அதற்கும் அவன் முறைக்க நிஷா நாக்கை கடித்துக்கொண்டு மருத்துவர் தந்த மருந்து சீட்டை பார்வையிட்டாள்.
அதற்குள் சசிகலாவிற்கு மருத்துவமனையில் இருந்த உறவின பெண் ஊழியர் அழைத்து விவரத்தை சொல்ல வீடு வரும்முன் விஷயம் சொந்தங்களுக்கு தெரிந்துவிட்டது.
சசிகலா முகத்தில் அப்போது தான் நிஜமான சந்தோஷமே. வாசலில் ஆரத்தி எடுத்துவைத்து, திருஷ்டி கழித்து மருமகளை அழைத்துக்கொண்டார்.
புதுவரவின் செய்தியால் வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சிக்கு தாவியது. முதல்நாள் தான் கமலா செய்து வைத்த பிரச்சனையால் மனம் கனத்திருக்க இப்போது அவை எல்லாம் எங்கோ சென்றிருந்தது.
“ரொம்ப சந்தோஷம்மா நிஷா…” என்றவருக்கு மகனும், மருமகளும் இப்படியே ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்ற எண்ணமும், தன் வேண்டுதல் தந்த சந்தோஷமும் அவரை இன்னும் பலமாக்கியது.
நிஷா தன் தாய்க்கு அழைத்து சொல்ல, சசிகலாவே கவிக்கு அழைத்து பகிர்ந்துகொண்டார் தன் சந்தோஷத்தை.
“நிஷாட்ட குடுங்கம்மா பேசறேன்…” என்றவள் அவளுமே தம்பி மனைவிக்கு வாழ்த்து தெரிவிக்க,
“தேங்க்ஸ் அண்ணி…” என்றாள் நிஷா.
“சரி நீ அம்மாக்கிட்ட குடு…” என அத்துடன் பேச்சை முடித்து சசிகலாவிடம் ஒருபாடு புலம்பலை ஆரம்பித்தாகிவிட்டது.
“சரிம்மா, சரிம்மா…” என சசிகலாவின் முகமே மாறிவிட,
“என்கிட்ட குடுங்க…” என வாங்கினான் ஆதித்தன்.
“என்னக்கா?…” என்றதும் கமலா வீட்டிற்கு வந்து பேசுவதை சொல்ல,
“பதிலுக்கு நீயும் பேசு. யார் உன்னை தடுத்தா? இங்க சொல்றதை அங்க பேசவேண்டியது தானே?…” என்றதும் அவனிடம் பேச முடியவில்லை.