சென்னை சென்று வந்து நான்கு நாட்கள் கடந்திருந்தது. ஆதித்தன் பிரச்சனைக்குரிய அந்த லாட்ஜை இடித்துவிட்டு அதனை பல்பொருள் அங்காடியாக மாற்ற நினைத்தான்.
அதனை நிஷா விரும்பவில்லை. சென்னை சென்று வந்த நாளிலேயே இந்த பேச்சை துவங்கிவிட்டான்.
அதனை உறுதி செய்ய அன்று நிஷாவையும் பள்ளியிலிருந்து அரைநாள் விடுப்பு எடுக்க வைத்து அழைத்துக்கொண்டு வந்துவிட்டான் வீட்டிற்கு.
ஆதித்தன் சொல்லியதில் அவனின் உணர்வுகள் புரிந்து இருந்தாலும் ஏன் அந்த லாட்ஜை அப்படியே தொடங்க முடியாதா என்றொரு எண்ணம் மற்றவர்களுக்கு.
அதிலும் நிஷா ஒப்புக்கொள்ளவே இல்லை. முழுமூச்சாய் அவனின் முடிவை எதிர்த்தாள்.
“எவனோ போக்கத்தவன் பொழுது போகாம பழியை போடுவான். அதுக்கு பயந்து லாட்ஜை திறக்காம இருப்பீங்களா?…” என்று ஆதித்தனிடம் கேட்க,
“என்ன பயந்தா?…” என அவன் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டான்.
“மாமா சம்மதிக்காதீங்க. அப்படி என்ன பிடிவாதம் இவருக்கு?…” என சங்கரலிங்கத்திடம் சொல்ல ஆதித்தன் முகத்தில் இறுக்கம்.
“எனக்கும் நிஷா சொல்றது தான் சரியா வரும்ன்னு தோணுது ஆதி…” என சசிகலாவும் சொல்ல,
“ம்மா, திரும்ப ஏன் அதை எடுக்கறீங்க? அங்க லாட்ஜ் நடத்த எனக்கு இஷ்டமில்லை. உங்களுக்கு நான் மாத்த நினைக்கிறதுல உடன்பாடில்லைன்னா பேசாம வேற யாரையாச்சும் வச்சு நடத்திக்கோங்க…” என்றான்.
“சரியான பிடிவாதத்துக்கு பொறந்தவர்…” ஆதி தனக்கருகே வருவதை கவனியாமல் முணுமுணுத்துவிட்டாள் நிஷாந்தினி.
“அப்படியா? நீ மேல வா…” என சொல்லி அவன் செல்ல அவனின் கோபமான அழைப்பில் அவனுக்கு கேட்டுவிட்டதென கண்டுகொண்டவள்,
“செந்தாக்கா…” என்றபடி அடுக்களைக்குள் சென்று மறைந்தாள்.
“ஏன் இப்படி அவளை மிரட்டிட்டே இருக்க நீ? என்ன ஆதி?…” சசிகலா மகனிடம் குறைபட,
“நான் மிரட்டி அவ பயந்தாளா? எப்படி போறா பாருங்க?…” என சொல்லிவிட்டு மாடிக்கு சென்றுவிட்டான்.
“என்ன பாப்பா இப்பவே வந்துட்ட?…” என செந்தா கேட்கவும்,
“அதான் காதுல விழுந்துச்சே. அப்பறம் என்னக்கா? எனக்கு குடிக்க ஏதாவது வேணும்…” என்று சுவற்றில் சாய்ந்து நின்றவள் அங்கிருந்த ஸ்டூலை எடுத்து போட்டு அமர்ந்துகொண்டாள்.
“அவர் இங்கிட்டு வந்தா சொல்லுங்க…” எனவும் நிஷா சொல்ல,
“நல்ல பொண்ணு போ. போயி துணியை மாத்திட்டு வாயேன்…” என்ற செந்தா,
“காபி தரவா?…” என கேட்டாள்.
