவனிடம் இனி ஒருவார்த்தை கூட சொல்ல கூடாதெனும் வைராக்கியம், இப்போது வலிக்க வலிக்க அதிகமானது.
அந்த வீடு, அறை எதுவுமே அவளை தொடவில்லை. எதையுமே உரிமையாக உணர முடியவில்லை.
மீண்டும் கண்ணீர் இறங்க கதவு திறக்கும் சத்தத்தில் சட்டென அவன் வருகிறான் என துடைத்துக்கொண்டவள் அமைதியாய் இருக்க,
“நானும் கவனிக்காம விட்டுட்டேன். உன்னோட பட்டியாலா பேண்ட் எதையும் காமிக்கலை…” என்றான் ஆதித்தன் கவலை பொங்க.
“இது என்ன?…” என அவன் கையில் அந்த எண்ணையை ஊற்றவும் கேட்டவள் தனது பேண்டை முட்டிவரை அவன் உயர்த்தவும்,
“ஆமா வலிக்குது. எல்லாம் உங்களால. உங்களால தான்…” என அந்த வலியில் பொறுக்கமாட்டாமல் கத்த,
“இந்த எண்ணெய் தேய்ச்சா வீக்கம் குறையும்…” என சொல்லி கையில் ஊற்றிய எண்ணையை காலில் பரபரவென தேய்க்க இன்னுமே அலறினாள்.
“என்னை ஏன் இந்த பாடு படுத்தறீங்க?…” என்ற சத்தம் அழுகையில் முடிய அவன் விடவில்லை.
இரு கால்களிலும் தேய்த்து முடித்து சிறிது நேரம் விட்டு வெந்நீர் ஒத்தடம் வைக்க கொஞ்சம் பரவாயில்லை என்பதை போலிருந்தாலும் பாதமெல்லாம் எரிந்தது.
மெல்லிய விசும்பலுடன் செய்வதறியாமல் மனஉளைச்சலில் அழுதுகொண்டே அமர்ந்திருந்தவள் மனதில் அவனின் கவனிப்புகளும் பதிந்துகொண்டு தான் இருந்தது.
எதுவும் பேசாமல் அவன் தன் கைகளை கழுவிக்கொண்டு வந்து அவளருகில் அமர்ந்து தோளில் கைகளை போட்டுக்கொள்ள அவள் அழுகை மீண்டும் உயர்ந்தது.
“என்ன இப்போ? சரியாகிடும்…” என சத்தம் போட்டவன்,
“வாய்ல என்ன கொழுக்கட்டையா வச்சிருந்த? சொல்லவேண்டியது தானே கால் வலிக்குதுன்னு? பேச வேண்டிய எதுக்கும் பேசிடாத. பேசாம இருந்து பிரச்சனையை இழுத்து வச்சுக்கோ….” என பொறுமை இழந்து கத்திவிட நிஷாந்தினிக்கு இன்னுமே கண்ணீர்.
“ப்ச், சரி. முஸுமுஸுன்னு அழுதுட்டே இருக்காத முதல்ல. கொஞ்ச நேரத்துல சரியாகிடும்…” என தன் மார்பில் வாட்டமாய் சாய்த்துக்கொண்டவன் கொஞ்சம் தணிந்து சொல்ல,
“இருந்துட்டு போகட்டும்…” என அலட்டிக்கொள்ளாமல் தான் அப்போதும் பதில் கொடுத்தான் அவளுக்கு.
“எப்பவும் புடிக்காது. நீங்க பன்ற ஒன்னொன்னும்…” என்று சொல்லியவள் அவன் பார்வையின் அழுத்தத்தில்,
“இதுவும் புடிக்கலை. இப்படி பார்த்தே என்னை ஆஃப் பன்றதும் புடிக்கலை. இங்க இருக்க புடிக்கலை. எதுவுமே வேண்டாம்…” என மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டே விசும்பினாள்.
எல்லாம் அவன் கை வளைவில். அவளை அணைத்து லேசாய் தட்டிக்கொடுத்தபடி வீங்கிய பாதங்களை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான் ஆதித்தன்.