“கிட்ட வராதீங்க. இன்னைக்கு அத்தை வந்து ட்ரெஸ் எல்லாம் எடுத்து வைன்னு சொல்றாங்க. இல்லைன்னா நான் எடுத்தே வச்சிருக்கமாட்டேன். இதை சொல்ல கூட தோணலை இல்ல உங்களுக்கு?…” என்றாள் நிஷா ஆவேசமாக.
“நீ இந்த ரூம்க்கு வந்தன்னைக்கே சொல்லிட்டேன் இது நம்மோடதுன்னு. உனக்கு என்ன பண்ணனுமோ பண்ணிக்கோன்னு. இதுக்கு மேல ஒன்னொன்னும் தனியா சொல்லனுமா?…” என நிதானமாக ஆதித்தன் சொல்ல திகைத்து போனவளிடம் ஒரு நொடி மௌனம்.
“இதுல இவ்வளோ திங்ஸ் வச்சிருக்கீங்க. நான் எங்க வைக்கன்னு எப்படி தெரியும்?…” என்றாள் இதற்கு உன் பதில் என்ன என்பதை போல.
“அதை கேட்டிருக்க வேண்டியது தானே? பிடிவாதமா எதையும் கேட்காம நீ மட்டும் தான் இருக்க முடியுமா?…” என ஆதித்தன் துளைக்கும் பார்வையுடன் கேட்டு,
“ஒன்னொண்ணுக்கும் நான் சொல்லித்தான் நீ செய்யனும்ன்னு இருந்தா வாழ்க்கைல அது கஷ்டம். அதுக்காக இவன் என்ன பெரிய இவன், இவன்கிட்ட நாம கேட்கிறதான்னு நினைச்சா நம்ம வாழ்க்கை அங்கயே நின்னுடும்…”
“ரொம்ப புத்திசாலித்தனமா பேசறதா நினைப்பா? இவ்வளோ யோசிக்கிறவர் எனக்கு டைம் குடுக்கனும், நான் இந்த கல்யாணத்தை அக்ஸப்ட் பண்ண விடனும்ன்னு ஏன் யோசிக்கலை?…”
“நிஜமா யோசிக்கலை. கல்யாணம் முடிஞ்சது. உனக்கும் என்னை புடிச்சு கல்யாணம் முடிஞ்சது…”
“திரும்ப திரும்ப இதையே சொல்லாதீங்க. பத்திக்கிட்டு வருது…” என்று அவளின் கோபம் எகிறியது.
“ஓகே, இப்படி சொல்லலாமா? இது உனக்கு திடீர் கல்யாணம், எனக்கு திடீர் பொண்ணோட கல்யாணம். கிட்டத்தட்ட ரெண்டுபேருக்குமே ஒரே மனநிலை தான். யோசிக்காமல் முடிவு பண்ணலை…” என்றவன்,
“கல்யாணமே முடிஞ்சது. அடுத்து அதுக்கு மேல யோசிக்க என்ன இருக்குன்னு நினைச்சேன். அதான். அதுவும் உன்னை கேட்டு தானே எல்லாம்…” என்றவனின் மேல் மீண்டும் கனன்ற அந்த கோபத்தில் அவனை தள்ளிவிட்டவள் கையிலிருந்த கை பையும் கவிழ்ந்தது.
“அச்சோ…” என்று எடுத்து மீண்டும் உள்ளே வைக்க ஒவ்வொன்றுக்கும் அவனுமே உதவினான்.
இறுதியாக அவன் கையில் கிடைத்ததை பார்த்ததும் அத்தனை நேரமிருந்த நிதானம் எல்லாம் எங்கோ பறந்திருந்தது.
நிரஞ்சனி, ஆதித்தன் பெயரில் அவர்கள் மாலத்தீவிற்கு தேனிலவு செல்வதற்காக நிஷாந்தினி எடுத்து வைத்திருந்த பயணச்சீட்டு.
“என்ன இது?…” என்று அவளின் முன் அதனை இரண்டாக கிழித்து எறிந்தவன் கோபத்தில் மிரட்சியுடன் நிஷாந்தினி பின்வாங்கினாள்.
திருமணம் முடிந்து தங்கள் வீட்டிற்கு வரும் பொழுது இருவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்க வாங்கி வைத்திருக்க அவளுக்கு தான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
அதை கேட்டவன் அடுத்து அரைமணி நேரத்திற்கும் மேல் ஓயவில்லை, ஒழியவில்லை. அத்தனை பேச்சுக்கள்.
இனி நிரஞ்சனியாக பேசினாலும் அவளுடன் பேச்சு வைத்துக்கொள்ள கூடாதென்று சொல்ல,
“நீங்க சொன்னாலும் நான் பேசமாட்டேன். எல்லாம் அவளால தான். நான் கிடந்து அனுபவிக்கறேன்…” என அப்போதும் நிஷாந்தினி வாய் நிற்கவில்லை.