“இருக்கற சூட்டுக்கு இன்னும் சூடா? சும்மா இருங்கக்கா. தண்ணி மட்டும் குடுங்க…” என்று சொல்லி செந்தா தரவும் வாங்கி குடித்தவள்,
“ஸ்கூல்ல இருந்து சாப்பிடறதுக்குள்ள கூட்டிட்டு வரும் போதே தெரியும். வில்லங்கத்துக்கு வலையை விரிச்சாச்சுன்னு. ஆனாலும் பாருங்களேன்…” என அங்கே அரட்டையில் அமர்ந்திருக்க,
“நிஷா அவன் கோவமா இருக்கான். போய் பேசு…” சசிகலா மருமகளிடம் வந்து சொல்ல அவரை ஒரு பார்வை பார்த்தாள்.
“போம்மா, நீ தான் சமாளிப்ப…” என மீண்டும் சசிகலா கூற,
“இப்படி சொல்லி சொல்லியே உடம்பை ரணமாக்கி விட்டுடுறாங்க. இதெல்லாம் நல்லா இல்லை த்தை. நான் சொல்லி அப்படியே உங்க மகன் கேட்டுடற மாதிரி தான்…” என்றவளிடம் வந்து அவர் தாடையை பிடித்தார்.
“போடாம்மா. சொல்றேன்ல. கொஞ்சம் பொறுமையா பேசு. சண்டை போட்டான்னா நீ வாயை திறக்காத…”
“தோ பார்ரா. என்னவோ நான் சண்டைக்கு வாடான்னு கூப்பிடற மாதிரி…” என சொல்லியவள் சட்டென நாக்கை கடித்துவிட்டு,
“டங்க் ஸ்லிப்பாகிருச்சு. வாங்க வாடாவா மருவிருச்சு. ஜஸ்ட் ஒரு டயலாக்…” என்று சமாளிப்பாய் சொல்லவும்,
“கோர்த்தா விடறீங்க. உங்களை வந்து பேசிக்கறேன்…” என்று எழுந்துகொண்டாள்.
“நிஜமாவே போய் பேசனுமா…” நிஷா அயர்ந்து பார்க்க,
“ஆமா, நீ பேசு…”
“ஏன் த்தை புரியலை உங்களுக்கு? சும்மாவே நான் பேசி பேசி தான் டெய்லி சண்டை, வாய்க்கா தகராறுன்னு போகுது. என்னவோ சொல்லி புரிய வைக்காத மாதிரி இப்பவும் என்னை தூக்கி அவர் வாய்க்குள்ள போடறீங்க. அரைக்க போறார். நான் எவ்வளோ பாவம் தெரியுமா?…” என கேட்ட பாவனையில் சசிகலா சிரித்துவிட்டார்.
“என்ன சொல்ல செந்தா? ரெண்டுநாளா கவி வீட்டுல ஒரே கரைச்சலா இருக்கு போல. என்ன விஷயம்ன்னு சொல்லாம முழுங்கி முழுங்கி பேசறா. அதுதான் பயமா இருக்கு…”
“சொல்லனும்ன்னா சொல்லிருக்கும்ல…” என்று செந்தா கேட்க,
“அதுதான் பயம்ன்னு சொல்றேன். எப்பவும் கவி அங்க எதுவும் பிரச்சனைன்னா உடனே போன் பண்ணி இது தான் நடக்குதுன்னு சொல்லிருவா. இப்ப ஒன்னும் சொல்லாததோட பேச்சும் தயக்கமா வருது. என்னன்னு தெரியலை. அவ சமாளிச்சிட்டா கூட போதும். ஆனா எனக்கு நம்பிக்கை இல்லை…” என்றார்.
அதற்கு மேல் செந்தாவிடம் என்ன சொல்ல முடியும் என மௌனமாய் அங்கிருந்து செல்ல,
“ஐயாவுக்கு சாப்பாட்ட கொண்டுபோய் குடுங்கம்மா. நேரமாகுதே?…” என செந்தா நிறுத்த,
“டேபிள்ல எடுத்து வை. ஆதியும் வந்திடட்டும்…” என்று சென்றுவிட்டார்.
மாடிக்கு வந்த நிஷா முதலில் அறையை லேசாய் எட்டி பார்த்துவிட்டு பின் எதுவும் நடவாததை போல விறுவிறுவென உள்ளே வந்தாள்.
