“ப்ச், அது அவங்களுக்குள்ள. இனி இதை ஆராய்ச்சி பண்ணாத. நிஷாவுக்கு புடிக்கலை. அவ புருஷனை நாம குறைவாவே பார்க்கிற மாதிரி ஒரு எண்ணம் நிஷா மனசுல வருத்தமா வந்திருச்சு. விடு ராதா…” என்றார் அவர் பேரனுக்கு கேட்டுவிடாத விதமாய்.
“அதெல்லாம் இல்லைங்க…” என்ற ராதா பேசும் முன்,
“நம்ம மேலையும் தப்பிருக்கு. எப்பவும் அப்படியே நினைக்கிறோம். நிஷா சந்தோஷமா தான் இருக்கா. தப்புன்னா அவளே அதை சரி பண்ணிப்பா. அந்த தைரியம் நம்ம பொண்ணுக்கு இருக்கு. நாம இதுதானோன்னு நினைச்சு மூக்கை நுழைக்க வேண்டாம்…” என உறுதியாய் சொல்லிவிட்டார் சுரேஷ்.
அனுராதா எதுவும் சொல்லவில்லை. ஆனாலும் மகளின் முகத்தில் தான் அவரின் பார்வைகள்.
சாப்பிட அந்த டேபிளில் வந்து ஆதித்தன் அமர்ந்ததும் மற்றவர்களுக்கு என்ன தேவையென நிஷா கேட்டு ஆடர் செய்ய ஆதித்தன் மௌனமாய் சாப்பிட்டு முடித்தான்.
அவனுக்குமே நிஷா சொல்லிய உணவு தான். எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும்,
“காபி நிஷா?…” என்றான் ஆதித்தன்.
அவன் குரல் வழக்கம் போல அதிகாரமாய், ஆளுமையாய் தான் வந்தது. அதட்டல் போல தோன்ற அனுராதா அமைதியாய் பார்த்தாள்.
“நோ…” என்ற நிஷாவின் குரல் அவனுக்கு கேட்டதோ இல்லையோ மனைவியின் முகம் கொண்டு தோளை குலுக்கிக்கொண்டான்.
இதுவும் அனுராதாவின் கண்களில் விழுந்தது. சற்றே ஆச்சரியமும். விசித்திரம் போல இதனை பார்த்தார்.
சற்று முன் சுரேஷ் சொல்லியதை போல தன் பார்வையை மாற்ற வேண்டுமோ? இதுவே அவருக்கு இப்போது தான் தோன்றியது.
“அபி, இதை தாத்தாவுக்கு குடு…” என்று நிஷா ஒரு பரிசு தாள் சுற்றியதை தர,
முதல்முதலில் சுரேஷ் ஆதித்தனை பற்றி சொல்லியது ஞாபகம் வந்தது நிஷாந்தினிக்கு. இருவரும் இதில் ஒன்று என்றே தோன்றியது.
இப்போதும் மனதின் சந்தோஷத்துடன் சுரேஷ் அதனை திரும்பி பார்த்து பூரித்து போனவர்,
“அளவு முக்கியமில்லை நிஷா. வாங்கி தரனும்ன்ற மனசு போதும். எனக்கு ரொம்ப சந்தோஷம்மா…” என்றார் அவர்.
“அப்பறம் நிஷா, நாங்க பக்கத்துல இருக்கற வாட்டர் தீம் பார்க்குக்கு அபியோட போய்ட்டு வரோம். நீயும் மாப்பிள்ளையும் வரீங்களா? இல்லை வேற ப்ளான் இருக்கா?…” என்று கேட்க,
“அவங்கட்ட கேட்டு சொல்றேன்…” என்னும் பொழுதே போன் பேசிவிட்டு ஆதித்தன் வந்துவிட்டான். நிஷா சொல்லவும்,
“தீம்பார்க் வேண்டாம். அபி பத்திரம்…” என்று மட்டும் சொல்லியவன்,
“நிஷா அனுப்பிட்டு வா…” என சொல்லிவிட்டு சென்றுவிட ‘நான்’ என கேட்கும் முன் அவன் சென்றிருந்தான்.
மூன்றே வாக்கியத்தில் அவர்களை தீம்பார்க்கிற்கு மறுக்கவும் வைத்து, அபியையும் கூட்டி செல்ல அனுமதித்துவிட்டு, மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பி சென்றவனை எண்ணி சுரேஷ் மலைத்து போனார்.
“நீயும் வரியா நிஷா?…” என அனுராதா கேட்க,
“இல்லம்மா, நீங்க போய்ட்டு வாங்க…” என அவர்கள் மூவரையும் அனுப்பிவிட்டு அறைக்கு வர டிவி பார்த்துக்கொண்டிருந்தான் ஆதித்தன்.
“நீயும் போறியான்னு என்னை ஒருவார்த்தை கேட்டீங்களா? நீங்களா முடிவு பண்ணிட்டீங்க?…” என வந்ததும் அவன் மேல் வள்ளென்று விழுந்தவள் அவன் மேல் விழுந்தாள்.
“நீயும் போகனுமா?…” என்று இப்போது கேட்க பல்லை கடிக்கத்தான் முடிந்தது.