“நீ போய் ரெஸ்ட் எடு. பிரஷர் எடுத்துக்காம இருக்கனும்ன்னு சொல்லியிருக்காங்க தானே? போ. அவசியம்ன்னா கீழ வந்தா போதும்…” என அனைவரின் முன்பும் சொல்ல அது அனைவருக்கானது என புரிந்தது.
“ப்ச், நான் பார்த்துக்கறேன். இப்ப என்ன?…” என்றவள் அசிரத்தையான பதிலில் கண்டனப்பார்வை பார்த்தவன்,
“வா என்கூட…” என அழைத்து மாடிக்கு சென்றுவிட்டான்.
“ஹ்ம்ம், ஆதி நிஷாவோட தணிஞ்சு இணக்கமா இருக்கறதே எனக்கு நிம்மதின்னா, இப்ப அவங்களுக்கும், இந்த வீட்டுக்கும் குழந்தை வர போகுது. எனக்கு இப்பதான் முழு நிம்மதி…” என்றார் சசிகலா சங்கரலிங்கத்திடம்.
மேலே வந்தவன் அவளின் மருந்துகளை எல்லாம் பிரித்து பார்த்தான். ஒவ்வொன்றும் எப்போது போடவேண்டும் என கவனிக்க நிஷா தண்ணீரை அருந்தியபடி அமர்ந்திருந்தாள்.
“ஹ்ம்ம், பார்த்து நேரத்துக்கு எல்லாம் போடனும்…” என சொல்லியவனிடம் தலையசைத்தாள் நிஷா.
“என்ன மண்டையை ஆட்டற? டாக்டர் சொன்னது ஞாபகம் இருக்கு தானே? டென்ஷன் வச்சுக்க கூடாது….” என்றதும் நிஷாவின் இதழ்களில் குறும்பாய் சிறு புன்னகை.
அவள் அந்த டென்ஷன் தான் தான் என தன்னை சொல்லாமல் சொல்லுவதை போலிருந்தது ஆதித்தனுக்கு.
“உதைபடுவ ராஸ்கல்…” என அவள் காதை லேசாய் திருகியவன்,
“அதை அவங்கட்ட சொல்லுங்க. என்னை பேசினா நானும் பேசுவேன். எல்லாத்துக்கும் அமைதியா போக முடியாது…” என்று அதுவரை அமைதியாக இருந்தவள் வேகமாய் பேச,
“இதுக்கு தான் சொல்றேன். டென்ஷன் வேண்டாம்ன்னு. சடனா எப்படி வேர்த்திருச்சு பாரு…” என்றவன் குரல் தணிந்திருந்தது அவள் உடல்நிலையை கருத்தில் கொண்டு.
“ஹ்ம்ம்…” என்றாலும் நிஷாவிற்கு கமலா பேச்சை எண்ணி இன்னுமே கோபம்.
“அவங்க வேணும்ன்னே பன்றாங்க. அவங்க இங்க தன்னோட அதிகாரத்தை காமிக்கனும்ன்னு தெரிஞ்சே நோகடிக்காங்க. அதுல நீ டெம்ப்ட்டாகி சண்டை போடறதுல அவங்களுக்கொரு குரூர திருப்தி. தப்பு அவங்க மேலையே இருந்தாலும் அதை ஒத்துக்க மாட்டாங்க…” என்றான்.
“தெரிஞ்சும் எல்லாம் சரின்னு போறதா?…” நிஷாவிற்கு அதை ஏற்க முடியவில்ல.
“யார் சரின்னு போக சொன்னா? இது சொந்தத்துல மட்டுமா? எல்லா இடத்துலையுமே இருக்காங்க. போய் தொலையட்டும்ன்னு கூட நினைக்க கூடாது. மதிக்கவே கூடாது. அதுமாதிரி கேரெக்டர் தான் அவங்க…” என்றவன்,
“எப்போ பதில் குடுக்கனுமோ அப்போ பேசிக்கலாம். நான் பார்த்துப்பேன். நீ பதிலுக்கு பேசி உன்னை கஷ்டப்படுத்திக்காத. புரியுதா?…” என்றான் ஆதித்தன்.
“ஹ்ம்ம்…” என்றவள் முகத்தில் இன்னுமே அதிருப்தி.
