இரவு உணவும் மாடிக்கே வந்துவிட்டது ஆதித்தனுக்கு. மகனுடன் பேசிக்கொண்டே அங்கேயே இருந்துவிட்டான்.
“என்னம்மா ஆதிக்கு காய்ச்சல் எப்படி இருக்கு?…” என்ற சங்கரலிங்கத்திடம் பதில் சொல்லும் முன் திணறி போனாள் நிஷா.
அதை விட சசிகலா வேறு இதை கொடு, அதை செய், என்ன உண்டான்? இது வேண்டாம் என அவ்வளவு அறிவுரை.
“என் பிள்ளைக்கு கூட இவ்வளோ பண்ணலை த்தை…” என சொல்லியேவிட்டாள் நிஷாந்தினி.
“இல்லம்மா ஆதி இப்படி காய்ச்சல்ன்னு படுத்தே இல்லை. கன்னம் வீங்கி படுக்கற அளவுக்கு என்னவோன்னு பயமா இருக்கே?…”
சசிகலா அழுதுவிடுபவர் போல சொல்ல நிஷாவிற்கு வார்த்தைகள் தொண்டைவரை வந்துவிட்டது நடந்ததை கூற.
‘நிஷா வாயை மூடுடி. இல்ல உன் புருஷன் உன் கழுத்தை கடிச்சே துப்பிருவான்’ என கண்ணை மூடி தன்னை அடக்கிக்கொண்டாள்.
“நீ இன்னொருதடவை கேட்டு பாரேன் ஹாஸ்பிடல் போக. என்ன சொல்றான்னு பார்ப்போம்…” என்றவரின் கெஞ்சுதலில் பாவமாய் பார்த்தாள்.
அம்மாவும் பிள்ளையும் தன்னை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் ஆட்டம் காட்டுகின்றனர் என்று.
“அத்தை அதெல்லாம் அவங்களுக்கு சரியாகிடும். உங்க பிள்ளைக்கிட்ட காய்ச்சல் கூட ஒட்டிட்டு நிக்காது. அது என்ன நிஷாவா? பிடிச்சு கழுத்தோட கட்டி வைக்க?…” என ஒரு வேகத்தில் சொல்லிவிட,
“இப்பவும் அவனை கோவிச்சுக்கற நீ?…” என்றார்.
“யாரு நானா? சரித்தான்…” என பாலை காய்ச்சி மகனுக்கும், கணவனுக்கும் எடுத்துக்கொள்ள,
“இரு, இரு. ஆதிக்கு பால் வேண்டாம். காய்ச்சலோட சளி புடிச்சுக்க போகுது. கஷாயம் தரேன்…” என காய்ச்ச ஆரம்பித்துவிட்டார்.
“அத்தை…” என பல்லை கடித்தவள்,
“அவர் குடிக்கமாட்டார்…” என கெஞ்சும் முறை நிஷாவுடையதானது.
“அதெல்லாம் குடிப்பான். நீ எடுத்து சொல்லு. நீ சொன்னா கேட்பான். கன்னம் வேற எப்படி வீங்கி இருக்கு?…” என சொல்லி,
“உப்பு ஒத்தடம் வைக்கிறியா? எரியுமோ? மஞ்சள் பத்து தரவா?…” என சசிகலா கேட்டுவைக்க குபீரென்றொரு சிரிப்பு பீறிட்டது நிஷாவிடம்.
“நான் அழுதுட்டு சொன்னா நீ சிரிக்கிற?…” சசிகலா கேட்க,
“இல்ல மஞ்சள் பத்தோட உங்க மகனை நினைச்சு பார்த்தேன். அதான் சிரிப்பு வந்திருச்சு…” என்று வந்த சிரிப்பை அடக்க முயன்றாலும் முடியவில்லை.
“செந்தா மஞ்சளை எடு. கொஞ்சம் நெல்லு எடுத்துட்டு வா…” என சொல்லி அரைக்கவே தயாராகிவிட்டார்.
“உடம்பு முடியலைன்னு ஒரு நாள் பொழுது வீடு தங்கியிருப்பானா? இன்னைக்கு அவனே ரெண்டுநாள் கீழ வரமாட்டேன்னு சொல்றான்…” என விசும்பிக்கொண்டார்.
செந்தா மஞ்சள் பத்தை அரைக்க ஆரம்பித்துவிட நிஷா பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.
