சமருக்கு மனைவியின் மனது புரிந்தது. திருமணமாகி இத்தனை வருடங்கள் கடந்தும் தங்கையுடன் அவள் குடும்பத்துடன் எந்தவித இணக்கமாகவும் வந்து சென்று போகும் சூழ்நிலை இல்லை என்று.
அது பெரிய மனதாங்கலாய் உருவெடுத்திருந்தது. அதனை நிஷாவிடமும் அவள் வெளிக்காட்டிக்கொண்டதில்லை.
சென்னைக்கு வரும் நிஷாவும் நிரஞ்சனியை தங்கள் வீட்டில் வைத்து பார்ப்பாளே தவிர இன்றளவும் நிரஞ்சனியின் இல்லம் சென்றதில்லை.
மனதளவில் விலகல் இல்லை என்றாலும் சுமூகமாய், உரிமையாய் வந்து போகும் சூழ்நிலை இரு குடும்பங்களிடையே இல்லை.
பெற்றவர்களை வைத்து தான் இப்போதும் அவர்களின் உறவு மேம்பட்டுக்கொண்டிருந்தது.
நிரஞ்சனி மனதில் அதன் பின் தனக்கும், தன் தங்கைக்கும் இடையில் உறவு எப்படி தொடருமோ என்றொரு பயம் எப்பொழுதும் உண்டு.
இப்போதும் தங்கை மகனை கொஞ்சுவதற்கும் கூட அவள் எத்தனை மெனக்கெடல்?
ஆதித்தன் முன்பை போல தடுப்பதில்லை. அதிகமாய் ஒட்டவும் விட்டதில்லை. இருந்தாலும் அவன் மீதான பயம் அவன் முன் கூட நிற்க விடாது.
பயத்தோடு கூடிய குற்ற உணர்ச்சியில் நிரஞ்சனியாய் ஒதுங்கிக்கொள்வாள் அவர்களின் முன்னிலையில்.
இதில் தாயின் பேச்சுக்களும், நிஷா திருமணம் நடந்த முறையும், ஆதித்தன் நடந்துகொண்டதும் என்று அவளிடம் நீங்காமல் தங்கிவிட்டது.
“அபி கிளம்புவோமா?…” என நிஷா வந்து கேட்டதும் தான் தந்தை விருது வாங்கி முடித்ததே தெரிந்தது.
“என்ன நிஷா அதுக்குள்ள கிளம்பிட்ட?…” என்று நிரஞ்சனி எழுந்துகொள்ள,
“என்னன்னா? நேரமாகிருச்சே? இப்ப கிளம்பினா தான் நாங்க ஊருக்கு போய் ஒரு ரெண்டுமணி நேரமாவது ரெஸ்ட் எடுத்து காலையில ஸ்கூலுக்கு கிளம்ப முடியும்…” என்றாள் நிஷா.
“அட்லீஸ்ட் ரெண்டுநாள் முன்னாடியேனாலும் வந்திருக்கலாம்ல. பார்த்து கொஞ்ச நேரத்துல கிளம்பறேன்னு சொல்ற?…”
“அப்படியா? அப்ப வந்து என் புருஷன்கிட்ட சொல்லேன்…” என கிண்டலாய் சொல்லியதற்கே சமரின் கையை பிடித்துக்கொண்டாள் நிரஞ்சனி.
“போய் தான் சொல்லேன். என்னதான் சொல்றார்ன்னு பார்ப்போம்…” என்றான் சமரும் மனைவியை சீண்டி பார்க்கும் விதமாக.
“நான் வரேன் மம்மி, வாங்க…” என சம்ருதா அழைக்க,
“உன் பொண்ணை பார்த்து படிச்சுக்கோக்கா. இப்ப என்னை விடு. போன்ல பேசுவோம்…” என்றவள்,
“வரேன் மாமா…” என சொல்லிவிட்டு கிளம்ப,
“பார்த்து பத்திரம் நிஷா. நைட் ட்ராவல். பி சேஃப்…” என்ற சமர்,
“நிரா நான் போய் ப்ரோகிட்ட சொல்லிட்டு வரேன்…” என நிஷாவுடன் நடந்தான்.
ஆதித்தன் கையை கட்டியபடி நின்றுகொண்டிருக்க சுரேஷ் அவனிடம் பேசிக்கொண்டிருந்தார். உடன் அவரின் நண்பரும்.
