உடன்பிறந்தவளும் பிள்ளையை சுமந்துகொண்டு ஆசையாய் வந்து பேசுகையில் தவிர்க்கமுடியாத அளவிற்கு பாசத்திலும், தாய்மை உணர்விலும் பலகீனப்பட்டு போனாள் நிஷாந்தினி.
சுரேஷ் மட்டும் இன்னும் மூத்த மகளிடத்தில் பேசுவதில்லை. அனுராதா மகளை பார்த்ததுமே எல்லாம் மறந்துவிட அவளை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்.
“எனக்கு என் ரெண்டு பொண்ணுங்களும் வேணும்…” என்றதோடு இல்லாமல்,
“ரஞ்சி வீட்டுக்காரர் பேசறதே ஒரு சிரிப்போட சாந்தமா இனிமையா பேசறார். நமக்கும் பயமில்லாம பேச முடியுது…” என்று வேறு சொல்ல நிஷாந்தினியால் தன் ஆதங்கத்தையும் காண்பிக்க முடியாமல், ஆதித்தனையும் சமாளிக்க முடியாமல் தவித்து போனாள்.
எல்லாவற்றிற்கும் மேல் நிஷாந்தினியை குற்றாலத்திற்கு ஐந்தாம் மாதம் தான் அனுப்பவேண்டும் என்றிருந்த அனுராதாவிடம் சசிகலா தாங்கள் அழைக்க வருவதாக சொல்லிவிட்டார்.
ஆதித்தனின் முடிவு. பிடிவாதமாய் அழைத்து வரும்படி அவனே நாளை குறித்தும் வந்துவிட்டான்.
“நீ சொல்ற தேதில ஐம்பது நாள் தான் ஆகும் ஆதி…” சங்கரலிங்கம் மகனிடம் சொல்ல,
“மாசக்கணக்கு தானே கணக்கு? நாள் கணக்கு இல்லையே? அப்படி பார்த்தா மூணாம் மாசம் ஆரம்பிச்சிருக்கும் நான் கொண்டுவந்த தேதில…” என்று சொல்லிவிட்டான்.
அவன் செல்லாமல் சொந்தங்களை அனுப்பி விமானத்தில் மகன், மனைவியை அழைத்து வந்தாகிற்று.
சுரேஷ் மன்றாடி பார்த்துவிட்டார் ஆதித்தனிடம். இன்னும் முழுதாய் இரண்டு மாதங்கள் பார்த்திருந்துவிட்டு அனுப்புவதாக.
“நிஷா மாசமாயிருக்கான்னு தெரிஞ்ச ஒருவாரத்துல உங்களோட அனுப்பிவச்சது. கிட்டத்தட்ட ஒருவருஷமாக போகுது. இன்னும் திரும்ப அனுப்ப மனசில்லைன்னா என்ன நினைக்கறீங்க நீங்க? அதான் உங்க இன்னொரு பொண்ணு வந்தாச்சுல. என் வொய்பை அனுப்பி வைங்க…” என கறாராய் சொல்லிவிட்டான்.
எவ்வகையிலும் அவனை சமாளிக்க முடியவில்லை. நிஷாந்தினி அவனின் கோபம் கண்டு மௌனமாகிவிட்டாள்.
“அதான் சொல்லிட்டார்ல. என்னை கேட்டா உங்களோட அனுப்பினார். இப்பவும் கேட்கலை. விடுங்க…” என்றவளின் ஆதங்கம் சலிப்பாய் வர மகள் அங்கே நிம்மதியாய் இல்லையோ என்று தோன்றிவிட்டது அவர்களுக்கு.
ஆதித்தனின் கோபமான பேச்சும், நிஷாந்தினியின் பற்றற்ற சலிப்பும் அவர்களை அப்படித்தான் நினைக்க வைத்தது.