“உன் மாமா வந்ததும் அவனை பார்க்கனும்னு சொன்னார். அவருக்கு மனசே ஆறலை. நான் தான் ஆதி சங்கடப்படறான்னு போன்ல கேட்டுக்கோங்கனு சொன்னேன்…”
“ஆமாமா, மாமா கால் பண்ணி பேசி உங்க மகனும் விலாவரியா விளக்கிட்டார் பாருங்க…” நிஷா கிண்டல் பேச,
“என்ன பேசற நீ? அவனுக்கு காய்ச்சல். எப்படி பேச முடியும்?…” சசிகலா மகனுக்கு பரிந்து பேச,
“கன்னத்தை விட்டுட்டீங்களே?…” செந்தா எடுத்து கொடுக்க,
“ஆமா, கன்னம் வலிக்காதா?…” என்றார் சசிகலா.
“கொன்னுட்டேன் செந்தாக்கா உங்களை….” என்றாள் நிஷா.
“என்ன பாப்பா இம்புட்டு சூடாகற?…” என்ற செந்தாவின் கேள்வியில்,
“ஹ்ம்ம், பின்ன இப்படி அவன் வரும்ன்னு நினைச்சிருக்கமாட்டானே?…” என்ற சசிகலா,
“நிஷா நீ சொல்லு அவன்கிட்ட. ஹாஸ்பிட்டல் போய் என்னன்னு பார்ப்போம்…” என்றதற்கு இம்முறை பதில் வாயாடாமல் தலையை மட்டும் அசைத்துக்கொண்டாள்.
“ஹ்ம்ம், எல்லாம் திருஷ்டி தான். அன்னைக்கே திருஷ்டி எடுத்தும் பாரேன்…” என பெருமூச்சுடன் சசிகலா சொல்ல,
“எல்லாம் உங்க சம்பந்தி அந்த பெரிய பழத்தோட கண்ணாத்தேன் இருக்கும். உடம்பெல்லாம் கண்ணு. அதையே தூக்கி சுருட்டி சுத்திவிட்டாலும் திருஷ்டி கழியுமோ என்னமோ?…” என செந்தா ஏற்ற இறக்கமாய் சொல்ல,
“அப்படி சொல்லு. என்ன கண்ணோ? கூடவே அவ்வளோ பேச்சு வேற அந்தம்மாவுக்கு…” என்றார் சசிகலாவும் அங்கலாய்ப்புடன்.
“மக இருந்தா இம்புட்டு பேச்சு வந்திருக்குமா? பார்த்துக்க நிஷா பாப்பா உன் மாமியார?…” என செந்தா சொல்லி சிரித்தாள்.
“நிஷா அவனுக்கு நடந்துட்டு வந்தது உடம்பு வலிக்கும் மாத்திரையை போட்டுட சொல்லு. கஷாயத்தை சூடோட குடிக்க சொல்லு. கஷாயத்துல சரிக்கு சரி இனிப்புக்கு கருப்பட்டி போட்டிருக்கேன். இல்லன்னா அவன் குடிக்கமாட்டான்…” என சொல்ல,
“பேசாம நீங்களே குடுக்க வேண்டியது தானே?…” என்றாள் நிஷா.
“நான் இருந்தா மட்டும் என்னைய்யா கவனிக்க விடுவான்? உன்னை தான் கூப்பிடுவான். தெரிஞ்ச கதை தானே?…” என சொல்ல,
“ஆஹா, எப்படி தப்பிக்கிறீங்க பாருங்க. இருக்கு உங்களுக்கு ஒருநாள். உங்க புள்ளை வெளியேறட்டும், அப்பறம் பேசிக்கறேன்…” என மாடிக்கு சென்றாள் நிஷாந்தினி.
அறைக்குள் நுழைந்தவள் கொண்டு வந்த ட்ரே, ப்ளாஸ்க், தம்ளர் என எல்லாவற்றையும் மேஜையில் பரப்பினாள்.
மகனுக்கு வீட்டுப்பாடம் சொல்லி தந்துகொண்டிருந்த ஆதித்தன் நிஷாவை பார்க்க, எதிலிருந்தோ தப்பித்து வந்ததை போலிருந்தது அவள் பாவனை.
“என்ன இதெல்லாம்?…” என்றவன்,
“அபி புக்ஸ் எல்லாம் எடுத்து வை…” என சொல்லி புத்தகத்தை மூடி மகனிடம் தந்துவிட்டு நிஷாவிடம் முழுதாய் திரும்பினான்.
“உன்னை தான் நிஷா. என்ன இது?…” என கேட்க,
“பார்த்தா தெரியலையா? அபிக்கு, எனக்கு பால். உங்களுக்க கஷாயம். குடிக்க வெந்நீர், கன்னத்துக்கு போட மஞ்சள் பத்து…” என நிஷா காண்பிக்கவும் ஆதித்தன் புருவம் நெரித்து ஒரு பார்வை.
