“என்னக்கா எங்க லாட்ஜ் பத்தி எதுவும் சொல்லாம கிளம்பிட்ட? அது எப்படி இருக்கு? சர்வீஸ் எல்லாம் ஓகே வா?…” என்றாள் நிஷா சிரிப்புடன்.
“ஹ்ம்ம், எல்லாம் நல்லா இருக்கு. நீ என்ன கஸ்டமர்ஸ்கிட்ட கேட்கிற மாதிரி ரிவ்யூ கேட்கற?…” என நிரஞ்சனி புன்னகைக்க முயன்றாள்.
“ஆமா, நீ என்கிட்ட சொல்லிட்டா வந்த? உன் லாட்ஜ்ல எனக்கு ரூம் வேணும்ன்னு. அப்போ நானும் கேட்கனும் தானே?…”
“வேற என்ன பன்றது? தங்கச்சி வீடுன்னு இங்கயா தங்க முடியும்?…” என நிரஞ்சனியும் பேச்சுவாக்கில் கேட்டுவிட்டாள்.
“இதுக்கு நான் பதில் சொல்லவா?…” நிஷா சிரிப்புடன் கேட்க,
“ஏற்கனவே மனசு உறுத்துது. நீ இன்னும் பேசினா சத்தமா அழுதுடுவேன்….” என்று நிஷாவின் கையை பிடித்துக்கொண்ட நிரஞ்சனி,
“எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியலை நிஷா. ஆனா நீ எப்பவும் என்னோட இருக்கனும், என் தங்கச்சி, அவ குடும்பத்தோட எனக்கு ஒட்டு உறவு வேணும். நிஷா ப்ளீஸ். புரிஞ்சுக்கோடா. தப்பு என் மேல தான். என் ஒருத்தியால தான் இவ்வளோ கஷ்டமும்….” என்று சொல்ல நிஷாவுக்கும் கண்ணீர் வந்துவிட்டது.
“அழாதக்கா, இதான் நான் எதுவும் உன்கிட்ட உடைச்சு பேசறதில்லை. பார்ப்போம். நீயா இங்க வரதுக்கு உனக்கு இத்தனை வருஷம் தேவைப்பட்டிருக்கு. அதுமாதிரி எல்லாம் அதுவாவே நடக்கட்டும்….” என்றவள்,
“யாரையும் எந்தவிதத்திலையும் கட்டாயப்படுத்த வேண்டாம். அது எத்தனை மாற்றம் வந்தாலும் வடுவா காலத்துக்கும் மனசுக்குள்ள தங்கி போயிடும். எந்த மாற்றமும் அந்த வடுவை மறக்கடிக்காது…” என்று சொல்லி புன்னகைக்க நிரஞ்சனிக்கு இன்னுமே வருத்தமாகி போனது.
“அத்தையை கூப்பிடு. சொல்லிட்டு கிளம்பறேன்…” என சசிகலாவை அழைத்து சொல்லிக்கொண்டு சம்ருதாவை அழைத்தாள் நிரஞ்சனி.
“மம்மி நான் இனி லீவ்க்கு இங்க வருவேன். சித்திட்ட சொல்லிட்டேன்….” என அபியின் கைகளை பற்றியவாறு சம்ருதா சொல்ல,
“லீவ் விடவும் பார்க்கலாம். இப்ப கிளம்புவோம்…” என்றாள் நிரஞ்சனி.
“வரோம் த்தை. எல்லாத்துக்கும் ஸாரி…” என அவரின் காலில் விழுந்து எழுந்தாள் அவள்.
சசிகலா தலையசைப்புடன் அமைதியாய் இருந்தார். இத்தனை வருடத்தில் சங்கடத்துடன் ஓரிரு வார்த்தைகள், நலம் விசாரிப்பு மட்டுமே இருக்க இன்று இந்த மன்னிப்பு அவருக்கு பெரிதாய் தெரியவில்லை.
அவரின் மனதினுள் பிள்ளைகள் மட்டுமே இருந்தனர். பெரியவர்களின் பாதிப்பிற்கு பிள்ளைகள் என்ன செய்வார்கள் என நினைத்தார்.
