நிஷாவின் கோபத்தில் ஆதித்தன் திகைத்து நின்றது ஒரு நொடி மட்டுமே.
“ப்ச், நிஷா ஆர்க்யூமென்ட் வேண்டாம். நான் வேற டென்ஷன்ல இருக்கேன். அப்பறம் பேசலாம்…” என சொல்ல,
“அதை நீங்க அப்பவே சொல்லியிருக்கனும் தானே?…” என அவள் கேள்வி கேட்க,
“இப்ப என்ன உனக்கு? சண்டை போடனுமா?…” அலட்டிக்கொள்ளாமல் கேட்ட அந்த பாவனை தான் நிஷாவிற்கு வெறியேற்றியது.
தனது கோபத்திற்கும் கூட அர்த்தமில்லை என்பதை போல நிற்பவனிடம் என்ன செய்ய என தளர்ந்துவிட்டாள்.
“இப்போ ரெண்டுபேருமே ரொம்ப டென்ஷனா இருக்கோம். பேசி இதை பெரிய பிரச்சனையாக்க வேண்டாம். எனக்கொரு முக்கியமான வேலை. என்னால சட்டுன்னு வர முடியலை நிஷா…” என அவளை அமைதிப்படுத்த முயன்றவன் தன்னருகே இழுத்து அமர்த்திக்கொள்ள,
“அதை சொல்லியிருக்கனும் தானே நீங்க? சொன்னா நான் வர சொல்லுவேனா? இல்லை வந்துதான் ஆகனும்ன்னு சொல்லுவேனா?…” என்றவளிடம்,
“நான் கால் பண்ணலை, அட்டன் பண்ணவும் முடியலைன்னா நீயே புரிஞ்சுக்க வேண்டாமா?…”
“புரிஞ்சுக்கோ, புரிஞ்சுக்கோன்னா? தானா எப்படி புரிஞ்சுக்க? எனக்கு சத்தியமா தெரியலை. அப்படி எத்தனை தடவை இதுக்கு முன்னாடி உங்களுக்கு நான் கால் பண்ணிருக்கேன் சொல்லுங்க?…” என்ற கேள்விக்கு அவனிடம் மௌனம் தான்.
திருமணமாகி வந்த இந்த மூன்று மாதங்களுக்குள் எத்தனை முறை அழைத்திருக்கிறாள் என அவனே யோசிக்கவேண்டி இருந்தது.
நிஷாந்தினி சொல்வதும் ஒப்புக்கொள்ள வேண்டியதென நினைத்தவன் பெருமூச்சுடன் அவளை பார்த்தான்.
“நீங்க எதுவும் சொல்லமாட்டீங்க. ஆனா நானா புரிஞ்சுக்கனும்ன்னு எதிர்பார்ப்பீங்க. இதே போல எனக்கும் இருக்கும்ன்னு ஏன் யோசிக்கலையே நீங்க? என்னை நான் சொல்லாம புரிஞ்சுகிட்டீங்களா?…” என்றவள்,
“இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கிளம்பி போனீங்களே? எவ்வளோ கோவம்? அப்போ கால் பண்ணினப்பவும் முக்கியமான வேலையா? கோவத்துல தானே போன் எடுக்கலை. இது வேலைன்னு நானா நினைச்சுக்க முடியுமா?…” நிஷாவுமே அமைதியான அளவில் பேச ஆரம்பித்திருந்தாள்.
“எனக்கும் புரியுது. சில நேரம் ரொம்ப டென்ஷனாகிடறேன். நிறைய பேசறேன். ஆனா இப்பவும் நீங்க எப்படி என்னன்னு எனக்கு தெரியலை…” என ஓய்ந்து போய் அவள் சொல்ல,
“ஓகே, இனிமே கால் பண்ணினா அட்டன் பன்றேன். முழு விவரமும் சொல்றேன். போதுமா?…” என்று சொல்லியும் அவன் முகத்திலேயே அவள் பார்வை இருக்க,
“இன்னும் என்ன?…” என்றான் ஆதித்தன்.
“நான் பேசி பிரச்சனையை பெருசு பன்றேனா?…” என்றதுமே அவன் முறைக்க,
“என்கிட்ட தான். போதுமா? இப்ப தூங்கனும். விடறியா?…” என மீண்டும் முகத்தில் அயர்ச்சி படர்ந்துவிட்டது ஆதித்தனுக்கு.
உடையை கூட மாற்றாமல் அப்படியே படுத்துவிட்டவன் முகத்தின் இறுக்கம் நிஷாவிற்கு உள்ளூர கலவரத்தை தந்தாலும் அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை.
அவனிடம் கேட்காமலும் இருக்க முடியவில்லை. மனைவியிடம் சொன்னால் தானே அவனின் காலநேரம், வேலை, அலைச்சல் எல்லாம் தெரியும்.
