“நீ தானே சொன்ன, லாட்ஜை ரொம்ப நாள் பூட்டி வைக்க முடியாது. நமக்கு லாஸ்ன்னு. அதான் அடுத்த வேலையை ஆரம்பிப்போம்ன்னு எல்லாரோட கலந்து பேச கூப்பிட்டு வந்தேன்…” என்றான் ஒரே மூச்சில் மொத்தமாய்.
“கலந்து பேசன்னா? என்ன பண்ணலாம்ன்னு பேசறதுக்கா? இல்லை இதை தான் பண்ண போறேன்னு தகவல் சொல்லவா?…” என்றவள்,
“கலந்து எதுவும் பேசலை. எங்களோட யோசனை எதையும் கேட்கலை. உங்க முடிவை தான் சொன்னீங்க. தகவல் தான் சொல்லனும்ன்னா நான் ஸ்கூல்ல இருந்து வந்த பின்னாடி கூட சொல்லியிருக்கலாம்…” என நிஷா முடிக்க,
“என்னடி உன் பிரச்சனை? சொல்லாம செஞ்சா மதிக்கலைன்னு சொல்ற. சொல்லிட்டு செஞ்சா என்ன கேட்டீங்கன்னு பேசற…” மீண்டும் அவன் உச்சாணிக்கொம்பில் ஏறிவிட்ட அறிகுறி நிஷாவிற்கு தெரிந்தது.
“உண்மையை சொன்னேன். நான் சண்டை போடவும் வரலை. உங்களோட போராடவும் வரலை. கொஞ்சம் அமைதியா யோசிங்க. இப்ப லாட்ஜை இடிச்சுட்டு நாம கடையா கட்டி விடறது நமக்கு ப்ராபிட்டா, இல்லை லாட்ஜை கொஞ்சமா ரெனவேட் பண்ணி தொடர்ந்து நடத்தறது ப்ராபிட்டா?…” என்றாள் நிஷா.
“ப்ச், அந்த பேரோட எப்படி தொடர்ந்து நடத்த? ஒவ்வொருத்தனும் கேள்வி நக்கலா கேட்பானுங்க. நான் பதில் சொல்லனுமா?…” ஆதித்தன் கொந்தளிப்பு குறையாமல் பேச,
“நீங்க ஏன் பதில் சொல்றீங்க? பேசறவன் ஆயிரம் பேசுவான். நமக்கு வேற வேலை இல்லையா? நாளைக்கே லாட்ஜ் இன்னும் பெருசா வந்தா பேசறவனே வந்து ஆஹா ஓஹோன்னு காலை பிடிப்பான். அப்பவும் ரியாக்ட் பண்ணுவீங்களா? இவங்க இப்படித்தான்னு கடந்து போவீங்க தானே?…”
“நிஷா…” என்றவன் மனது இன்னும் அதனை ஏற்கவில்லை.
“முதல்ல இந்த முன் கோபத்தையும், பிடிவாதத்தையும் கொஞ்சம் தள்ளி வைங்க. உங்களால அதை விடமுடியாதுன்னு தெரியும். அதுனால தான் தள்ளி வைக்க சொல்றேன். நம்ம தப்பு செய்யலை. அது நமக்கு தெரிஞ்சா போதும். அவன் உங்களை நடத்த விடாம செஞ்சா அவன் கண்ணு முன்னாடி இன்னும் பெருசா சிறப்பா செய்ங்க….” என்றவள்,
“இது பதிலடி கிடையாது. அதுக்கு நமக்கு அவசியமும் கிடையாது. நாம நம்ம வேலையை பார்ப்போம். அடுத்து நம்மோட முன்னேற்றம் என்னன்னு பார்க்கனும். நம்ம லாட்ஜை தேடறாங்களா, அதை விரிவு பண்ண என்ன செய்யனுமோ அதை பண்ணுங்க. டூரிஸ்ட் எல்லாம் வந்து தங்க சிரமப்படறாங்க…” என்றாள் நிஷா பொறுமையாக.