அன்று இரவு ஆதித்தன் வரவே தாமதமாகி இருந்தது. மறுநாள் அபிக்கு பள்ளி என்பதால் விரைவில் படுத்துவிட ஆதித்தனின் அருகாமையை உணர்ந்தவள் அவனின் கைகளை எடுத்து தன் மேல் போட்டுகொண்டாள் நிஷா.
அதில் லேசாய் வலி எடுக்க அவள் விரலை பற்றிக்கொண்டவன் இடது கையால் நிஷாவின் தோளை தட்டிக்கொடுத்தான்.
“நீ தூங்கலைன்னா எனக்கும் தூக்கம் வராது. விடியற்காலையே நான் மதுரை போகனும்….” என்றவன்,
“அதோட லாட்ஜ்க்கு வெஸ்டர்ன் டாய்லெட் சிலது சரியில்லை. மாத்தனும். சீசன் இல்லாதப்பவே இதை எல்லாம் சரி பண்ணினா தான்….” என்று சொல்ல நிஷாவும் அமைதியாய் உறங்கினாள்.
அதிகாலையே எழுந்து மனைவியின் உறக்கம் கலையாமல் ஆதித்தன் கிளம்ப அவனின் அசைவுகளே அவளை எழுப்பிவிடுமே.
ஆதித்தன் குளித்து வருகையில் எழுந்து அமர்ந்திருந்தாள் நிஷா. நேரம் நான்கை எட்டவிருந்தது.
“என்ன முழிச்சிட்ட?…” என கேட்டவன் நிஷா தண்ணீர் குடிப்பதை கண்டு,
“பசிக்குதா?…” என முறைத்தான்.
அவன் கண்டுகொண்டதை கண்டு நிஷாவும் மௌனமாக பல்லை கடித்தவன் கீழே இறங்கி சென்றான்.
வரும்பொழுது கையில் இரண்டு தோசையும் முதல்நாள் வைத்திருந்த சாம்பாரும் இருந்தது.
“நான் கிளம்பறதுக்குள்ள இதை முடிக்கிற…” என கடுப்புடன் சொல்ல ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொண்டாள் நிஷா.
“பிரஷ் பண்ணிட்டு…” என அதற்கும் அவன் அதட்டவும் சொன்னதை போல செய்தவள் சாப்பிட ஆரம்பித்த பாதி தோசை ஆதித்தனுக்கு தான் சென்றது.
“என்னால பசி தாங்க முடியாதா? அநியாயம் பன்றடி நீ. குழந்தை பிறக்கட்டும், பேசிக்கறேன் உன்னை…” என்று கத்தியவன்,
“யார் வந்தா என்ன? போனா என்ன? நீ ஒழுங்கா சாப்பிட வேண்டியது தானே?…” என அந்த நேரமே பாராயணத்தை ஆரம்பித்துவிட்டான்.
“தெரியாம முழிச்சுட்டேன். நேத்து சரியா பசிக்கலை, அதான் அரைகுறையா சாப்பிட்டேன். என்னவோ பட்டினி இருந்த மாதிரி பேசறீங்க?…” என நிஷாவும் முறுக்கிக்கொள்ள சின்னதாய் செல்ல சண்டைகள்.
அரைமணி நேரத்தில் கிளம்பிவிட்டான் ஆதித்தன். கீழே வரவேண்டாம் என சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
மீண்டும் படுத்தவள் அலாரம் சத்தத்தில் எழுந்துகொண்டாள். மகனை கிளப்பி பள்ளிக்கு அனுப்பிவிட்டு சாப்பிட்டு மாடிக்கு வர அனுராதாவிடமிருந்து அழைப்பு.
நிரஞ்சனி முதல்நாள் வந்துவிட்டு சென்றதை பற்றி தான் பேசுவார் என தெரிந்தது நிஷாவிற்குமே.