“ரஞ்சனியை ஏழாம் மாசம் வளைகாப்பு போட்டு கூப்பிட்டுக்கலாம்ன்னு இருக்கோம். நீயும் இருந்தா நல்லா இருக்குமேன்னு தான் சொன்னேன். ரஞ்சனி வந்த பின்னாடி உன்னை அனுப்பலாமேன்னு நினைச்சேன் நிஷா…”
வாய்தவறி அனுராதா வேறு இப்படி சொல்லியிருக்க நிஷாந்தினிக்கு எண்ணங்கள் வேறுவிதமாய் தோன்றிவிட்டது.
‘அப்போ எனக்காக, என் பிள்ளைக்காக இருக்க சொல்லவில்லையா?’ என அவளிருந்த மனநிலைக்கு அப்படித்தான் தோன்றவைத்தது.
நிஷாந்தினியை அழைக்க ஆதித்தன் சென்னை செல்லவில்லை. பெற்றோரையும், அக்கா குடும்பத்தையும் மட்டும் அனுப்பி வைத்தவன் நிஷாந்தினியை அழைக்க விமானநிலையம் வந்துவிட்டான்.
தன்னிடம் நிரஞ்சனியின் வருகையை அவள் மறைத்து வைத்ததில் கோபமாய் இருந்தவன் தான்.
ஆனாலும் அதனை நேரில் அவர்களை பார்க்கையில் துளியும் காண்பிக்கவில்லை.
இன்முகமாக வரவேற்றவன் வீடு வந்து சேர்ந்ததும் மகனுடன் பொழுதை செலுத்த உறவுகள் அனைவரும் வந்து பார்க்க ஆரம்பித்தனர்.
அப்போது வேலையாய் சென்றவன் இன்னும் வந்திருக்கவில்லை. நிஷாந்தினி மகனை மடியில் வைத்தபடி இதனை யோசித்துக்கொண்டிருக்க,
“நீங்க போய் தூங்குங்கம்மா. நான் பார்த்துக்கறேன்…” என்று தாயை அனுப்பி வைத்தவன் குரலில் தான் தன்னை மீட்டாள் நிஷா.
கிட்டத்தட்ட வெகுமாதங்களுக்கு பிறகான தனிமை அவர்களின் அறையில். அவன் மீதான பார்வையை நிஷா திருப்பிக்கொள்ள ஒன்றும் சொல்லாமல் குளித்து உடைமாற்றி வந்தான்.
தலையில் நீர் இன்னும் சொட்டிக்கொண்டிருக்க சரியாய் துவட்டாமல் வந்ததன் அடையாளம் அவனின் தோள், கழுத்து, அதன் கீழ் என துளித்துளியாய் ஒட்டிக்கொண்டு நின்றது.
‘மழை வேற. சளி புடிக்கும்’ என நினைத்தவளால் சொல்ல முடியவில்லை. மௌனம் காத்தாள்.
ஜில்லென்ற கைகளின் குளிர் குழந்தையை தாக்க கண்ணை கசக்கிய அபி உறக்கத்திலேயே அழுகை.
“என்னாச்சு?…” என பதறி பாவமாய் பார்த்தான் ஆதித்தன்.
“இவ்வளோ ஜில்லுன்னு இருந்தா பிள்ளைக்கு ஒத்துக்குமா? அதுவும் வெளில மழை. நீங்களும் குளிச்சிட்டு சரியா துவட்டாம வந்திருக்கீங்க? அவனுக்கு ஏற்கனவே காய்ச்சல்….” என வேகமாய் நிஷா சொல்ல,
“காய்ச்சலா? இவ்வளோ நேரம் இதை சொல்றதுக்கென்ன? வாய்ல என்ன கொளுக்கட்டையாடி?…” என்றவன் கோபச்சூடு அவளை பாதிக்கவில்லை.
மீண்டும் மகனை மடியில் போட்டு ஆட்ட சிறிது நேரத்தில் அழுகை குறைந்து உறங்கவும் நிஷாந்தினி அவனை தொட்டிலில் போட்டாள்.
