“இல்ல சாமி மட்டும் கும்பிட்டு கிளம்புவோமே? என்னமோ பயமா இருக்கு…” என்றாள்.
“இவ்வளோ தூரம் வந்துட்டு குளிக்காம போறதா? அதுவும் இந்த அருவியை பார்த்து பயமா? நான் பிறந்து வளர்ந்த இடம். என்ன பயம்? இதைவிட தண்ணி அதிகமா வந்தப்பவும் வந்திருக்கேன்…” என்றவன்,
“குளிடி. நான் இருக்கேன்ல. என்ன பயம்?…” என்றான் ஆதித்தன்.
“வேண்டாம். நீங்களும் குளிக்க வேண்டாம். இந்த அருவியை பார்த்தாலே பயமா இருக்கு. இவ்வளோ தண்ணில குளிக்க அலாவ்ட் இல்லை. ஆனாலும் குளிப்பேன்னு பிடிவாதமா நிக்கறீங்க…”
“எனக்கு பழக்கம் தான். வரப்ப எல்லாம் இங்க தான் குளிப்பேன். உனக்கு தெரியும் தானே? பயப்படாம என் கையை பிடிச்சிட்டு தண்ணில இறங்கு…”
“வேண்டாம், நீங்களும் குளிக்க வேண்டாம். வாங்க ப்ளீஸ். சாமியை கும்பிட்டு போவோம்…” என அச்சத்துடன் அழைக்க அவளை முறைத்துவிட்டு,
“இதான் லாஸ்ட் உன்னை நான் கூப்பிடறது…” என சொல்லியவன் மீனாய் தண்ணீருக்குள் பாய பயந்து போனாள் நிஷா.
தண்ணீருக்குள் அமிழ்ந்த சில நொடியில் மேலே வந்தவனை கண்டதும் தான் அவளுக்கு மூச்சே வந்தது.
“ஹை அப்பா…” என அபி கை தட்டி சிரித்தான் ஆதித்தனை கண்டு.
இரண்டு மூன்று முறை மகனின் சந்தோஷத்தில் அவ்வாறே நீருக்குள் அமிழ்வதும், எழுவதுமாக விளையாட்டு காட்டியவன் உற்சாகத்தில் நிஷாவுமே பயமின்றி புன்னகைத்தாள்.
“என்ன?…” என தலையசைத்து அவளிடம் கேட்க,
“வாங்க…” என்றாள் நிஷா அப்போதும் வரமாட்டேன் என்பதை போல.
“போடி…” என்று சிலிர்த்துக்கொண்டவன் முறைப்பில் நிஷாவும் பாவம் போல பார்த்தாள்.
அடுத்த முறை மூழ்கியவன் எழவில்லை. சில நொடிகள் கடந்தது. இன்னும் எழவில்லை.
மூச்சின் வேகத்தில் நெஞ்சாங்கூடே காலியாகிவிடும் போலிருக்க பிள்ளையை இறுக்கியவள் இதழ்கள் தந்தியடித்தது.
“அப்பா காணும்?…” என அபியும் தகப்பனை தேட நிஷாவிற்கு கண்ணீர் வந்துவிட்டது.
ஆளில்லா காட்டுப்பகுதி. பிள்ளையை வைத்துக்கொண்டு உதவிக்கு கூட யாரையும் அழைத்து வர முடியாது.
அழுகை முட்டிக்கொண்டு விழிகளில் இருந்து கண்ணீர் வழிய பார்த்தது. உடம்பும் உதறல் எடுக்க இன்னும் முன்னே சென்று பார்த்தாள் நிஷா.
அருவியின் நீர் மொத்தமாய் அவளை நனைக்க பார்க்க காலுக்கடியில் சில்லிட்ட நீரின் வேகம் அவளை உள்ளே இழுப்பதை போலிருந்தது.
“ம்மா அப்பா காணும்?…” என்றான் மகன் மீண்டும் நிஷாவின் கன்னம் தட்டி.
“வருவங்க ப்பா…” என்றவள் மகனுடன் எழுந்து நின்றாள்.
தண்ணீரில் இருந்த கால்கள் வலுவிழப்பதை போலிருக்க எங்கே மகனுடன் தானும் நீரில் விழுந்துவிடுவோமோ என இறுக்கமாய் பிடித்தபடி நீரிலிருந்து தரைக்கு வந்து மகனை அமர வைத்தாள் நிஷா.
“இங்கயே இரு, நான் அப்பாவை பார்த்துட்டு வரேன்…” என சொல்லி நகர்ந்தவள் சுடிதாரை இழுத்து பிடித்த மகன்,
“ம்மா பயமா இருக்கு. போவாதீங்க…” என அழ ஆரம்பிக்க பிள்ளையை தூக்கிக்கொண்டாள்.