“ஓகே ப்ரோ. இன்னொரு நாள் மீட் பண்ணலாம். நானும் குற்றாலம் வரனும். ஆனா கண்டிப்பா வருவேன்…” என அவனாகவே சொல்ல,
“ஓகே வரோம்…” என்றான் ஆதித்தன்.
அவர்களை வீட்டிற்கு அழைக்கவும் அவன் நினைத்ததில்லை. நினைக்கவும் தோன்றவில்லை.
அவனை பொருட்டு நிஷாந்தினியும் அழைக்கவில்லை. இந்தளவிற்கு தங்களை புரிந்துகொள்கிறானே சமர் என்றொரு நிம்மதி அவளிடம்.
வேறு ஒருவராக இருந்தால் நிச்சயம் இதில் ஏட்டிக்கு போட்டியாக தான் நடந்தேறும்.
அதற்கென்றே காத்திருக்கும் சொந்தங்களின் மத்தியில் இந்தளவிற்கு புரிந்துணர்வோடு இருக்கின்றனரே என நினைத்தவளுக்கு இப்போதும் அந்த சங்கடம்.
வாய் நிறைய வா என்றும் சொல்லமுடியவில்லை, நானாக அழைத்தால் தான் வருவாயா என சண்டை பிடிக்கும் ஒட்டுதலும் அங்கில்லை.
மனது அதற்காக ஒருபுறம் தவித்தாலும் இதில் தன்னால் என்ன செய்துவிடமுடியும் என்று ஒரு அயர்வு.
இந்தளவிற்கு இருவரும் முகம் கொடுத்தாவது பேசுகின்றனரே என நிஷாவும், நிரஞ்சனியும் நிம்மதியானால் அனுராதாவின் மனதில் அதுவும் ஒரு ஏமாற்றம்.
இப்போது வந்து பேசிக்கொண்டிருந்த சமரின் பேச்சில் ஆதித்தன் பெரிதாய் கலந்து கொள்ளாததில் நிஷாவிடம் தனியாக,
“உன் வீட்டுக்காரர் கொஞ்சம் சிரிச்சுத்தான் பெரிய மாப்பிள்ளைட்ட பேச சொல்லேன் நிஷா. வெட்டிட்டு இருந்தவங்களே ஒன்னுமண்ணா புழங்கறாங்க. இவர் என்னன்னா நடந்ததையே நினைச்சுட்டு முகத்தை திருப்பிக்கறாரே?…” என்றார்.
“என்னம்மா பேசறீங்க?…” என நிஷா முறைக்க,
“பின்ன இங்க என்ன வெட்டுக்குத்தா நடந்து போச்சு? இவ்வளோ பன்றார் சின்ன மாப்பிள்ளை. மனசுக்கு கஷ்டமா இருக்குல. நீயும் என்னடான்னா கண்டும் காணாம இருக்க. இதையெல்லாம் நீ தானே சொல்லி புரிய வைக்கனும். நீயும் இப்படி இருக்கியே? பாரு நிரஞ்சனி பக்கத்துல கூட வந்து நிக்க முடியாம தவிக்கிறா…” என்றார் அனுராதா.
“ஓஹ், நான் தவிக்கிறது எல்லாம் உங்களுக்கு தெரியலை. அவர் இவ்வளோ தூரம் இறங்கி பேசறதும் உங்களுக்கு தெரியலை. எப்படி பேச முடியுது உங்களால?…” என்றவள்,
“எப்ப இருந்து உங்களுக்குள்ள நாங்க தான் வெட்டிவிடறோம்ன்ற எண்ணம் வர ஆரம்பிச்சது? ரெண்டு பொண்ணுங்களும் ஒண்ணு, ஒண்ணுன்னு சொல்றீங்க. ஆனா அப்படி இல்லவே இல்லைல…” என சொல்லிக்கொண்டிருக்க,
“நிஷா…” என்ற ஆதித்தனின் அழைப்பில்,
“உங்களை போன்ல பேசிக்கறேன். வரமாட்டேன்னு இருந்த மாதிரியே இருந்திருக்கனும் நான். வந்திருக்க வேண்டாம்ன்னு நினைக்க வச்சுட்டீங்க…” என்றதோடு சொல்லி சுரேஷிடம் சொல்லிவிட்டு காரில் அமர்ந்துவிட்டாள்.
