கவிப்ரியாவின் முகத்தில் கொஞ்சமும் சிரிப்பில்லை. இந்த இரண்டு நாட்களும் போராட்டம் தான் அவளுக்கு.
அதன் உச்சமாக கமலா செய்து வைத்தது தான் பேரிடியாக விழுந்தது அந்த குடும்பத்திற்கே.
ஆதித்தன் புதிதாய் வாங்கவிருக்கும் சொத்தை வைத்து ஆரம்பித்த பிரச்சனை முடிந்த இடம் அனைவருமே எதிர்பாராதது.
ஏற்கனவே தன்ஷிகா பேசிய விதத்தை சிவநேயனிடம் ஆதித்தன் சுட்டி காட்டியதோடு, கமலா நிஷாவை பேசியதும் சேர்த்து தெரியவர வீட்டில் பெரிதாய் சண்டையிட்டிருந்தான் சிவநேயன்.
அதுவே வீட்டில் அத்தனை ரகளையை ஏற்படுத்தி இருக்க சிவநேயனிடமும் அதிகாரத்தை காண்பித்தார் கமலா.
“இப்படியே பண்ணிட்டிருந்தா என்ன செய்வேன்னே தெரியாது. பேசாம வயசுக்கு ஏத்த மாதிரி இருங்க ம்மா…” என சொல்லிவிட்டான் மகன்.
அதன் தாக்கம் குறைவதற்குள் அடுத்ததாய் ஆதித்தன் வாங்கவிருக்கும் சொத்திற்கு, பண பற்றாக்குறைக்கு கவிப்ரியாவின் வங்கி கணக்கிலிருக்கும் தொகையை தருவதாய் சொல்லிவிட்டான் சிவநேயன்.
“யாரை கேட்டு இந்த முடிவுக்கு வந்த? அப்போ அந்த சொத்துல உனக்கு பங்கு கேளு…” என ஆரம்பித்துவிட்டார்.
“உங்ககிட்ட நான் தான் பணம் தர போறேன்னு யார் சொன்னா?…” என்றவன் கவியை முறைக்க பயத்துடன் பார்த்தாள் கணவனை.
“நீங்க பேசிட்டிருந்ததை வச்சு கவிக்கிட்ட என்னன்னு கேட்டேன். ஏன் என் வீட்டுல என்ன நடக்குதுன்னு எனக்கு தெரிய வேண்டாமா?…” என்றார் கமலா.
வழக்கம் போல மனைவியின் பேச்சிற்கு மறு பேச்சின்றி அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார் கமலாவின் கணவர் வசந்தன்.
“தெரிய வேண்டாம்ன்னு தான் உங்களுக்கு சொல்லலை. அப்பறம் என்ன சொன்னீங்க? என் பேர்லையா? எனக்கு இங்க என்ன ஒண்ணுமில்லாம இருக்கா? இல்ல நான் சம்பாத்தியம் பண்ணலையா?…” என்று இரைந்தான் சிவநேயன்.
“அப்பா அவங்க வாங்கற சொத்துக்கு நீ ஏன் காசு குடுக்கற?…” கமலா ஒப்புக்கொள்ளவே இல்லை அதனை.
“நான் குடுக்கறேன்னு ஒன்னும் சொல்லலை. இது கவியோட பணம். இப்ப வரை அவளுக்குன்னு அந்த லாட்ஜ் வருமானத்துல வர பணத்தோட சேமிப்புல இருந்து தான் எடுத்து தரோம்…” என்றவன்,
“அவங்க இதை குடுக்கனும்னு கூட இல்லை. உழைப்பு, அங்க பார்த்துக்கறது எல்லாம் ஆதி. ஆனாலும் சேரவேண்டிய பணத்தை சரியா சேர்க்கறான். இப்ப அவனுக்கு ஒரு தேவைன்னு வரும்போது நாங்க செய்யறது தானே நியாயம். அவனும் ஒண்ணும் சும்மா வாங்கலை. வெளில எவ்வளோ வட்டியோ, அதை தான் தரேன்னு சொல்லியிருக்கான்…” என்றான் சிவநேயன்.
