காலை நிஷாவின் போனில் இருந்து குறுஞ்செய்தி எழுந்துவிட்டதாக வந்ததுமே கிளம்பி வந்திருந்தனர் அனுராதாவும், சுரேஷும்.
“என்ன நிஷா வீட்டுக்கு வராம இங்க வந்திருக்கீங்க? அன்னைக்கு நான் அவ்வளவு சொல்லியும்?…” என அனுராதா கேட்க,
“மாப்பிள்ளை எங்கம்மா?…” என்றார் சுரேஷ்.
“அபியோட கீழே பார்க் வரை போயிருக்காங்க ப்பா. வந்திருவாங்க…” என சொல்லிய நிஷாந்தினி,
“இப்ப எதுக்கு இவ்வளோ பதட்டப்படறீங்க? இங்க பங்க்ஷன் ஹால் பக்கமேன்னு அவங்க புக் பண்ணிட்டாங்கப்பா. அதுவும் இல்லாம நைட் நாங்க கிளம்பனும். அங்க வீட்டுக்கு வந்திட்டு இங்க வரது ரொம்ப கஷ்டம். நான் நேத்தே சொன்னேன்ல…” என்றதும் அனுராதா அதிருப்தியாய் பார்த்தார்.
“நேத்து நானும் தான் சொன்னேன் வீட்டுக்கு வந்து தங்குங்க. உன் வீட்டுக்கார்கிட்ட பேசுன்னு…” என அனுராதா சொல்ல,
“அதான் நேர்ல வந்து கூப்பிட்டோமே நிஷா. இன்னும் என்னம்மா கோவம்?…” என்றார் சுரேஷ்.
“அப்பா என்ன திரும்பவும் இதையே சொல்றீங்க? என்ன கோவம் இருக்கு சொல்லுங்க. சும்மா அதையே பேசிட்டிருக்கீங்க? கோவமிருந்தா இங்க வந்திருக்கவே மாட்டார்….” நிஷாவுக்கு சுள்ளென்று வந்தது.
மீண்டும் இதையே சொல்லி சொல்லி அவர்களை நியாயப்படுத்த பார்க்கின்றாரே என்று.
“அதுக்கில்ல நிஷா, அந்த லாட்ஜ் பிரச்சனைல இன்னும் மாப்பிள்ளை கோவமா இருக்காரோன்னு நினைச்சு தான் கேட்டேன்…” சுரேஷ் தன்மையாக பேச,
“அம்மாக்கும், உங்களுக்கும் சண்டையே வராதா? இல்லை சண்டை போட்டு தான் எங்கயும் போகாம, வராம இருக்கீங்களா? அவருக்கு கோவமாவே இருக்கட்டும். எனக்காக தான இங்க வந்திருக்கார். இதுக்கு மேல என்ன வேணும்?…” என்றவள் நியாயம் அவர்களுக்கு புரியவில்லை.
“அதை தான் நானும் சொல்றேன். இவ்வளோ தூரம் வந்துட்டு வீட்டுல தாங்காம வெளில ரூம் எடுத்து தங்கறது நல்லாவா இருக்கு? இது ரஞ்சனி வீட்டுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க?…” என அனுராதா சொல்லவும் அதுவரை மட்டுப்பட்டிருந்த ஆத்திரம் மீண்டும் கரையை கடந்தது.
“யார் என்ன நினைச்சா எனக்கு என்ன? இப்பவும் ரஞ்சனி வீட்டுக்காக தான் கூப்பிடறீங்களா நீங்க?…” என நிஷா நேரடியாக கேட்டுவிட,
“ஐயோ, இல்லை நிஷா. என்ன இப்படி பேசற நீ?…” என அனுராதா முகமே தொங்கி போனது.
“பின்ன வேற எப்படி பேச? திரும்ப திரும்ப சொல்றேன். நம்ம வீட்டுக்கு வந்து போறதுக்கே அஞ்சு மணி நேரம் எங்களுக்கு கூடுதலா ஆகிடும். நாளைக்கு அபிக்கு ஸ்கூல் இருக்கு. எனக்கும் ஸ்கூல் இருக்கு. நேரத்துக்கு போக வேண்டாமா?…” என நிஷா சொல்லவும்,
“விடு ராதா. அவளை ஏன் டென்ஷன் பன்ற? வந்ததே போதும்ன்னு நினைக்க வேண்டியது தான்…” என்றார் சுரேஷ்.