தானாய் புரிந்துகொண்டு ஊமையாய் இரு என்றால்? ‘நான் என்ன நாலு கண்ணா வச்சிருக்கேன்?’ சட்டென நக்கலாக நினைத்தும் கொண்டவள் வந்து மறுபக்கம் படுக்கும் முன் அறைக்கதவு படபடவென்று தட்டப்பட்டது.
“ஆதி…” என சசிகலா அலறல் சத்தம்.
பதறி எழுந்து கதவை திறந்து வெளியே வந்தவன் அன்னையின் அழுத முகம் கண்டு,
“என்னாச்சும்மா?…” என்றான் பதட்டத்துடன்.
“அப்பாவுக்கு என்னமோ பண்ணுதுப்பா. கண்ணே திறக்க முடியாமல் இருக்காங்க…” என்று சொல்ல மூவருமாக கீழே இறங்கி வந்தனர்.
சங்கரலிங்கத்தின் கண்கள் மேலே சொருகி இருக்க உடலில் அங்க அசைவுகள் எதுவுமில்லாமல் கிடந்தார் அவர்.
“என்னம்மா? எப்படி இப்படி ஆச்சு?…” என அவரை உடனே தோளில் தூக்கிக்கொண்டான்.
“நிஷா கார் சாவி எடு…” என சொல்லியபடி வாசலுக்கு செல்ல சசிகலா கதவை திறந்தார்.
“அப்பவே மாத்திரை சாப்பிட்டு படுத்துட்டார்ப்பா. நான் தண்ணி குடிக்க எழுந்தப்போ கட்டிலுக்கு ஓரமா விழற மாதிரி கிடந்தார். என்னப்பா ஆதி?…” என அழுதுகொண்டே கூறினார்.
“ஒண்ணுமில்லை த்தை. பயப்படாதீங்க…” என நிஷா சமாதானம் செய்ய ஆதித்தன் உடனடியாக மருத்துவமனை விரைந்தான்.
குற்றாலத்தில் உள்ள மருத்துவரிடம் காண்பித்து அவசரசிகிச்சை பிரிவிற்கு மாற்றியவர்கள் ஆம்புலன்ஸில் தென்காசிக்கு அனுப்பி வைத்தனர்.
‘மாரடைப்பாக இருக்கும்’ என்றவர்கள் இரவு முழுவதும் கடந்த பின்னர் காலை விவரத்தை உறுதிப்படுத்தி ஆதித்தனிடம் கூறினார்கள்.
“மைல்ட் அட்டாக். அதோட சுகர் லெவல் ரொம்பவே அதிகமா இருக்கு…” என்று சொல்ல,
“அட்டாக்கா?…” என அதிர்ந்த ஆதித்தன் தாய் இருப்பதை கருத்தில் கொண்டு,
“அப்பா இப்ப எப்படி இருக்காங்க டாக்டர்?…” என்றான்.
“அட்டாக் தான். அதோட ஒரு ப்ராப்ளம்…” என்றவர் சசிகலாவை பார்த்து பேச யோசிக்க,
“ப்ராப்ளம்ன்னா?…” என சசிகலா அங்கேயே பதறி போனார்.
“ம்மா, கொஞ்சம் அமைதியா இருங்க…” என்றவன்,
“நிஷா நீ அம்மாவை கூட்டிட்டு போய் வெளில நில்லு. நான் பேசிட்டு வரேன்…” என சொல்லி அனுப்பிவிட்டு அவருடன் பேசிவிட்டு பத்து நிமிடம் கழித்து வெளியில் வந்தான்.
“ம்மா அப்பாவுக்கு ஒண்ணுமில்லை. ப்ளட்ல சர்க்கரை அதிகமாகி இருக்கு. அதுமட்டுமில்லை, இதயத்துல சின்ன பிரச்சனை…” என பொறுமையாக சொல்ல,
“சின்ன பிரச்சனையா? ஆதி முழுசா மறைக்காம சொல்லு…” என்றார் அழுகையுடன்.
“மறைக்க என்னம்மா இருக்கு? நிஜமா சொல்றேன். இதயத்துல அடைப்பு. ஆனா பெருசா இல்லையாம். மாத்திரை குடுத்திருக்காங்க. கொஞ்ச நாள் அதை எடுத்துக்க சொல்லியிருக்காங்க. மூணு நாள் இங்க இருக்க வேண்டியதிருக்கும்…” என்றான் அவன்.
மருத்துவரும் இப்போது அதை தான் சொல்லி அனுப்பியிருந்தார். அத்துடன் சங்கரலிங்கத்தின் உடல்நிலை இப்போது அறுவைசிகிச்சை செய்துகொள்ளக்கூடிய நிலையில் இல்லை என்றும் தெரிவித்தார்.
