“அப்பவும் அதட்டி மிரட்டறது தான். இது நல்லபழக்கம் இல்லை…” என்று சொல்லியவள்,
“என் கால் வலிக்கலை. வலிச்சாலும் உங்ககிட்ட சொல்லமாட்டேன்…” என்றாள் பிடிவாதமாக.
“உன்னை…” என்று வந்து அவளின் கன்னம் பற்றியவன் பார்வை சட்டென மாற சுதாரித்தவள் அவனை பிடித்து பின்னே தள்ளிவிட்டாள்.
“சரி சரி. கீழ எல்லாம் இருக்காங்க. குளிச்சிட்டு கீழ வா…” என்று அவளின் கன்னத்தை தட்டிவிட்டு முத்தமிட்டு சென்றுவிட்டான் அவன்.
தன் பேச்சும், செய்யும் எதுவும் அவனை பாதிக்கவில்லை என புரிந்தது நிஷாந்தினிக்கு.
தன்னையே இத்தனை படுத்துகிறானே? நிரஞ்சனியாக இருந்திருந்தால் என்ற எண்ணம் சட்டென தலைதூக்க,
“ச்சீ ச்சீ…” என நினைவை அடித்து விரட்டினாள்.
கிளம்பி கீழே சென்றவளை அத்தனை சொந்தங்களும் சூழ்ந்துகொண்டு ஆளாளுக்கு பேச ஆரம்பிக்க பதில் தர முடியாமல் திணறித்தான் போனாள்.
இதில் அத்தனைபேரின் பார்வையும், கவனிப்பும் தன் மீதிருக்க நிஷாந்தினிக்கு ஒருவித அசௌகரியத்தை தந்தது.
எல்லாவற்றிற்கும் சிகரமாக சிலபல இலைமறைவான கேள்விகளும், கேலிகளும் நிஷாவின் பொறுமையை சோதிக்கவே செய்தது.
அங்கே அவர்கள் மத்தியில் இன்னும் அவளின் சங்கடங்கள் அதிகமாவதை உணர்ந்தாள் நிஷாந்தினி.
“ப்ச், அண்ணி என்ன பேச்சு இது? சித்தி நீங்க சொல்லமாட்டீங்களா?…” என கவி வந்து சத்தம் போட,
“என்ன பேச்சுன்னா? எதுவுமே சொல்லாம இருந்தா எப்ப இவ ஆதி கூட ஒட்டறது? பேச பேச தான் அவளுக்கும் புரியும்…” என்றனர் உறவுகள்.
“பொறுமையாவே புரியட்டும்…” என்ற கவி,
“நீ வா நிஷா…” என எழுப்பி சசிகலாவின் அருகில் அமர்த்திவிட்டாள்.
“நீங்க தான் உங்க மருமகளை கவனிக்கனும்…” என்று சொல்லியே.
‘நான் என்ன சின்ன பிள்ளையா? விட்டா அத்தனைபேரையும் வந்து பாருன்னுவேன். என் நேரம்’ என நினைத்தவள் ஆதியையும் சேர்த்தே நினைக்க அவள் எண்ணங்கள் அவனை கொண்டு வந்து சேர்த்ததை போல எதிரே வந்தமர்ந்தான்.
அடுத்து வந்த இரண்டு நாட்களில் வாழ்க்கையே வெறுத்து பெட்டி படுக்கையை கட்டிவிட்டால் என்ன என்று நினைக்கும் அளவிற்கு வெளியில் சொந்தங்களும், அறையில் கணவனும் அவளை ஆட்டிப்படைத்தனர்.
தான் பேசும் பேச்சுக்களுக்கு ஒன்று பதில் சொல்லி தன்னை நிறுத்தி வைக்கிறான், இல்லை பேசாமலே வாயடைக்க செய்து நிறுத்தி வைக்கிறான்.
அதிலும் இரண்டு நாள் விடு மூன்றாம் நாள் மீண்டும் இரவில் நெருங்கியவனை முறைத்து பார்க்க அவனிடம் எந்தவித எதிர்வினையும் இல்லை. விலகலும் இல்லை.
நிஷாவின் வார்த்தைகள் எல்லாம் வெளிவரும் முன் அவனுள் விழுங்கிக்கொண்டவன் செய்கையில் அவனின் மேல் அன்றைய அவளின் எதிர்வினை இன்னும் அதிகமாகவே இருந்தது.
மூன்று நாட்கள் விருந்து உபசாரங்கள் எல்லாம் முடிந்து நான்காம் நாள் சொந்தங்கள் அற்ற அந்த வீடு வெறிச்சோடி கிடந்தது.
