ஆதித்தன் அடுத்த ஐந்துநிமிடத்தில் கிளம்பி வெளியில் சென்றுவிட்டான்.
அவனால் இருக்க முடியவில்லை. இருக்கவும் முடியாது. இதற்கு மேல் என்ன செய்யவேண்டும்?
“ஆதி இப்ப வந்திருவாங்க…” என சசிகலா மகனிடம் சொல்ல,
“விடுங்க த்தை. முக்கியமான வேலை இருக்கு. நான் தான் போய் முடிச்சிட்டு வர சொன்னேன்…” என நிஷா சொல்லவும் அவர் அமைதியாய் மகனை பார்த்தார்.
ஆதித்தன் நிஷாவிடம் தலையசைத்துவிட்டு வெளியே சென்றுவிட சசிகலா மருமகளிடம் வந்தார்.
“நீ என்ன இப்படி சொல்லிட்ட? எனக்கும் உன் அக்கா மேல வருத்தம் இருந்தது தான். ஆனா அதை மட்டுமே நினைச்சிட்டு இருந்தா அதுக்கடுத்த சந்ததிகளை உறவுகளா வளர்க்க முடியாது நிஷா….” என்றார்.
“இப்ப உறவுக்கு என்ன த்தை குறை இங்க? நல்லா தானே இருக்கோம். அதுவும் உங்க மகனே சொல்லி வர சொல்லிருக்காங்க….” என்றவள் அந்த பேச்சை வளர்க்க விரும்பவில்லை.
முகத்தில் சந்தோஷம் இருந்தாலும் அதையும் தாண்டிய ஒரு உணர்வு நிஷாந்தினியின் முகத்தில்.
அதுவே சசிகலாவை மேலும் பேசவிடவில்லை. அமைதியாய் என்ன வேண்டும் என கேட்டு உதவினார்.
“வேலையா வெளில போயிருக்காங்க. நீங்க அப்பறமா அவரை வந்து பாருங்க. நீங்க வந்து கேட்டுட்டு போனதா சொல்றேன்…” என்ற நிஷாவின் பேச்சில் அவர்களும் நடையை கட்டினர்.
சசிகலாவிற்கு பற்றிக்கொண்டு வந்தது. ஆனாலும் ஒன்றும் சொல்லமுடியாமல் பிள்ளைகளுடன் உள்ளே சென்றுவிட்டார்.
நிரஞ்சனிக்கு தான் தான் வந்தது தவறோ என்றாகி போனது. அந்தளவிற்கு முள் மேல் அமர்ந்திருக்கும் நிலை.
இதில் ஆதித்தன் வந்துவிட்டால்? அதுவேறு சங்கடப்படுத்தியது. ஆனாலும் சொல்லாமல் செல்ல முடியவில்லை.
நிரஞ்சனியின் முகம் கண்டு சமர் கிளம்புவோம் என்று சொல்ல நிரஞ்சனியும் தலையசைத்தவள்,
“ஓகே, பேசிட்டிருங்க. நான் ஒரு கால் பண்ணிட்டு வரேன்…” என சொல்லி அவர்களுக்கு தனிமை கொடுத்து வெளியேறினான் சமர்.
“ஏன் நிஷா நான் இங்க வந்திருக்க கூடாதோ? அதுவும் நீ என்னை வான்னு சொல்லாம. ஆனா நான் உன்னை பார்க்கனும்ன்னு தான் வந்தேன்….” என்றாள் நிரஞ்சனி.
“நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லையேக்கா. நீ வந்ததுல எனக்கு ரொம்பவே சந்தோஷம். நிஜமாவே இல்லைன்னு எல்லாம் சொல்லமாட்டேன். நான் ஏன் கூப்பிடலைன்னு நான் சொல்லியா உனக்கு தெரியனும்? சொல்லு…” என கேட்க,
“இன்னும் எத்தனை வருஷத்துக்கு இதையே சொல்லிட்டிருப்ப நிஷா? நம்ம குழந்தைங்களும் வளர்ந்துட்டு இருக்காங்க. நமக்கப்பறம் அவங்க உறவுகளா இருக்கனுமே. இனிமே வந்து போய் நாம இருக்கனும். நீயும் எங்க வீட்டுக்கு வரனும்…” என்ற நிரஞ்சனியை பார்த்து மென்புன்னகை புரிந்தாள் நிஷா.