“யாரும் யாரையும் இதுதான்னு முத்திரை குத்திட்டா அதுவாகிட முடியாது. அதுவும் போலி முத்திரை என்னைக்கும் நிலைக்காது. இந்த ஊருக்கே தெரியும் அவங்க பண்ணின வேலை என்னன்னு. அதுக்கு நம்மளை ஏன் கஷ்டப்படுத்திக்கனும்?…” என்றவள்,
“எத்தனை வருஷமா அந்த இடத்துல லாட்ஜ் வச்சு நடத்தறோம். நீங்க பிறக்கறதுக்கு முன்னாடி இருந்தே சின்னதா நடந்திட்டிருந்தது. மாமா அதை உங்க வரை கொண்டுவந்திருக்காங்க. உங்களுக்கடுத்து அபி அதை எடுக்கனும். இதை எல்லாம் யோசிக்க வேண்டாமா? அடையாளத்தை யாராவது மாத்த நினைப்பாங்களா?…”
நிஷா ஒவ்வொன்றாய் சொல்ல சொல்ல ஆதித்தனுக்குமே அவை புரியாமல் இல்லை.
இதனை பலமுறை மனதினுள் அலசி பார்த்தாகிவிட்டது. என்ன ஒன்று அவனின் பிடிவாதம் தான் இடை நின்று அதனை ஏற்கவிடவில்லை.
அவனின் மௌனமே நிஷாவிற்கு போதுமானதாய் இருந்தது. பிடிக்கவில்லை, உடன்பாடு இல்லை என்றால் எழுந்துசென்றிருப்பான்.
இப்போது சிந்தனையுடன் அமைதியாய் இருக்க நிஷா வாயை அடக்கிக்கொண்டாள்.
‘ஓவர் பெர்பாமன்ஸ் பன்றேன்னு சுரண்டி விட்டுட கூடாதுடி நிஷா’ என அவளுக்கு அவளே மானசீகமாக வாயில் அடித்துக்கொள்ள நிஷாவின் முயற்சி அவள் முகத்தில் பிரதிபலித்தது.
இதழ்களை அழுத்தமாக மூடிக்கொண்டு இரு கைகளின் விரல்களையும் கோர்த்தவள் கண்கள் திருதிருவென சுழன்று நிற்க பார்த்தவனுக்கு புரிந்தது.
“என்ன? என்னவோ நினைக்கிற?…” என கேட்டுவிட்டான்.
“ஆமா…” என சொல்லியவள் சமாளிக்கும் முன்,
“இன்னும் என்ன?…” என்றான் ஆதித்தன்.
“நான் ட்ரெஸ் மாத்தனும். அதுதான். வேறென்ன? எனக்கு வேற வேலை இல்லையா? என் வேலையயும் கெடுத்து கூட்டிட்டு வந்துட்டு. முதல்ல கீழே போங்க. பசிக்குது. சாப்பிடனும்…” என படபடவென பேச,
“என்னடி நினைச்ச? அதை சொல்லு நீ…” என அவள் எடுத்து வைத்திருந்த உடையை தன் பக்கம் உருவிக்கொண்டான்.
“எனக்கு வேற ட்ரெஸ் இல்லையா என்ன? வேற எடுத்துப்பேன்…” என எழுந்தவளையும் பிடித்து இழுத்துக்கொண்டான்.
“லாட்ஜுக்கு போகலையா? இந்நேரம் லன்ச் என்ன பண்ணியிருக்காங்கன்னு டெஸ்ட் பண்ண போவீங்களே?…” என்றவள் புடவை நெகிழ ஆரம்பித்தது ஆதித்தனின் அணைப்பில்.
“கதவு திறந்திருக்கு. அத்தை மாமா வெய்ட் பன்றாங்க…”
“ஹ்ம்ம், போகலாம்…”
“எனக்கு பசிக்குது…”
“போகலாம்ன்னு சொன்னேன்…” என்றவன் முகம் நிஷாவின் கழுத்தில் வன்மையாய் அலைபாய,
“மாமாவுக்கு சுகர் இருக்கு. சாப்பிட்டு டேப்லட் போட வேண்டாமா?…” என்றவள் வாயை தன் கை கொண்டு பொத்தியவன்,
“வாய மூடமாட்டியா நீ? அவங்க என்ன குழந்தையா? நேரத்துக்கு சாப்பிட மாட்டாங்களா? எப்பவாவது தான் டே டைம் இருக்கற நீ. மனுஷனை கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்க விடமாட்டியா நீ?….” என அத்தனை ‘நீ’ சொன்னான் ஆதித்தன்.