“அத்தை நானா தான் வெளில கடன் வாங்க வேண்டாம். நானே தரேன்னு ஆதிட்ட சொன்னேன். அவன் வேண்டாம்ன்னு தான் சொன்னான். ஆனா எனக்கு தான் வெளில வாங்கறதுல உடன்பாடில்லை…” என்றாள் கவி.
“அப்ப நீயா தனிச்சு முடிவெடுக்கற தூரத்துக்கு வந்துட்ட? அப்படித்தானே? எவ்வளோ தைரியம் இருக்கனும் உனக்கு? என்ன உன் தம்பி பொண்டாட்டி மாதிரி இருக்கனும்ன்னு நினைப்போ? என்கிட்ட இதெல்லாம் நடக்காது…” என கவியை மிரட்ட,
“ம்மா என்ன என் முன்னாடியே அவளை மிரட்டி பேசறீங்க? நானும் கண்டிப்போட இருக்கீங்கன்னு நினைச்சா இது அதுக்கும் மேல இருக்கே?…” என்றவன்,
“நானும் கவியும் நாளைக்கு போய் பணத்தை எடுத்து குடுத்துட்டு வருவோம். என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க…” என்றான் சிவநேயன்.
“அப்போ என் பேச்சுக்கு இங்க மதிப்பில்லையா? குடுக்க கூடாது. குடுத்தா என் பேத்திக்கும் அதுல பங்கு வேணும். என் பேத்தி பேரலையும் சேர்த்து வாங்க சொல்லு. காசை சும்மாவா குடுக்க?…” என்று கத்தினார்.
“என் பொண்ணுக்கு என்ன செய்யனும்ன்னு நீங்க சொல்லவேண்டாம். அவளுக்கான எல்லாம் போதும்ன்ற அளவு நான் சேர்த்து வச்சிருக்கேன். அதோட நான் ஒன்னும் சும்மா குடுக்கலை. ஆதி அதை சும்மாவும் வாங்கலை. கண்டபடி பேசினீங்க…” என்ற பேச்சுக்கள் இன்னும் அதிகமாகியது.
கவிக்கு அந்த சூழலை எப்படி சமாளிக்கவென சுத்தமாக தெரியவில்லை. சிவநேயனின் ஆக்ரோஷம் அப்படி இருந்தது.
இதற்காகவே அவள் பெரும்பாலும் அவனிடம் சொல்வதில். சொன்னால் அளவுக்கதிகமான கோபம் எதுவும் பேசிவிடுவான், சில நேரம் அது தன் மீதே திரும்பும் என மௌனம் சாதித்துவிடுவாள்.
இப்போது அத்தனைக்கும் சிகரமாய் அந்த வார்த்தைகளையும் சொல்லிவிட்டான். கமலா சொல்ல வைத்துவிட்டார்.
“இது சரிவராது. என்னால இப்படி ஒவ்வொரு நாளும் போராடிட்டு உங்களோட சண்டை போட்டுட்டு இருக்க முடியாது. என் பொண்ணோட எதிர்காலமும் பாதிக்கும். இப்பவே அவளை பாதி கெடுத்து வச்சிருக்கீங்க. என் மேல தான் தப்பு…” என்றவன் மனைவியை பார்த்து,
“இவளை சொல்லியும் பிரயோஜனமில்லை. எல்லாத்தையும் பார்த்துப்பான்னு நான் நினைச்சா வேடிக்கை தான் பார்த்திட்டிருந்திருக்கா. கடைசில இன்னொருத்தர் சொல்லி என் பொண்ணை நான் கவனிக்க வேண்டிய நிலைமை. இதுல யாரையும் நான் குறை சொல்லலை. சரி பன்றேன்…” என சொல்ல,
“கொஞ்சம் அமைதியா இருங்க. நாளைக்கு பேசிப்போம்….” என கவி அப்போதும் கணவனை தான் அமைதிப்படுத்த,
“வாயை மூடு நீ. இத்தனை வருஷம் அப்படித்தான இருந்த….” என அடிப்பதை போல அவள் மீது திரும்ப பயத்தில் கவி வாயில் கை வைத்து நின்றாள்.
“எதுக்குடா இப்ப இவ்வளோ பேசற? அப்போ உனக்கு அம்மாவை விட உன் பொண்டாட்டியும், அந்த குடும்பமும் தான் பெருசா போய்ட்டாங்களா?…” என்றார் கமலா.
