இப்போதும் ஆதித்தனின் கோபத்தை எண்ணி தன் செயலை எண்ணி உள்ளுக்குள் லேசாய் ஒரு பயம் இருந்தது தான்.
அதுவும் அவனின் கன்னங்களை பார்க்கையில் நிஷாந்தினி மனதில் வருத்தமும் எழத்தான் செய்தது.
“வலிக்குதா?…” மெல்ல விரல் கொண்டு அவனின் கன்னத்தை தொட்டு பார்க்க,
“குளுகுளுன்னு இருக்குன்னு சொன்னா நம்பிடுவியா நீ?…” என்றான் ஆதித்தன் எதிர் கேள்வியாக.
“உங்ககிட்ட பேசிட்டாலும்…” என வெடுக்கென நிமிர்ந்தவள் நகர்ந்து படுக்க சென்று பின் ஞாபகம் வந்தவளாக,
“மஞ்சள் பத்து போடனும். அத்தை போட்டியான்னு கேட்பாங்க…” என சொல்ல சொல்லும் பொழுதே நிஷாவின் இதழோரம் சிரிப்பு வெடிக்க துடித்தது.
“எங்க போடு பார்ப்போம்…” என்றான் ஆதித்தன்.
“அத்தை போடலைன்னா என்னன்னு கேட்பாங்க…” என்றதற்கு பதில் சொல்லாமல் அதனை வாங்கி ஓரம் வைத்தவன்,
“எங்கருந்துடி இவ்வளோ பலம் வந்துச்சு உனக்கு? என்னா அடி?…” என தன் கன்னத்தை தொட்டு பார்த்துக்கொண்டான்.
“இனி என் பிள்ளை மனசுல இந்த விஷுவல் மறையவே செய்யாதே? அச்சோ…” என தலையில் கைவைத்து கட்டிலில் சாய பாவமாய் போனது நிஷாவிற்கு.
“வேணும்னு பண்ணலை. ஆனா வேற என்ன பன்றது? எப்பவும் என்னை டென்ஷனாவே வச்சுக்கறீங்க. அதுவும் அப்படி ஒரு இடத்துக்கு போய்ட்டு. ஒரு செயினுக்காக…” என சொல்ல,
“ஆமால, மறந்துட்டேன்…” என்றவன் எழுந்து சென்று அந்த தங்க சங்கிலியை எடுத்துவந்து நீட்டினான்.
“போட்டுவிடு…” என சொல்ல இன்னும் பற்றிக்கொண்டு தான் வந்தது நிஷாவிற்கு.
ஆனாலும் அவனை நிமிர்த்தவும், மாற்றவும் முடியாது. அவன் அப்படித்தானே? இது என்ன புதிதா? எனும் நிதர்சனம் அவளை இழுத்து வந்தது.
“ப்ச், இப்ப எதுக்கு?…”
“ப்ச், போடு நிஷா…” என சொல்லியவன் முகத்தில் மெல்லிய அயர்ச்சி.
ஒன்றும் சொல்லாமல் அதனை நிஷா அணிவித்துவிட்டதும் படுத்தவன் தன் மீது நிஷாவை சாய்த்துக்கொண்டான்.
“கிஸ் மீ…” என கன்னத்தை காட்ட,
“ம்ஹூம். வலிக்கும்…” மறுத்தாள் அவள்.
“அதான் கேட்கறேன். என்னவோ மாதிரி இருக்கு. கேட்டா குடேன்…” அப்போதும் அவனின் குரல் அதிகாரத்தொனியில் இருந்தாலும் கண்களில் லேசாய் இரைஞ்சுதல்.
பட்டும் படாமலும் தன்னிதழை அவன் கன்னத்தில் பதித்து எடுக்கும் முன் அவளின் பின்னந்தலையில் கை கொடுத்தவன் கைகளின் அழுத்தத்தில் ஆதித்தனின் கன்னத்தோடு புதைந்தாள் நிஷா.
“என்னாச்சு?…” என்ற கேள்விக்கு கூட அவனிடத்தில் பதில்கள் இல்லை.
“இன்னும் டைட்டா கட்டிக்கோ நிஷா…” என அவளின் கைகளை இன்னும் இறுக்க வேண்டினான்.