வந்தவள் ஆதித்தனை கண்டுகொள்ளாமல் உடை மாற்றுவதற்கு வேறு உடையை எடுக்கவும் அதனை பார்த்தும் ஆதித்தன் ஒன்றும் சொல்லவில்லை.
‘என்னதான் செய்கிறாள் பார்ப்போம்’ என்பதை போலிருந்தது அவனின் பார்வையும், தோரணையும்.
கைகளை கட்டியபடி தன்னையே பின்தொடரும் அவன் பார்வையின் குறுகுறுப்பில் சிறிது நேரம் மட்டுமே தாக்குப்பிடித்தவள் எடுத்த உடையை கட்டிலில் போட்டுவிட்டு,
“கொஞ்சம் அமைதியா பேசுவோமா?…” என்று வெள்ளைக்கொடியை பறக்கவிட்டாள்.
புருவம் சுருக்கிய ஆதித்தன் வந்து அமர்ந்தான் கட்டிலில். உட்கார் என்று கூட சொல்லாமல் விழிகளால் காண்பிக்க நிஷா அமரவில்லை.
‘உட்காருன்னா வாய்லருந்து முத்து உதிர்ந்துடும்’ என உள்ளுக்குள் பொருமியவள் உதடசைவில் ஆதித்தன் விழிகள் அதில் படிந்துவிட எண்ணி பதிந்தது.
“பேச வந்தேன். என்னை பாருங்க…” என்றாள் அவன் விழிகள் பயணிக்கும் விதம் கண்டு.
“உன்னை தான பார்க்கறேன். பேசு…” என்று சொல்லி சாவகாசமாய் பின்னால் சாய்ந்துகொண்டு சட்டையின் பட்டன்களை கழற்றினான்.
இவன் இறங்கமாட்டான் என நிஷாவாக அவனருகே அமர்ந்தவள் வரவழைத்துக்கொண்ட நிதானத்துடன் பேச்சை தொடங்கினாள்.
“இப்ப எதுக்காக என்னை ஸ்கூலுக்கு ஹாஃப்டே லீவ் போட சொல்லி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க?…” என்ற கேள்வியில் அவளின் பேச்சின் திசையை சட்டென பிடித்துக்கொண்டவன்,
“கேட்காம செஞ்சா பொண்டாட்டின்னு மதிக்கலைன்னு சொல்றதுக்கா?…” என்றான் அவள் கேள்வியின் பதிலாய்.
“செம்ம டென்ஷனாகிடுவேன். அப்பறம் என்ன செய்வேன்னே எனக்கு தெரியாது ஆமா. நான் என்ன கேட்டா என்ன பதில் இது?…” என நிதானமெல்லாம் எங்கோ சிதறியது.
அவளின் கோபத்தில் ஆதித்தனின் இதழோரம் குறுஞ்சிரிப்பு பூக்க வேறு என்ன என்பதை போல பார்த்தான்.
“என்னை கோவப்படுத்தி அப்படி என்ன ரசிப்பு? நீங்க சிரிச்சதை நான் பார்த்துட்டேன். மெயின்டெய்ன் பண்ண வேண்டாம்…” என அதையும் விரல் நீட்டி எச்சரித்தவள் விரலை பிடித்து மடக்கியவன்,
“இப்படி பேசினா தான் நீ பேசற மாதிரி இருக்கு. ரொம்ப அமைதியா பேசறது யார்க்கிட்டையோ பேசற மாதிரி இருக்கு…” என்ற விளக்கத்தில் நிஷாவின் முகம் தான் விளக்கெண்ணெய் குடித்ததை போலானது.
“சரி சொல்லு…” என்றவன் தலையை கோதியபடி இருக்க,
“என்ன சொல்ல? நான் கேட்டதுக்கு இதுவா பதில்? நான் அமைதியா பேசனும்ன்னு வந்தாலும் என்னை டென்ஷன் பன்றீங்க நீங்க…” என இன்னும் பேசிக்கொண்டே இருக்க அவள் இதழ்களை சில நொடிகள் இழுத்து பிடித்தவன் சுவாசம் அவள் முகத்தில் மோதியது.