மெலிந்து போய் நின்றவள் முகமே ஒட்டிப்போயிருந்தது. இந்த ஒருவாரமும் அவளும் சரியாக உண்ணாமல், உறங்காமல் இருந்திருக்கிறாள் என ஆதித்தனுக்கு கவலையானது.
“அதை அவங்க பார்த்துப்பாங்க. நீ இங்க வா…” என்று அழைத்து வந்து அறையில் அமர சொல்லியவன்,
“என்னாச்சு? உடம்புக்கு எதுவும் முடியலையா? பீவரா இருக்கா?…” என கேட்டான் அவளின் கழுத்தை தொட்டு பார்த்து.
“அதெல்லாம் இல்லையே…” என்றவள் விலக,
“என்ன இல்லை? கன்னமெல்லாம் ஒட்டி போயிருக்கு. ஒழுங்காவே சாப்பிடலை இல்ல?…” என்றான் சற்றே அதட்டலுடன்.
“ப்ச், இப்ப இது எதுக்கு?…” என கேட்டவள்,
“இதை கேட்க தான் கூட்டிட்டு வந்தீங்களா?…” என்றாள்.
“இதையும் கேட்க தான். சரி நீ படுத்துக்கோ…” என சொல்லவும் நிஷாந்தினி திகைத்து பின் முறைக்க பக்கென்று சிரித்துவிட்டான் ஆதித்தன்.
“நிஜமா அதுக்கு சொல்லலை. கண்ணெல்லாம் தூக்கமில்லாம இருக்கிற மாதிரி இருந்துச்சு. நானும் உன்னை கவனிக்கலை. பார்க்க ரொம்ப டயர்டா இருக்கியே. அதான் தூங்குன்னு சொன்னேன்…” என சொல்லியவன்,
“உன்னை கவனிக்காம விட்டுட்டேன் நிஷா. நீ உன்னை பார்த்துக்க வேண்டாமா? முதல்ல நம்மளை நாம பார்த்துக்கனும். புரியுதா?…” என்று சொல்ல நிஷாவிற்கு அவனின் இந்த இடக்கில்லாத இணக்கமான பேச்சு ஆறுதலாய் இருந்தது.
“என்ன சண்டைக்கோழி சிலிர்த்துக்கிட்டு பேசுவன்னு பார்த்தா வாயடைச்சு நிக்கிற?…” என்று சிரிக்க,
“கேளு. சரி சொல்லு…” என அவனும் கட்டிலில் அமர போன் வந்துவிட்டது.
“பழைய குற்றால லாட்ஜ்ல இருந்து போன்…” என சொல்லியவன் எடுத்து பேச ஆரம்பித்து பேசிக்கொண்டே அவளிடம் தலையசைத்து வெளியேறிவிட்டான்.
அவனை தொடர்ந்து வந்த நிஷாவும் கீழே வந்து அமர்ந்துகொண்டாள். மதிய உணவிற்குமே வரவில்லை ஆதித்தன். நிஷாவிற்கு அழைத்து சொல்லிவிட்டான்.
கவியும், நிஷாவுமாய் இருந்தவர்களை கவனித்து அனுப்பி வைக்க மாலை கமலா வந்துவிட்டார் மருமகளை அழைத்து செல்ல.
ஆதித்தனும் இல்லாத நேரம். வந்தவர் சவடாலாய் அத்தனை பேச்சுக்கள் சங்கரலிங்கத்தையும் வைத்துக்கொண்டே.
“என்ன கவி, அப்பாவை பார்க்கனும்னு கிளம்பி வந்து ஒருவாரமாகிருச்சு. அங்க உன் பிள்ளை என்ன செய்யறான்னு கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா உனக்கு? இங்கயே இருந்துடலாம்ன்னு எதுவும் நினைப்பா?…” என பிரச்சனையை துவங்க,
“அத்தை அப்பா கேட்டா சங்கடப்படுவாங்க. மெதுவா பேசுங்க…” என கவி பதறி போனாள்.