“வர வர உங்களுக்கு பகலே தெரியறதில்லை…” என அவனின் உச்சந்தலை முடியை பிடித்து தன்னிடமிருந்து விலக்கியவள்,
“அவங்க சாப்பிட்டிருப்பாங்க. ஆனா நீங்க கொஞ்ச நேரம் முன்னாடி செஞ்சு வச்சிட்டு வந்தது அப்படி. இங்க சண்டை போடறோமோ என்னவோன்னு தான் பயந்துட்டு இருப்பாங்க…” என்றாள் நிஷா அவன் கைகளுக்குள்ளிருந்து தன்னை பிரித்து.
“அப்படி சொல்லி வச்சிருக்க. உன்னோட நான் சண்டை போடறேனா?…”
“இல்லையா பின்ன? ஒன்னு பேசி என்னை சுத்த விடறது. இல்லை பேசாம சுத்த விடறது…”
“விரதம் இருந்து பேசாம இருந்தது நான் இல்லை. நீ…”
“நீ ஏன் தலையிடறன்னு பொண்டாட்டியை புருஷன் கேட்டா புருஷனையும் பொண்டாட்டிக்கிட்ட தலைகாட்டாம இருக்க வைக்கிறது தானே நியாயம். அது உங்களால…” என்றவள் நியாயத்தில் ஆதித்தன் முறைப்பும், மயக்கமுமாக பார்க்க,
“இத்தனை வருஷமாச்சு. இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்ன்னே தெரியலை எனக்கு….” என்றவளை பார்த்தபடி சட்டையை கழற்றி, கையில்லா வெள்ளை பனியனையும் கழற்றி போட்டவன் ஒரு டிஷர்ட்டை எடுத்து அணிந்துகொண்டான்.
“அர்த்தத்தை சாப்பிட்டு வந்து பேசலாமா?…” என்றவன் கேள்வியில்,
“எனக்கு வேலை இருக்கு….” என தப்பிக்க பார்த்தவள்,
“சொல்ல மறந்துட்டேன். நாளை மறுநாள் அபி ஸ்கூல்ல பேரன்ட்ஸ் மீட்டிங்…”
“ஓஹ்…” என்றபடி போனை எடுத்து பார்க்க,
“நீங்க முதல்ல கீழ போங்க. நான் ட்ரெஸ் மாத்திட்டு வரேன்…” என அவனை அனுப்பிய நிஷா கீழே வரும்பொழுது சங்கரலிங்கத்திடம் சாப்பாட்டு மேஜையில் வைத்து பேசிக்கொண்டிருந்தான் ஆதித்தன்.
சசிகலா நிம்மதியான பார்வையை மருமகளிடம் தர அவள் லேசாய் செல்லாமாய் முறைத்தாள்.
“இது ஒன்னும் வேண்டாம். உங்க மகன்கிட்ட பேசி என் தொண்டை தண்ணியே வத்தி போச்சு. சாயந்தரம் எனக்கு சேமியா பால் பாயாசம் வேணும்…” என காராராக உத்தரவிட்டு,
“இன்னும் சாப்பிடலையா மாமா?…” என்றாள் அவள்.
“பேசிட்டிருந்தோம் ம்மா. நீயும் வரட்டும்ன்னு ஆதி இருந்தான். அதான் அப்படியே உக்கார்ந்துட்டோம். வா. வந்து உட்கார்…” என மருமகளை அமர சொல்லியவர் குடும்பமாய் உணவை எடுத்துக்கொண்டார்.
லாட்ஜ் விஷயத்தில் ஆதித்தன் யோசிப்பதாக சொல்லியிருப்பதே அவர்களுக்கு பெரிதாய் இருந்தது.
ஆதித்தனுக்கும் அப்படியே அதனை துவங்கினாலும் பழையதை போலவே தொடர விருப்பமில்லை.