ஒவ்வொன்றாய் கேட்டு வாங்கினான். கொடுப்பதில் இருப்பதை காட்டிலும் பெறுவதில் அவன் முனைப்பை காண்பிக்க நிஷா தான் திணறி போனாள்.
எதையோ யோசித்து அவன் தன்னை அதிகமாய் நாடி தேடுவதில் நிஷா திண்டாடினாள்.
“அபி முழிச்சுப்பான்…” என எச்சரிக்கையும் கணவனுக்கு காண்பிக்க,
“என் மகன் எப்ப எதுக்கு முழிப்பான்னு எனக்கு தெரியாதா? என்னை மட்டும் இப்ப பாரு….”
“இல்லைன்னாலும்…” என்றவள் முணங்கலில் லேசாய் அவளிடமிருந்து தன் முகத்தை மட்டும் நிமிர்த்தி பார்க்க,
“அச்சோ…” என அவனின் கன்னத்தில் கை கொண்டு தட்டி பின்,
“வலிச்சதா?…” என கேட்டு,
“நல்லா வலிக்கட்டும்…” என்றும் சொல்ல ஆதித்தன் முகத்தில் சன்னமான புன்னகை.
மொத்தமாய் அவளை எடுத்துக்கொண்டு தன்னை அவளுக்கு கொடுத்தவன் நிதானமாக விலகவும் நிஷா அவனின் முகத்தையே பார்த்தாள்.
“என்னவோ யோசிக்கறீங்க. சொல்லமாட்டேன்றீங்க…” என்ற கேள்வியில் மனைவியை வாஞ்சையாக அணைத்துக்கொண்டவன்,
“சொல்ல கூடாதுன்னு இல்லை. நீ பயந்த இல்லையா? அதை நானும் யோசிச்சேன். கொஞ்சம் நடுக்கம் தான். நான் வராம போயிருந்தா?…” என கேட்க பட்டென்று அவனின் கன்னத்தில் அடித்துவிட்டாள் நிஷா.
“நீங்கலாம் மனுஷனே இல்லை…” என மீண்டும் கண்ணீர் திரையிட அவனிடம் கூற,
“ப்ச், நினைச்சேன்னு தானே சொன்னேன். சும்மா கை நீட்டிட்டிருக்க? வெளுக்க போறேன் பாரு உன்னை…” என்றவன் அதே வேகத்துடன் அவளின் இதழ்களை முற்றுகையிட நன்றாய் பற்களை பதித்தாள் நிஷா.
“இன்னும் நல்லா வலிக்கட்டும்…” என அவன் விலகவும் சொல்ல,
“இன்னும் வலிக்கனும். திரும்பவும். வா வா…” என அவளை நெருங்க,
“ஒன்னும் தேவை இல்லை. நாளைக்கு ஸ்கூல் இருக்கு. நான் தூங்கறேன்…” என அவனிடமிருந்து விலகி படுக்க பின்னிருந்து அணைத்துக்கொண்டான் ஆதித்தன்.
“நாளைக்கு உனக்கு ஸ்கூல் இல்லை. லீவ் போடு…” என சொல்ல,
“என்ன உங்க இஷ்டமா? விளையாடாதீங்க…” என அவன் பக்கம் திரும்பினாள் நிஷா.
“புருஷனுக்கு காய்ச்சல். கூட இருந்து கவனிக்க வேண்டாம்? லீவ் போடு…” நமுட்டு சிரிப்பு சிரிக்க,
“முடியாது…” என்றாள் பிடிவாதமாக.
“நீ இன்னைக்கு தூங்க முடியாது. ஸ்கூலுக்கும் போக முடியாது. நான் வீட்டுல இருக்கற வரை என் கூட இரு. என்னால இந்த ரூம்ல தனியா இருக்க முடியாது….” என அதட்டலாய் சொல்லியவன் முகம் நிஷாவின் கழுத்தில் பதிந்தது.
“அபிக்கு அவ்வளோ சொன்னீங்க. இப்ப என்னை லீவ் போட சொல்றீங்க?…” என கேலி போல நிஷா கேட்டாலும் ஆதித்தன் செய்கையில் அவனுமே தங்களால் பதறி போயுள்ளான் என புரிந்துகொண்டாள்.
தன்னோடு அவன் இல்லை என்றால் என்ற கேள்வி தனக்கு மட்டுமல்ல அவனுக்குமே மிகப்பெரிய வேதனை தானே?
