“என்ன? என்ன பார்க்கறீங்க? இவங்க கேட்காம கல்யாணம் பண்ணுவாங்க. கேட்காம குடும்பம் பண்ணுவாங்க. கேட்காம அம்மா வீட்டுக்கும் அனுப்புவாங்க. கேட்காமலே கூட்டிட்டு வருவாங்க. நான் என்ன பொம்மையா?…” என்று மீண்டும் கத்த என அவளின் கோபங்கள் எல்லாம் வெளியேற வார்த்தைகள் தடுமாற்றமும், அழுகையுமாய் வெளிப்பட்டது.
ஒவ்வொன்றும் ஆதித்தனின் மனதின் ஆழம் சென்று சேர அதன் கனம் தாங்கவியலாததாகவும், அதே நேரம் அத்தனைக்கு பின்னாலும் அவள் தன்னை எவ்வளவு தேடியிருக்கிறாள் என்றும் புரிந்தது.
“நாம இதெல்லாம் பேசிக்கிட்டதே இல்லை, இல்ல நிஷா?…” என்ற ஆதித்தனின் நிதானமாக கேள்வியில் நிஷாவும் தேங்கி நிற்க,
“நம்மோட எதிர்காலம், நாம எப்படி வாழ போறோம், நமக்கு எத்தனை குழந்தைங்க இப்படி எதுவுமே நாம பேசினதில்லை….” என்றதும் நிஷாவும் ஸ்தம்பித்தாள்.
நிஜம் தானே? சேர்ந்து இருந்தது மூன்று மாதங்கள் போல தான் இருக்கும். அதன் பின் குழந்தை, தாய் வீடு, பேர்காலம் என நாட்கள் ஓடிவிட்டதே தவிர இருவருக்குமான மனம் விட்டு பேசும் வாய்ப்புகள் எங்கே?
“ஆனா கரெக்ட். இனிமே பேசலாம். நிறைய நிறைய. செகென்ட் டெலிவரி. ஹ்ம்ம், அதுக்கொரு நாலு வருஷம் கேப் விட்டுக்கலாம். அடுத்து பார்த்துக்கலாம். ஓகே?…” என்றவன் அதனை தொடர்ந்து பேச நிஷா வாயடைத்து போனாள்.
“என்ன, எல்லாம் சரி தானே? அடுத்த டெலிவரி என்ன? அதுக்கடுத்த டெலிவரி கூட நீ இங்கயே பண்ணிக்கோ. நான் பார்த்துக்கறேன். நான் பார்க்கனும். அவ்வளோ தானே?…” என இலகுவாய் சொல்ல,
“அதுவும் நான் சொல்லி தான்…” அதற்கும் நிஷா கொக்கி போட,
“தெரியாததை சொல்லி தா நிஷா. தெரிஞ்சுக்கறேன். எல்லாருமே எல்லாம் தெரிஞ்சுட்டு வாழ்க்கையை ஆரம்பிக்கிறதில்லை. நாம தெரிஞ்சுக்க ஆரம்பிச்சோம். அதுக்குள்ள நாள் ஓடிருச்சு…”
“எவ்வளோ ஈஸியா தப்பிக்கறீங்க நீங்க….”
“சரி வேற என்ன செய்யனும்? சொல்லு, செஞ்சிடலாம்…” என்று கேட்டவனிடம் என்ன சொல்ல?
அவளுள் என்னவோ செய்தான் ஆதித்தன். அவனின் வார்த்தைகள் அவளை அணை போட செய்தது.
ஆனாலும் அப்போதும் கூட அவள் தேடினாள் என்றானே தவிர தன்னுடைய தேடலை பற்றி எதையும் அவளிடம் சொல்லிக்கொள்ளவில்லை.
அதை வாய்விட்டு கேட்க அவளும் முனையவில்லை. கேட்டு அதற்கும் வில்லங்கமாக பதில் வரும். இன்னும் கடுப்பாகும்.
அந்த ஆதங்கம் அவளிடம் தங்கிவிட அதற்கு அவசியமே இல்லை என்பதை போல இருந்தது அதற்கடுத்தான வாழ்நாட்கள் எல்லாம்.
அவன் பேச்சுக்கள், செய்கைகள், பார்வைகள் ஒவ்வொன்றிலும் தான் உடன் இல்லாததன் தாக்கத்தை வெகுவாய் உணர்ந்தாள். உணர வைத்தான்.