அடுத்து என்ன செய்ய என்றொரு யோசனை அவனை அரித்துக்கொண்டிருக்க செந்தாவின் மூலம் அதற்கும் ஒரு புதிய துவக்கம் வந்து சேர்ந்தது.
“என் புருஷன் தான் சொன்னாரு பாப்பா. சத்தமில்லாம பேச்சு போகுது போல. முடிஞ்சா விசாரிக்க சொல்லேன். வாங்கி போட்டா சேந்தாமாட்டுக்க எதாச்சும் செய்வீங்க இல்ல…” என்றாள் செந்தா.
பழைய குற்றாலத்தில் ஆதித்தனின் லாட்ஜின் அருகில் இருக்கும் ஒரு துணிக்கடையும், அதனை ஒட்டிய இன்னொரு ஹோட்டலும் விலைக்கு வருவதாக செந்தாவின் கணவன் மூலம் தகவல் கசிந்திருந்தது.
அதுவும் அந்த ராமசுப்பு தான் வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாக செய்தி வந்திருந்தது.
ஆதித்தனிடம் விஷயத்தை சொல்ல அவனால் நம்ப முடியவில்லை. உண்மையா என்று அவன் திகைத்து போனான்.
“உறுதியா சொல்றாங்க. அந்த கடை ஓனர் பையன் பாரின்ல செட்டிலாகிட்டான். அவரை தன்னோட கூப்பிடறான் போல. அதான் அவர் முழுமனசா முடிவெடுக்கறதுக்குள்ள ராமசுப்புவே அதை வாங்கறதா சொல்லியிருக்கார். பேச்சுவார்த்தை தானாம். அவருக்கு குடுக்க பெருசா இன்ட்ரெஸ்ட் இல்லையாம்…” என்றாள் நிஷாந்தினி.
ஆதித்தன் உடனே அந்த விஷயத்தை விசாரிக்க மொத்த விபரமும் அவனை வந்தடைந்தது. வீட்டினரிடம் சொல்லவும்,
“என்ன ஆதி? நீ என்ன யோசிக்கிற?…” என்றார் சங்கரலிங்கம்.
“ராமசுப்புவை விட்டா நமக்கு பக்கத்துல இருந்துட்டே குறைச்சல் குடுப்பார். அதோட நம்ம லாட்ஜ் அந்த ஹோட்டலோட சேர்ந்த பொது சுவர். வில்லங்கம் தான் அந்த இடம் அவருக்கு போறது….” என்ற ஆதித்தன்,
“நம்ம வாங்கிடலாமான்னு யோசிக்கிறேன்….” என்றான்.
“தொகை பெருசாச்சேப்பா. மெயினான இடம்ன்றதால குறைக்க மாட்டாங்க…” சங்கரலிங்கம் தயங்கினார்.
“அதனால தான் சொல்றேன். பின்னாடி கை விட்டு போயிருச்சேன்னு அந்த குடைச்சலோட தொழில் பண்ண முடியாதே? அதுவும் அந்த துணிக்கடையோட பக்கவாட்டுல சந்து மாதிரி கொஞ்சம் இடமும் சும்மா இருக்கு. நமக்கு பிரச்சனை இல்லாத மாதிரி பார்த்துக்கலாம். வாங்கி போட்டா எப்ப வேணா நமக்கு லாபம் தான்…” என்றவன் பேச்சிலேயே அவன் முடிவெடுத்துவிட்டது தெரிந்தது.
வீட்டில் அனைவருக்குமே சந்தோஷம் அதில். விஷயம் ராமசுப்புவை நெருங்கும் முன் பேசி முடித்துவிடலாம் என நினைத்தான் ஆதித்தன்.
அந்த கடையின் முதலாளியும் ஆதித்தனின் பேரிலான பிடித்தத்தில், நம்பிக்கையில் அவனுக்கே தர ஒப்புக்கொள்ள பிரச்சனை கவிப்ரியாவின் வீட்டில் கிளம்பியது.
இதை ஒருவருமே எதிர்பார்க்கவில்லை. ஆதித்தன் ஆடிப்போய்விட்டான். நிஷா உடனே அனைவருடனும் அம்பாசமுத்திரம் சென்று சேர்ந்தாள்.