ஆதித்தனின் பிடிவாதத்தின் முன் இப்போதும் ஒரு தாயாய் எதுவும் செய்ய முடியவில்லை. அவரின் முகவாட்டம் கண்டு,
“விடுங்க த்தை. கல்யாணம் ஆனதுல இருந்து இதுதான் நடக்குது. எல்லாம் அவர் இஷ்டம். இப்ப இதுவும். ஆனா எல்லாத்துக்கும் ஒரு அளவு உண்டு…” என சொல்லும் பொழுதே கண்ணில் அவ்வளவு கனல்.
ஊருக்கு சென்ற போதும் இதே போல கனன்று சென்றாள். அங்கிருந்து மீண்டும் பிள்ளையுடன் வந்ததும் இப்படி கனன்ற மனதுடன் தான்.
திருமணத்திலிருந்து சந்தோஷமாய் முழுமனதுடன் ஆர்வம் கொண்டு எப்போது எங்கே சென்று வந்தோம் என சிந்தனை வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டாள்.
குழந்தை பிறந்த அன்று பார்க்க வந்தவன் முழுதாய் இரண்டுநாட்கள் போல மட்டுமே இருக்க முடிந்தது.
வந்தவனிடம், அப்போது இருந்த சூழ்நிலையையும், குழந்தை பிறந்த சந்தோஷத்திலும் எதையும் கேட்கவேண்டாம் என மௌனமாய் அவளிருந்திட, அங்கே வைத்து எதுவும் பேசவேண்டாம் என ஆதித்தனும் அமைதியாகிவிட்டான்.
அதன் பின் பேச்சுக்களில் எல்லாம் ஒரு விலகல் தன்மை தானே வந்து ஒட்டிக்கொண்டது நிஷாந்தினிக்கு.
அந்த எண்ணம் மனதில் தோன்றும் பொழுதெல்லாம் ‘அவனுடன் எப்போது ஒட்டி உரசி உலாவினோம்?’ என சந்தேகமும் வந்துவிடும்.
பெரும்பாலும் இருவரும் சேர்ந்து தனித்திருந்த நேரங்களில் ஒன்று வாய்த்தகராறு. இல்லை மௌனக்கூடல்கள். வேறு என்ன என தேடத்தான் வேண்டியதாகி போனது.
போனிலும் பேசுபவன் அவன் சென்றுவந்த அன்றாட வேலைகள் பற்றி சொல்வதோடு அவள் என்ன செய்தாள் என கேட்டுக்கொண்டதுண்டு.
மற்றபடி அதனை தாண்டிய உணர்வு பரிமாறல்கள் வார்த்தைகளில் நிகழ்ந்ததா என்றால் கண்ணை மூடிக்கொண்டு இல்லை என்பாள்.
தன்னை தேடுவதாய் என்றுமே அவன் வார்த்தைகளில் சொல்லியதில்லை. ஆனால் தன் மனது அந்த சொல்லை எதிர்பார்த்து அவனை தேடி இருக்க இன்னுமே மருகி போனாள்.
‘உன்னை தேடாதவனை ஏன் நினைக்கவேண்டும்?’ என்ற வீம்பும் வளர குழந்தை பிறந்த அன்று அவன் உடன் இல்லாதது பெரிய ஏமாற்றத்தை தந்திருந்தது.
அது அவளுமே எதிர்பாராதது தான். அவனை சொல்லியும் குற்றமில்லை. ஆனாலும் மனதின் எதிர்பார்ப்பு கோபமாய் உருவெடுத்து கணவனிடம் தான் முற்றுகையிட்டது.
இரண்டு நாட்கள் ஆவலாய், ஆசையாய் பிள்ளையை, தன்னை பார்க்க வந்தவனிடம் அதனை காண்பிக்க முடியாதளவிற்கு துவண்டிருந்தாள் மனதளவில், உடலளவில்.
அதன் தொடர்ச்சியாக வாக்கியங்கள் எல்லாம் ஓரிரு வார்த்தைகளாக சுருங்க இரண்டு நாட்களும் மாமியார், மாமனார் கூடவே இருக்க மூன்றாம் நாள் ஆதித்தன் மட்டும் கிளம்பியிருந்தான்.
அதன் மறுநாள் மருத்துவமனையில் இருந்து நிஷாந்தினி வீடு சென்று சேர்ந்திருக்க அடுத்த இரண்டு நாளில் பெற்றோர்களும் கிளம்பி வந்தாகிற்று குற்றாலத்திற்கு.