“ஒன்னுமில்லடா, அம்மா போகலை…” என்றவள் கண்கள் நீரினுள் துழாவ எங்கும் அவனை காணவில்லை.
“என்னங்க, எங்க இருக்கீங்க?…” என்னும் பொழுதே ‘அப்பா’ என் மகனும் வீறிட அவளின் சத்தமும் அதிகமானது.
பிள்ளையை விட்டுவிட்டு தானும் நீருக்குள் பாயலாம். நீச்சல் தெரியும். அருவியை அண்ணார்ந்து பார்த்தாள்.
காட்டாற்று வெள்ளம் போல சீறி பாய்ந்து விழும் அருவியை நெருங்க நினைக்கையில் நடுக்கம் உண்டாகியது.
தானும் கணவனை காண சென்று அதில் தனக்கு எதுவும் என்றால் என்ன செய்வான் மகன் இந்த காட்டுக்குள்.
இன்னும் நேரம் செல்ல நீருக்குள் அவனில்லையோ என்ற எண்ணம் தோன்ற நிஷாவின் விசும்பல் அழுகையாக மாற முயன்றது.
மகனும் அழுது தானும் அழுதால் அவன் இன்னும் பயம் கொள்வானே என உதட்டை கடித்து அடக்கினாள்.
‘இதான் லாஸ்ட் நான் உன்னை கூப்பிடறது’ என்ற ஆதித்தனின் சொல் காதில் ஒலித்தது.
‘இப்ப கூப்பிடுங்களேன். வாங்க ப்ளீஸ். வந்திருங்க’ என்ற மனதின் இரைஞ்சுதல் கூடிக்கொண்டே செல்ல மகனை சமாதானம் செய்து அவனை வைத்துக்கொண்டே இங்குமங்குமாய் ஓடினாள்.
லேசான தூறல் வேறு மழையாய் பிடித்துக்கொள்ள பகல்நேரமே இருட்டிக்கொண்டு வந்தது.
நேரம் செல்ல செல்ல உடலில் உயிர் சுத்தமாக இல்லை. தானும், பிள்ளையும் தண்ணீரில் இறங்கி இருந்தால் ஒருவேளை தங்கள் அருகிலேயே இருந்திருப்பானோ என நினைத்தவள் தொண்டையைவிட்டு பெருங்குரல் வெளியேறும் முன்,
“நிஷா…” என்றவன் அழைப்பு.
ஆதித்தனின் குரலில் உயிர்வரப்பெற்று திரும்பி பார்த்தவள் கண்கள் லேசாய் சொருகிவிட்டது அத்தனை நேரம் மூச்சுவிட முடியாமல் தவித்ததில்.
“ஹேய் நிஷா…” என்று அவளை பிடித்துக்கொண்டவன் மனைவியின் கையிலிருந்த மகனையும் சேர்த்து தாங்கிக்கொண்டான்.
மகனை பிடித்து கீழே அமர வைத்தவன் நிஷாவின் கன்னத்தை தட்ட ஆதித்தனின் அணைப்பிலிருந்து முயன்று விழித்தவள் பார்வை அவனை அங்குலம் அங்குலமாக தடவி அவனின் இருப்பை உறுதி செய்தது.
“நானே தான். என்ன இந்த பார்வை?…” என ஆதித்தன் சொல்லிய நிமிடம் எல்லாம் மறந்தாள்.
“பைத்தியமாடா நீ. செத்தே போய்ட்டேன்…” என்றவள் ஆவேசம் கொண்டமட்டும் அவனின் கன்னத்தை மாறி மாறி அறைந்துகொண்டே இருந்தாள் நிஷா.
ஒவ்வொரு அறைக்கும் ‘இப்படி செய்வியா? செய்வியா? என கேட்டு கேட்டு அடிக்க அவன் பயந்து போனான்.
இப்படி என்றுமே நிஷா நடந்துகொண்டதில்லை. அவனை மரியாதையின்றி பேசியதோடில்லாமல், இத்தனை அடி.
“ஏன்டா என்னை போட்டு இப்படி படுத்தற? எல்லாமே உன் இஷ்டமா? என்னோட பயம், உணர்வு எதுவுமே உனக்கு பொருட்டே இல்லையா? எவ்வளோ சொன்னேன். கேட்டியாடா நீ? என்ன மனுஷன்? நீ என்ன புருஷன்?…” என தன் கை வலிக்க வலிக்க அடித்தாள்.
“போகனுமா? போ. போயேன். வா நானும் வரேன். என்னை பயப்பட வச்சு என்ன சந்தோஷம் கிடைச்சது உனக்கு? எல்லாத்துக்கும் ஒரு பேச்சு, அதட்டல், பிடிவாதம். இன்னும் என்னதான்டா வேணும்? உயிர் விஷயத்துல கூட அலட்சியமா? அப்போ நான்? நீ இல்லாம?….”