ஒவ்வொன்றையும் பார்த்தபடி அமர்ந்திருந்த ஆதித்தன் முகத்தில் கனிவு ததும்ப அதை அவள் பார்த்தால் தானே?
“தூங்கிட்டானா?…” என மீண்டும் கேட்க,
“நான் தூங்கனும். அந்த பக்கம் போங்க நீங்க…” என்றாள் நிஷா.
“இப்பவே என்ன தூக்கம்? இங்க உட்கார்…” என அவளின் கை பிடித்து அமர வைக்க,
“ப்ச், விடுங்க. எனக்கு ரெஸ்ட் வேணும். அவன் தூங்கும் போது தான் நான் தூங்க முடியும்….” என எரிச்சலுடன் சொல்ல,
“சரி நீ தூங்கு. நான் பார்த்துப்பேன்…”
“எப்படி என்னை அனுப்பி வச்சீங்களே? பார்க்க முடியாம தானே? அது மாதிரியா?…” என்ற கேள்வியில் ஆதித்தன் பெரிதாய் அலட்டிக்கொள்ளவே இல்லை.
அவன் இப்படித்தான் இருப்பான் என தெரிந்தும் அவனிடமே போய் பேசுகிறோமே என தன்னை தானே நிந்தித்துக்கொண்டவள்,
“உங்ககிட்ட பேச முடியாது. பேசியும் பிரயோஜனமில்லை….” என சொல்லி மறுபக்கம் சென்று படுக்க படுத்ததும் அவளை தன் கைவளைவில் கொண்டுவந்தான்.
நிஷா மௌனமாயிருக்க ஆதித்தனின் அமைதி சில நொடிகள் மட்டுமே. அவனுடலின் குளுமை நிஷாவை இன்னும் நெருங்க,
“டாக்டர்…” என ஆரம்பிக்கும் முன்,
“தெரியும்டி. நான் என்ன கூமுட்டையா? எல்லாம் டாக்டர்கிட்ட கேட்டுட்டேன். அடுத்து எப்போன்னு…” என்றதோடு அவளுக்கும் விளக்கம் சொல்லியவன்,
“அவங்கக்கிட்ட நீ ட்ராவல் பண்ணலாமா என்னன்னு எல்லாம் கேட்டுட்டு தான் உன்னை இங்க வரவழைச்சேன். பிள்ளை பிறந்தும் என்னை கூப்பிட்டீங்களான்னு நீ கேட்கறதுக்கா? நான் ஒன்னும் உன்னை பார்த்துக்க முடியாம அனுப்பி வைக்கலை. எங்க நீ கஷ்டப்படுவியோன்னு தான் அனுப்பினேன்…” என்றான்.
“இந்த சமாளிப்பு எல்லாம் வேண்டாம். எதுவானலும் நீங்க பார்க்கலைல. எந்த கஷ்டம்ன்னாலும் என்னை பார்த்துக்க வேண்டியது உங்களோட பொறுப்பு தானே? இதுக்கா மிரட்டி கல்யாணம் பண்ணுனீங்க நீங்க?…” என்றதும் ஆதித்தன் முறைப்பும், புன்னகையுமாய் பார்த்தான்.
“இங்க என் கூட இருக்கனும்னு நீ நினைச்சியா நிஷா?…” என்ற கேள்வியில் அவள் திடுக்கிட்டு பார்க்க,
“இந்த தடவை மாதிரி அடுத்து எல்லாம் நான் போக மாட்டேன். எல்லாமே நீங்க தான் பார்த்துக்கனும். என்னோட டெலிவரி முதற்கொண்டு எனக்கு எல்லாம் நீங்க தான் செய்யனும். ஆமா. அப்பத்தான் என் கஷ்டம் உங்களுக்கு தெரியும்…” என கறாராய் சொல்லியவள் கோபமெல்லாம் ஆதித்தன் மனதை குளிர்வித்தது.