“அப்படியே வச்சுக்கோங்க. நான் இல்லைன்னு சொன்னா மட்டும் சரின்னு ஏத்துக்க போறீங்களா? இல்லைல….” என்றவன்,
“முதல்ல இந்த பணத்தை கொண்டு போய் நாளைக்கு குடுத்துட்டு வந்து இதுக்கொரு முடிவு கட்டறேன்…” என்றான் கோபமாய்.
“முடிவுன்னா? என்னன்னு இப்பவே சொல்லு. அதான் இவ்வளோ பேசிட்டியே. சும்மாவே உன் பொண்டாட்டி என்னை மதிக்கமாட்டா. இனி என்னத்த மதிக்க? என்ன பன்றதுன்னு முடிவு பண்ணிருப்ப போல?….” என மகனின் கோபத்தை இன்னுமே தூண்டினார் கமலா.
“ஆமா, முடிவு பண்ணிட்டேன். நான் இருக்கும் போதே எவ்வளோ பேசறீங்க. என் பொண்ணையும் தேவையில்லாம சொல்லி சின்ன பிள்ளை மனசுல விஷத்தை சேர்க்கறீங்க…”
“ஏன்டா நல்லதை சொல்லிக்குடுத்தா விஷமா உனக்கு?…” என கமலா கொஞ்சமும் யோசிக்கவே இல்லை.
அகம்பாவ பேச்சின் உச்சியில் நின்று ஆர்ப்பாட்டமாய் ஆடிக்கொண்டிருந்தார் அவர்.
“உங்க நல்லது உங்களோடவே இருக்கட்டும். நாளைப்பின்ன என் பொண்ணு அதுல கஷ்டப்பட கூடாது. அவளால வேற யாரும் கஷ்டப்பட கூடாது. அதனால நாங்க தனியா போகலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்…” என்றான் சிவநேயன்.
கொஞ்சமும் யோசிக்காமல் அவன் இந்த முடிவை சொல்ல கமலா ஸ்தம்பித்து பார்த்தார் மகனை.
“என்ன சொன்ன? என்னடா பேசற? பெத்தவங்களை விட்டுட்டு தனியா? அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு போவியா?…” என வசந்தன் வாயை திறக்க,
“பேசாம போயிருங்க. அம்மாவை கண்டிச்சிருந்தா இந்த பேச்சு தேவையா நமக்கு? நான் முடிவு பண்ணிட்டேன். அதுவும் இவ்வளோ தூரம் பேசின பின்னால அது இன்னும் உறுதியாகிருச்சு…” என்றவன்,
“கவி உள்ள போ…” என சொல்லிவிட்டு தன் பெண்ணை முறைத்து பார்க்க,
“அப்பா பாட்டி பாவம்…” என்றாள் தன்ஷிகா.
“இத்தனை வயசுக்கப்பறம் அப்பாக்கிட்ட அடி வாங்காத தன்ஷி. போ உள்ள…” என்றொரு சத்தம் தான்.
சிவநேயன் எதற்கும் இறங்கவில்லை. மறுநாள் பணம் கொடுக்க செல்வதிலும், தனிக்குடித்தனம் செல்வதிலும் உறுதியாய் இருக்க கமலாவிற்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
இதை எப்படி தடுப்பது என்றொரு எண்ணம் மட்டுமே பெரிதாய் வியாப்பித்தது அவருக்குள்.
“சிவா கொஞ்சம் அமைதியா யோசிப்பா…” என வசந்தன் சொல்ல,
“இல்லப்பா. இனி ஒண்ணா இருக்கறது சரிவராது. வேலைக்கு தான் ஆட்கள் இருக்காங்களே வேணும்னா உங்களுக்கு சமைச்சு அனுப்ப சொல்றேன் கவியை. அவ்வளோ தான்….” என்றவன்,
“நல்லநாள்ல ஒண்ணா இருப்போம். போதும் நீங்க பன்றதுக்கு பார்த்துட்டு இருந்தா இன்னும் மோசமான நிலைமைக்கு போயிரும் குடும்பம். எனக்கப்பறம் என் பொண்ணு நல்லது கெட்டதுன்னு எல்லாத்தையும் யோசிச்சு நடக்கனும். இங்க இருந்தா அவ அப்படி வளரமாட்டா…” என்றான் முடிவுடன்.