அவளால் முழுதாய் சொல்லவும் முடியவில்லை. வார்த்தைகள் வர மறுத்தது. அவ்வளவு அழுகை வேறு.
அத்தனை வருடங்களுக்கும் சேர்த்ததை போலிருந்தது அவளின் அடிகள். மகன் பயந்து போய் என்னவோ என்று பார்க்க கணவனை அடித்துக்கொண்டிருந்தவள் தொய்ந்து அவனின் கைகளிலேயே சரிந்தாள்.
“இதுக்கு தான் தனியா கூட்டிட்டு வந்தீங்களா? இப்ப சந்தோஷமா? நல்லாவே அழுதுட்டேன். நல்லா பார்த்துக்கோ. போதுமா? உன்னோட கோபம் குறைஞ்சிடுச்சா? நான் மட்டும் உன் பேச்சை கேட்கனும். நான் சொன்னா உனக்கு அது விஷயமே இல்ல, என்ன?…” என்று அத்தனை ஆத்திரமாய் கேட்டாள்.
“நிஷா என்னம்மா?…” என்றவன் மகனோடு மனைவியையும் அணைத்து அமர்ந்துவிட்டான் அந்த பாறையான தரையில்.
அழுகை எல்லாம் குறைந்து கண்ணீர் மட்டும் மழைநீரோடு வழிந்து செல்ல நிஷாவை தலைகோதி ஆசுவாசப்படுத்த முயன்றான்.
“நிஷா நீ ஓகே வா? அழறதை நிறுத்திட்டியா? இப்ப நான் பேசறதை கேட்பியா?…” என்றவன் அவளின் மௌனத்தில்,
“நிஷா இந்த செயின் கழண்டு விழுந்துருச்சு. அதை எடுக்க தான் தேடிட்டிருந்தேன். இது நீ பர்ஸ்ட் டைம் எனக்கு ப்ரெசென்ட் பண்ணினது…” என சொல்ல இன்னுமே கோபம் நிஷாவிற்கு.
“நான் இங்க தானே இருக்கேன்? போன போகட்டுமே? நகை வேற வாங்கிக்கலாம். ஆனா…” என்றவள் மீண்டும் முகத்தை மூடிக்கொண்டு அழ ஸ்தம்பித்து போனான் ஆதித்தன்.
“ம்மா…” என்ற மகன் வந்து கழுத்தோடு அணைத்துக்கொள்ளவும் தான் சுயம் பெற்றாள் நிஷா.
“போகலாம் குட்டிம்மா…” என்றவள் மகனை தூக்கிக்கொண்டு நடக்க ஈரத்தில் கால் வழுக்கியது.
மனைவி கீழே விழாமல் பின்னிருந்த ஆதித்தன் பிடித்துக்கொள்ள பட்டென்று அவனின் கையை தட்டிவிட்டாள் நிஷா.
“திருஷ்டியாகிருக்கும் போல? முதல் புள்ளைங்களுக்கு சுத்தி போடனும்…” என்றபடி செந்தாவிடம் சொல்ல சென்றார் சசிகலா.
மாடியில் அவர்கள் அறையில் நிஷாவும், அபியும் வாயில் கைவைக்காத குறையாய் அமர்ந்திருந்தனர் ஆதித்தனின் முன்பு.
“நிஷா அடிச்சா, நான் அடி வாங்கினேன், அதான் என் கன்னத்துல வீக்கம்ன்னு யார்க்கிட்டையாச்சும் ரெண்டுபேரும் சொன்னீங்க…” என எச்சரிக்கையுடன் மனைவி, மகனுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தான் ஆதித்தன்.
“அத்தை கேட்டா…” என நிஷா ஆரம்பிக்க,
“மூச், நீ வாயே திறக்காத…” என்று அவளின் கையை எடுத்து வாயை பொத்திவிட்டவன்,
“எவ்வளோ நாள் கோவம்டி என் மேல?…” என தன் கன்னத்தை தொட்டு பார்த்துக்கொண்டே கண்ணாடியை பார்த்தான்.
“கையை கொண்டா…” என அவளின் இரு கைகளையும் விரித்து உள்ளங்கை பார்த்தவன் அவளின் கையும் கன்றி இருப்பதை பார்த்து,
“சாஃப்ட்டா இருக்கு. ஆனா எவ்வளோ பலம்?…” என உத்து உத்து பார்த்தான் அதனை.
நிஷாவிற்கு பாவமாகவும், ஒருபக்கம் சிரிப்பாகவும் இருந்தது ஆதித்தனின் ஆராய்ச்சியில்.
நிஷாவின் உள்ளங்கையில் இருந்த தன் பார்வையை மெல்ல அவளின் முகத்திற்கு நிமிர்த்த கெஞ்சலாய் கண்களை சுருக்கினாள் மனைவி.