எத்தனை தான் இருந்தாலும் ஆரம்பத்தின் சின்ன கசப்பு அடிநாக்கில் தங்கிவிட்டதை போல அவன் வாழ்வில் தான் நுழைந்தவிதம் நிஷாவின் மனதில் படிந்திருந்தது.
குழந்தைக்கு ஒன்றரை வயது வரை வீட்டில் இருந்தவள் வீட்டினுள் அடைந்திருக்கமுடியாமல் வேலைக்கு செல்வதை பற்றி பேச ஆதித்தன் மறுப்பான் என நினைத்திருந்தவள் அவன் உடனே ஒப்புக்கொண்டதில் ஆச்சர்யமானாள்.
அவனை புரிந்துகொள்ள இன்னும் தான் எத்தனை தூரம் பயணிக்கவேண்டுமோ என்றோர் எண்ணமும் அவளுள் சேர்ந்துகொண்டது.
“தாராளமா போ. யார் வேண்டாம்ன்னு சொன்னா? உனக்கு பிடிச்சதை செய்…” என சொல்லிவிட்டான்.
“எதுக்குப்பா வேலைக்கு எல்லாம்?…” என்ற சசிகலாவிடம்,
“அவளுக்கு வேண்டாம்ன்னு தோணும் போது அவளே இருப்பா. விடுங்கம்மா…” என்றான் ஆதித்தன்.
நிஷாவை அவன் வட்டத்திற்குள் வைத்திருக்க நினைக்கவில்லை. ஆனால் அவளை சுற்றி அவனே வளையமாக்கி வளைந்து நின்றான்.
அருகிலுள்ள தனியார் ஆரம்பப்பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்தவள் நாட்கள் இலகுவாகவே சென்றது.
முன்பை போல அழுத்தங்கள் குறைந்திருந்தாலும் தன் பிறந்த வீட்டினரின் பேச்சில் ஆதித்தன் எடுக்கும் அவதாரங்கள் மட்டுமே அவளை மிரள செய்யும்.
எல்லாவற்றிலும் அவளுக்கு இணங்கி நடப்பவன் பேச்சுக்கள் நிரஞ்சனி, பெற்றோர் என்று வந்துவிட்டால் இன்றளவும் அவளிடம் எரிமலை தான்.
எப்போதடா முடிவடையும் இந்த விதண்டாவாதங்கள் என நினைத்தால் அதற்கு ஆரம்பப்புள்ளியாய் தன் வீட்டினர் இருக்க அவர்கள் வைக்கும் புள்ளியை நீட்டித்துவிடுவான் ஆதித்தன்.
ஆனால் அந்த வாழ்க்கையிலும் அவனுக்கு ஏற்ற விதமாய் வாழ அவள் வாழ பழகி கொண்டாளா, இல்லை அவளுக்கு ஏற்றதாய் அவன் மாறிக்கொண்டானா என்னும் விதமான ஒரு வாழ்வியல் இருவரையும் பிணைத்து வைத்திருந்தது.
நீ இன்றி நானில்லை என்ற வார்த்தைகள் சூழ்ந்த ஜரிகை போர்வைகள் இன்றிய ஒரு மேல்பூச்சு இல்லாத வாழ்க்கை.
இயல்பாய் இணைந்து, இயைந்து, வாழ்ந்து இதோ இப்போது வரை முட்டிக்கொண்டும், மோதிக்கொண்டும் வெட்டிக்கொள்ளாமல் ஒட்டுதலாய் ஒரு தாம்பத்தியம்.
அவன் மிஞ்சினால் அவள் மிஞ்சுவதும், அவள் மிஞ்சினால் மிரட்டலாய் அவன் கொஞ்சுவதுமாய் தம்பதிகள் இருவருக்குமிடையே சுவாரஸியம் மட்டும் குறைந்ததில்லை.
இதோ அடுத்ததாய் ஒரு பிரச்சனை. சென்னை சென்று என்ன செய்வானோ என எண்ணியபடி நிஷாந்தினி இருக்க ஆதித்தன் அதை பற்றிய கவலைகள் இன்றி பயணத்தை ரசித்து கடந்தான்.
முதல் முதல் அவனுடனான பயணத்தில் கால்கள் வீங்கி இருக்க அடுத்த முறை அதை செய்யமாட்டான் என்ற அவள் நினைப்புகள் எல்லாம் தவிடுபொடியாக்கியவன்,
“பழக, பழக சரியாகிடும். கால் வீங்கிக்கும், சேராதுன்னு ட்ராவல் பண்ணாம இருப்பியா நீ? ஏன் என்னை பழகலையா உனக்கு?…” என வியாக்கியானம் பேசும் அவனை என்ன செய்தால் தகும் என பொங்குவதெல்லாம் இன்னும் குறையவில்லை.