“அப்ப நீ போறதா முடிவு பண்ணிட்ட?…” கமலா ஆத்திரமாய் கேட்க,
“ஆமா, உறுதியா கிளம்பறோம்….” சிவநேயனும் சொல்ல,
“நாளைக்கு பணம் குடுக்கறதும் உறுதி. இங்க இருந்து எங்களை வெட்டிவிட்டு போக போறதும் உறுதி. அப்படித்தான?…” மீண்டும் கமலா கேட்க,
“அதுதான் சொல்லிட்டேனே? இது கோவத்துல, அவசரத்துல எடுத்த முடிவில்லை. நல்லா யோசிச்சு எடுத்த முடிவு தான். இந்த பணவிஷயம் இல்லைன்னாலும் கூட நாங்க கிளம்பியிருப்போம்…” என்றான் சிவநேயன்.
“இவ்வளோ பெரிய வீட்டை விட்டுட்டு வெளில போய் தனியா இருந்தா ஊர் என்ன பேசும் சிவா?…” வசந்தன் மகனிடம் மன்றாட,
“இன்னைக்கு என்னை ஊர் என்ன பேசும்ன்றதை யோசிக்க என்னால முடியாது. எனக்கு என் பொண்ணு முக்கியம். அவ எதிர்காலம் முக்கியம். சின்ன பிள்ளைக்கு எதையெல்லாம் சொல்லி தர கூடாதோ அதை அத்தனையும் சொல்றது. பெத்த தாயை கூட தள்ளி வச்சு அவளை பாழாக்கி வச்சுட்டீங்க. போதும். விடுங்க…”
சிவநேயன் சொல்லிக்கொண்டிருக்க விறுவிறுவென உள்ளே ஸ்டோர் ரூம் பக்கம் சென்ற கமலாவின் வேகத்தை அப்போது தான் கவனித்த வசந்தன்,
“கமலா…” என பின்னே ஓட சிவநேயன் சலிப்பாய் இருக்கையில் அமர்ந்தான்.
“சிவா. இங்க வாடா…” என்றவர் அலறலில் என்னவோ என பதறி ஓடி வந்தால் அங்கே பால்டாயிலை குடித்திருந்தார் கமலா.
உண்மையில் அதிர்ந்து போனான் சிவநேயன். இதை எதிர்பார்க்கவே இல்லை அவன்.
அவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றவன் மனதெல்லாம் தீயாய் எரிந்தது.
இது அவர் வருந்தி ஒன்றும் எடுத்த முடிவல்ல. தன்னை பயம் காட்டவே இவ்வாறு செய்தது என சிவநேயன் கண்டுகொண்டான்.
எத்தனை தூரம் செல்கிறார் இவர் என சிவநேயனின் மனது சுத்தமாய் வெறுத்தே போனது.
கவியும், தன்ஷிகாவும் அழுதுகொண்டே இருக்க அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விஷயமறிந்து வந்து பார்த்து அவ்வளவு பேச்சுக்கள்.
வயதான காலத்தில் பெற்றவர்களை இப்படி கஷ்டப்படுத்துகிறாயே என. இதில் போதாததிற்கு வசந்தன் வேறு பேச்சுவாக்கில்,
“அம்மாவுக்கும் மகனுக்கும் வாக்குவாதம். கவி வீட்டால இவன் தனிக்குடித்தனம் போறேன்னு சொல்லிட்டான். மனசு கேட்காம கமலா இந்த முடிவுக்கு வந்துட்டா…” என மேலோட்டமாய் சொல்லி அழ அதிர்ந்தே போனார்கள் கவியும், சிவநேயனும்.
கவி தான் பெரிதாய் உடைந்தது. வந்தவர்கள் அனைவருமே என்னவோ கவியும், அவளின் குடும்பமும் சேர்ந்து இப்படி நிலைக்கு தள்ளிவிட்டதாக பேச ஆறவே இல்லை அவளுக்கு.
வீட்டிற்கு அழைத்து சொல்லவும் அடித்துபிடித்து அத்தனைபேரும் அந்த இரவில் வந்து சேர்ந்தனர்.