“கையோட மருமகளை கூட்டிட்டு போகலாம்ன்னு எங்க கார்ல தான் வந்தேன். வந்த இடத்துல எனக்கு என்ன மரியாதை இருக்கு? இனி இங்க நான் வரனுமான்னு யோசிக்க வைக்கிறீங்க…” என்று சொல்லி கவியை பார்க்க அவள் பயந்து போனாள்.
“நிஷா பேசினதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்னு சொன்னேன்ல த்தை…” என்றாள் கவி.
“நீயா பேசின மன்னிப்பு கேட்க?…” என்ற கமலா நிஷாவை பார்க்க அவள் கல்லாய் நின்றிருந்தாள்.
கமலாவின் எதிர்பார்ப்பு என்னவென தெளிவாய் தெரிந்தவள் முகத்தில் ‘முடியாது, என்ன செய்வாய்’ என்னும் பாவனையே மிதமிஞ்சி இருந்தது.
“பேசியும் போட்டு எப்படி பார்க்கறா பார்?…” என்றார் கமலா.
“நீங்க என்ன பேசினீங்க த்தை?…” என ஆதித்தன் அமைதியாய் கேட்க திடுக்கிட்ட கமலா,
“என்ன?…” என்று விழித்தார்.
“நீங்க என்ன பேசி, நிஷா என்ன பதில் சொன்னா?…” என்றான் மீண்டும் ஆதித்தன்.
“ஆதி விடு. இதை பெருசு பண்ணாத…” என்ற கவியை முடிந்தமட்டும் முறைத்தவன் கமலாவை பார்க்க அவர் அமைதியாய் இருந்தார்.
“நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. இருங்க சம்பந்தி, குடிக்க ஏதாவது கொண்டு வாரேன்…” என அடுக்களைக்கு வர,
“இந்தம்மா வாயில வசம்ப வச்சு தேய்க்க. வீடான வீட்டுல விளக்கு வச்ச நேரத்துல வாய்ல நல்ல வார்த்தை வருதா பாருங்க?…” என செந்தா பொறும,
“கொஞ்சம் பேசாம இரு செந்தா. காதுல விழுந்தா இன்னும் பேசும்…” என சசிகலா சொல்லிக்கொண்டிருக்க கவி வந்துவிட்டாள்.
“என்னம்மா இது? எங்கத்தை பண்ணினது தப்பு தான். ஆனா நிஷா பண்ணினது இன்னும் தப்பு. எனக்கு ஆறலை. அதுவும் ஆதி இப்படி முகத்திலடிச்ச மாதிரி நிஷாவோட போய்ட்டான். என்னை பத்தி யோசிச்சீங்களா? அங்க இந்தம்மா இன்னும் என்னலாம் பண்ணுமோ?…” என பேசிவிட சசிகலா முகம் வேதனையை சுமந்திருந்தது.
“அட கவிம்மா என்ன இது? ஏற்கனவே மனசளவுல நொந்து போயிருக்காங்க. நீ வேற ஏன்? அங்க பிரச்சனை வந்தா நீ சமாளிப்பியா? அதை விட்டுபோட்டு யாருமே உன் மாமியாரை பேச கூடாதுன்னா. உன் மாமியார் பேசினது எல்லாம் சரியா?…” என பொறுக்கமாட்டாமல் செந்தா பேசிவிட்டாள்.
“செந்தாக்கா நீ பேசாத. என் சூழ்நிலையில இருந்தா தான் தெரியும்…” என்றாள் கவி.
“என்ன பெரிய புடலங்கா சூழ்நிலை. அவங்கவங்க வவுத்து பசிக்கு அவங்கவங்க தான் சாப்புடனும். உன் சூழ்நிலையை நீ தானம்மா சமாளிக்கனும். அதை உன் அம்மா, தம்பி தலையில ஏத்துறியே? நேத்திக்கு வந்த பொண்ணுக்கு உங்கம்மாவை பேசினதும் பொறுக்க முடியாம பேசுது. நீ பெத்த மக…” என செந்தா சொல்ல,
“ப்ச் விடு செந்தா…” என்ற சசிகலா,
“நீ இதை கொண்டுபோய் சம்பந்திக்கிட்ட குடு கவி…” என்றார் சசிகலா.
செந்தாவின் பேச்சும், தாயின் அமைதியும் கவியை இன்னுமே ஆதங்கப்படுத்தியது.
“கவி…” என்ற மாமியாரின் சத்தத்தில் விழுந்தடித்து ஓடினாள்.