மகனை கருத்தில் கொண்டு வாய் திறவாமல் முறைத்தவன் ‘உன்னால தான்’ என்றான் கண்களால்.
“அபி பாலை குடி…” என மகனுக்கு எடுத்து தந்தவள்,
“இந்தாங்க…” என கஷாயத்தை நீட்டினாள்.
“அங்கயே வை…” என்றான் ஆதித்தன் அதனை வாங்காமல்.
“ப்பா பீவரா?…” என மகன் தொட்டு பார்க்க சூடான ஆதித்தனின் மேனி அப்படித்தான் என்பதை போல் காண்பித்தது மகனுக்கு.
“ம்மா, அப்பாக்கு பீவர்…” என்றான் நிஷாவிடம்.
“அதெல்லாம் இல்…” என்றவளை ஒரு பார்வை பார்த்தவன்,
“ஆமா அபி. இன்னைக்கு நம்ம பால்ஸ் போனோம்ல. அங்க மழைல. அதனால பீவர்…” என்று அவன் சொல்ல அபி நம்பாத பார்வை பார்த்தான்.
அதுவும் அந்த கன்னத்தின் காயம் வேறு மகன் இன்னும் கூர்ந்து கவனித்து பார்த்து,
“அப்ப அம்மா என்னையும் அடிப்பாங்களா?…” என கேட்டான் தகப்பனிடம்.
உண்மையில் நிஷாந்தினிக்கு அவ்வளவு சங்கடமாகி போனது. ஆதித்தனின் முகம் அதற்கு மேல்.
மகனின் முன்னால் அவர்களின் வாழ்க்கையே வேறு. பேச்சுக்களும், பழக்கங்களுமே வேறு. நிஷாவை உரிமையாய் அழைக்கும் ‘டி’ என்னும் அழைப்பு கூட அரிது தான்.
இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அவனை வளர்த்திருக்க அவனின் முன்னிலையில் இந்நிகழ்வு.
மகன் இன்னும் தன் முகத்தையே பார்த்திருக்கவும் அவனின் முன் நன்றாக கால்களை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்தான் ஆதித்தன்.
“நீயும் வந்து உட்கார்…” என நிஷாவை அருகில் அமர்த்திக்கொண்டான்.
“பாலை குடி அபி. அப்பா சொல்றேன்..” என கொஞ்சம் கொஞ்சமாய் அவனுக்கு புகட்டிக்கொண்டே,
“அம்மா அப்பாவை அடிச்சதுல அந்த இடத்துல அடிச்சதுல தப்பில்லை அபி. உனக்கு ஊசி போடும் போது வேணாம்னு சொல்லி காலை உதறி அப்பாவை வலிக்குதுன்னு அடிப்பியே. அது எதனால?…” என கேட்க,
“அது மாதிரி தான் அம்மாவுக்கு அந்த நேரம் பயம். அப்பாவும் தண்ணிக்குள்ள போய்ட்டேனா, அங்க உங்களுக்கு ஹெல்ப் பண்ண கூட யாருமில்லை. அதான் பயத்துல அப்பாவை அம்மா வார்ன் பண்ணினாங்க….” என்றவன்,
“அம்மாவும் என்னோட தண்ணிக்குள்ள வந்திருந்தா நீ தனியா பயந்திருப்ப இல்லையா அபி? ஏன் விட்டுட்டு போனீங்கன்னு கேட்ப இல்லையா? அதை தான் நீ ஊசிக்கு பயந்து அழுத மாதிரி அம்மா கொஞ்சம் அந்த இடத்துல தனியா இருக்க பயந்து அதனால அடிச்சுட்டாங்க….” என்றான்.
“ம்ம்ம்…” என மகன் சொல்ல,
“என்ன அபி? இப்போ ஓகே வா?…” என கேட்டான் ஆதித்தன்.
“அப்பா சொன்னா ஓகே…” என தகப்பனின் கழுத்தை கட்டிக்கொண்ட அபராஜிதன்,
“வலிக்கா ப்பா?…” என கேட்டு தன் வாய்க்குள் காற்றை இழுத்தவன் ஆதித்தனின் கன்னத்தில் ஊதி விட்டு,
“இப்போ?…” என ஆவலாய் கேட்க,
“அப்பாவுக்கு சரியாகிடுச்சுடா குட்டி. சமத்து….” என சொல்லி மகனை ஆற தழுவிக்கொண்டு உச்சி முகர்ந்தான் ஆதித்தன்.
“அம்மா…” என தாயையும் அபி காண்பிக்க,
“நம்மோட அம்மா இல்லாமலா?…” என நிஷாவையும் ஒரு கையால் தங்களருகே இழுத்துக்கொண்டான்.