ஆதித்தன் என்ன எது என எதுவும் கேட்கவில்லை. நிஷாவின் முகத்திலேயே அவன் புரிந்ததை போல அமைதியாகி போனான்.
தங்கியிருந்த அறைக்கு வந்து ஏற்கனவே தயாராய் வைத்திருந்த பயண பைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு சென்னையை விட்டு கிளம்பினார்கள்.
செல்லும் வழியில் மகனுக்கு உணவை வாங்கி ஊட்டியவள் தான் உண்ணவில்லை.
இவரிடத்தில் பொதுவான பேச்சுக்கள் மட்டுமே. அதுவும் மகனை கொண்டு தான்.
வீட்டிலிருந்து கிளம்பிவிட்டனரா என்றதற்கு பதில் பேசி முடிக்க சுரேஷ் அழைத்துவிட்டார் மகளுக்கு.
“என்னம்மா நிஷா? சங்கடப்பாடாதப்பா…” என்றவருக்கு வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“ப்பா நான் ஊருக்கு போய்ட்டு நாளைக்கு பேசறேன்…” என்றாள் நிஷாந்தினி.
“அம்மாவை நான் சொல்றேன்…”
“யாரும் எதுவும் சொல்லவேண்டாம். எதையும் பேச வேண்டாம். விட்டுடுங்க…” என்று அவள் சத்தமாய் சொல்ல,
“நிஷா…” என அதட்டினான் ஆதித்தன்.
பின்னிருக்கையில் மகன் உறங்கிக்கொண்டிருக்க கணவனின் கண் பார்வையில் சற்றே தணிந்தாள் நிஷா.
“நிஷாக்குட்டி…” என்ற சுரேஷின் மனதின் வேதனை வார்த்தையில் வெளிவர,
“இன்னைக்கு உங்களை கஷ்டப்படுத்த நினைக்கலைப்பா. சந்தோஷமா இருங்க. ப்ளீஸ், எதையும் பேச வேண்டாம்…” என ஆயாசத்துடன் சொல்ல,
“சரிம்மா, அப்பா காலையில பேசறேன். பத்திரம்…” என்று வைத்துவிட்டார்.
பத்துமணியை தொட்டிருந்தது நேரம். சென்னையிலிருந்து வெளியே வந்திருந்தனர்.
நிஷா கண்ணை மூடியபடி அமைதியாக வர காரை ஓரிடத்தில் நிறுத்தியவன் இருவருக்குமான உணவை வாங்கிக்கொண்டு வர,
சொன்னால் என்ன நடக்குமோ என்று நெஞ்சில் மத்தளம் அடிக்க, கூடவே இத்தனை நேரத்தில் அவனுமே கணித்திருப்பான் என்பதில் அத்தனை நிச்சயமும் கூட.
“எனக்கு பசிக்குதுடி. சாப்பிடு…” என்றதும் தான் மகனுக்கு உணவை ஊட்டும் பொழுது அவன் வெறும் டீயை மட்டும் குடித்த ஞாபகமே வந்தது.
“நீங்க சாப்பிடலையா? நான் கவனிக்கலை…” என்றவள் அந்த உணவை வாங்கிக்கொள்ள தானும் வந்து உள்ளே அமர்ந்தான்.
“இப்போ சாப்பிட போறேனே. அதை கவனி…” என சொல்லியவன் கையை கழுவிவிட்டு அவளிடமிருந்து உணவை வாங்கி தான் ஒருவாய் உண்டவன்,
“வாங்கு…” என அவளிடம் நீட்டினான்.
ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டவள் கண்ணில் நீர் நிரம்பி இருந்தது. இன்னும் எத்தனை காலத்திற்கு தாய் வீட்டிற்கும், கணவனுக்கும் இடையில் தன் மன போராட்டம் என்று தெரியவில்லை.
முடித்து வைக்க அவன் நினைக்கவில்லை. அவர்களை நெருங்கவே எண்ணாதவனிடம் என்ன சொல்ல முடியும்?
பேசி பேசி அதனை பெரிதாக்க, அதனால் இன்னும் கசப்பை வளர்க்க நிஷா விரும்பவில்லை.
உண்டு முடித்ததும் கையை கழுவிவிட்டு வந்தமர்ந்தவன் நிஷாவிடம் தண்ணீரை நீட்ட,