செந்தாவும், சசிகலாவும் அவளை பரிதாபமாக பார்த்தனர். சற்று நேரத்தில் கவி தன்னுடமைகளை எடுத்துக்கொண்டு புறப்பட நிஷாவுடன் வந்துவிட்டான் ஆதித்தன்.
கோவிலுக்கு சென்ற இடத்தில் கூட பேச முடியாது போனது. அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆதித்தனை பார்த்ததும் சங்கரலிங்கத்தின் நலன் பற்றி கேட்பதும் விசாரிப்பதுமாக இருக்க சற்று நேரத்தில் தரிசனம் முடித்து கிளம்பி வந்துவிட்டனர்.
இரவில் மனைவியிடம் பேசிக்கொள்ளலாம் என ஆதித்தன் நினைத்திருக்க வீடு வரவும் கவியும் புறப்பட அதில் கவனம் சென்றது.
எத்தனை இருப்பினும் மகள் செல்லும் பொழுது என்னென்ன வேண்டும் என அவளுக்கு அனுப்பி வைத்தார் சசிகலா.
எல்லாவற்றையும் நிஷாவும் சேர்ந்து அவர் சொல்ல எடுத்து வைக்க கவி மாமியாரின் கண் பார்வையில் அவரை விட்டு எழவே இல்லை.
எல்லாம் காருக்கு சென்றதும் புறப்படுவதாய் பொதுவாய் சொன்ன கமலா கவியை பார்க்க,
“வரேன் ம்மா…” என்று சொல்லி உள்ளே தகப்பனிடமும் சொல்லிவிட்டு வெளியேறியவள் தம்பியையும், நிஷாவையும் பார்த்து தலையசைப்பு மட்டும் தான்.
அவள் சொல்லவேண்டும் என இருவரும் எதிர்பார்க்கவும் இல்லை. அமைதியாக வழியனுப்பினர்.
அவர்களுடனே இரவு உணவையும் முடித்துக்கொண்டதால் ஆதித்தன் சங்கரலிங்கத்திடம் அமர்ந்து சமாதானமாய் பேசிக்கொண்டிருந்தான்.
இதை நினைத்து கவலைப்பட வேண்டாம் என தாய் தந்தையர் இருவரிடமும் சொல்லியவன் மாடிக்கு வரும் சமயம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் நிஷாந்தினி.
அலுங்காமல் அவளருகில் படுத்தவனின் உறக்கம் தூரம் செல்ல மனைவியின் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதிக்க லேசாய் சிணுங்கி முகம் திருப்பினாள்.
உறக்கமில்லாமல் இருந்ததன் விளைவு நிஷாவுக்கு அப்படி ஒரு ஆழ்ந்த மயக்கம். லேசாய் அவள் தலையை கோதியவன் தன் நெற்றியை பிடித்தான்.
அப்போது தான் அந்த வலியையே உணர முடிந்தது. லாட்ஜ், ஹோட்டல், வீடு, பிரச்சனை என பம்பரமாய் சுழன்றவனுக்கு அதை கூட கவனிக்க நேரமில்லை.
அதிலும் இப்போது மொத்த பொறுப்பும் தான் ஒருவனே கவனிக்கவேண்டும். சங்கரலிங்கத்தின் உடல்நலன் காரணமாக அவ்வளவு அவன் பார்வையில் மட்டும்.
முன்பும் அவனே செய்து கொண்டிருந்தவன் தான். ஆனாலும் தகப்பனின் கவனிப்பும் இருக்க அவனுக்கு ஓய்வு நேரமும் நிறையவே இருந்தது.
இப்போது மருத்துவமனை, அதன்பின் மொத்த பளுவும் சேர்ந்திருக்க எழுந்துவிட்டான் ஆதித்தன்.
தலைவலிக்கு மாத்திரையை தேட கிடைக்கவில்லை. நிஷா வந்த பிறகு ஒவ்வொன்று தனி தனியே அவள் எடுத்து வைத்திருந்தாள்.
அதில் தேடியவன் அந்த அலமாரியில் அவள் கைப்பை அருகில் இருந்ததை பார்த்தும் முகமெல்லாம் யோசனை கோடுகள்.
வேகமாய் எடுத்து பார்க்க அது நிஷாவினது தானா என்னும் யோசனை இன்னொரு புறம்.
மனைவியின் கை பையையும் அந்த அட்டையை அவள் யார் பெயரில் வாங்கி இருக்கிறாள் என்று கண்டவன் முகத்தில் குறுஞ்சிரிப்பு.