கமலாவின் பேச்சு வேண்டுமென்றே காயப்படுத்துவதாக இருந்தாலும் அந்தளவிற்கு அவரை வளர்த்துவிட்டது சுற்றி இருப்பவர்களின் அமைதி தானே?
ஆரம்பத்திலேயே அதட்டி அடக்கி இருந்தால் அனைவரிடமும் தன் அதிகாரத்தை காண்பிக்க நினைத்திருப்பாரா?
தான் நினைத்தது தான் சட்டம், தன்னை கொண்டுதான் எல்லாம் செயல்படவேண்டும் என நினைப்பது ஆணவத்தின் உச்சம் அல்லவா?
இதை அவர் செய்வாரா? அவரை செய்ய வைத்துவிட முடியுமா? அவரின் வீட்டில் சென்று தன் மாமியார் கோலோச்ச முடியுமா? அதற்கு அனுமதித்துவிடுவாரா?
ஆனால் இதை எல்லாம் கேட்க கூடாது என்கிறது குடும்பத்தின் மரியாதை எனும் சட்ட சிக்கல்கள்.
பெண்ணை கொடுத்துவிட்டோம் என்னும் பயத்தின் விதை. அந்த விதையின் வெளிப்பாடு கமலா போன்றோரின் விருட்சம்.
உறவாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி அடுத்தவரின் உரிமைக்கு, தனிப்பட்ட விஷயத்திற்குள் நுழையும் அனுமதியை யார் கொடுத்தது?
இங்கே பெண்ணை கொடுத்துவிட்டோம் என்னும் மனப்பான்மையில் தணிந்தும், பெண்ணை எடுத்துவிட்டோம் என்னும் மனப்பான்மையில் துணிந்தும் செயல்படும் வேறுபாடுகளை ஒப்புக்கொள்ள நிஷாவால் முடியவில்லை.
தவறு யார் செய்தலும் தவறு தான். அது தன் வீட்டினர் என்றாலுமே என எண்ணியவள் அடுத்தமுறை கமலா வரட்டும் என்று நினைத்தாள்.
இன்னொருவரின் துன்பத்தில் சந்தோஷம் கொள்ளும் பிறவிகள் என்ன வகையில் சேர்ப்பிக்க முடியும்? கமலா அந்த வகையை சேர்ந்தவர்.
அவர்கள் அணுகப்படவேண்டியவர்கள் இல்லை என்றான் ஆதித்தன். அவர்கள் அடக்கப்படவேண்டியவர்கள் என நினைத்தாள் நிஷா.
ஒருவாறாக அவளுக்கு சொல்லி புரிய வைத்துவிட்டோம் என நினைத்தவன் கிளம்பிவிட நிஷாவிற்கு தாயிடமிருந்து மீண்டும் அழைப்பு.
அந்த வார இறுதியில் வந்து பார்ப்பதாக சொல்லியிருந்தார் அனுராதா. சுரேஷிற்கு அத்தனை சந்தோஷம்.
மகளின் வாழ்க்கை எப்படி இருக்கிறதோ என அவர் கலங்காத நாட்கள் இல்லை எனலாம்.
தங்களிடம் மருமகன் கோபமாக இருந்தாலும் மகளிடம் நல்லவிதமாய் நடந்துகொண்டால் போதும் என நினைத்துக்கொண்டார்.
இப்போது இந்த விஷயத்தை கேட்டதும் இருவருக்கும் அவளின் வாழ்க்கை குறித்தான கவலை குறைந்தாலும், ஆதித்தன் மீதான எண்ணங்கள் அப்படியே தான் இருந்தது.
இன்னும் நிரஞ்சனி பற்றிய எந்தவித தகவல்களும் தெரியவில்லை. நிஷாந்தினி திருமணம் முடிந்த ஒருவாரத்தில் மன்னிப்பு கேட்டு, தான் நன்றாக இருப்பதாக மட்டும் தந்தைக்கு செய்தி அனுப்பியவள் எண் அன்றுடன் உயிரிழந்திருந்தது.
மகள் மீதான கோபம் இன்னும் அதில் கூடியதே தவிர குறையவில்லை. அனுராதாவிடம் முடிவாய் சொல்லிவிட்டார் அவள் அழைத்தால் கூட பேச கூடாதென.