முதலில் அவரை மனதளவிலும், உடலளவிலும் தேற்றவேண்டும். முழுதாய் இன்னும் சிரத்தையாக கவனித்துக்கொள்ள வேண்டும்.
இதை வீட்டினரிடம் சொன்னால் இன்னும் பயந்துவிடுவார்கள் என தனக்குள் வைத்துக்கொண்டவன் வீட்டிற்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என இருந்துவிட்டான்.
“அப்பாவை பார்க்கனும் ஆதி…” என சசிகலா கேட்க,
“பார்த்துட்டு வாங்கம்மா. நான் இப்பதான் பார்த்தேன்…” என நிஷாவை அழைத்து செல்ல சொல்லியவன் முதலில் கவிப்ரியாவிற்கு அழைத்தான்.
அதன் பின்னர் தங்களின் மேனேஜருக்கு அழைத்து விஷயத்தை சொல்லி வேலைகளை கவனிக்கும் படி சொல்லி வைத்துவிட்டான்.
ஒரே நாளில் உறக்கமற்று அவன் முகமே மாறிப்போயிருந்தது. நிஷா தானாக சென்று அவனிடம் எதுவும் பேசவில்லை.
கவி அன்றே கிளம்பி வந்துவிட்டாள் சங்கரலிங்கத்தை பார்க்க என்று. உடன் சிவநேயனும்.
அடுத்த மூன்று நாட்களும் மருத்துவமனை வாசம் தான். நிஷாவுக்கு ஓய்வில்லாது போனது.
அனுராதாவும், சுரேஷும் கூட அங்கே வந்து பார்த்து, நலம் விசாரித்துவிட்டு சென்றனர்.
மாற்றி மாற்றி சொந்தங்கள் அத்தனை பேரும் வந்துவிட்டனர். வரமுடியாதவர்கள் போனில் அழைப்பு.
அவர்களுக்கு விசாரித்து கேட்பதற்கு பதில் சொல்லியே பாதியாகி போனார் சசிகலா.
பாதி அழைப்பை நிஷா எடுக்க, பேசுபவர்கள் எல்லோரும் கவியிடமோ, சசியிடமோ தான் கொடுக்க சொல்லினர்.
“நீங்களே எடுத்துடுங்க அண்ணி…” என்று சொல்லிவிட்டாள் நிஷா.
குற்றாலத்திற்கும், தென்காசிக்குமாய் ஒரே அலைச்சல் தான். இதில் எங்கே கணவன் மனைவி தனியே பேச?
நிஷாவின் பார்வை அவ்வப்போது ஆதித்தனை தான் பார்க்கும். அன்று நடந்த சண்டைக்கு பின் இருவருக்கும் இடையிலான பேச்சுக்கள் சொற்பமே.
“சாப்பிட்டியா? அம்மா என்ன பன்றாங்க? அப்பாவை பார்த்தியா? வீட்டுக்கு போய் வேணா ரெஸ்ட் எடேன். நைட் தூங்கலையா?…” இப்படியான கேள்விகள் அவனிடம் அவளுக்காக.
அதுவும் அவன் வரும் நேரங்களை பொறுத்து வந்து கொண்டு தான் இருக்கும். அவளின் தலையசைப்புகளில், ஒற்றை வார்த்தை பதிலில் அமைதியாகிவிடுவான்.
மருத்துவமனை வாசம் முடிந்து வீடு வந்து இருநாட்களாகிற்று. மருத்துவரின் ஆலோசனைப்படி தான் இனி சங்கரலிங்கத்தின் உணவுமுறைகள் எல்லாம்.
அதனால் சசிகலாவிற்கு மருமகளையும் கவனிக்க பார்க்க நேரமில்லாது தான் போனது.
வந்த உறவினர்களின் வழக்கமான சலசலப்பும் அங்கே இருக்கத்தான் பரவலாக செய்தது.
“ஹ்ம்ம், அன்னைக்கே நினைச்சேன். இப்படி பிடிவாதமா என்ன ஏதுன்னு பார்க்காம இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்ததுக்கு ஏதாவது ஆகும்ன்னு….” என்றொருவர் சொல்ல,
“ஆமாக்கா, இந்த கல்யாணமானதும் சங்கடத்துல தான், முதல் முதலா வீட்டுக்கு அந்த பொண்ணு வந்தப்பவும் நல்லநேரத்துல இல்லையே. அதான் இப்படி காட்டுது போல…” என்றும் பேசி,
“பார்த்துக்க சசி. என்னன்னு கவனமா இருந்துக்கோ…” என ஏற்கனவே நைந்து போயிருந்தவரை மேலும் பயமுறுத்தி நோகடித்தனர்.