அந்த வார இறுதியில் நிஷாந்தினியின் தாய் தந்தை வருவதாக இருக்க அவர்கள் வந்து செல்லவும் கவிப்ரியா கிளம்புவதாய் இருந்தது.
எழுந்து வந்தவள் முகத்தில் அத்தனை ஆசுவாசம். ஆதித்தனும் அறையில் இல்லாமல், சொந்தங்களும் இல்லாமல் யாரும் தன்னை இறுக்கி பிடிக்கமாட்டார்கள் என்ற ஆசுவாசம்.
“என்ன பாப்பா இன்னைக்கு உன் முகமே பளிச்சின்னு இருக்கே?…” என்று செந்தா காபியை தரவும்,
“அப்படியா?…” என்றாள் சிறு புன்னகையுடன்.
“இல்லையா பின்ன? அம்புட்டும் நடுவீட்டுல உக்கார்ந்துட்டு உன்னை கேள்வி கேட்டே என்ன பாடு படுத்துதுங்க…” என்று செந்தா சொல்லவும் ஒரு புன்னகை தான் நிஷாந்தினி முகத்தில்.
“சரி, விசேசமின்னு வந்தா எல்லாந்தான இருக்கும்? ஆமா இந்த ஊர சுத்தி பாக்க போவலியா?…” என்று கதை கேட்க,
“அடுப்படில வேலையே இல்ல, என்ன செந்தா?…” என்று சசிகலா வந்துவிட்டார்.
“உக்காருங்கத்தை…” என இயல்பாய் நிஷா சொல்லவும்,
“காபி குடிச்சிட்டியா நிஷா?…” என கேட்டவர்,
“உன் துணிமணி எல்லாம் எடுத்து அடுக்கிட்டியா நீ?…” என்றார்.
“இன்னும் இல்லையே….” என்றவளுக்கு எங்கே வைப்பதென தெரியவில்லை.
ஆதித்தனின் அறையில் இருந்த பெரிய வாட்ரோப்பில் நிறைய இடங்கள் அவனின் உடைகள் தான்.
சிலவற்றில் சின்ன சின்ன பெட்டிகளும், பைல்களும் இருந்தது. அதனால் அவனிடம் கேட்காமலே தனது பெட்டியிலேயே எல்லாம் எடுப்பதும், வைப்பதுமாக இருந்தாள்.
“ஆதி சொல்லலையா?…” என கேட்டவர் அவளின் முகபாவனையில்,
“நீ வா, நான் சொல்றேன்….” என்று அவளை அழைக்க,
“இல்லை. வேண்டாம்…” என்றவளுக்கு முகம் கன்றியது.
இது அவன் தானே சொல்ல வேண்டும்? சொல்லாமல் தான் எப்படி எடுத்து வைக்க? அதுவும் அவன் அனுமதி இல்லாமல் என யோசித்து தயங்கி அமர்ந்திருந்தாள்.
“என்னம்மா? நீ வான்னு சொல்றேன்ல…” என அவளை அழைத்துக்கொண்டு சென்றவர் அங்கிருந்த பொருட்களை அப்புறப்படுத்த அவருக்கு தானும் துணையாய் செய்தாள்.
ஒரு சுவற்றை மொத்தமாய் நிறைத்திருந்தது அந்த வாட்ரோப். நிஷாந்தினியின் உடைகளை வைத்தது போகவே நிறைய மிச்சமிருக்கும் போலிருந்தது.
“இதுல வச்சுக்கடா. பத்தலைன்னா புதுசா ஒரு பீரோவை தூக்கிப்போம். சரியா?…” என கேட்க,
“இல்லை, அவங்க வரட்டும் த்தை…” என்றாள் அப்போதும்.
“என்னம்மா? எல்லாத்துக்கும் அவன் சொல்லனுமா? இது நம்மோட வீடு. இங்க ஆதிக்கு என்ன உரிமையோ அது உனக்கும் தான். எனக்கப்பறம் இந்த வீட்டையே நீ தான் பார்த்துக்க போற…” என்று சொல்லி,
“ஆதி கொஞ்சம் முன் கோபக்காரன். மத்தபடி சொன்னா புரிஞ்சுக்கற பையன் தான். உன்கிட்ட கொஞ்சம் கோபமா நடந்தா கூட நீ தான் அவனை பார்த்துக்கனும். கொஞ்சம் விட்டுக்குடுத்து புரிய வச்சு அவனை உன் வழிக்கு கொண்டுவாடா…” என்றார் சசிகலா தன்மையாக.
“பெத்த தாய், உங்க பேச்சோ, மாமா பேச்சோ அங்க எங்க கேட்டாங்க உங்க பிள்ளை? இதுல நாலு நாளாகளை கல்யாணமாகி. நான் அவரை புரிஞ்சு அவர் நான் சொல்றதை புரிஞ்சு? நடக்கற கதையா?…” என்று சொல்லிவிட்டாள்.