இதோ இளைய மகளின் வாழ்க்கை, அவர்கள் அமைத்துக்கொடுத்த வாழ்க்கை சிறப்பாய் அமைந்திருக்க அதுவே சந்தோஷத்தை தந்தது.
அந்த வார இறுதியில் மகளை பார்த்துவிட்டு கிளம்பியவர்களுக்கு சென்ற இடத்தில் மீண்டும் சங்கரலிங்கத்தின் உடல்நிலை நலிவு வருத்தத்தை அளித்தது.
மகளின் மெலிவு, வீட்டின் சூழ்நிலை எல்லாம் பார்த்த அனுராதாவிற்கு நிஷாவை இப்போதைய சூழ்நிலையில் அங்கே விட முடியவில்லை.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கரலிங்கத்திற்கு உடனடியான அறுவை சிகிச்சை செய்தாகவேண்டிய கட்டாயம்.
நிஷாவும் மெலிந்து காணப்பட அவளையும் கவனிக்க முடியாமல், அனைத்திலும் கவனம் செலுத்த முடியாமல் ஒருவாறு அல்லாடிவிட்டான் ஆதித்தன்.
இதில் நிஷாவிற்கு தலைசுற்றல், உணவு சேராமை என உடலை இன்னும் வருத்தி எடுத்தது.
யாராவது உடன் இருக்கவேண்டிய சூழ்நிலை. அவளால் மருத்துவமனைக்கும் வரமுடியாது போக அனுராதாவிற்கு மகளை அப்படியே விட்டு செல்ல மனதில்லை.
“நாங்க இதை இப்போ கேட்க கூடாது. இருந்தாலும் மனசு கேட்கலை மாப்பிள்ளை. நிஷாவை நாங்க வேணும்னா கூட்டிட்டு போய் ரெண்டுவாரம் பர்த்துக்கட்டுமா?…” என பயந்துகொண்டே தான் கேட்டார்.
ஆதித்தன் யோசிக்கவே இல்லை. நிஷாவை கேட்கவும் இல்லை. சசிகலாவால் நிச்சயமாக கணவனையும் பார்த்து, மருமகளையும் கவனிப்பதென்பது ஆகாத ஒன்று.
தொழிலை வேறு தான் பார்த்துக்கொள்ளவேண்டும். மருத்துவமனை வீடு என்று வேறு கவனிக்கவேண்டும் என யோசித்தவன்,
“சரி நீங்க கூட்டிட்டு போங்க…” என சொல்லிவிட்டான்.
நிஷாவால் நம்ப முடியவில்லை. நிஜமாகவா என்று யோசித்தவள் அவனிடம் கேட்க நினைத்து பின் வாயை மூடிக்கொண்டாள்.
“நீ என்ன நிஷா சொல்ற?…” என்ற தாயிடம்,
“நான் சொல்ல என்ன இருக்கு? அதான் கூட்டிட்டு போக சொன்னாங்கல. வரேன்…” என்றதும் அறுவை சிகிச்சை முடிந்து வீடு வரும்வரை நிஷாவுடன் அனுராதா அங்கே இருந்து பார்த்துக்கொண்டவர் சங்கரலிங்கம் வந்ததும் அவரை பார்த்துவிட்டு சொல்லிவிட்டு கிளம்பினாள் நிஷா.
“கிளம்பறேன்…” என்றவளிடம்,
“பத்திரமா போய்ட்டு வா…” என்று ஆதித்தன் சொல்லி அனுப்ப பல்லை கடித்தவளுக்குள் அவ்வளவு கோபம்.
தன்னை பார்த்துக்கொள்ள கூட வேண்டாம். பக்கத்தில் வைத்துக்கொள்ள கூட முடியாதவன் ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் ஆதங்கம்.
‘என்னை எனக்கு பார்த்துக்க தெரியாதா? நான் கேட்டேனா என்னை கவனிங்கன்னு’ என பொருமிக்கொண்டே தான் கிளம்பி சென்றாள் நிஷா.
திருமணத்திற்கு கேட்கவில்லை, இணை சேர்வதற்கும் கேட்கவில்லை, இப்போது அனுப்புவதற்கு கேட்கவில்லை.
ஒருவிதமாய் அவன் மீதான எண்ணங்களில் பெரிதாய் தளர்ந்து போனாள் நிஷாந்தினி.