மகவு உண்டாவதை உறுதி செய்ய பரிசோதித்திருக்கிறாள். அவளின் இந்த ஒருவார உடல்மாற்றமும், சோர்வும், அமைதியும், கூடுதலாய் அன்று தன்னிடம் என்னவோ சொல்ல வருவதாய் இருந்ததும் என எல்லாம் அதை உறுதிப்படுத்தியது.
கைக்குள் அதனை அடக்கிக்கொண்டவன் மீண்டும் அவளருகில் வந்து லேசாய் அணைத்து தன் புறம் திருப்ப,
அதனை கேட்க நினைத்தவன் நிஷாவின் உறக்கத்தின் கெஞ்சலில் காலையில் கேட்டுக்கொள்ளலாம் என தானும் சாய்ந்துகொண்டான்.
கையில் இருந்த அந்த இரு கோடுகளின் மேல் பார்வையை பதித்தவன் அவ்வப்போது நிஷாவின் கையை பிடித்து அதில் முத்தத்தையும் சிறுக சிறுக ஒற்றிவைக்க சிலபலநிமிடங்களில் சந்தோஷமும், பூரிப்புமாய் உறங்கி போனான் ஆதித்தன்.
விடிந்து காலை நிஷாந்தினி தானே எழும் பொழுது ஏழை தாண்டி இருந்தது. கண்ணை கசக்கிக்கொண்டு மீண்டும் மணியை பார்க்க,
“டைம் கரெக்ட் தான்…” என்றான் ஆதித்தன் கையில் காபியுடன்.
“டயர்ட்ல தூங்கிட்டேன்…” என்று முகத்தை உள்ளங்கையில் தேய்த்துக்கொண்டவள் கூந்தலை அள்ளி கொண்டையிட்டாள்.
“என்ன டயர்ட்? என்ன பண்ணுது? ஹாஸ்பிட்டல் போவோமா?…” என கேட்டு அவள் எதிரே அமர்ந்தவன்,
“காபி…” என தன் கப்பை நீட்டினான்.
இந்த ஒருவாரமும் அவன் முகத்தில் அவள் பாராத அந்த சீண்டலும் புன்னகையும் ஆதித்தன் முகத்தில் நிறைந்திருந்தது.
“என்ன திடீர்ன்னு காபி எல்லாம்?…” என சந்தேகமாய் அவனை பார்த்தாள் நிஷாந்தினி.
“புருஷன் பொண்டாட்டிக்கு காபி குடுத்தா இவ்வளோ டவுட்டா?…” என கேட்க,
“டவுட் படனும். அதுவும் கண்டிப்பா உங்களை டவுட்டா தான் பார்க்கனும். எப்ப என்ன செய்வீங்கன்னு தெரியாதே?…” என நிஷாவும் பழையபடி துடுக்காய் பேச ஆதித்தன் முகத்தில் அவ்வளவு ரசனை.
“நேத்து என்னவோ சொல்லனும்ன்னு சொன்னியே. இப்ப சொல்லு…” என்று கேட்க என்ன சொல்ல வந்தோம் என்றே அவளின் சிந்தையிலிருந்து சென்றிருந்தது.
“என்ன? என்ன சொன்னேன்?…” என இன்னும் முழுதாய் கலையாத உறக்கத்துடன் கேட்க,
“இதை பத்தி…” என்று ஆதித்தன் நீட்டியதை பார்த்ததுமே நிஷாந்தினிக்கு சந்தோஷம் வருவதற்கு பதில் குபீரென அச்சமே மேலோங்கியது.
தன்னிடம் முதலிலேயே ஏன் சொல்லவில்லை என்று கேட்டால்? அதை நினைத்து அவள் திகைத்து பார்க்க,
“என்னைக்கு செக் பண்ணின?…” என்றான் அடுத்ததாக.
ஆதித்தன் அவளிடம் சாதாரணமாக கேட்டாலும் நிஷாவுக்கு பீதியை தான் கிளப்பியது அது.
“மாமாவை ஹாஸ்பிட்டல்ல சேர்த்த மறுநாள்…” என்றவள் சொல்லி முடிக்கும் முன் அவனின் பார்வையில் நெஞ்சாங்கூடே காலியாகிவிட்டது.
அங்கே இருந்த சூழ்நிலையில் இதனை சொல்லவும் முடியவில்லை அவளால். வீட்டிற்கு வந்து சொல்லலாம் என்றால் அது வேறொரு பிரச்சனை.
இதில் எங்கே தான் சொல்ல என அவனை அகன்ற விழிகளுடன் பார்த்தவளின் முகபாவங்களில் தொலைந்துகொண்டிருந்தான் ஆதித்தன்.