ஆதித்தன் அழைப்பு மட்டும் தவறாது நிஷாந்தினியை சென்றுவிடும். அவளை, குழந்தையை பாராமல் அவன் நாட்கள் முடிந்ததில்லை.
குழந்தை பிறந்து பதினைந்து நாட்களில் மீண்டும் பார்க்க சென்றவன் ஒருநாள் தங்கிவிட்டு குற்றாலம் வந்தவன் மறுநாள் அவளிடம் பேசுவதற்கு அழைக்க நிஷாந்தினி முகத்தில் ஏகத்திற்கும் பதட்டம்.
“என்ன இந்த நேரம் கூப்பிட்டிருக்கீங்க?…” என படபடப்பாய் நிஷா கேட்க கண்டுகொண்டான் ஆதித்தன்.
மனைவியின் ஒவ்வொரு அசைவுகளையும், முகபாவனைகளையும் கவனித்து வருபவனுக்கு இந்த பதட்டமும் யோசனையை தர,
“ஓகே தான். ஒன்னும் பிரச்சனை இல்லை….” என்றவள் விழிகள் பயத்தை காண்பித்தது.
நிஷாவை பார்த்துக்கொண்டே தன் கை கடிகாரத்தை பார்த்தவன் முகத்தில் மீண்டும் கேள்விக்குறி.
“தூங்கிட்டிருந்தியா?…” என கேட்டவன் விழிகள் அவள் பின்னிருந்த கண்ணாடியில் பதிந்து சுருங்கி பின் சிவந்தது.
“ஆமா, திடீர்ன்னு போன் வரவும் பதறிட்டேன். அதான் ஒண்ணுமில்லை…” என சொல்ல,
“பொய் சொல்றியா நீ?…” என கேட்டவன் கேள்வியில் நிஷாவிற்கு வியர்த்து போனது.
“என்ன என்ன பொய்?…” என கண்கள் அவளறியாமல் எதிர் நின்றவளை பார்த்துவிட்டு கணவனை பார்க்க,
“உன் ரூம்ல இருக்கறவங்களை வெளில போக சொல்லு நிஷா….” என்றான் அவன் அதிகாரமாய், கட்டளையாய்.
“யாருமில்ல…” என்று முழுதாய் முடிக்கும் முன்,
“நிஷா…” என இரைந்துவிட்டு அவன் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
“உன் அக்காவை வெளில போக சொல்லிட்டு கூப்பிடு…” என்று குறுஞ்செய்தி அனுப்ப தொண்டை வறண்டுவிட்டது.
நிரஞ்சனி வந்தது எப்படி ஆதித்தனுக்கு தெரியும் என பயந்தே போனாள் நிஷாந்தினி.
அவளை அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் கணவனுக்கு அழைக்க அவள் கைகள் ஒத்துழைக்கவே இல்லை.
என்ன பேசுவானோ என்ற பதட்டத்தில் அழைக்காமல் அமர்ந்திருக்க ஆதித்தனே அழைத்துவிட்டான்.
எடுத்தவள் விழிகள் அச்சத்தில் விரிந்திருக்க பேச வார்த்தைகள் வரவில்லை. தன்னையே துளைக்கும் பார்வை பார்த்தவனிடம்,
“சொல்லுங்க…” என்றாள்.
“நீ தான் சொல்லனும். நான் சொல்ல வேண்டியது எதுவுமில்லை…” என்ற குரலின் வேறுபாட்டில் துணுக்குற்றது அவள் மனது.
“நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆகற அன்னைக்கு தான் ரஞ்சிக்காவும் செக்கப்க்கு வந்திருந்தா. எத்தேர்ச்சையா தான் மீட் பண்ணினோம். அவளுக்கு இப்ப அஞ்சு மாசம்…” என்றவள் அவன் எதுவும் சொல்லுவான் என பார்த்திருக்க,
“நானா பேசலை. அக்கா பேசும் போது என்னால அவாய்ட் பண்ண முடியலை. அம்மா தான் அக்காவை வீட்டுக்கு கூப்பிட்டாங்க…” என்றதும்,
“இத்தனை நாளா ஏன் சொல்லலை?…” என்றவன் கேட்கும் கேள்விக்கு வாய் திறவாமல் மௌனம் சாதித்தவள் அதன் பின் பேச நினைத்தாலும் வாய் திறக்க அவன் அனுமதிக்கவில்லை.