“எத்தனை வருஷத்துக்கா?…” என கேட்டு சிரித்தவள்,
“இப்ப நீ வரவும் பக்கத்துல இருக்கறவங்க எல்லாம் சும்மா பேசிட்டு போனாங்களே, ஏன்னு தெரியுமா?…” என்ற கேள்விக்கு நிரஞ்சனி மௌனமானாள்.
“இதுதான், இங்க எத்தனை வருஷமானாலும் இந்த பார்வையும், பேச்சும் மாறாது. அதுக்காக மத்தவங்களுக்காகவா நாம வாழறதுன்னு நீ நினைக்கலாம். உன் கல்யாணம் முடிஞ்சப்போ நீ எங்க இருந்த ஞாபகம் இருக்கா?…” என கேட்க,
“ஹ்ம்ம், கடப்பால…” என்றாள் நிரஞ்சனி.
“ஹ்ம்ம், அங்க இருந்து ரெண்டு வருஷத்துல கோவா. இப்ப சென்னை. உன் சரவுண்டிங்ல உங்களோடது லவ்மேரேஜ் அப்படின்ற ஹேஷ்டேக்கோட முடிஞ்சிரும். இன்னும் அடுத்து எப்போ எங்க மாறி போவீங்கன்னு தெரியாது…”
“ஆனா நாங்க இங்கயே தான் இருக்கனும். இவங்களுக்கு, இந்த மனிதர்களுக்கு நடுவுல தான் வாழனும், இவங்க மத்தில தான் தொழில் பண்ணனும். எங்களுக்கப்பறம் அபி, அவனோட சந்ததின்னு…”
“நிஷா எனக்கு புரியுது. ஆனா என்ன பன்றது? என் சூழ்நிலை. அதுக்காக நீ வராம இருந்திடுவியா?…”
“என்ன பன்றதுனா? இப்பவும் எனக்காக தான் அவர் சரின்னு போனார். நான் நம்ம குழந்தைங்களுக்காக உனக்காக தான் பார்த்தேன். அது மாதிரி எப்போ அவருக்கு முழு மனசா தோணுதோ அப்போ வரேன் நான்…” என்று சொல்லிவிட,
“நீயும் இன்னும் என் மேல கோவமா தானே இருக்க? அதானே நான் தேடி வந்தும் இப்படி பேசற நிஷா?…” என அழுதுவிட,
“அழுதா எல்லாமே சரியாகிடாதுக்கா. அன்னைக்கு உன் சூழ்நிலை உன் கையில தான் இருந்துச்சு. அதை நீ தான் சரியா எப்படி பயன்படுத்தனும்ன்னு யோசிச்சிருக்கனும். எல்லாரையும் ஒரு மலை உச்சில நிப்பாட்டிட்டு நீ மட்டும் தப்பிச்சு போய்ட்ட. மத்தவங்களை யோசிக்காம. இப்ப இதை பேச கூடாது தான்…” என்றவள்,
“ஆனா இப்பவும் பேசாம இருக்க முடியாதே? உன்னை கஷ்டப்படுத்த நான் நினைக்கமாட்டேன். உன்னை காயப்படுத்தனும்ன்னு இதை நான் சொல்லலை. என் சூழ்நிலை இதுன்னு சொன்னேன். எனக்கும் ஆசை தான். என் அக்கா குடும்பத்தோட நானும் என் குடும்பத்தோட ஒற்றுமையா இருக்கனும்ன்னு. ஆனா அது காலம் தான் முடிவு செய்யனும்…”
“நிஷா, அன்னைக்கு எனக்கு வேற வழி தெரியலை. ஏற்கனவே சொல்லிட்டேன். இப்பவும் நீ புரிஞ்சுக்காம பேசறியே?…” நிரஞ்சனி அவள் பக்கமே தான் யோசித்தாள்.