“என்னம்மா? காலைல சாப்பிட்டு முடிஞ்சதும் கால் பன்றீங்க போல?…” என நிஷா கேட்க,
“அபி ஸ்கூலுக்கு போய்ட்டானா நிஷா? நீ சாப்பிட்டாச்சா? எல்லாரும் என்ன பன்றாங்க?…” என வரிசையாய் கேள்வி கேட்க,
“அபி ஸ்கூலுக்கு போயாச்சு, நானும் சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டேன். அவர் மதுரை போயிருக்கார். அத்தையும் மாமாவும் இங்க ஒரு விசேஷம்ன்னு போயிருக்காங்க. கீழே செந்தாக்கா இருக்காங்க. வேற என்ன தெரியனும்?…” என நிஷாவும் சிரிப்புடன் பதில் கூறினாள்.
“என்ன கிண்டலா உனக்கு? நான் சும்மா பேசினா, நீயும் சொல்லுவியா?…” என்று அனுராதா கேட்க,
“பின்ன என்னம்மா? வேற என்ன கேட்பீங்க அடுத்து? எனக்கு தெரியுமே?…” என இலகுவான மனநிலையில் தான் பேசினாள் நிஷாவுமே.
அதுவரை பேச்சுக்கள் எல்லாம் எளிதாகவே தான் சென்றது. அன்றாட பேச்சு தாண்டி நிரஞ்சனி வந்து சென்றதை அனுராதா கேட்க,
“நானும் எதிர்பார்க்கலை அக்கா வருவான்னு. முதல்ல மாமா தான் வந்தாங்க…” என அவர்கள் வந்தது, உண்டது, பிள்ளைகளின் விளையாட்டு என எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள் அவள்.
“உனக்கு ரஞ்சனி வந்ததுல சந்தோஷம் தானே நிஷா?…” என கேட்டவர் கேள்வியில்,
“எனக்கு சந்தோஷம் தான். உங்களுக்கு இதுல என்ன சந்தேகம்?…” நிஷாவும் தாயிடம் கேட்க,
“இல்ல உன் வீட்டுக்காரர் இன்னும் அந்த கோபத்தையே புடிச்சுட்டு வந்தவங்க கூட கொஞ்ச நேரமாவது இருந்தாரா? இதை நீ கேட்கமாட்டியா? இது மரியாதையாவா இருக்கு?…” என்றதுமே சுருக்கென்றது நிஷாவிற்கு.
“என்னம்மா பேசறீங்க? முதல்ல மாமாவும், சம்ருவும் தான் வந்தாங்க. அப்பறம் அவரா தான் அக்காவையும் கூட்டிட்டு வர சொன்னாங்க….” என நிஷா சொல்ல,
“இது ஒரு பெரிய விஷயமா? வீட்டுக்கு வர சொல்லிட்டு வெளில போய்ட்டார் உன் வீட்டுக்காரர். ரஞ்சிக்கும், மாப்பிள்ளைக்கும் எப்படி இருந்திருக்கும்?…” என கோபமாய் கேட்க,
“எப்படி இருந்துச்சுன்னு உங்ககிட்ட சொன்னாங்களா அவங்க?…” என நிஷா நிதானமாக கேட்டாள்.
“அவ எங்க சொல்ல போறா? அவ சந்தோஷமா தான் பேசினா. எனக்கு தான் மனசே ஆறலை. வீடு தேடி வந்தவங்களுக்கு இதென்ன மரியாதை? இதை அவங்க செஞ்சா சரின்னு இருப்பாரா நிஷா? நீயே சொல்லு…” என்றவர்,
“அப்பறம் நீ சொன்னியாம், எப்போ உன் வீட்டுக்காரர் உன்னை அக்கா வீட்டுக்கு கூட்டிட்டு வராரோ அப்போ தான் வருவேன்னு. எத்தனை வருஷத்துக்கு?…” என்று கேட்க,
“இப்ப என்னம்மா பிரச்சனை?…” என்ற மகளின் குரல் பேதம் தாய்க்கு புரியவில்லை.
“என்ன பிரச்சனையா? வந்தவங்ககிட்ட முகம் குடுத்து பேசாம இப்படி பண்ணிட்டாரே மத்தவங்க என்ன நினைப்பாங்க? ரஞ்சி மாமியார் வீட்டுல, அவங்க சொந்தங்க என்ன நினைப்பாங்க? ஒருவேளை அவர் இன்னும் ரஞ்சனி வேண்டாம்ன்னு போனதுல அந்த நினைப்புல இருக்கறதா பேச மாட்டாங்களா?…” என்று கேட்டேவிட அதிர்ந்துவிட்டாள் நிஷா.