அதன் தாக்கம் குறையாமல் இருவருக்குள்ளும் ஒருவித அச்சம் விதைவிட்டிருந்தது.
“சொன்னா சரின்னு கேளுடி. கூட கூட பேசுவ…” என சொல்லியவன்,
“என்னை பிடிச்சிருக்குன்னு கல்யாணத்துக்கு முன்னாடியே சொன்ன தானே?…” என தனது போனை எடுத்து நிஷா பேசியதை ஒலிக்கவிட,
“ஸ்யப்பா போகலை. போதுமா? அதை கேட்கும் போது என் வாயிலையே நாலு போடனும்ன்னு கோவமா வருது…” என்றதும் அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டவன்,
“நீ என்னை விட்டு போகவும் முடியாது. விடமாட்டேன்…”
“இதுக்கே போகலாம் போல…” என நிஷா அவனிடம் வம்பு செய்ய மீண்டும் அவளோடு ஒரு உயிர் கலப்பு.
மெல்ல மெல்ல விடியும் தருவாயில் வாய் சண்டையுடன் சிலபல வாய்தாக்களை நிலுவையில் நிறுத்தியிருந்தான் ஆதித்தன்.
நிஷாவினால் கண்களை திறக்க முடியவில்லை. முதல்நாள் காலை எழுந்து கோவிலுக்கு என நடந்து சென்று வந்தது, மனச்சோர்வு, இரவெல்லாம் விழித்திருந்ததன் அயர்வு என மொத்தமாய் சுருண்டுவிட்டாள் நிஷா.
“எனக்கு காய்ச்சல் வந்திரும் போல? சொன்னா கேட்கறாங்களா? எதாச்சும் சொல்ல முடியுதா? சொல்லிட்டாலும் கழுதையில….” என அரைகுறையாய் உறக்கத்தில் உளறி வைத்தாள்.
ஆதித்தனுக்கு மனைவியின் கூற்றிலும், உளறலிலும் அப்படி ஒரு சிரிப்பு. மெல்ல நிஷாவின் கன்னத்தில் தன்னிதழை உரச,
மெல்ல அவளிடமிருந்து விடுபட்டு எழுந்தவன் மனதின் அழுத்தங்கள் எல்லாம் காற்றாய் கரைந்திருந்தது.
கைகளை நீட்டி சோம்பல் முறித்தவன் அபியை திரும்பி பார்த்தான். மகனும் ஆழ்ந்த உறக்கத்தில்.
அவனை எழுப்ப சென்றவன் காலில் சுருக்கென்று வலி. மெல்ல காலை உயர்த்தி பார்க்க பாதத்தின் சற்று மேல் கொடி சுற்றி அழுத்தி இழுத்ததன் அடையாளம்.
மெல்ல அவன் முகத்தில் வலியின் சாயல் வந்தது. உயிர் பயம். அவன் உணர்ந்த அந்த நிமிடம் இப்போதும் தொண்டையை இறுக்கி பிடித்தது.
பழக்கமான இடமாக இருந்தாலும் சங்கிலி நீரில் கழன்றதில் தேடி தண்ணீரில் அமிழ்ந்தவன் கால்களை கொடி சுற்றிக்கொள்ள நீரின் வேகம் வேறு அவனை மேல் எழும்ப விடவில்லை.
அலட்சியமாக என்னவாகிவிடும் என்று சென்றவன் மனக்கண் முன்னே மனைவியும், மகனும்.
கொடியில் இருந்து தன் கால்களை எடுத்து நீரிலிருந்து வெளியே வரும் முன் பலமுறை மரணித்து உயிர்த்தான்.
மனதெல்லாம் ‘நிஷா, அபி, இப்ப வந்திருவேன்டா’ என்பது மட்டுமே. தண்ணீருக்குள் அவனுள் பெருக்கெடுத்த கண்ணீர் கரைபுரண்டிருந்தது மூச்சுக்கு திணறிய நேரம்.
இதனை சொன்னால் நிச்சயம் தாங்கிக்கொள்ளமாட்டாள் மனைவி என எதையும் கூறவில்லை ஆதித்தன்.
ஒரு பெருமூச்சுடன் அபியின் உறக்கம் கலைக்காமல் தூக்கி தோளில் போட்டுக்கொண்டவன் கீழே சென்றான்.