“ஏன் உங்கப்பாக்கிட்டையே நான் கேட்கறேனே? அதான் மகன் சொல்லவும் இந்த மருமக தான் வேணும்ன்னு அவனுக்கு கட்டிக்கிட்டு வந்தாருல. அவ இருந்து பாக்கட்டும். உனக்கென்ன வீடு வாசலில்லையா? புருஷன் குடும்பம் குட்டி இல்லையா? மாமனார், மாமியார் தான் இல்லையா?…” என்றவர்,
“எங்களுக்கும் தான் வயசாகியிருக்கு. ஆயிரத்தெட்டு நோவு வேற. எங்களை யார் பார்த்துக்க? நீ தான பார்க்கனும். நான் என்ன இன்னொரு புள்ளைய பெத்து வச்சிருக்கேனா?…” என்று வீடே அதிர இரைந்துவிட்டார்.
நிஷாவுக்கு கமலாவை ஓரளவு தெரியும் என இருந்தாலும் இப்படி மனிதாபிமானமில்லாத பேச்சுக்கள் எல்லாம் ஆச்சர்யமாக இருந்தது.
“என்ன பேசறீங்க? மனசாட்சியோட பேசுங்க. அவங்க அவங்கப்பாவை பார்க்க வந்திருக்காங்க. அதுக்கு இதென்ன பேச்சு? அதுவும் இங்கயே இருக்க போறியான்னு மறைமுகமா மிரட்டல் மாதிரி?…” என நிஷா பேசிவிட்டாள்.
“இந்தா என்ன என்னயே எதிர்த்து பேசற?…” என நிஷாவிடம் கமலா அதட்ட,
“என்ன இந்தா? இந்த பேச்செல்லாம் என்கிட்ட வேண்டாம். முதல்ல யாரா இருந்தாலும் மரியாதையா பேசுங்க. அப்பறம் என்ன கேட்டீங்க, எதிர்த்து பேசறியாவா? ஆமா நீங்க பேசினது சரியில்லை. நான் எதிர்த்து கேட்கத்தான் செய்வேன்…” என்றாள் அவள்.
“நிஷா வேண்டாம்…” என கவி பயந்து போய் அவளின் கையை பிடித்து அழைத்து செல்ல பார்க்க,
“சம்பந்தி அவ சின்ன பொண்ணு. அவளுக்காக நான்…” என சசிகலா கமலாவிடம் இறங்கி பேச,
“அத்தை நீங்க பேசாம இருங்க….” என்றாள் நிஷா அவரின் மன்னிப்பை வேண்டும் முகபாவனையில்.
“நிஷா அம்மா பேசிப்பாங்க. நீ சும்மா இரு…” என்றாள் கவி.
“என்னண்ணி பேசறீங்க? உங்கம்மாவை உங்க மாமியார் அதட்டிவிட்டு இருக்காங்க. உங்கம்மாவும் ஸாரி கேட்கிற மாதிரி பேசறாங்க. உங்களுக்கு கோவம் வரலையா? என்ன தப்பு பண்ணிட்டாங்க இங்க?…” என்று வெடுவெடுக்க,
“நல்லா வந்து சேர்ந்திருக்க ஆத்தா. என்னா பேச்சு?…” என்ற கமலா,
“நான் அப்பவே தலைப்படா அடிச்சுக்கிட்டேன். இவ வேண்டாம்ன்னு. கேட்டீங்களா? இப்ப எல்லார் முன்னுக்க மட்டு மரியாதை இல்லாம மாமியாரையும், நாத்தனாரையும் எப்படி அதட்டி வைக்கிறா பாருங்க. இவ அக்கா செஞ்ச அசிங்கத்துக்கு இம்புட்டு பேச்சு இவ பேசலாமா?…” என்று நிஷாவை பார்த்தார்.
“அக்கா வேண்டாம்ன்னுட்டு போனவனை கட்டிக்கிட்டு வந்துட்டு இங்க என்ன ராஜாங்கமா பன்ற? இருக்கற இடம் தெரியாம இருந்துட்டு போகனும்…” என்றும் பேசிவிட்டார் கமலா.
“என்ன செய்வீங்க? எங்கக்கா பண்ணினதுக்கு என்ன பண்ணுவீங்க? சொல்லுங்க. அசிங்கம் அது இதுன்னு பேசினீங்க அவ்வளோ தான். எங்கக்காவை பேச நீங்க யார்? என்னை பேசுங்க, நான் பதில் சொல்றேன்…” என ஒரே உதறலில் கவி பிடித்திருந்த தன் கையை உதறிவிட்டு முன்னே வர கமலா பயந்து போனார்.
