“டெய்லி ஏதாவது சொல்லி பேசிட்டே இருக்காங்கம்மா அத்தை. இவர் என்னடான்னா அவங்களுக்கு பதில் ஒருவார்த்தை பேசினா கூட என்னை கோச்சுக்கறார். சாபம் குடுக்கற மாதிரி அவங்க பேசறாங்க. ஏன் இப்படின்னு கேட்க கூட கூடாதுன்னு சொல்றார் உங்க மருமகன்…” என்று அழுகைகள் தொடர்ந்துகொண்டே தான் இருந்தது.
விடிந்தால் அன்று என்ன பிரச்சனை வருமோ என எண்ணி பயப்படும் அளவிற்கு இருந்தது.
“இந்த பொண்ணு எதையும் காதுல வாங்காம கண்டுக்காம இருக்கவேண்டியது தானே? அவங்க முன்னாடி நின்னுட்டு பேசறாங்கன்னா எப்படி? இவளும் நிம்மதியை தொலைச்சுட்டு இப்படி செய்யறா…” என சசிகலா தான் வருந்தி உடலை வருத்திக்கொண்டார்.
மகள் அங்கே அப்படி இருக்க இங்கே தாயாய் அவருக்கு எதுவும் இறங்கவில்லை. சரியாக உண்ணாமல் கவலையில் கரைய,
“நீங்க சாப்பிடாம கவலைப்பட்டாலும் அங்க எதுவும் மாற போறதில்லை அத்தை. ப்ளீஸ், விடுங்க…” என சொல்லி நிஷா தான் தேற்றினாள்.
மகன், மருமகளுக்காக இருந்தாலும் அவரின் முகத்தின் வருத்தம் நிஷாவையும் வருந்த செய்தது.
“பேசாம சொத்தை பிரிச்சு எழுதிருங்களேன்….” என ஆதித்தனிடம் அவளே பேச்சை துவங்க,
“என்ன பேசற நீ? அந்தம்மாவுக்கு பயந்துட்டு சொத்தை பிரிக்கிறதா? என் குடும்பத்துல என்ன நடக்கனும்ன்னு நான் தான் முடிவு பண்ணனும். அவங்க இல்லை…” என்றான் கோபமாக.
“இது ஒன்னும் அவங்களுக்கு பயந்துட்டு இல்லை. நம்மோட நிம்மதிக்காக. அத்தை பாவம். அவங்க மனசுக்குள்ள வச்சுட்டு வருத்தப்படறாங்க…” நிஷா எடுத்து சொல்ல,
“இதை அக்கா தான் சமாளிக்கனும். மாமா ஒன்னும் அவங்கம்மா பேசறதுக்கு சப்போர்ட் பண்ணி அக்காவோட பிரச்சனை பண்ணலையே? அவங்க கூட பேச்சுவார்த்தை வச்சுக்காதன்னு தான சொன்னாங்க?. இதுல எந்த தப்பும் இல்லை….” என்றவன்,
“இங்க பாரு நிஷா, முதல்ல அவங்க பிரச்சனையை இங்க வரை கொண்டுவரவே கூடாது. நம்மளை வச்சும் பேசிட்டாங்க. அம்மாக்கிட்ட எல்லாம் சொல்றவ யோசிக்க வேண்டாமா?…” என்றான் அவன்.
“என்ன பேசறீங்க? வேற யார்க்கிட்ட சொல்லுவாங்க? நாம ஒரு சைடாவே பார்க்க கூடாது. அண்ணி பக்கமும் பாருங்க….”
“எல்லாம் பார்த்தாச்சு. இதை நீ பெருசு பண்ணாத…” ஆதித்தன் கண்டுகொள்ளாத பேச்சில்,
“ப்ச், என்னடி? என்ன உன் பிரச்சனை?…” என ஆதித்தன் சற்றே தன்மையுடன் அவளை இழுத்து அருகில் நிறுத்தி கேட்க,
“சிவா அண்ணாவோட அம்மாப்பா நல்லவங்களோ? கெட்டவங்களோ? ஆனா அவங்க பேசறது நம்மளையும் பாதிக்குது. ஒரு சஞ்சலத்தோட முழு சந்தோஷம் இல்லாம எப்படி சொத்தை வாங்கறது?…”
“இதுக்காக தான் அவங்க பேசறாங்கன்னு நான் சொல்றேன். அவங்க ஆட்டி வைக்கிறதுக்கு எல்லாம் ஆட முடியாது…”
“எழுதி வைக்கிறதுல என்னாவாகிடும்? வழக்கம் போல நாம தானே பார்த்துக்க போறோம்?…”
“ஆமா, அதை தான் நானும் சொல்றேன். நாம தான பார்த்துக்க போறோம். இப்ப எழுதி வச்சா மாமாவும் சங்கடப்படுவாங்க. அதோட என்னால அந்தம்மா இழுப்புக்கு போக முடியாது. அக்காவே சமாளிக்கட்டும். பார்ப்போம் இதுக்காகவாவது அவ வாயை திறந்து பேசறாளான்னு…” என்றுவிட்டான் அலட்சியத்துடன்.