தாயிடம் மகனை ஒப்படைத்து அபியை எழுப்பி, அங்கேயே கிளம்பி செல்லுமாறு சொல்லி வைத்தான் அவன்.
“நிஷாவுக்கும் முடியலையாப்பா?…” என சசிகலா கேட்க,
“ஆமா, தூங்கறா…” என்று மட்டும் அவன் முடித்துக்கொண்டு மேலே செல்ல பார்க்க,
“டெம்பரேச்சர் செக் பண்ணுனியா ஆதி? இப்ப எப்படி இருக்கு?…” என கேட்க,
“நைட்ல நிஷா பார்த்தா ம்மா. பரவாயில்லை…” என அவரின் முகம் பாராமல் ஓடி வந்துவிட்டான் ஆதித்தன்.
ஆதித்தன் மேலே வரும் பொழுது நிஷாவும் எழுந்திருந்தாள். அரக்கபரக்க குளித்து கீழே செல்ல போக,
“எதுக்குடி இவ்வளோ வேகம்? அம்மா அனுப்பிப்பாங்க. நீ பொறுமையா இரு…” என்றவனை முறைத்தவள்,
“அதான் லீவ் சொல்ல சொல்லிட்டீங்க இல்ல. அபியையாவது அனுப்பிட்டு வரேன்…”
“அம்மா அனுப்புவாங்க நிஷா…”
“நான் என் பிள்ளையை அனுப்பனும். அபி புரிஞ்சுக்கற பிள்ளைன்னாலும் கிளம்பும் போது என்னை தேடுவான் தானே?…” என சொல்லி கீழே வந்துவிட்டாள்.
அம்மா என தன்னை பார்த்ததும் மலர்ந்து கட்டிக்கொண்ட மகனை கிளப்பி பள்ளிக்கு அனுப்பிவிட்டு தான் அமர்ந்தாள் அவள்.
ஆனால் சசிகலா விட்டால் தானே? மகன் மாடியில் தனியாக இருப்பான் என கீழே நிஷாவை இருக்க விடவில்லை.
“அநியாயம் பன்றீங்க த்தை. அவர் என்ன பச்சப்பிள்ளையா? கூடவே இருந்து பார்க்க? பேசாம கொஞ்ச நேரம் நீங்க பாருங்க. நான் கீழே உள்ள ரூம்ல தூங்கிட்டு வரேன்…” என கடுப்பாகிவிட்டாள் நிஷா.
ஆதித்தனை விட்டுவிட்டு தனியே சில நிமிடங்கள் கூட அவளால் கீழே இருக்க முடியவில்லை. அதற்கு ஆதித்தனும் விடவில்லை. சசிகலாவும் விடவில்லை.
“அவன் எப்பவாவது தான் வீட்டோட இருக்கான். அதுவும் முடியாம இருக்கான். தனியா விட்டுட்டு வரேன்ற? இங்க கீழ ஒரு வேலையும் இல்லை. நீ மாடிலையே தூங்கு. என்ன வேணும்ன்னு சொல்லு. தரேன்…” என்று விரட்டினார் சசிகலா.
ஆதித்தன் முகத்தில் அடக்கமாட்டாதா புன்னகை தான் இதனை கேட்கும் பொழுதுகளில் எல்லாம்.
“இதுதான் மாமியார் கொடுமைன்றதா?…” என ஆதித்தனிடம் தான் பாயவேண்டி இருந்தது.
“வேணும்னே பன்றீங்க…” என்று கத்தியும் தீர்த்தாகிவிட்டது.
ஒன்றிற்கும் பயனில்லை. இரு நாட்களும் அவனோடு மட்டுமே பகல் பொழுதுகள் கழிந்தது.
புதிதாய் வாங்கியிருக்கும் கடைக்கு என்ன செய்யலாம் என இருவருமாக கலந்தாலோசித்து முடிவுக்கு வந்திருந்தனர்.
மீண்டும் இலகுவான வாழ்க்கை பயணம். இருவரின் அன்றாட பணிகள் இழுத்துக்கொண்டது.
நிரஞ்சனியின் கணவன் சமர்ஜித், மகள் சம்ருதாவுடன் நிஷாந்தினியிடம் கூட சொல்லாமல்கொள்ளாமல் குற்றாலம் வந்து, அவர்களின் வீட்டிற்கும் வந்து சேர்ந்திருந்தான்.