“சரி ரஞ்சனிக்கு வந்ததை சொல்லிட்டியா?…” என அனுராதா கேட்க,
“ஏன் நான் வருவேன்னு அவளுக்கு தெரியுமே? அவ கூப்பிடமாட்டாளா?…” என பதிலுக்கு நிஷா கேட்க,
“என்ன நீ இப்படி பேச ஆரம்பிசிச்ட்ட? அதுவும் உன் புருஷன் பேச்சு அப்படியே ஒட்டிக்கிச்சு…” என்றார் அனுராதா.
“ஒருவிஷயம் ஓப்பனாவே சொல்றேன். தயவு செஞ்சு இதை சொல்லாதீங்க. அப்பறம் எனக்கும் ரஞ்சிக்காவுக்கும் நடுவுல நீங்களே கோடு போட்ட மாதிரி ஆகிடும்…” என்று நிஷா சொல்லிவிடவும் திகைத்து போனார் அனுராதா.
“ராதா, பேசாம இருக்கமாட்டியா?…” என்ற சுரேஷிற்கு மகளின் ஆதங்கம் புரிந்தது.
சில சமயங்களில் சந்தர்ப்ப, சூழ்நிலைகள் இப்படி மாறிவிடுவது தங்களால் தான் என அவர் மறுக்கமுடியாத உண்மை.
இளையமகள் சொல்ல வருவதும் புரிந்தது அவருக்கு. ஆனால் அனுராதாவிற்கு பெற்றோராய் தங்களின் எண்ணம் மட்டுமே.
தங்களை சுற்றி இருப்பவர்களின் கேள்விக்கு ஆளாக வேண்டுமே? ஏன் மகளால் வந்து செல்ல முடியாதா?
என்றோ வருபவள் இப்படி வெளியில் தங்கினால் தங்களுடைய நெருங்கிய உறவுகளே அதனை ஒரு பேச்சாக சொல்லி சிரிக்க கூடும்.
என்னவோ பிரச்சனை என அவர்களாகவே யூகித்து பேச கூடும் என தான் அனுராதா மகளை பிடித்து நெருக்குவது.
அதிலும் இன்றளவும் நிஷாவின் வாழ்க்கையை பற்றிய விமர்சனங்கள் தங்களின் சொந்தங்களுக்குள் நடந்துகொண்டு தான் உள்ளது.
அதையும் வேதனையுடன் காது கொடுத்து கேட்டுகொண்டு தான் இருக்கிறார் சுரேஷ்.
“என்ன சுரேஷ் உன் மருமகன் கோவக்காரனாச்சே, இவ்வளோ பிரச்சனைக்கு மத்தியில ரெண்டாவது மகளை கட்டி குடுத்திருக்க. எப்படி இருக்கான்னு அடிக்கடி போய் பார்த்துக்க…” என நேரடியாக கொள்ளியை எறிந்துவிட்டு சென்றிருக்கின்றனர்.
“மாசமாயிருக்கான்னு கல்யாணமாகி மூணு மாசத்துல கூட்டிட்டு வந்தது. உடம்பு சரியில்லன்னு நீயே சொல்றியோ? இப்ப வரைக்கும் உன் மருமகன் வந்து போற மாதிரியே தெரியலையே?…” என சிலர்.
“சொந்தக்காரங்களையே அவ்வளோ பேசுவா. அங்கயும் வாய் நிக்குமா? திமிரா பேசியிருப்பா. அனுப்பியிருக்காங்க. பிரச்சனையோட தான் வந்திருப்பா போல? இல்லைன்னா வருஷமாக போகுது. இன்னும் வந்து கூட்டிட்டு போகலையே?…” என தன் குடும்ப பெண்களே எள்ளி நகையாடினரே.
“ஊருக்காக ஒரு பேச்சு வந்திட கூடாதுன்னு சுருக்கமா வளைகாப்ப முடிச்சிக்கிட்டாங்க…” என அதற்கும் ஒரு குறைபடல்.
“புள்ள பெத்து அம்பது நாள்ல பச்ச உடம்புக்காரிய கூட்டிட்டு போயிருக்காங்க. என்னவும் பிரச்சனையா? வேற வேலையே இல்லையா?…” என அதற்கும் ஒரு சந்தேகப்பார்வை.