அவள் சொல்லியதென்னவோ சாதாரண ஒரு தொனியில் தான். ஆனால் சசிகலாவிற்கு தான் சுருக்கென தைத்தது.
“உண்மை தானே த்தை. ஆனா நான் உங்களை கஷ்டப்படுத்தனும்ன்னு சொல்லலை. ஆனா நடக்கறதை பேசலாம் த்தை. இந்த பார்மாலிட்டியா பேசறது வேண்டாம்…” என சொல்லி சிரித்தவள்,
“உங்க மகன் யாருன்னு உங்களுக்கு தெரியும், இதுல நிஜமா என் பிள்ளை அப்படி இப்படின்னு சொல்லி எனக்கு சிரிப்பு தான் வருது. அதான் பார்த்திட்டிருக்கேனே உங்க பிள்ளையை. ஜோக் பன்றீங்க…” என புன்னகைத்து கண் சிமிட்டினாள்.
“சிரிச்ச முகமா உன்னை பார்க்க இப்ப தான் மனசு சந்தோஷமா இருக்கு. நிம்மதியாவும் இருக்கு. உன்னோட எதிர்காலம் இப்படி திசைமாறி போயிருச்சேன்னு நான் ரொம்ப கவலைப்பட்டேன்ம்மா. நீ நம்புறியோ இல்லையோ? அது நிஜம் தான்…” என்றவரை கனிவுடன் பார்த்தவள்,
“இதை வேணும்னா நம்பலாம். அதையுமே நீங்க என்கிட்ட நீ நம்பலைன்னாலும் அது தான் நிசம். இப்படி சொல்லனும் த்தை…” என இன்னுமே சிரித்தவள் தன் பெட்டியை பிரித்தாள்.
“நானும் ஹெல்ப் பன்றேன்…” என்று முதலில் ஒன்றை அடுக்க ஆரம்பிக்க ஆதித்தன் யாருடனோ போனில் பேசிக்கொண்டு வருவது கேட்டது.
“அவன் வந்துட்டான். நீ எடுத்து வை. நான் அவனுக்கு என்ன வேணும்ன்னு கேட்கறேன்…” என நகர போக,
“ஏன் அவருக்கு வாயில்லையா? நீங்க கேட்டா தான் சொல்லுவாங்களா? உங்க பிள்ளையை நீங்க கெடுத்து வச்சுட்டு என்னையும் அதை கண்டினியூ பண்ண சொல்றீங்க. முதல்ல தானா கேட்கட்டும்…” என கையை பிடித்துக்கொண்டாள் நிஷாந்தினி.
“நிஷா, விடும்மா. என்ன இது?…” என சசிகலா திணற,
“உங்க மகன் தானே? என்ன பயம்? அவர் என்ன பூச்சாண்டியா? அதென்னவோ அப்படிதான் இருக்கார். ஆனா அதுக்கெல்லாம் பயப்படலாமா? மண்டையில நாலு தட்டி தட்டி நான் உன் அம்மாடான்னு சொல்லவேண்டாமா?…” என்றதும்,
“அதெல்லாம் இல்லம்மா. நல்ல பையன்…” என பாவம் போல சொல்லி நிஷா பார்த்த பார்வையில்,
“கொஞ்சம் அப்படியே வளர்ந்துட்டான்…” என்றார்.
“தானா வளர்ந்தாராமா?…” நிஷா அதற்கும் கேள்வி கேட்க,
“சரி, நான் வளர்த்துட்டேன். போதுமா? இப்ப விடு…” என்று அவளின் பிடியில் இருந்து தன் கையை உருவ பார்க்க உள்ளே வந்த ஆதித்தன் என்னவென விழிகளால் நிஷாந்தினியை கேட்க பதில் சொல்லாமல் சசிகலாவை பார்த்தாள்.
“என்கிட்டயும் வாயை திறந்து கேட்டா தான் சொல்லுவேன். சும்மா அவர் முகத்துல என்ன இருக்குன்னு பார்த்து கண்டுபிடிக்க என்னாலாகாது. எனக்கென்ன வேற வேலை வெட்டி இல்லையா?…” என்றாள் அவரிடம் நிஷா.
“நீ பேசாம இரு…” என்ற சசிகலா மகனிடம் திரும்பி,
“நிஷாவோட ட்ரெஸ் எல்லாம் இன்னும் அடுக்கவே இல்லையே ஆதி. அதான் ஹெல்ப் பண்ணேன். உனக்கு என்ன வேணும்?…” என்று கேட்டு மருமகளின் கண்டன பார்வையை வாங்கிக்கொண்டார்.