“இது என் வீடு. நான் இருக்கற இடம் தெரியாம இருந்துட்டு போகனுமா? வந்தீங்களா விசாரிச்சீங்களா கிளம்பினீங்கலான்னு நீங்க இருந்துக்கோங்க…” என்றாள் நிஷா எச்சரிக்கும் விதமாக.
“நிஷா விடேன். என்ன பேசற நீ? அவங்க என் அத்தை….” என கவியும் குரலை உயர்த்தவும் கொஞ்சம் அமைதியானாள் நிஷாந்தினி.
கமலாவின் மனது தீயாய் கனன்றது நிஷாவின் உரிமையான ‘இது என் வீடு’ என்ற பேச்சில்.
அதுவும் நிஷாவை கவியோ, சசிகலாவோ அதட்டி அடக்கி வைக்காமலும் அதே நேரம் தன்னை கெஞ்சுதலாகவும் பார்க்க அவர்களை முறைத்தவர்,
“அடிக்க வர மாதிரி இல்ல வரா. கவி நல்ல மரியாதைடி…” என்று ஆர்ப்பாட்டம் செய்தார்.
“என்ன பிரச்சனை? ஏன் இவ்வளோ சத்தம்?…” என ஆதித்தனும் வீடு திரும்பியிருந்தான்.
உள்ளே நுழைந்ததும் அவன் கேட்கவும் கமலா அமைதியாகி போக, நிஷா முகத்தில் இன்னும் ரௌத்திரம் குறையவில்லை.
என்னவோ மன அழுத்தத்தில் எதற்கும் வாய் திறவாமல் இருந்தவள் இன்று கமலாவின் பேச்சில் பொங்கிவிட்டாள்.
“நீ வா…” என மகனை அழைத்துக்கொண்டு சங்கரலிங்கத்தின் அறைக்குள் நுழைந்தார்.
“நீ போ நிஷா, நான் பார்த்துக்கறேன்…” என கவி கொஞ்சம் மனத்தாங்கலுடனே நிஷாவை நகர்த்த பார்த்தாள்.
எத்தனை இருப்பினும் தன்னையும், தான் அங்கே போய் இருக்கவேண்டுமே என்ற யோசனை இல்லாமல் இப்படி பேசிவிட்டாளே என நிஷா மீது ஆதங்கம் கவிக்கு.
தன் மாமியார் செய்வது தவறாகவே இருந்தாலும் அதை இன்னும் பெரிதாக்கும் அளவிற்கு செய்துவிட்டாளே என்று தான் நினைத்தாளே தவிர, தன்னை, தன் தாயை பேசியதற்கு தான் இதை நிஷா பேசவே ஆரம்பித்தாள் என யோசிக்கவில்லை.
குடும்ப உறவுகளில் நல்ல எண்ணங்களை தாண்டி சில சூழ்நிலைகள் சுயநலம் கொண்டு தீர்மானிக்கப்படுபவையாகவே இருக்கிறது.
அங்கே உறவுகளின் உணர்வுகள் தான் உயிரற்று போய்விடுகிறது. இவ்விடமும் கவி தன்னை மட்டுமே யோசித்து நிஷா மீது ஆற்றாமையை சேர்த்துவிட்டாள்.
கவிக்கு தான் பேசியது பிடிக்கவில்லை என தெரிந்தாலும் நிஷா அதனை பெரிதாய் நினைக்கவில்லை.
சசிகலா இருந்த அறைக்கு வர சங்கரலிங்கம் கண்மூடி இருந்தாலும் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு வேதனையுடன் இருப்பது அவர் முகத்திலேயே தெரிந்தது.
“முதல்ல அனுப்பி வைங்கம்மா. அவங்க வந்து கூப்பிடற வரை ஏன் நீங்க விட்டீங்க? யோசிக்க வேண்டாமா?…” என்றான் ஆதித்தன்.
“நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்தன்னைக்கே நான் பார்த்துக்கறேன். நீ கிளம்பும்மான்னு சொல்லிட்டேன். மனசே சரியில்லைம்மா. இன்னும் ரெண்டுநாள் இருந்து போறேன்னு அக்கா சொன்னாப்பா…” என்றார் சசிகலா.
“இப்ப இந்தம்மா இவ்வளோ பேசறது நமக்கு தேவையா? அனுப்பி விடுங்க. மத்ததை அப்பறம் பேசலாம்…” என்று சொல்லிவிட்டு நிஷாவையும் ஒரு பார்வை பார்த்து வெளியே வந்தவன்,