கடந்தகால எண்ணங்கள் எல்லாம் மீண்டும் நிகழ்காலத்திற்கு வந்து நிற்க இதோ சென்னையில் ஆதித்தன் பதிவு செய்திருந்த ஹோட்டலில் உறங்கிய மகனை படுக்கையில் கிடத்தியிருந்தாள் நிஷாந்தினி.
அவளின் வீட்டிலிருந்து அழைப்பு வந்துகொண்டே இருக்க எடுத்து பேசவே தலை வலித்தது அவளுக்கு.
பதில் சொல்லமுடியாதே அவர்களிடம். பெரும் யோசனையுடன் நிஷா அதனை பார்க்க,
“அட்டன் பண்ணி வந்துட்டோம்ன்னு சொல்லவேண்டியது தானே?…” என்றவனை முறைக்க மட்டுமே முடிந்தது.
“ஓகே…” என்றவன் நிஷாவின் போனை எடுத்து,
“நாங்க ஹோட்டலுக்கு வந்துட்டோம். குட்நைட்…” என்று சொல்லி வைத்துவிட்டான்.
ஆதித்தன் அவள் போனை எடுக்கவும் நிஷா வேகமாய் எழுந்து சென்று தடுக்கும் முன் அழைப்பை ஏற்று நொடிநேரத்தில் தகவலை சொல்லி வைத்துவிட தலையில் கை வைத்துவிட்டாள் நிஷா.
“இதை சொல்ல இந்த பாடா உனக்கு? டின்னர் சொல்லிருக்கேன். ட்ரெஸ் மாத்தலையா? இல்லை சாப்பிட்டு மாத்துவியா?…” என அசராது கேட்டவனை தலையணை கொண்டு மொத்தி எடுக்க,
“நீங்கலாம் மனுஷனே இல்ல. உங்களை யார் சொல்ல சொன்னா?…” என பல்லை கடித்தவள் கைகளை இறுக்கமாய் வளைத்து பிடித்து,
“பாரு, உன்னை காப்பாத்தியிருக்கேன். நான் சொல்லவும் அடுத்து போன் வரலை. இல்லைன்னா நீ உக்கார்ந்து வரைபடம் போட்டு விளக்கனும். எனக்கு அதுக்கெல்லாம் டயமில்லை…” என்று சொல்லி இன்னும் வாயில் நான்கு அடிகளை வாங்கிக்கொண்டான்.
“உங்களை எல்லாம் பெத்தாங்களா செஞ்சாங்களா? முதல்ல உங்கம்மாவுக்கு முட்டை மந்திரிச்சு வைக்கறேன். உங்கள பெத்து என் தலையில கட்டினதுக்கு…” என சொல்லியவள் கோபத்தில் அடக்கமாட்டாமல் சிரித்தவன்,
“ரொம்ப பேசறடி நீ…” இன்னும் தனக்குள் இழுத்துக்கொள்ள,
“அபி முழிச்சுக்குவான்…” என கிசுகிசுப்பாய் நிஷா சொல்லவும் கள்ளப்புன்னகையுடன் தன் கைகளை தளர்த்தினான் ஆதித்தன்.
“இந்த சிரிப்போடவே இந்த ஊரை காலி பன்ற வரைக்கும் இருந்தா உங்களுக்கு கோடி புண்ணியம்…” என்றாள் நிஷாந்தினி.
“அது நாளைக்கு எல்லாரும் பேசறதை பொறுத்து இருக்கு…” என அலட்சியமாக சொல்லிவிட்டு குளியலறை செல்ல,
“சுத்தம். இவர்கிட்ட பேசிட்டாலும் கழுதையில…” என நொடித்துக்கொண்ட நிஷா தனது போனை எடுத்து பார்க்க அனுராதா குறுஞ்செய்தி.
‘நாளைக்கு எழுந்ததும் பேசு’ என அனுப்பியிருக்க ஆதித்தன் பேசியதில் கோபம் இருந்தாலும் இப்போது சிரிப்பே விஞ்சியது.
புன்னகையுடன் தங்களுக்கான இரவு உடையை எடுத்து வைத்துவிட்டு ஆதித்தனுக்காக காத்திருந்தாள் நிஷாந்தினி.