“ம்மா…” என்றவள் சத்தத்தில் அனுராதா பயந்து போனார்.
“எதுக்கு நிஷா இப்படி கத்தற?…” என்றவர்,
“இப்படி பேச்சுக்கள் வரத்தான் செய்யும். பேசத்தான் செய்வாங்க நிஷா. அது நல்லாயிருக்குமா? இப்படி பேச நாமே இடம் குடுக்கறதா?…” என மீண்டும் சொல்ல,
“அப்படி பேசறாங்களா? இல்லை நீங்க நினைக்கறீங்களா?…” என அழுத்தமாய் நிஷா கேட்டாள்.
“நிஷா…”
“பதில் சொல்லுங்கம்மா. நீங்க நினைக்கறீங்களா இல்லையா?…” என விழிகள் சிவக்க இவள் அடித்தொண்டையில் இருந்து கேட்க அவரின் மௌனமே அப்படித்தான் என்றது.
“ஒரு நிமிஷத்துல அவர் என்னோட வாழ்ந்த வாழ்க்கையை இப்படி சொல்லிட்டீங்களே?…” என ஆவேசமாய் சொல்ல பயந்து போனார் அனுராதா.
“இல்ல நிஷா, அம்மா அப்படி நினைச்சு சொல்லலை. ஆனா அந்த மாதிரியான ஒரு தோற்றத்தை தரும் தானே?…” என சமாதானப்படுத்த நினைத்தவருக்கு தான் சொல்லியதன் அர்த்தத்தில் மனது பதறியது.
“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க? இன்னும் கோவமா இருந்தா நல்லாவா இருக்கா? அவர் என்ன அக்கா வேண்டாம்ன்னு போனதுல கோவத்துல ஏமாற்றத்துல அப்படி இருக்கார்ன்னு நினைச்சீங்களா ம்மா?…”
“அப்போ இதுவரைக்கும் அந்த நினைப்போட தான் அவரை பார்த்தா கோவக்காரர்ன்னு பேசினதா? அப்போ ரஞ்சிக்காவை அவர் இன்னும் நினைச்சுட்டு இருக்கறதா தானே சொல்றீங்க?…” என வருத்தம் மேலிட கோபம் குறையாமல் கேட்டாள் நிஷா.
“நிரஞ்சனி அக்காவை என் புருஷன் விரும்பி இருந்தா இந்த நிமிஷம் வரை அவருக்கு அந்த உறுத்தல் இருந்து அவரும் நிம்மதியில்லாம, என்னையும் நிம்மதியா வாழவிட்டிருக்கமாட்டார்….”
“ஆனா அப்படி எதுவுமே இல்லை. ரஞ்சிக்கா போனது அவளோட முடிவு. அதுவும் அவ எதிர்காலம். அதை பத்தி ஏதாவது பேசியிருப்பாரா? உங்க பொண்ணு ஆசை காமிச்சு ஏமாத்திருச்சுன்னு எதுவும் சொன்னாரா என்ன?…”
“இத்தனைக்கும் அன்னைக்கு எங்க கல்யாணத்தன்னைக்கு சமர் மாமா சென்னை வரமுடியாம கப்பல்ல இருந்ததும் தெரியும், ரஞ்சிக்கா அவருக்காக தான் வெளியேறி போனான்னும் தெரியும். எங்க கல்யாணம் முடிஞ்சு ரஞ்சிக்கா வந்து சொன்னப்பவே நான் இவர்கிட்ட சொல்லிட்டேன்…”
“அவர் ரஞ்சிக்கா காதலிச்சதை எதையுமே தப்புன்னு சொல்லலையே? தன்னோட வாழ்க்கையை முடிவு பண்ணி போனவங்க முன்னாடியே போயிருக்காலாமேன்னு தானே சொன்னார். இவ்வளவு தூரம் இந்த பிரச்சனைக்கு அவசியமே இருந்திருக்காதேன்னு. உங்களுக்காகவும் தானே யோசிச்சார்?….”