“முதல்ல அந்த ட்ராவல்ஸ்க்கு போன் பண்ணி கேன்சல் பன்றேன். எனக்கென்ன தலையெழுத்தா?…” என அவள் போக்கில் வேகமாய் பேசிவிட்டு தனது போனுடன் கீழே தப்பித்தோம், பிழைத்தோம் என ஓடி வந்துவிட்டாள்.
சற்றுமுன் ஆதித்தன் தன்னிடம் சொல்லியதை போல பயந்து தான் வந்துவிட்டாள் நிஷாந்தினி.
அழுகையாக பொங்கி வந்தது. எவ்வளவு பேச்சுக்கள், அவளை, அவளின் பெற்றோரை.
நிரஞ்சனி பற்றி தெரிந்தும் அவளின் பெற்றோர் தங்களை சென்னை வரை வரவழைத்து அவமதித்ததை ஆதித்தனால் மன்னிக்க முடியவில்லை.
நிஷாந்தினி கீழே வந்தமர்ந்ததும் சசிகலா என்னவோ என பதறி வர கவியும் வந்துவிட்டாள்.
“என்னம்மா நிஷா?…” என்ற சசிகலாவிடம்,
“நீங்க கொஞ்சம் பொறுமையா பொறுமையான பிள்ளையா பெத்திருக்கலாம். அட போங்கத்தை…” என்று கண்கள் லேசாய் கலங்கியிருக்க விசும்பியபடி சொல்லிய நிஷாவை தன் தோளில் சாய்த்துக்கொண்டார் சசிகலா.
வெகுநேரம் கழித்தே ஆதித்தன் கீழே வந்தான். வந்தவன் நிஷாவை கவனிக்க அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவள்.
சங்கரலிங்கமும் உணவுக்கு வந்துவிட்டார் வீட்டிற்கு. அவர் வந்ததும் அனைவரையும் வைத்துக்கொண்டு தான் சசிகலா கவியின் ஜாடையில் பேச்சை ஆரம்பித்தார்.
“அடுத்து என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க?…” என கணவரிடம் கேட்க,
“எதை பத்தி பேசற சசி?…” என்றார் சங்கரலிங்கம்.
“நம்ம ஆதி, நிஷா ரிசப்ஷன் பத்தி. அவங்களுக்கு ரிசப்ஷன் வைக்கலாமே? கல்யாணம் தான் இப்படி அவசரமா நடந்திருச்சு. பொண்ணு மாறிருக்குன்னு அங்க வந்தவங்களுக்கு தான் தெரியும். இருந்தாலும்…” என்றவரை முறைத்தான் ஆதித்தன்.
“அதை நீங்க மேடை போட்டு ஊரை கூட்டி சொல்ல போறீங்களா?…” என்று சுள்ளென கேட்க,
“இருப்பா ஆதி. அம்மா என்ன சொல்றான்னு கேட்போமே?…” என்றவர் நிஷாவை பார்க்க அவள் எதையும் கண்டுகொள்ளவில்லை.
“என்ன சொல்றாங்க? எனக்கு புரியாம இல்லை. நல்ல விஷயத்தை விட இந்த மாதிரி விஷயம் நீங்க சொல்லாமேல் இந்நேரம் ஊருக்கே தெரிஞ்சிருக்கும். அதுக்கு ஒரு ரிஷப்ஷன் வேறையா? சும்மா இல்லாம எல்லாரையும் கூப்பிட்டு வச்சு அவங்க விளக்கம் கேட்டு, நீங்க சொல்லி, உச்சு கொட்டி. வேண்டாம்…” என்று சொல்லிவிட,
“நிஷாவை கேட்டு முடிவு சொல்லு ஆதி….” என்றார் சங்கரலிங்கம்.
“ஹைய்யய்யோ, எனக்கு வேண்டாம் மாமா. நிஜமா இவங்க ஓகே சொல்லிடுவாங்களோன்னு பயந்துட்டேன். வேண்டாம், வேண்டாம்…” என்றும் நிஷா சொல்லிவிட சசிகலா கவலையாய் பார்த்தார் இருவரையும்.
அதன் பின்னான நாட்கள் இப்படி சிற்சில சண்டைகளும், ஏறுக்குமாறான பேச்சுகளும் என கழிந்தாலும் அவளில்லாமல் ஆதித்தன் நாட்கள் கழியவில்லை.
தேனிலவு என்று ஒருவாரம் போல நிஷாந்தினியை நைனிடால் அழைத்து சென்றுவிட்டு வந்தான் ஆதித்தன்.
“என்னம்மா கூட ஒருவாரம் இருந்திருக்கலாம்ல…” என சசிகலா கேட்க,
“எதுக்கு? மிச்சம் மீதி இருக்கற ஹோட்டல்ஸ் எல்லாம் எப்படி மெய்ண்டெய்ன் பன்றாங்கன்னு நோட்ஸ் எடுத்துட்டு வரதுக்கா? நானே எப்படா இங்க வருவோம்ன்னு இருந்தேன்…” என்ற நிஷா அங்கே ஆதித்தன் செய்த அட்ராசிட்டிகளை பற்றி பக்கம் பக்கமாய் கலாய்த்து தள்ளிவிட்டாள்.
கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரித்ததோ இல்லையோ? சசிகலாவிற்கு சிறந்த தோழியாகி போனாள் நிஷாந்தினி.
“அம்மாட்ட எல்லாமே சொல்லுவியா நீ? ஏன் அங்க ரூம்ல உன்னோட நான் எப்படி இருந்தேன்னும் சேர்த்து சொல்லத்தான?…” என ஆதித்தன் பல்லை கடிக்க,
“சொல்லனுமா?…” என்று எதிர்வார்த்தை பேச,
“நான் சொல்றதை எல்லாம் சொல்லு, பார்ப்போம். நீ மறந்துட்டா அதான் நானே ஞாபகப்படுத்தறேன்…” என்று ஒவ்வொன்றாய் எடுத்து கொடுக்க ஓட்டம் பிடிக்கவும் முடியாமல், அவனருகே இருக்கவும் முடியாமல் நிஷாந்தினியின் பாடு திண்டாட்டம் தான்.
இத்தனை நாட்களில் ஆதித்தனின் இந்த அடாவடியும், அதிகாரமும் எல்லாம் அவனின் கூடவே வளர்த்துக்கொண்டதென தெள்ள தெளிவாய் புரிந்து போனது நிஷாவிற்கு.
“வளர்த்துவிட்ட உங்களை சொல்லனும். நான் அவஸ்தை படறேன்…” என தினமும் நான்கைந்துமுறை நிஷா சசிகலாவை பிடித்துவிடுவாள்.
இத்தனைக்கும் நடுவில் இருமுறை வந்து பார்த்துவிட்டு சென்றிருந்தனர் நிஷாவின் பெற்றோர்கள். அவர்கள் வந்த நேரம் ‘வாங்க’ என்பதோடு சரி.
எந்தவித நலம் விசாரிப்புகளும் கூட வைத்துக்கொள்ளமாட்டான். அன்றும் சுரேஷ் மட்டும் வந்துவிட்டு சென்றிருக்க ஆதித்தன் வீட்டுக்கே வரவில்லை.
அவனுக்கு அழைக்க முயன்று சில முறைக்கு பின்னரே போனை எடுத்தவன் வேலை இருக்கிறது, முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி அதன் பின் அடுத்து வந்த போனையும் எடுக்கவில்லை.
இரவு வீடு வந்து சேர்ந்தவன் உண்டு முடித்து மேலே வரும்வரை பொறுமையுடன் காத்திருந்தவளுக்கு அத்தனை ஆதங்கம்.
“எங்கம்மாப்பா மேல தப்பே இருக்கட்டும். என்கிட்ட காமிங்க. எதுக்கு வந்தவங்களை பார்க்க கூட வரலை? இத்தனைக்கும் உள்ளூர்ல இருந்துட்டே இப்படி பன்றீங்க?…” என்று நிஷாந்தினி ஆரம்பிக்க,
“சொன்னேனே வேலை இருந்ததுன்னு…” என்றான் ஆதித்தன்.
“வரேன்னு தானே சொன்னீங்க? அப்பறம் என்ன? சரி என்னன்னு எடுத்து பேச கூட முடியாதா?…” என அடுத்ததாய் கேட்க,
“ப்ச், இப்ப என்ன உன் பிரச்சனை? இனிமே வந்தாங்கன்னா குற்றால நுழைவாசல்ல நின்னுக்கவா? எப்ப பாரு நொச்சு பண்ணிட்டு…” என சொல்லி பேச்சை வளர்க்க விரும்பாமல் எழுந்து வெளியேறிவிட விக்கித்து போனாள் நிஷா.
“என்னம்மா? இந்நேரம் எங்க போறான் ஆதி?…” என சசிகலா வந்து கேட்கவும்,
“ஒரு போன் வந்துச்சு த்தை. அதான் கிளம்பி போனாங்க. வந்திருவாங்க…” என்று சமாளிக்க,
“ஓஹ், சரிம்மா…” என்றவர் அமைதியாக சென்றுவிட அதுவே அவர் நம்பவில்லை என்பதை போலிருந்தது.
நான்கைந்து முறை அழைத்துவிட்டாள் நிஷா. ஆதித்தன் எடுக்கவே இல்லை. அதுவும் இன்னும் பயத்தையும், கூடவே கோபத்தையும் விதைத்தது.
“இவங்களுக்கு கோபம் வந்தா பேச முடியலைன்னா வீட்டை விட்டு போவாங்கலாமா?…” என பொறுமிக்கொண்டிருந்தாள் அவன் வரும் வரை.
நள்ளிரவு வீடு வந்து சேர்ந்தவன் நெற்றியை கீறியபடி நிஷாந்தினியின் கையை லேசாய் தொட,
“கோவம் வந்தா பதில் பேசனும். இல்லை பேசாதன்னு சொல்லனும். இப்படி விட்டுட்டு போவீங்களா? உங்களுக்கு இங்க இருக்க முடியலைன்னா வெளில கிளம்பி போவீங்க. நான்?…” என்றதும் அவளின் அமைதியான பேச்சும் ஆதித்தனை சுட்டது.