அதன் பின் பத்திரப்பதிவின் பொழுது சிவநேயன் கூட வந்திருந்தான் ஆதித்தன் சார்பாக.
கவிப்ரியாவை அழைத்துக்கொண்டு வந்து அன்று இருந்து வாழ்த்திவிட்டு தான் சென்றான்.
இன்னும் கவிப்ரியாவின் முகத்தில் சிரிப்பில்லை. ஒரு சந்தோஷ மனநிலையுடன் கூட வரவில்லை.
பணத்தை தன் தம்பி தன்னிடம் வாங்கிக்கொள்ளாததில் அத்தனை ஆதங்கம் கவிக்கு.
“ஏன்ம்மா வெளில கூட கடனா வாங்கிப்பான். எங்கிட்ட வாங்க முடியாதாமா? என் மாமியார் பேசறதுக்கு எல்லாம் இவன் மதிப்பு தந்து பணத்தை வேண்டாம்ன்னு சொல்லுவானா?…” என சசிகலாவிடம் சொல்ல,
“உன் மாமியார் இப்படி பேசறாங்கன்னு தானே நீ அழுது புலம்பற கவி? நீ மட்டும் அதை பெருசா எடுத்துட்டு அழற தானே?…” என்றார் மகளிடம்.
“ம்மா அதுவும் இதுவும் ஒண்ணா?…”
“இப்படி பேசிட்டாங்கன்னு எவ்வளோ வருத்தப்படற. காசு வாங்காமலே இவ்வளோ பேசறவங்க, காசை வாங்கியிருந்தா இன்னும் என்னலாம் பேசுவாங்களோ?…” என்று மனதில் தோன்றியதை சொல்லிவிட்டார் மகளிடம்.
“என்னம்மா நீங்களும் இப்படி பேசறீங்க?…” கவி திகைத்து போக,
“கஷ்டமோ நஷ்டமோ கவி, ஆதி எடுத்த முடிவு சரி தான்…” என்றார் சசிகலா.
“இது என்ன உங்க பிள்ளை எடுத்த முடிவா? உங்க மருமக எடுத்த முடிவு. ஆதி நிஷா பேச்சை கூட கேட்க ஆரம்பிச்சுட்டான். என் பேச்சை தான் கேட்கலை…” என வருத்தமாய் சொல்ல,
“ஆதி ஒன்னும் புதுசா நிஷா பேச்சை இதுல கேட்கலை. யோசிச்சு பாரு. அவன் முடிவுல எப்பவும் நிஷா தான் இருப்பா. வெளில பார்க்க தான் அவன் முடிவா இருக்கு….”
“பெருமையா சொல்றீங்க போல?…” என கவி அலுத்துக்கொள்ள,
“இந்த பெருமைக்கு என்ன குறை? கண்டிப்பா பெருமை தான். இதுல அலுத்துக்க என்ன இருக்கு?…” என்ற சசிகலா,
“இப்பவும் நிஷா உனக்காக தான் ஆதிட்ட பேசிட்டு இருக்கா. சொத்தை பிரிச்சு குடுங்க. அண்ணி அங்க அவங்க மாமியார்ட்ட பேச்சு வாங்காம நிம்மதியா இருப்பாங்கன்னு. நீ என்னடான்னா சின்ன பிள்ளை மாதிரி பண்ணிட்டிருக்க?…” என மகளையும் கண்டித்தார்.
கவிப்ரியாவிற்கு புரிந்தாலும் என்னவோ தன் பேச்சு தன் பிறந்த வீட்டில் இரண்டாம்பட்சமாக இருப்பதாய் ஒரு எண்ணம்.
அதற்கென்று தம்பி, தம்பி மனைவியை பகைத்துக்கொள்ளவில்லை. நிஷாவின் மீது அன்பிற்கும் குறைவில்லை.
ஆனாலும் சில நேரம் இப்படியான உரிமை எண்ணங்கள் தலைதூக்கி முன்னடியில் நிற்கும்.
அப்போதும் அப்படித்தான் இருந்தது. வெளியில் பணம் வாங்கி தம்பிக்கு எதுவும் கஷ்டம் வந்துவிட்டால் என்ற ஒரு ஆதங்கம்.