“இன்னும் நிஷா புருஷன் மாமனார், மாமியாருன்னு ஒட்டுதல் இல்ல போல? மூத்த மக புருஷனோட வரவும் இளையவருக்கு கவனிப்பு குறைஞ்சிருச்சோ? அந்த கோவமோ?…” என எள்ளல் பரிகாசங்கள்.
“வந்தா பெருசா தங்கறது கூட இல்ல போல உங்க இளைய மருமகன்? பாத்துக்கப்பா. ரெண்டும் பொட்டப்புள்ளைங்க. கடைசி காலத்துல என்ன செய்ய போறியோ?…” என்று கவலை போல அவர்களின் மனதை தைத்துவிட்டு செல்வதும் உண்டு.
இத்தனையும் சேர்ந்து அனுராதா மனதில் அழியாத சுவடாய் பதிந்து போனது. அதன் வெளிப்பாடு அவர் மகளின் பக்கமிருந்து யோசிக்காமல் இப்படியே நடந்துகொண்டிருப்பது.
“என்னப்பா அமைதியாகிட்டீங்க? நான் பேசினதுல கோவமா?…” என்ற கேள்வியில் இல்லை என புன்னகைத்தார் சுரேஷ்.
“நான் சந்தோஷமா இருக்கேன் ப்பா. வேற எப்படி சொல்லி புரியவைக்கன்னு எனக்கு தெரியலை…” என நிஷாவும் தந்தையின் முகம் கண்டு இறங்கி வந்து பேச,
“அப்பாவும், அம்மாவும் ரஞ்சனிக்கு, அவ புருஷனுக்கு முக்கியத்துவம் குடுக்கறோம்ன்னு உன் மனசுல எதுவும் நினைப்பு இருக்காம்மா?…” என்ற கேள்விக்கு நிஷாவிடம் பதிலில்லை.
அவள் அதனை இல்லை என மறுக்காததே சுரேஷிற்கு மகளின் மனதை வெளிச்சம் போட்டு காண்பித்தது.
“ப்ச், ம்மா ஆரம்பிக்காதீங்க. நான் நினைக்கிறது வேற. நீங்க யூகம் பன்றது வேற. ரஞ்சிக்காவை நீங்க வீட்டுக்கே கூட்டிட்டு வந்து வச்சு தாராளமா கொண்டாடுங்க. எனக்கு சந்தோஷம் தான். அதுக்குன்னு என் புருஷனை அவ புருஷனோட கம்பேர் பண்ணாதீங்க. அது தான் எனக்கு புடிக்கலை…”
தான் வேறு விடுதி விஷயத்தில் மருமகனிடம் சற்று வாய் துடுக்காக பேசி இருக்க ஒவ்வொரு முறையும் இதில் அவதிப்படுவது மகள் தானே என எண்ணி மருகிக்கொண்டிருந்தார்.
இப்போது அனுராதாவும் சில நேரங்களில் பேசிவிட அது நிஷாவை எவ்வளவு பாதிக்கிறது என புரிந்தது.
“நாங்க எப்போ உன் வீட்டுக்காரரை குறைச்சு பேசினோம் நிஷா? அவர்கிட்ட பேசவே யோசனையா இருக்கு. எப்ப பட்டுன்னு பேசுவாரோன்னு ஒரு பயத்தோட பார்த்து பார்த்து பேசற மாதிரி இருக்கு. அதான் சும்மா ஒரு வார்த்தைக்கு சொல்லியிருப்பேன்…” என்ற அனுராதா,
“இப்பவும் பார். நீ தான் வீட்டுக்கு வந்து கூப்பிடலைன்னு சொல்லி சங்கடப்பட்ட. ஆனா ரஞ்சி வீட்டுக்காரர் பெருந்தன்மையா போன்ல சொன்னா போதாதா? ஏன் இந்த அலைச்சல்ன்னு கேட்கறார். ஒரு பேச்சுவாக்குல இதை சொன்னா நீ என்ன நினைக்கிற?…” என்றதும் இவர்களிடம் சொல்ல முடியாது என நிஷா மௌனமாகிவிட்டாள்.
“ராதா திரும்பவும் என்ன பேசற நீ?…” என சுரேஷ் அதட்ட,
“அதெல்லாம் ஒன்னுமில்லைடா. நாங்களும் எல்லாம் பேக் பண்ணி கொண்டு வந்தாச்சு. ரூம் புக் பண்ணிட்டோம். அபியோட இருந்த மாதிரி இருக்குமே. அதான்…” என்றார் மகளின் தலையை வருடியபடி.