“மேறேஜ்க்கு முதல்நாள் நைட் வந்து அப்பாம்மா உனக்கு விடிஞ்சதும் கல்யாணம்ன்னு சொல்லி ஒன்னும் உன்னை மண்டபத்துக்கு கூட்டிட்டு போகலையே க்கா? கடைசி நேரத்துல கல்யாணம்ன்னு தர்மசங்கடமான இடத்துல நிப்பாட்டலையே என்னை நிறுத்தின மாதிரி. ப்ச் இதை பேசவேண்டாம். விட்டுட்டு. நீ முதல் தடவையா வந்திருக்க. எனக்கு அதுவே சந்தோஷம்…” என்றாள் நிஷா.
“அப்போ நீ சென்னை வரும் போது எங்க வீட்டுக்கு வரமாட்டியா?…”
“வரலாமே. எப்போ என் வீட்டுக்காரர் இதையெல்லாம் மறந்து போகலாம்ன்னு சொல்றாரோ, எனக்காக இல்லாம அவரா கூப்பிடராறோ அப்போ. என்னைக்கு நீயும் அவரும் ஒரு சாதாரண பேச்சுவார்த்தையோட சுமூகமாவீங்களோ அப்போ…”
“நிஷா…” நிரஞ்சனி கேவலுடன் பார்க்க,
“கோவமா எதுவும் சொல்லலை ரஞ்சிக்கா. ஆனாலும் என்னால முடியலை. இதுதான் நிதர்சனம். எனக்கு என் குடும்பமும் வேணும். தாய் வீட்டு சொந்தமும் வேணும். எல்லாரும் ஆசைப்படற மாதிரி தானே எனக்கும் இருக்கும். எனக்கு மட்டும் எல்லாம் வந்து போய் இருக்கனும்ன்னு எதிர்பார்ப்பு இருக்காதா சொல்லு?…”
நிஷாவின் கண்ணுக்குள் நீர் கரை கட்டிவிட உதட்டை கடித்து தன்னை நிதானப்படுத்தினாள்.
“என்னை பார்க்க வந்துட்டு உன்னை கஷ்டப்படுத்தி அனுப்பறேன்னு தப்பா நினைக்காதக்கா. நீ ரொம்ப ஈஸியா நினைக்கிற. ஆனா சில உணர்வுகள், அவமானங்கள் எல்லாம் ஈஸி இல்லை. உன்னை இப்போ பார்த்துட்டு போனவங்க பேச்சுக்கள் எவ்வளவு கேலி கிண்டலா வரும்ன்னு இனி கொஞ்ச நாள் இதையும் நாங்க தாண்டி தான் வரனும். விடு விடு…” என்றாள் அவள்.
“ஸாரி நிஷா…” என நிரஞ்சனி சொல்ல,
“இந்த மன்னிப்பு எதுக்குக்கா?…” என இன்னும் இன்முகமாகவே பேசினாள் நிஷா.
தங்கையின் பேச்சுக்கள் புன்னகையுடன் சாதாரணமாக வந்தாலும் நிரஞ்சனியை தான் குத்தி கிழித்தது.
“நாம எடுக்கற முடிவோட நல்லதும், கெட்டதும் நம்மளை தாண்டி அடுத்துவங்களை பாதிக்கும் போது சட்டுன்னு அவங்களால அதை விட்டு வெளில வரமுடியாது ரஞ்சிக்கா. சிலரால காலத்துக்கும் வெளில வரவே முடியாது. பார்க்கலாம். இதோ இப்ப நீ வந்திருக்க. எல்லாமே எதிர்பாராம தானே நடக்குது. நடக்கறது நல்லதா நடக்கட்டும்…” என்றாள் நிஷாந்தினி.
அவள் சொல்லிய ஒவ்வொன்றும் நிரஞ்சனிக்கு சம்மட்டியால் அடித்ததை போலிருந்தது.
உண்மைக்கும் அவள் நினைத்து வந்தது ஒன்று. தானாக தங்கையை தேடி வந்திருக்கிறோம், இனி உறவுகள் சரியாகிவிடும் என்ற ஆசை.
ஆனால் ரணங்களின் வடு இன்னும் குறையாமல் இங்கே இருப்பதை கண் கூடாகவே கண்டுவிட்டாளே?