அதனைகொண்டே மீண்டும் மீண்டும் அதிலேயே இருந்தவளுக்கு மறைமுகமாய் ஒரு நட்பாசையும்.
இதன் மூலம் தன் வீட்டில் தன்னுடைய உரிமை இன்னும் பலப்படும் என்றொரு மறைமுக எண்ணம் அவளில் நுழைந்திருந்தது.
அதற்கு வாய்ப்பில்லை என்ற தருணம் கவிப்ரியா மனதில் ஏமாற்றமும், அதனை தொடர்ந்த முகத்தூக்கலும்.
ஒருவித இறுக்கத்துடனே வந்துவிட்டு சென்றுவிட்டாள். சிவநேயனுக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை.
மனமார வாழ்த்திவிட்டு சென்றான் அவன். அவனுக்கு ஆதித்தன், நிஷாவின் மறுப்பு எதனால் என புரிந்துகொள்ள முடிந்தது.
முதல்முறையே தாங்கள் வற்புறுத்தி சொல்லியதால் மட்டுமே அவர்கள் பணம் வாங்க சரி என்றதும் கூட.
இப்போது இத்தனைக்கு பிறகு வாங்க, அதுவும் ஆதித்தன் வாங்குவதற்கு நிச்சயம் ஒப்புக்கொள்ளமாட்டான் என ஓரளவு அனுமானத்தில் தான் இருந்தான் சிவநேயன்.
பிரச்சனைகள் இருந்தாலும் சந்தோஷமாகவே வந்துவிட்டு சென்றிருக்க கவியின் சிரிப்பற்ற முகம் கண்டு மீண்டும் அதனை பேசியிருந்தாள் நிஷா.
“பிரிச்சு குடுன்னு அக்காவோ, மாமாவோ கேட்கட்டும். அந்தம்மா பேச்சுக்கெல்லாம் நான் ஆமாம் சாமி போடறதா?…” என ஆதித்தன்.
மீண்டும் இதனை கொண்டு வீட்டிற்குள் முட்டிக்கொண்டு வலம் வந்தனர் இருவருமே.
முதல்நாள் இரவில் தான் வீட்டினருக்கு சொல்வதை போல நிஷாவிற்கும் சொல்லியிருந்தான் ஆதித்தன்.
வேண்டுதல் என செண்பகாதேவி அருவி கோவிலுக்கு செல்வதாக சொல்ல சீசன் இன்னும் முடியாதபடியால் சங்கரலிங்கம் தயங்கினார்.
ஆதித்தனுக்கு அங்கே செல்வது அத்துப்படி. ஆனால் நிஷாவிற்கு எப்போதுமே ஒருவித பயம் இருக்கும்.
அதற்கே அங்கே செல்வதை நினைக்கமாட்டாள். ஆதித்தன் காதில் வாங்கினால் தானே?
அவள் மறுக்கவென்றே வம்படியாக அழைத்துக்கொண்டு சென்றுவிடுவான் அவன்.
இதோ இப்போதும் இருவரும் மகன் அபியுடன் குற்றாலத்தின் மலையில் உள்ள செண்பகாதேவி அருவி கோவிலுக்கு வந்துவிட்டனர்.
மேலே அருவியை நெருங்க நெருங்க மிதமான சாரலும், குளிரும் அதனுடனான காற்றும் பற்களுக்கிடையில் தந்தியடிக்க செய்தது.
ஆதித்தன் மனைவி மகன் இருவரையும் கவனமாக அழைத்துக்கொண்டு மேலே ஏறினான்.
அவ்வப்போது மகனை முன்னால் வைத்துக்கொண்டு திரும்பி திரும்பி வேறு நிஷாவை பார்த்து வைத்தான்.
ம்ஹூம், நிஷா தன் முகத்தில் எதையாவது காண்பித்தால் தானே? வாயை திறக்கவில்லை.
“இந்த விஷயத்துல எப்ப என்ன செய்யனும்ன்னு நான் பார்த்துக்கறேன். உன்கிட்ட சொல்லாம எழுதி தர போறதில்லை….” என்ற பேச்சுக்களில் அவன் மேல் அத்தனை கோபத்தில் இருந்தாள் நிஷாந்தினி.
“என்னவோ என் பேருக்கு எழுதி தர சொன்ன மாதிரி பன்றீங்க? என்னவும் பண்ணுங்க, நீங்களாச்சு உங்க அக்காவாச்சு, உங்க சொத்துமாச்சு…” என அவளும் வாயை விட்டிருக்க,
“என் சொத்து வேற உன்னது வேறையா நிஷா? பிரிச்சு பேசற நீ?…” என எரிமலை பொங்கியிருந்தது.